உள்ளடக்கத்துக்குச் செல்

புல்லின் இதழ்கள்/சாயம் வெளுத்தது

விக்கிமூலம் இலிருந்து

31. சாயம் வெளுத்தது

மாற்றம் தாங்காமல் ஹரி, கதவில் தொங்கிய பூட்டையே பார்த்துக் கொண்டிருந்தான்.

‘அவர்கள் எங்கே போனார்கள்? இந்த மாதிரி, கதவு பூட்டியிருக்கும் வழக்கம் இல்லையே! ஒருவேளை உள்ளூரிலேயே எங்கேயாவது போயிருப்பார்களா?’ என்று யோசித்தான். ஆனால், வாசலைப் பார்த்தால், பெருக்கிக் கோலமிட்டே பல நாள் இருக்கும் போலிருந்தது. ‘சொல்லாமல் கொள்ளாமல், எங்கேயோ போய் விட்டார்களே’ என்று எண்ணிய ஹரிக்கு வேதனையாக இருந்தது. அக்கம்பக்கம் விசாரித்தான். அவர்களுக்கு எவ்விதத் தகவலும் தெரியவில்லை.

கையிலிருந்த பை அவனைப் பரிதாபமாகப் பார்த்தது. வெள்ளரிப் பிஞ்சும், வெற்றிலையும் அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பதாகத் தோன்றின.

அர்த்தமில்லாமல், எத்தனை நேரம் பூட்டியிருக்கும் வீட்டு வாசலின் முன்னால் நிற்பது! ‘இப்படி ஏமாற்றி விட்டார்களே!’ என்று, அவனுக்குக் காந்தாமணி மீது கோபமே வந்தது.

நேராக, அந்தத் தெருவைக் கடந்து, வெளியே வந்தான். ‘சுசீலாவிடம் பொய் சொல்லி விட்டு வந்ததற்குத் தண்டனையா இது?’ என்று எண்ணிப் பார்த்துக் கொண்டான். இனிமேல் என்ன செய்வது? எங்கே போவது?— பக்கிரியிடம் கூறி வந்த வார்த்தைகள் நினைக்கு வந்தன. வெட்கம் அவனைப் பிடுங்கித் தின்றது.

இரவு வரை, எங்கேயாவது பொழுதைப் போக்கி விட்டுத்தான், பக்கிரியைச் சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு, நேராகக் கடம் நாராயணசாமியின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான்.

அபூர்வமாக வீடு தேடி வந்திருந்த ஹரியை, நாராயணசாமி மிகவும் அன்போடு வரவேற்றார். நாராயணசாமி பெரிய சம்சாரி. குழந்தைகள் எல்லாம் புதிய முகம் என்றும் பாராமல், “வாங்கோ மாமா, வாங்கோ மாமா” என்று ஹரியின் மடி மீதும், தோள் மீதும் ஏறி மிகவும் உரிமையுடன் கொஞ்சி விளையாடின. ஹரி அந்தக் குழந்தைகளுக்கு வெள்ளரிப் பிஞ்சுகளைக் கொடுத்தான். மிகவும் ஆவலோடு வாங்கிக் கொண்ட குழந்தைகள் எல்லாம், தெருவை நோக்கி ஓடி விட்டன.

மத்தியான்னச் சாப்பாட்டுக்குப் பிறகு, நாராயணசாமி வெற்றிலைப் பெட்டியை ஹரியிடம் நீட்டினார். ஹரி பையில் இருந்த வெற்றிலையை அந்தப் பெட்டியில் வைத்தான். நாராயணசாமியின் முகம் ஆச்சரியத்துடன் மலர்ந்தது. ‘எங்கோ, யாருக்கோ போய்ச் சேர வேண்டியவை, இங்கே வந்திருக்கின்றன’ என்பதை நாராயணசாமி உணர்ந்து கொண்டாலும், ஹரி தன் வீட்டைத் தேடி வந்ததில், அவருக்கு மிகவும் மகிழ்ச்சி.

மாலை வரை, தொழில் சம்பந்தமான பேச்சுக்களில் பொழுதை போக்கி விட்டு, ஹரி விடை பெற்றுச் சென்றான்.

புறப்படுகிற நேரத்தில் ஹரி, காந்தாமணியின் தாய் தந்தையைப் பற்றித் தெரியுமோ, தெரியாதா என்கிற பாவனையில் நாராயணசாமியிடம் லேசாகப் பேச்சை ஆரம்பித்தான். உடனே நாராயணசாமி, “ஓ! காந்தாமணியின் பெற்றோரைப் பற்றித்தானே கேட்கிறீர்கள்? அவர்களை எனக்கு மிகவும் நன்றாகத் தெரியுமே. பெரிய, ராஜ பரம்பரை. நான் அடிக்கடி அவளுடைய தாயாரைப் பார்ப்பதுண்டு. காந்தாமணிக்கு நீங்கள் பிரமாதமாகச் சிட்சை சொல்லி வைத்திருப்பதாக அவர்களுக்கு மிகவும் சந்தோஷம்” என்றார்.

