உள்ளடக்கத்துக்குச் செல்

கைதி எண் 6342/நினைவலைகள்—கவலைகள்

விக்கிமூலம் இலிருந்து

9.நினைவலைகள்-கவலைகள்!
(கடிதம் 9, காஞ்சி—15-11-64)

தம்பி!

8—3—64

வேலை செய்பவர்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு, மனதுக்கு மகிழ்ச்சி தேடிட, பல நிகழ்ச்சிகளில் தம்மை ஈடு படுத்திக்கொள்ளும் நாள் ஞாயிற்றுக்கிழமை. இந்த ஞாயிறு, சிறையைப் பொறுத்தவரையில் வெறிச்சென்ற நிலையை எங்களை ஏற்படுத்திவிடுகிறது. இன்று எங்களை அறையிலே போட்டு அடைத்தபோது, மாலை மணி ஐந்து.

இன்று அன்பழகன் கலகலப்பாக இல்லை—மகனுக்கு உடல்நிலை எப்படி இருக்கிறது, என்னவிதமான சிகிச்சை செய்திருக்கிறார்கள் என்பதுபற்றிய தகவல் எதுவும் பெற முடியாத இடத்திலும் நிலையிலும் இருப்பதால், கவலையாகத்தானே இருக்கும். வாரத்துக்கு ஒருமுறைதானே, வீட்டினர் வந்து பார்க்கச் சட்டம் இடம் தருகிறது. இடையில், கடிதம் போடுவதோ பெறுவதோ அனுமதிக்கப் படுவதில்லை—அப்படிக் கடிதம் போட்டாலோ, பெற்றுக் கொண்டாலோ, உறவினரும் நண்பர்களும் வந்து பார்க்க இருக்கும் உரிமையை இழந்துவிட வேண்டுமாம். இது மிகக் கொடுமையானது, பொருளற்றது, தேவையற்றது என்று கருதுகிறேன். கடிதம் அனுப்பவும், பெறவும், உரிமை வழங்கப்பட வேண்டும்—கடிதங்களைச் சிறை மேலதிகாரி படித்துப் பார்த்து, தரத்தக்கதா அல்லவா என்பதைக்கூட முடிவு கட்டவேண்டும் என்று விதி இணைத்துக் கொள்ளட்டும். குடும்பத்தினர் நலமாக இருக்கிறார்கள் என்ற செய்தியைக் கடிதம் மூலம் தெரிந்து, சிறையில் இருப்பவர்களும், சிறையில் உள்ளவர்கள் உடல்நலம் கெடாமல் இருக்கிறார்கள் என்று வீட்டாரும் தெரிந்துகொள்வதன் மூலம் இருதரப்பினருக்கும் ஒரு மன நிம்மதி ஏற்படும்—இதை ஏன் தடுக்க வேண்டும்? புரியவில்லை. மனநிம்மதியை மாய்த்திடவோ, சிறை! ஆம் என்று கூறுவார்களானால், 'சிறைச் சாலையை அறச்சாலை ஆக்குகிறோம், சிறையில் அடைப்பது கொடுமைப்படுத்த அல்ல, திருத்த' என்றெல்லாம் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஒருபுறத்தில், சிறையிலே புது முறைகளைப் புகுத்துகிறோம் என்று பேசுவதும், மற்றோர்புறத்தில், கடிதப் போக்குவரத்துக்குக்கூடத் தடைபோட்டு வருவதும் பொருத்தமாகத் தெரியவில்லை.

கடிதம் போடவும் பெறவும் உரிமை அளிக்கப்பட்டிருக்குமானால், அன்பழகன் தன் மகனுடைய உடல்நிலை பற்றி அவ்வப்போது தெரிந்து, மனதுக்குச் சங்கடமில்லாமல் இருக்கமுடியும். அரசியல் விஷயங்களைப் பற்றி எழுதக் கூடாது என்று தடுக்கட்டும்—நியாயம்—ஆனால் குடும்பத்தாரின் நலன்பற்றி அறிந்துகொள்வதுமா தடுக்கப்பட வேண்டும்—நாகரிக நாட்களில்—அதிலும் அரசியல் கைதிகள் விஷயத்தில்.

