உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

229


பெரிதான மலைச்சாரலிடத்தே அமைந்த இருளடர்ந்த குவட்டிடத்தேயுள்ள இக் குறிஞ்சிச் சிற்றூராகிய நல்ல ஊரிடத்துப் பெண்கள், எம் திறத்துக் கூறப்படும் பழியுரைகளை இன்னும் கைவிடாதிருக்கின்றனரே!'

கருத்து : 'அவர் நட்புப் பிழைத்தனர்; அதனை யான் மறக்க முயலினும், அவரையும் என்னையும் சார்த்தி இவ்வூரவர் கூறும் பழியுரைகளால் என் நோய் மிகுதிப்படுகின்றதற்கு யான் என்செய்வேனோ?' என்பதாம்.

சொற்பொருள் : தீமை – தீய தன்மை; குளுரை பொய்த்தல். பிண்டம் – முதிராத சூல். நாள்மேயல் –விடியற் காலத்துச் சென்று மேய்தல். மாச்சினை – பெரிய கிளை: கருமையான கிளையும் ஆகும்; கிளைக்கணுக்களிலே பலாக் காய்ப்பதாகிய உண்மையும் இதனால் அறியப்படும். கோள் முதிர் – காய் ஊழ்த்து முதிர்தல்.

விளக்கம் : 'நட்பானது உயர்வான நோக்கத்தோடு பிறந்து முதிர்ந்ததாயினும், பலாப்பழம் விடர் அளை வீழ்ந்து அழிந்தாற்போலப் பயனற்றுக் கழிந்தது' என்கின்றாள் தலைவி, 'தீமை கண்டோர் திறத்தும், பெரியோர் தாமறிந்து உணர்க' என்பது அறவிதி. இங்ஙனமாகத் 'தீமையற்ற என்பாலேயும் இவ்வூரவர் அறியாது பழி கூறுகின்றனர்' என்கின்றாள்.

'வாய்ச்சுவையே கருதி வயிற்றுச்சூலை வீழச்செய்யும் மூங்கில் முளையைத் தின்னும் பிடியினைக் கொண்ட மலை நாட்டான்' என்றது, அவனும் 'பொருள்கருதி நிலையான இன்பத்தை இழக்கும் அறியாமை உடையவனாயினான், என்பதாம். தன் நோயின் மிகுதியைத் தான் மறைத்தற்கு முயன்றாலும், ஊரவர் உரைக்கின்ற அலருரைகளின் மிகுதியினாலே அதுதான் நாளும் நாளும் பெருகி வளருகின்றது என்பதுமாம்.

உள்ளுறை : 'சூல் முற்றிய யானை, தன் வயிற்றுப் பிண்டம் கலைந்து விழுமென்பதை அறியாதாய்ச் சென்று மூங்கில் முளைகளைச் சுவை கருதித் தின்னும்' என்றது, அவ்வாறே என் உயிரானது அவர் உறவினது பயனாலே உடலை விட்டு வழுவிப்போம் என்பதனை அறியாராய், இவ்வூரவர் அலர் எடுத்துத் தூற்றுவர் என்கின்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/230&oldid=1689947" இலிருந்து மீள்விக்கப்பட்டது