ஹரிக்கு மயக்கமே வந்து விடும் போலிருந்தது. அநியாயமாகக் காலையிலிருந்து வெட்டிப் பேச்சுப் பேசி, பொழுதைக் கழித்து விட்டோமே என்று அவன் வருந்தினான். “இப்பொழுது அவர்கள் எங்கே போயிருக்கிறார்கள்?” என்றான்.

“அதுதான் எனக்கும் நிச்சயமாகத் தெரியவில்லை. ஏதோ அவசரமாகக் காந்தாமணிக்குத் திருமணம் நிச்சயமாகி, அவர்கள் எல்லாரும் வடக்கே எங்கோ போயிருப்பதாகக் கேள்வி” என்றார்.

இந்தச் செய்தி ஹரியைத் திகைக்க வைத்தது. ஆயினும், அவன் தன் அதிர்ச்சியை வெளிக் காட்டிக் கொள்ளாமல், “இனி மேல், அவர்கள் இங்கே எப்போது வருவார்கள், ஏதாவது தெரியுமோ?” என்றான்.

“இனி மேல், அவர்கள் இங்கு வருகிற உத்தேசமே இல்லை போல் இருக்கிறது. வீட்டைக் கூட விற்று விடப் போவதாகக் கேள்வி. ஆமாம், உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே?”

அந்தக் கேள்வி ஹரியின் நெஞ்சைத் துளைத்துக் கொண்டு, மறு புறம் பாய்ந்தது. நகமும் சதையும் போல், அந்தக் குடும்பத்திலேயே ஒருவனைப் போல் பழகி விட்டு, முடிவு இப்படியா ஆக வேண்டும்? என்ன பதில் கூறுவதென்றே அவனுக்குப் புரியவில்வை.

நாராயணசாமி இங்கிதமாக - தன் கேள்விக்குப் பதிலை எதிர்பார்க்காதவன் போல், ஜாடையாகவே உள்ளே போய் விட்டான். இதற்குள் குழந்தைகள், விருந்தாளி ஊருக்குப் புறப்பட்டு விட்டதைப் புரிந்து கொண்டு, “காசு மாமா, காசு மாமா” என்று ஹரியைச் சூழ்ந்து கொண்டன.

பையிலிருந்து எட்டணா நாணயங்களாக எடுத்து, ஐந்து குழந்தைகளின் கையிலும் ஹரி கொடுக்கும் போதே, ஓரமாக இருந்த சற்றுப் பெரிய பையனும் தலையைச் சொறிந்து கொண்டே, “மாமா” என்று லேசாக முனகினான். ஹரி, அவன் கையிலும் ஒரு ரூபாயை எடுத்துக் கொடுத்தான். அப்போது அங்கே வந்த நாராயணசாமி ‘பளார்’ என்று பையன் முதுகில் ஓர் அறை வைத்து, “தரித்திரங்களா! உங்களாலேயே இந்த வீட்டுக்கு யாராவது வர வேண்டுமென்றாலே, பயப்படுகிறார்கள். தொழிலே பாதி போயாச்சு. வாங்கோ, எல்லாருமாச் சேர்ந்தே பிச்சை எடுக்கப் புறப்படலாம்” என்று சீறி விழுந்தார்.

ஹரி, நாராயணசாமியைக் கண்டித்தான். “குழந்தைகளைக் கோபித்துக் கொள்ளாதீர்கள். நான் என்ன அந்நியனா?” என்று சமாதானப் படுத்தினான்.

“அப்படியில்லை சார், இதுகளுக்கு வேற்று முகமே கிடையாது. யாரைப் பார்த்தாலும்; வந்ததும், கழுத்தைக் கட்டிக் கொள்ள வேண்டியது: போகும் போது காசு கேட்க வேண்டியது: கடைக்கு ஓட வேண்டிது அவ்வளவுதான்.”

“போகிறது, அந்த வித்தையையாவது கற்றுக் கொண்டிருக்கிறார்களே!”

“வித்தையா இது? அத்தனையும் சொத்தைகள். பெரிசிலிருந்து, சிறிசு வரை ஒன்றாவது தேறாது. அத்தனையும் அசடுகள். மானம் போகிறது” என்று அலுத்துக் கொண்டே ஹரியின் கையில் ஒரு பையைக் கொடுத்தார் நாராயணசாமி.

“என்ன இது?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் ஹரி.