இன்று அறையில் போட்டுப் பூட்டப்பட்டதும், இது பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம்.

கொள்கை காரணமாக கொடுமைக்கு ஆளானவர்கள் பற்றிய புத்தகத்தில், இன்று இருவருடைய வாழ்க்கை பற்றிப் படித்தேன். போர்ச்சுகீசிய ஆதிக்க வெறியின் கீழ் சிக்கிக்கிடக்கும் அங்கோலாவில், விடுதலை விரும்பிகள் எத்தகைய கொடுமையை அனுபவிக்கிறார்கள் என்பதை, டாக்டர் நெடோவின் வரலாறு காட்டுகிறது. தென் ஆப்பிரிக்க வெள்ளையர் ஒருவர் அங்கு தலைவிரித்தாடும் 'நிறவெறி'யை எதிர்த்து, அறப்போர் நடாத்துவது பற்றியும், அதன் காரணமாக அவருக்கு ஏற்படும் அவதிகள் பற்றியும், டன்கன் என்பவருடைய, வாழ்க்கை வரலாறு எடுத்துக்காட்டுகிறது.

கொடுமைகளைத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்ற பொதுவிதியிலிருந்து, கொள்கைக்காகப் போரிடும் எவருக்கும், எந்த நாட்டிலும், எந்தக் காலத்திலும் விலக்கு இல்லை என்ற பேருண்மையை இந்த ஏடு விளக்குகிறது.

அஜந்தா—எல்லோரா ஆகிய இடங்களுக்குப் போய் வந்தது குறித்தும், சரவனபெலகோலா சென்று வந்தது பற்றியும், ஜெய்பூர், ஜோத்பூர், உதய்பூர், பரோடா, சூரத், ஆமதாபாத் ஆகிய நகர்களின் நிலையைக் கண்டறிந்தது பற்றியும், சிறிது நேரம், பொன்னுவேல்—வெங்கா ஆகியோரிடம் பேசிக்கொண்டிருந்தேன். எதிரே உள்ள 'சென்ட்ரல் ஸ்டேஷனையே ஆறு திங்கள் பார்க்க முடியாதபடி அடைத்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஜெய்பூர், ஜோத்பூர் ஆகிய இடங்களைப்பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருந்தது, ஒரு கேலிக்கூத்தல்லவா? சிறையிலே உள்ளவர்களின் சிந்தனை, வேகவேகமாக, நெடுந்தொலைவு சிறகடித்துக்கொண்டு பறந்து செல்வது இயல்பு.

நாங்கள் உள்ள பகுதியில்தான், கிருத்தவர்களுக்கான தொழுகை இடம் இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இசையுடன் தோத்திரப் பாடல்களை 'கைதிகள்'—கிருத்தவர்கள்—பாடுகிறார்கள்.

இன்று காலையில், சற்றுநேரம், நாங்கள் உள்ள பகுதி நுழைவு வாயிலில் நின்றுகொண்டு, தோத்திரப் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

இரண்டு நாட்களாக கைவலி சிறிதளவு இருக்கிறது—ஆனால் பனிக்காலம் நீங்கி வெப்ப நாட்கள் ஆரம்பமானதிலிருந்து வலி குறைவு என்றுதான் சொல்லவேண்டும். இடக்கரம், வலக்கரம்போலத் தூக்க இன்னமும் இயலவில்லை. வலி தெரியாதிருக்க 'நொவால்ஜின்' மாத்திரைகளையும் சாப்பிட்டபடிதான் இருந்து வருகிறேன். தேகப் பயிற்சி ஓரளவு செய்து கொண்டிருக்கிறேன் என்றாலும், இடக்கரத்தைப் பழையபடி தாராளமாகத் தூக்கத்தக்க நிலை ஏற்படவே இல்லை. எப்போதுமே இது போலவே இருந்துவிடுமோ என்ற ஐயுறவே அதிகமாகிக்கொண்டு வருகிறது.

