உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

390

நற்றிணை தெளிவுரை


இருபுறமும் அரும்பிட்டுக் கட்டிய ஒரு கதிரைப் போன்ற ஒள்ளிய கொத்தினைக் கொண்ட நொச்சியது மாலையைச் சூடிக்கொண்டு, ஆறு குறுக்கிட்டுக் கிடந்தாற்போன்ற அகன்ற நெடிய தெருவினிடத்தே வந்துள்ளோனே! 'இற்றை நாளால் இவ்வூரிடத்தே திருவிழா நடைபெறா நின்றது' எனக் கூறுகின்ற அறிவு முதிர்ச்சிகொண்ட குயவனே! நீ செல்லும் இடங்களில் இதனையும் அவ்வவ்விடங்களில் உள்ளார்க்குச் சொல்லியோனாகச் செல்வாயாக!

ஆம்பல் நெருங்கித் தழைத்திருக்கும் இனிதான பெரிய வயல்களையும் பொய்கையையும் உடைய ஊரின் கண்ணே செல்வோய் ஆகுக. 'கூர்மையான பற்களையும் மெல்லிதாக அகன்ற அல்குல் தடத்தையும் கொண்டோரான இளமகளிர்களே! கையின் தடவுதலை விரும்புதற்கு உரியவான நரம்புகளைக் கொண்ட யாழினை இசைத்தபடியே வாயாலும் நல்ல பாட்டுக்களைப் பாடுவோனான நம்மூாப்பாணன் செய்த துன்பங்கள் நாளுக்குநாள் பெருகிக்கொண்டே போகின்றன. இத்தன்மையாளனாகிய இவனது பொய்மையாற் பொதியப்பெற்று நுவலப்படுகின்ற கொடிய சொற்களை எல்லாம் மெய்ம்மை எனக் கருதி ஏற்றுக் கொள்ளாதீராய், நுங்களைக் காத்துக் கொள்வீராக' என்று சொல்வாயாக!

கருத்து : 'பாணன் கூற்றுப் பொய்யாதலின், தலைவி அதனை ஏற்றற்கு இசையாள்' என்பதாம்.

சொற்பொருள் : கண்ணிகட்டல் – அரும்புகளை இருபுறமும் நிரலே வைத்து கட்டுதல். தெரியல் – மாலை. சாறு – விழா பழனத்துப் பொய்கை – பழனங்கட்கு இடையே விளங்கும் பொய்கையும் ஆம். பனுவல் – பாட்டு: பன்னப்படுவது பனுவல். வை – கூர்மை. ஐது – மென்மை. கொடுஞ்சொல் – கொடியதாம் விளைவைக் கொண்டு தரும் இன்சொல்.

விளக்கம் : ஊர் விழாவை அறிவிப்போன் குயவன் என்று உரைத்துள்ள செய்தியைக் கவனித்தல் வேண்டும். கொற்றவை கோயில்களுட் பலவற்றிற்கு இந்நாளினும் குயக்குலத்தாரே பூசாரிகளாக விளங்குகின்றனர்; இவ் வழக்கே அக் காலத்தும் இருந்திருக்கலாம்; ஊர்விழா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/391&oldid=1708207" இலிருந்து மீள்விக்கப்பட்டது