“குடமிளகாய். பாகவதருக்கு ரொம்பப் பிடிக்கும். வாசலில் வந்தது. கொண்டு போய்க் கொடுங்கள்” என்றார்.

“அது சரி. இதுக்கு என்ன ஆச்சு?”

“சரிதான் அண்ணா, புறப்படுங்கோ. நீங்க வேறே! பையன்கள் உங்கள் ரெயில் செலவுக்கு, ஏதாவது பாக்கி வைத்திருக்கிறான்களா; இல்லை, வேணுமா?” என்று வேடிக்கையாகக் கேட்டுக் கொண்டே வாசலுக்கு வந்தார். வரும் போது, ஹரி உள்ளே போய் நாராயணசாமியின் அம்மாவிடமும், மனைவியிடமும் சொல்லிக் கொண்டு புறப்பட்டான்.

வாசலில் ஜட்கா வண்டி தயாராகக் காத்துக் கொண்டிருந்தது.

ஸ்டேஷனுக்கு வந்த ஹரி, டிக்கெட் வாங்கிக் கொண்டு பாலத்தின் மீதேறினான். சொன்னபடி, பக்கிரி காத்துக் கொண்டிருந்தான். ஆயிரம் ரூபாய் கையில் வந்து விழப் போகிறது என்று கனவு கணட பக்கிரிக்கு, “போன இடத்தில், நான் தேடிப் போன ஆள் இல்லை. காரியம் இனிக் கை கூடுவது கஷ்டந்தான்; என்றாலும், நான் முயற்சி செய்கிறேன்” என்று ஹரி கூறிய சமாதானம், கசப்பான மாத்திரைகளை விழுங்குவது போலிருந்தது. ஆயினும், ‘என்ன செய்ய; கொடுத்தா வைத்திருக்கிறோம்?’ என்று மனத்தைச் சமாதானப்படுத்திக் கொண்டான்.

பர்ஸிலிருந்து ஐம்பது ரூபாய் பணத்தை எடுத்துப் பக்கிரியிடம் கொடுத்தான் ஹரி.

“இந்தப் பணத்தைப் பத்திரமாக வீட்டில் சேர்த்து விடு. இனி மேல், என்னால் முன் மாதிரிப் பணம் அதிகம் கொடுக்க முடியாது. பணத்தை வீணாக்காமல், சிக்கனமாக இருங்கள். தங்கைகளின் கல்யாணத்தைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம். அதற்கு நான் ஏதாவது ஒரு வழி செய்கிறேன்” என்றான்.

அவன் வார்த்தையை ஊர்ஜிதம் செய்வதே போல், ஸ்டேஷன் மணி அடித்தது, பெருமூச்சும், சுடுநீரும் பெருக்கிக் கொண்டே, எஞ்சின், தண்டவாளத்தின் மேல் தவழ்ந்தது. பக்கிரி ஜன்னல் வழியாகப் பையைக் கொடுத்து விட்டு, விடை பெற்றுச் சென்றான்.

சுவாமிமலை வரை ஹரி, காந்தாமணி தியானத்திலேயே இருந்தான்.

‘அன்று இரவு, அவள் மாடிக்கு வந்து என்னுடன் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தது, அவள் தாய்க்குத் தெரிந்திருக்குமோ? அதனால், தாய்க்கும், மகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, விபரீதமாகியிருக்குமோ? இல்லாவிட்டால், திடீரென்று வீட்டைப் பூட்டிக் கொண்டு சென்றதோடல்லாமல், வீட்டையே விற்று விட்டு; தஞ்சாவூர் வாடையே வேண்டாம் என்று எண்ணுவானேன்? காந்தாமணியின் திருமணத்துக்கு இப்போது அப்படி என்ன அவசரம் வந்து விட்டது? அவர்கள் குடும்பத்தில் ஒரு குழப்பம் ஏற்பட, நாம் காரணமாகி விட்டோமா?’—இந்த வேதனை ஹரியின் மனத்தை மிகவும் வருத்தியது. எல்லாவற்றுக்கும் மேலாக, ‘காந்தாமணியைப் போன்ற சிஷ்யையை, அல்லது ரசிகையை, இனி எப்போது பார்க்கப் போகிறோம்? இத்தனை அன்பும், ஆதரவும் காட்டியவர்களால், எப்படி ஒரேயடியாகக் கத்தரித்துக் கொண்டு செல்ல முடிந்தது? என்னால், இன்று ஒரு நாள் காந்தாமணியைப் பார்க்க இயலாமல் போனது, தாங்க முடியாத தாபமாக இருக்கிறதே!’—என்று எண்ணியபடியே ஊரை அடைந்தான்.