சிறையில், உட்புறப்பகுதியில் உள்ள நமது தோழர்கள் நலமாகவே இருக்கின்றனர் என்பதை, இங்கு, சமையலுக்கான சாமான்கள் வாங்குவதற்காக வந்திருந்த தோழர் மணிவண்ணன் மூலம் அறிந்து கொண்டேன். இங்கு போலவே, அங்கு பலரும் நூற்பு வேலையில்தான் உள்ளனராம். மணி பதினொன்று அடிக்கிறது; பொன்னுவேலும், வெங்காவும் தூங்கி முக்கால்மணி நேரமாகிறது. நானும் எச்.ஜி.வெல்சின் புத்தகத்தைச் சிறிது நேரம் படித்து விட்டு, தூங்க முயற்சிக்க வேண்டியதுதான்.

10—3—64

நேற்று குறிப்பு எழுதவில்லை; மனதிலே ஏதோ ஒரு விதமான சலிப்பு உணர்ச்சி; இன்ன காரணத்தால் என்று என்னாலேயே கூறமுடியவில்லை: ஆனால் ஏதோ ஒருவிதமான சுமை மனதை அழுத்திக்கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்ச்சி. அதனால் வழக்கமாக எழுதும் குறிப்பைப்பற்றிக் கவனம் செலுத்தவில்லை. படிப்பதிலே மட்டும் கவனம் செலுத்தினேன். வெல்ஸ் எழுதிய அந்தப் புத்தகத்தில், ஒரு ஆராய்ச்சியாளன் காதல் திருமணம் செய்துகொண்டு, காதலியின் மனம் மகிழத்தக்க நிலையைக் காண, ஆராய்ச்சித் துறையைவிட்டு விலகி, பொருள் ஈட்டும் வாணிபத்துறைக்குள் நுழைந்து, நிரம்பப் பொருள் ஈட்டி மனைவியை மந்தகாசமான வாழ்விலே ஈடுபடச் செய்து, மனைவி செல்வத்தின் பளபளப்பிலும் நாகரிகமினுக்கிலும் மூழ்கிவிட்டதால், காதலின்பம் பெறமுடியாமல் வேதனைப் பட்டு, செல்வம் கொந்தளிக்கும் சூழ்நிலையையே வெறுத்து, பணம் ஈட்டும் பணியில் வெறுப்படைந்து, கண்காணா இடம் சென்று, சிந்தனைச் செல்வத்தைப் பெறவேண்டுமென்று தீர்மானித்து, அது குறித்து மனைவியிடம் பேச, அவளும் வேண்டா வெறுப்புடன், அவனுடன் வரசம்மதம்தர, பனிக்காடு நிரம்பிய ஒரு தீவுக்குச் சென்று இருவர் மட்டும், செல்வம், நண்பர்கள், விருந்து கேளிக்கை எதுவும் அற்ற ஒரு நிலையில் வாழ்க்கையைத் தொடங்கும் விவரம் தரப்பட்டிருந்த கட்டம், நான் படித்துக்கொண்டிருந்தது. அதனால்தானோ என்னவோ, என் மனமும் பனிக்காடு சூழ்ந்த இடத்திற்குச் சென்றவன் அடையும் நிலையை அடைந்தது. கழகம்பற்றிய நினைவுகளும், இந்தி ஆதிக்கத்தை அகற்றும் அக்கறையற்று ஆட்சியாளர்கள் கழகத்தை எப்படி ஒழிப்பது என்பதிலேயே அதிகத் துடிப்புடன் இருப்பதுபற்றிய சங்கட உணர்ச்சியும், என் மனதைக் குடைந்திடும் நிலை.

நேற்று காலை, வழக்கறிஞர் நாராயணசாமி வந்திருந்தார்—கருணாநிதி நடராசன் சார்பாக, உயர்நீதி மன்றத்திலே தொடுக்கப்பட்டுள்ள வழக்கு குறித்துக் கூறிவிட்டுச் சென்றார்.

மாலை, நாவலரும் கருணாநிதியும் வந்திருந்தனர். இளங்கோவன், நான் கொண்டுவரச் சொல்லியிருந்த புத்தகங்களை எடுத்துக்கொண்டு வந்திருந்தான்.

மேலவைகளுக்கு எவரெவரைக் கழகம் ஆதரிப்பது என்பதுபற்றி கருணாநிதியும், நாவலரும் கூறினர்.

