உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

231


புன்கண்மையினையுடைய மாலைப் பொழுதும் இதுவாகும். நம்மைப் பிரிந்து அவ்விடத்தினராயிருப்பவரான நம் தலைவர்தாம், இனியும் என்னை நினையாதவராகி அவ் விடத்தவராகவே பிரிந்திருப்பாராயின் அதனைப் பொறுத்து யான் இனியும் பலநாட்கள் வாழ்ந்திருக்க மாட்டேன். என்கண் வந்துற்ற பிணியினைப் பிறிதொன்றாகச் கருதிப் பலரும் பலவாறாகக் கூறுவர். அங்ஙனம் பழிதான் ஒன்றிருக்கப் பிறிதாகக் கூறப்படுவதற்கு நாமே காரணமாகுதல் நம் பண்புக்குப் பொருந்துவது ஆகாதல்லவோ?

கருத்து : 'தலைவரை விரைந்து மீளவும் அடைந்தாலன்றி, என்னைப்பற்றிய நோய் தீராது' என்பதாம்.

சொற்பொருள் : பெருங்கடல் – பெரும்பரப்பினதாகிய கடல். கானல் –கடற்கரைச் சோலை. மலிர – நிறைந்து பெருக. வள்ளிதழ் – வளவிய இதழ். கூம்புதல் – குவிதல். புள் – கடற்புள். பொதும்பர் – பூஞ்சோலை. வாங்கு மண்டிலம் – வளைந்த வான மண்டிலம். கல் – மலை. நண்ணி – அடைந்து. புன்கண் – சிறுமை.

விளக்கம் : 'தொழிலாற்றிய கதிரும் மாலையில் அத்தமன கிரியைச் சென்றடைகின்றது. கடற்புட்களும் கூடுகளைச் சென்று சேர்கின்றன; அவர்தாம் என்பால் வந்தனரில்லை' எனப் பேதுற்றுப் புலம்புகின்றாள் தலைவி. 'கானல் மலர' எனவும், 'கழி ஓதம் இல்லிறந்து பெருக' எனவும், குறித்துச் சென்ற கார்காலம் வந்துற்றதனைக் கூறுகின்றனள். 'படர் அடைபு நடுங்கப் புலம்பொடு வந்த புன்கண் மாலை' எனத் தலைவிக்கு உரைப்பினும் பொருந்தும். இரு துறைகட்கும் பொருத்திப் பொருள் கொள்க. பழி பிறிது ஆகல் பண்பன்று என்றது, தம்முடைய மறைப்பினாலே அணங்குதலைச் செய்யாத முருகிற்குப் பழியுண்டாதலைக் கருதிக் கூறுவதாம். 'அன்னார்' என்றது. பிரிவுத் துயரைப் பொறாளாய், அவன்பால் அயன்மை காட்டிக் கூறியதாகும். 'பன்னாள் வாழலென்' என்றது, 'இன்னாள் வாழ்வல்; அதற்குள் அவனை என்பால் வரச்செய்க' என வேண்டுவதுமாகும்.

118. பூவிற்பாள் நோகச் செய்வாள்!

பாடியவர் : பாலை பாடிய பெருங் கடுங்கோ.
திணை : பாலை.
துறை : பருவங் கண்டு ஆற்றாளாய்த் தலைவி சொல்லியது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/232&oldid=1690679" இலிருந்து மீள்விக்கப்பட்டது