ரி வீட்டினுள் நுழையும் போதே, காயத்திரி அவனை ஜாடை காட்டி, ஏதோ சொல்லி எச்சரிக்க முயன்றாள். ஆனால், அதற்குள் சுசீலா ஹரியைப் பார்த்து விட்டாள். “வாருங்கள் ஸார். ஏது இத்தனை சீக்கிரம் திரும்பி விட்டீர்கள்? நாளைக்குத்தான் வருவீர்கள் என்றல்லவா நினைத்தேன்?” என்று கூறிக் கொண்டே வந்தாள்.

ஹரி உடனே, “நீ எதுதான் நினைக்க மாட்டாய்? இந்தப் பையைக் கொண்டு போய் அம்மாவிடம் கொடு,” என்று கையிலிருந்த பையைச் சுசீலாவிடம் நீட்டினான்.

அதை வாங்கிப் பார்த்த சுசீலா, “ஏது இத்தனை குடமிளகாய்? உங்கள் சிஷ்யர் கல்யாணராமன் கொடுத்தனுப்பினாரா?” என்றாள்.

“இல்லை, தஞ்சாவூரில் குடமிளாகாய் வியாபாரி ஒருவர் சாம்பிள் பார்க்கக் கொடுத்தார். பேசாமல் உள்ளே கொண்டு போய்க் கொடு என்றால்; அரட்டையடிக்கிறாயே” — சுள்ளென்று விழுந்தான் ஹரி. ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படாமல் சுசீலா பையை எடுத்துக் கொண்டு, உள்ளே போனாள்.

அறைக்குச் சென்று, ஹரி குருவைப் பார்த்தான். அவர் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார். அங்கு வந்த காயத்திரி, “காந்தாமணியிடமிருந்து உனக்கு வந்த ஒரு கடிதத்தை, சுசீலா வாங்கிப் பார்த்து, எல்லா விஷயங்களையும் தெரிந்து கொண்டு விட்டாள். ஏதாவது உளறிக் கொண்டே இராதே” என்று எச்சரித்து விட்டுச் சென்றாள். ஹரி அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டான். அன்றிரவு முழுவதும் அவனுக்கு உறக்கமே வரவில்லை.

‘இத்தனை நாள் போகாமல், இன்று பார்த்துத் தஞ்சாவூருக்குப் போனோமே. காந்தாமணியிடமிருந்து கடிதமே வரவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்ததற்கு, மாறாகக் கடிதமும் வந்து; அது நம் கையில் கிடைக்காமற் போனதோடு, அநியாயமாகச் சுசீலாவின் கையில் கிடைத்து விட்டதே என்று எண்ணி ஹரி வருந்தினான். அதில் காந்தாமணி என்ன எழுதியிருக்கிறாளோ? என கடிதத்தைப் படிக்க அவன் துடித்தான்.

—அந்தக் கடித விஷயம், குருவுக்கும், அம்மாவுக்கும் தெரியுமோ? தெரிந்தால், அவர்கள் என்னைப் பற்றி எவ்வளவு தவறாக எண்ண இடமேற்படும்? காந்தாமணிக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க ஒப்புக் கொண்ட என்னுடைய நோக்கத்தை, அவர்கள் சரியாகப் புரிந்து கொள்வார்களா?—

ஒரு வழியாகப் பொழுதும் விடிந்தது. லட்சுமியம்மாள், ஏதோ காரியமாகச் சுந்தரியைப் பார்க்கச் சென்று விட்டாள்.

அம்மா போனதும், சுசீலா ஹரியிடம் மிகவும் கடுமையாகக் கோபித்துக் கொண்டாள். காந்தாமணியைக் கல்யாணராமனாக்கி, தஞ்சாவூரில் இத்தனை காலம் நாடகம் ஆடி வந்ததுடன், பொய் விலாசம் வேறு கொடுத்ததற்காகவும், வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசினாள்.

“அப்பாவிடமும், அம்மாவிடமும் கடிதத்தைக் காட்டவா?” என்ற போது, துக்கம் அவள் நெஞ்சைப் பிளந்தது.

ஹரிக்கு ஒன்றுமே புரியவில்லை. திட்டி விட்டு, அவள் ஏன் அழவும் வேண்டும்?

“ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள்; சொல்லவா?”

“இன்னும் நீ அவர்களிடம் இது பற்றிச் சொல்லவில்லையா?” ஹரிக்கு இதயத்தின் ஒரு மூலையில் உயிர் வளருவது போல் இருந்தது. “சொல்லாவிட்டால், தயவு செய்து நீ அதை வெளியிட வேண்டாம். நான் என் நன்மைக்காகப் பொய் சொல்லவில்லை. நான் இப்படி நடந்து கொண்டது-சுய நலத்துக்காக அல்ல. நம் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை ஓரளவாவது தீர்க்கவும், அப்பாவுக்கு நல்ல வைத்தியம் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்துடனுமே ஒப்புக் கொண்டேன்” என்றான்.