சில சட்டமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தியதாக, ஒரு கருத்தையும் கூறினார்கள்.

பதில் ஏதும் கூறக்கூடிய நிலையிலும் இடத்திலும் நான் இல்லையே! எனவே 'நான் என்ன சொல்ல இருக்கிறது. நிலைமைக்குத் தக்கபடி முடிவு எடுத்துக்கொள்ளுங்கள்' என்று கூறி அனுப்பினேன்.

கழகத்தின் சார்பில் எடுக்கப்படும் எந்த முடிவும், நான் என்னிச்சையாகவோ, எனக்கு ஏற்படக்கூடிய விருப்பு வெறுப்பினை மட்டும் கணக்கிட்டோ, மேற்கொள்வதில்லை; என்றாலும், எனக்கென்று ஏதேனும் ஒரு 'விருப்பம்' எழுகிறது என்றால், அதனை நிறைவேற்றி வைக்கும் விருப்பம் கழகத்தினர் சிலருக்கு இருப்பதில்லை என்பதை, பல சந்தர்ப்பங்களில் நான் உணர்ந்துவருகிறேன். வருந்தி என்ன பயன்! காரணம் என்ன என்று ஆராய்வதிலேதான் என்ன பலன்! நிலைமை அவ்விதம்—அவ்வளவு தான்!

ராணிக்கு இரண்டு மூன்று நாட்களாகக் ‘காய்ச்சல்' என்று இளங்கோவன் கூறினான். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் வேலைநிறுத்தக் கிளர்ச்சி செய்வதாகவும், கௌதமன் அதிலே ஈடுபட்டிருப்பதாகவும் சொல்லிவிட்டுச் சென்றான்.

பிற்பகல், காஞ்சிபுரத்தில் மறியலில் ஈடுபட்டு சிறை புகுந்துள்ள தோழர்கள், நாங்கள் இருக்கும் பகுதி அருகில் வந்திருந்து, பெரிய பெரிய வைக்கோற்போர்களைத் தலைமீது சுமந்துகொண்டு, உட்புறம் சென்றிடக்கண்டேன்—மெத்தச் சங்கடப்பட்டேன். அவர்கள் சிரித்த முகத்தோடுதான் இருந்தார்கள்—ஆனால், அரசியல் கைதிகள் என்னென்னவிதமாக வேலை வாங்கப்படுகிறார்கள் என்பதைக் காணும்போது, வேதனையை அடக்கிக்கொண்டிருக்க முடியத்தான் இல்லை. என் மனம் என்னவோ போல் ஆகிவிட்டதற்கு இதுவும் காரணம். ஆகவேதான், குறிப்பு எழுதாமலேயே இருந்துவிட்டேன்.

இன்று, இரண்டு நாட்களுக்குமாகச் சேர்த்து குறிப்பு எழுதுகிறேன். மனச்சங்கடம் அடியோடு போய்விடவில்லை —போக்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இன்று, சமையல் வேலையில், அதிகக் கவனம் செலுத்தினேன்—நூற்பு வேலையிலும் சற்று அதிக நேரம் ஈடுபட்டேன்.

நாங்கள் அடைபட்டிருக்கும் பகுதிக்குப் பக்கத்திலேதான், தூக்குத் தண்டனை பெற்ற கைதிகள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலே ஒரு கைதிக்கு, நாளைக்காலை—பொழுது விடியுமுன்—தூக்கு! இன்று மாலை, அதுபற்றிய கவலை என் மனதைக் குடையத் தொடங்கிற்று.

ஏழ்மைக் கோலம்! எண்பது வயதிருக்கும்? கூனிக் குறுகிப் போன நிலையில் உள்ள அவன் தாய், இன்று மாலை, மகனைக் கடைசி முறையாகக் காண வந்ததை நான் பார்த்திட்டபோது, மனம் மிக நொந்தநிலை பெற்றேன்.

சில கெஜதூரத்தில்தான் இருக்கிறான்—விடியற்காலை தூக்கிலே மாள இருப்பவன்.

மாலையில், சிறை பெரிய அதிகாரிகள் வந்து பார்த்து விட்டுச் சென்றனர்.