“அதற்காக? அப்பா தாம் ஆரம்பத்திலேயே அவர்கள் கேட்ட போது; முடியாது என்று அவர்களைத் திருப்பி அனுப்பி விடவில்லையா? அந்த இடத்தில் போய், நீங்கள் மீண்டும் பாட்டுச் சொல்லிக் கொடுக்கலாமா?” என்றாள் சுசீலா.

“கூடாதுதான். அப்பாவிடம் அநுமதி கேட்டால் கிடைக்காது; அப்பாவின் மனமும் புண்ணாகக் கூடாது என்றே, காந்தாமணியைக் கல்யாணராமனாக்கினேன். ஆனால், இதுவரை அவள் எத்தனை ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறாள் என்று கணக்குப் பார்த்தாயா? அவை நமக்குத் தக்க சமயத்துக்கு, எவ்வளவு உதவியாக இருந்தன?”

“பணம் கொடுக்கிறாள் என்பதற்காகவா?”

அருகிலிருந்த ஹரி மின்சாரத்தினால் இயக்கப்பட்டவன் போல், சுசீலாவின் வாயைப் பொத்தினான்.

“ஏன் இப்படிக் கத்துகிறாய்? அப்பாவின் காதில் விழுந்து, அவர் என்னவென்று கேட்க வேண்டும் என்கிற எண்ணமா?”

சுசீலா சட்டென்று ஹரியின் கையைத் தன் வாயினின்றும் ஒரு தட்டுத் தட்டினாள். ஹரி தன்னையே நொந்து கொண்டான். இவ்வளவு துணிச்சல் தனக்கு எப்படி வந்தது என்று அவனுக்கே புரியவில்லை.

ஆனால், அடுத்த விநாடி என்ன நினைத்தாளோ என்னவோ, ஹரியின் கரங்களைச் சுசீலாவே கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, மெல்லக் கூறினாள்: “இனி மேல் லட்சம் ரூபாய் வருவதாக இருந்தாலும், நீங்கள் ஒரு பெண்ணுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுப்பதற்காகப் படியேறிப் போகக் கூடாது. சம்மதிப்பீர்களா?”

ஹரியின் உடம்பெல்லாம் புல்லரித்தது. காந்தாமணி கேலியாகச் சிரிப்பது போல், ஹரிக்குப் பிரமை தட்டியது.

“முதலில் காந்தாமணியின் கடிதத்தை நீ என்னிடம் கொடு. பிறகு, சம்மதத்தைப் பற்றிக் கேள்” என்றான் ஹரி.

“கிழித்துப் போடப் போகிறேன். எதற்காக அந்தக் கடிதம்? வெட்கமாயில்லை? அவளைப் பார்க்க முடியவில்லையே, எழுத்தையாவது பார்த்து ஆனந்தப்படலாமென்றா?”

இந்த வார்த்தைகளைக் கேட்டதும், “சுசீலா” என்று அடித் தொண்டையில் அவன் கத்தினான். மான உணர்ச்சியால் அவன் உதடுகள் துடித்தன.

“அவளைச் சொன்னால், உங்களுக்கு ஏன் இப்படிக் கோபம் வர வேண்டும்?”

“நீ அவளைச் சொல்லவில்லை; என்னைச் சொல்கிறாய். என் ஒழுக்கத்தைக் குறை கூறுகிறாய். இன்னும் நான் இங்கிருந்தால், ஏதாவது பேசிக் கொண்டேயிருப்பாய். நான் ஒழிந்து போய் விடுகிறேன்” என்று பதிலுக்குக் கூடக் காத்திராமல் ஹரி வெளியே சென்று விட்டான். அதைச் சற்றும் எதிர்பாராத சுசீலா அதிர்ந்து நின்றாள்.

காந்தாமணியின் கடிதத்தை வைத்துக் கொண்டு சுசீலா ஹரியை ஆட்டி வைத்ததையும், அவளுடைய அத்து மீறிய வார்த்தைகளைப் பொறுக்க மாட்டாமல், அவன் கோபித்துக் கொண்டு சென்றதையும், காயத்திரி கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். அவனை எண்ணி, அவள் மிகவும் வேதனைப்பட்டாள். சுசீலாவை இப்படியே இன்னும் விட்டுக் கொண்டிருப்பது தவறு என்று காயத்திரி தீர்மானித்தாள்.

அவளது கண்ணீரை விரல்களினால் துடைத்து விட்டபடியே, காயத்திரி கேட்டாள்: “யாருக்காக அழுகிறாய் சுசீலா?”

இந்த வார்த்தைகளைக் கேட்டதும், சுசீலாவின் கட்டுக்கடங்கியிருந்த துக்கம் மீண்டும் பீறிட்டு வெளிப்பட்டது.

காயத்திரி அவளை அணைத்துக் கொண்டாள். இருவரும் கிணற்றங்கரையில், துவைக்கும் கல்லின் மீது அமர்ந்திருந்தனர். தோட்டத்தைச் சுற்றிக் கொண்டு வந்த காலை இளங்காற்று, ‘சில்’லென்று முகத்தில் பட்டதும், சுசீலாவுக்குச் சற்றுத் தெம்பு வந்தது. காயத்திரி மெதுவாகப் பேச்சைத் தொடங்கினாள்: “உன்னை நான் புத்திசாலி என்று எண்ணியிருந்தேன்; அது தவறு என்று இன்று புரிகிறது. உங்கள் சண்டையை நான் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன்.”

எடுத்ததுமே காயத்திரி தொடுத்த வார்த்தைகளின் வேகம் தாள மாட்டாமல், சுசீலா அவளை ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தாள்.

“என் மேல் என்ன தப்பு?”

“அத்தனையுமே தப்பு. ஹரியிடம் நீ ஏன் இத்தனை கடுமையாக நடந்து கொள்கிறாய்? ஹரிக்கும், உனக்கும் என்ன சம்பந்தம்? முன்பு வசந்தியிடம் பேசக் கூடாதென்று சண்டை போட்டாய்; இப்போது காந்தாமணியைப் பார்க்கக் கூடாது என்கிறாய். இப்படி ஹரியைக் கோபித்துக் கொள்ள நீ யார்? உனக்கு என்ன உரிமை இருக்கிறது?”

இதைக் கேட்டதும், சுசீலாவுக்குக் கோபம் வந்து விட்டது. “உரிமை இருப்பதனால்தான், சண்டை போடுகிறேன். என் வாழ்க்கைக்குப் போட்டியாக மற்றவர்கள் ஏன் வர வேண்டும்? அதைச் சகித்துக் கொள்ள என்னால் முடியாது.”

காயத்திரி மனதிற்குள் சிரித்துக் கொண்டாள். “உன் வாழ்க்கைக்குப் போட்டியா? எது உன் வாழ்க்கை? அதை முதலில் சொல்; பிறகு உனக்குப் போட்டியாக இருப்பவர்களைப் பற்றிப் பேசிக் கொள்ளலாம்.”

சுசீலா விக்கித்துப் போனாள். காயத்திரியின் கேள்வி, அவளுடைய மூளையைத் தாக்கியது. அவளுக்கு என்ன பதில் கூறுவதென்றே தெரியவில்லை.

— ‘ஹரியைக் காணாமல், ஒரு நாள் இருக்க முடிவதில்லை. வேறு ஒரு பெண் அவனை ஏறெடுத்துப் பார்ப்பதை, மனம் அநுமதிப்பதில்லை. தஞ்சாவூரில் அவன் ஒரு வாரம் தங்கியவுடன், இந்த மனம் தவித்த தவிப்பையும், அநுபவித்த வேதனையையும் விவரிக்க வார்த்தைகளுக்கு வலிமை உண்டா? இந்த மிகச் சிறிய பிரிவையே தாங்க முடியாத போது, நாளைக்கு வசந்தியோ, காந்தாமணியோ போட்டியிட்டுக் கொண்டு, என் கையிலிருந்து ஹரியைத் தட்டிப் பறித்துக் கொண்டு போய் விட்டால்?’—

அதற்கு மேல், சுசீலாவினால் எண்ணிக் கூடப் பார்க்க முடியவில்லை. ஹரி இல்லாத வாழ்க்கையே, வெறும் சூனியமாகத் தோன்றியது. அந்தச் சூனியத்தில் திக்குத் திசை தெரியாமல் தடுமாறிய அவளை, வலிய வந்து ஒரு கரம் அணைத்தது. அந்தக் கரங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட சுசீலா, “அக்கா!” என்று தேம்பித் தேம்பி அழுதாள்.

சுசீலாவின் அழுகையும், கண்ணீருமே அவளுடைய தோல்வியையும், உள்ளக் கிடக்கையையும் வெளிப்படுத்தின. ஆனால், இது காயத்திரிக்கு என்றோ தெரிந்த பழைய விஷயம். எவ்வளவுக்கு எவ்வளவு வெளிப்படையாக எல்லோர் கண்ணிலும் படும்படியாக, ஹரியை சுசீலா வெறுத்து வந்தாளோ, அவ்வளவுக்கு அவ்வளவு யாருக்கும் தெரியாமல் ஹரியைச் சுசீலா நேசித்தே வந்திருக்கிறாள். ஆனால், சுசீலாவுக்கே அது புரிய இத்தனை நாள் ஆனதுதான் விந்தை!

—‘ஹரிக்கு வேறு போக்கிடம் ஏது? அவன் என்னை விட்டு எங்கே போய் விட முடியும்?’ என்ற எண்ணத்தை உடைத்து, ‘ஹரி நீ விலைக்கு வாங்கி விட்ட பொருளல்ல. மணமாகிற வரை, வசந்தி என்ன, காந்தாமணி என்ன, இன்னும் எத்தனை பெண்கள் வேண்டுமானாலும், அவனிடம் நேசம் பாராட்டலாம். அவனும் தனக்கு விருப்பமானவளை மணந்து கொண்டு சென்று விட முடியும். அவனுக்காக நீ என்ன செய்தாய்? நேசம் காட்டினாயா, பாசம் பாராட்டினாயா? அவன் யாரோ, நீ யாரோ?’ என்ற உணர்வு தூண்டப்பட்டவுடன்தான், சுசீலாவின் காதல் விழித்துக் கொண்டது.

ஆனால், இந்த விழிப்பு ஏற்பட்டவுடன், அவள் உள்ளம் குமுறியது. ‘ஹரி எனக்குக் கிடைக்க மாட்டானோ?’ என்ற ஏக்கம் பிறந்தது. எல்லை மீறிய அந்த ஏக்கத்துடன், அவள் காயத்திரியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘ஹரியை மணந்து கொள்ள எல்லா விதத்திலும், வசந்தியே பொருத்தமானவள் என்று அப்பாவும், அம்மாவும் ஆசிர்வதித்துக் கொண்டிருக்கின்றனர். சுந்தரியும், தன் மகளுக்கு, இந்தப் பெரிய வித்துவானை முடித்து விட எண்ணியிருக்கிறாள். இந்த நிலையில் அவர்கள் மத்தியில், நான் போய் என்ன சொல்ல முடியும்? அப்பாவைப் பொறுத்த வரை, மிகவும் முற்போக்காக நடந்து கொள்ளக் கூடியவர் என்றாலும், அம்மா சம்மதிப்பாளா? ஹரி கிடைக்கா விட்டாலும், விறகுக் கட்டையால் முதுகில் பத்து அடி நிச்சயம் கிடைக்கும். ஆகவே, இந்த விஷயததில், ஓரளவாவது உதவக் கூடியவள் காயத்திரி ஒருத்திதான். அவளைச் சரண் அடைவதைத் தவிர, எனக்கு வேறு புகலே இல்லை’ - என்ற எண்ணம் மேலிட்டவுடன், சுசீலா தன்னையும் மீறி, “அக்கா!” என்று அழைத்தவாறு, அவள் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டு, விம்மி விம்மி அழுதாள்.

சுசீலாவின் கண்களிலிருந்து உருண்டோடிய கண்ணீரை, காயத்திரி விரலால் துடைத்து விட்டாள்.

“ஹரி இல்லா விட்டால், என்னால் இந்த உலகில் உயிருடன் இருக்கவே முடியாது போலிருக்கிறது அக்கா!”

இந்த வார்த்தைகளைக் கூறி விட்டுச் சுசீலா, காயத்திரியின் முகத்தையே தீனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். தன் வாயிலிருந்து வந்த சொற்கள், அவளுக்கே விசித்திரமாக இருந்தன போலும்!

காயத்திரி மெல்லச் சிரித்தாள். ஆம்! ஹரியிடம் சுசீலா இத்தனை உள்ளன்புடன் இருப்பது யாருக்குத் தெரியும்?

“என் எண்ணம் ஈடேற வழியே இல்லையா அக்கா?” என்றாள் சுசீலா மீண்டும்.

காயத்திரி சுசீலாவின் தலையை உயர்த்தி, அவளது விழிகளையே பார்த்த வண்ணம் கேட்டாள்:

“வாயைத் திறந்து இது நாள் வரை எதுவுமே நீ உபயோகமாகப் பேசினதில்லையே; எது உன் எண்ணம் சுசீலா? ஹரியை நீ காதலிக்கிறாயா?”

காயத்திரியின் இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன், சுசீலாவின் முகம் வான வில்லைப் போல் வர்ண ஜாலம் கொட்டியது.

அவளால் அதற்கு மேல் எதுவும் பேச முடியாது என்பது காயத்திரிக்குப் புரியும். சுசீலாவின் சுபாவமே அலாதியானது. வாழ்க்கையை உணர்ச்சி வழியே பார்க்கக் கூடியவள்? மேலெழுந்தவாரியாக ரசித்துக் கொண்டு போக, அவளுக்குத் தெரியாது.

காயத்திரி அவளுடைய தலையை அன்போடு வருடிய வண்ணம் கூறினாள்: “நான் உன்னிடம் ஒன்று கேட்கிறேன்; கோபித்துக் கொள்ள மாட்டாயே!”

சுசீலா தலையை அசைத்தாள். காயத்திரி கூறினாள்: “உன் சுபாவத்தை இனியாவது மாற்றிக் கொண்டாக வேண்டும். மனத்துக்குள் மட்டும் அன்பு இருந்தால் போதாது. மனம் என்பது கண்ணாடிப் பாத்திரம் அல்ல; உள்ளே இருப்பதெல்லாம், வெளியே தெரிவதற்கு. எப்போது நீ ஹரியைக் காதலிப்பதாக ஒப்புக் கொண்டு விட்டாயோ, இனியாவது நீ அவனிடம் அன்பாக இருப்பது போல் நடந்து கொள்ள வேண்டும். அதை நாங்கள் நம்பியாக வேண்டும். அப்போதுதான் உன்னைப் பற்றிச் சொல்லி, உன் காரியத்தை முடித்து வைக்க என்னால் முடியும்.

“ஆனால், இவையெல்லாம், நீயாக இஷ்டப்பட்டால்தான். அப்படி உன்னால் இயலாத பட்சத்தில் சொல்லி விடு; நானும் இதில் ஈடுபடுவதில் பயன் இல்லை. ஏனெனில், உன் காதலை நிறைவேற்றுவது என் கையில் மட்டும் இல்லை. ஹரியை, நானோ, பிறரோ சொல்லி, இம்மாதிரி விஷயத்தில் பணிய வைக்க முடியாது. அது உன் அன்பினால் மட்டுமே ஆகக் கூடிய காரியம்.

“நான் உனக்காகச் சிபாரிசு செய்யலாம். அப்பாவும், அம்மாவும், வசந்தியை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வசந்தி, ஹரியையே ஆதியிலிருந்து அடையத் துடிக்கிறாள். இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். ஆயினும், இறுதியில் முடிவு என்று வரும் போது, ஹரியின் விருப்பத்துக்கு விரோதமாக யாரும்—அப்பா கூட குறுக்கே நிற்க மாட்டார். ஆகவே, அவன் மனத்தைக் கவர்ந்து உன்னிடம் திருப்பிக் கொள்ள வேண்டியது உன் பொறுப்பு. அதில் வெற்றி கிட்டுவது, உன் சாமர்த்தியத்தைப் பொறுத்த விஷயம்.

“ஆனால், இறுதியாக உன்னை ஒன்று கேட்கிறேன்; நன்றாக யோசனை செய்து, பதில் கூறினால் போதும். ஹரியை நீ மனப் பூர்வமாகக் காதலிக்கிறாயா?”

“ஆமாம்.”—யோசிப்பதற்கே இதில் ஒன்றுமில்லை என்பதே போல், பளிச்சென்று பதில் கூறினாள் சுசீலா.

“பின்னால் எத்தனை சங்கடங்களும், எதிர்ப்புகளும் வந்தாலும்—ஏன், நாளைக்குச் சுந்தரி சித்தியின் எதிரிலும், நீ இதைத் தயங்காமல் சொல்லுவாய் அல்லவா?”

“நிச்சயமாகச் சொல்லுவேன். சித்தி என்ன? குறுக்கிட்டால், வசந்தியிடமே, என் காதலுக்காகப் போராடத் துணிந்து விட்டேன். ஹரி இல்லாமல், என்னால் இருக்கவே முடியாது. சண்டை போட்டுக் கொண்டாவது, நான் ஹரியோடுதான் வாழ்வேனே அன்றி; என்னால் ஹரியைப் பிரிந்திருக்கவே முடியாது. இதை நான் இப்போதே, அப்பாவிடம் வேண்டுமானாலும் சொல்லி விடுகிறேன்” என்று எழுந்தாள். உடனே காயத்திரி அவளுடைய கையைப் பிடித்திழுத்து, அருகில் உட்கார்த்திக் கொண்டாள்.

“இந்த அவசரந்தான் கூடாது என்கிறேன். நினைத்ததையெல்லாம் வாரிக் கொட்டுவதற்கு, மனம் என்பது குப்பைக் கூடையல்ல. அது வைரப் பேழை. அதில் மிக உயர்ந்த பொருளை வைத்துக் கொள்ள வேண்டும்” என்றாள் காயத்திரி.

“அந்த வைரப் பேழையில், ஹரி என்னும் மிகவும் உயர்ந்த தங்கச் சிலையைத்தான் அக்கா, பிறர் தீண்ட முடியாதபடி பூட்டி வைத்திருக்கிறேன்.” என்று கூறிய கசீலா, கலகலவென்று சிரித்தாள். காயத்திரியும் அந்த அதிசயப் பெண்ணின், ஆனந்தச் சிரிப்பில் கலந்து கொண்டவாறு, எழுந்து உள்ளே சென்றாள்.