கோயமுத்தூர் போகிறான், பெங்களூர் போகிறான் என்று ஒருவனுடைய 'பயணம்' பற்றி எவ்வளவு சாதாரண மாகப் பேசுவார்களோ, அதுபோல, இங்கு உள்ள சிறைக்காவலர்களும், கைதிகளுங்கூட, நாளைக் காலையிவே குப்பனுக்குத் தூக்கு!—என்று, மிகச் சாதாரணமாகப் பேசுகிறார்கள். கேட்கும்போதே, மனம் வேதனையடைகிறது; ஆனால் அவன் செய்த குற்றத்தைக் கூறக்கேட்கும் போதோ, இப்படிப்பட்டவனுக்கு இதுதான் தக்க தண்டனை என்றும் தோன்றத்தான் செய்கிறது.

பெயரோ, வெறுங் குப்பன் அல்ல—தலைவெட்டி குப்பனாம்.

ஒரு பெண்ணின் தலையை வெட்டி, கையில் தூக்கிக்கொண்டு, ஊரெல்லாம் சுற்றிவந்து, போலீஸ் அதிகாரியின் முன்பு கொண்டுபோய் அந்தத் தலையை வைத்தானாமே! அதைக் கேள்விப்படும் போது, தூக்குத்தண்டனை கூடாது என்று கூற யாருக்குத்தான் மனம் இடம்தரும்?

நேற்றுவரை, சாதாரணமாக இருந்தவனுக்கு, இன்று மாலை, மனக்குழப்பம் ஏற்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. ஆறு மணி சுமாருக்கு, ஒரு பயங்கரமான கூச்சலிட்டான். திகில், திகைப்பு மரணத்தின் பிடியில் சிக்கிவிட்டோம் என்ற வேதனை உணர்ச்சி, இவ்வளவும் கலந்த ஒரு கூச்சல். நான் குப்பன்! வெறுங்குப்பன்! தலைவெட்டி குப்பன் அல்ல! எனக்கு விடுதலை! விடுதலை கிடைக்கப் போகிறது!—என்றெல்லாம் கூவிக்கொண்டிருப்பதாக, சிறைக் காவலர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சில கெஜதூரத்திலே இருக்கும் ஒருவன், நாளைக் காலையிலே தூக்கிலே மாளப்போகிறான் என்று தெரியும் நிலையில், இன்று எனக்குத் தூக்கம் எங்கே வரப்போகிறது! பொன்னுவேலுவும் வெங்காவும், இதோ தூங்கிக் கொண்டிருக்கத்தான் செய்கிறார்கள். பக்கத்து அறைகளிலேயும் சந்தடி இல்லை.

இங்காவது சில கெஜதூரத்துக்கு அப்பால், தூக்கில் தொங்கப்போகிறவன் இருக்கிறான். 'ஆரிய மாயை' வழக்கிலே தண்டனை பெற்று, நான் திருச்சி சிறையிலே கிடந்தபோது, எனக்குப் பக்கத்து அறையிலேயே, தூக்குத் தண்டனைக்காரன் தான்!

இவ்வளவுதானா! இதோ காலையிலே தூக்கிலே தொங்கப்போகும் குப்பன், இப்போது எந்தப் பகுதியில் இருக்கிறானோ அந்தப் பகுதிக்குத்தான், நாங்களெல்லாம் இரண்டொரு நாட்களில் மாற்றப்பட இருக்கிறோம்.

13—3—64

மூன்றாம் நம்பர் அறையிலிருக்கிறேன்—வேறோர் பகுதியில்—முன்பு குறிப்பிட்டிருந்தபடி, தூக்குக்குச் சென்றவன் இருந்த பகுதியில்! மணி பத்து அடித்துவிட்டது! இரண்டு நாட்களாகக் குறிப்பு எழுதாதிருந்தேன்—இன்று மொத்தமாக்கி எழுதுகிறேன்.

இந்த இடத்திற்கு 11ந் தேதி பிற்பகலே வந்து விட்டோம் —மாடி—முதல்—அறையில் அன்பழகன். இரண்டாவதில் சுந்தரம்—நான் மூன்றாவது அறை—நாலாவதில் பார்த்தசாரதி—பிறகு மதி—அடுத்தது பொன்னுவேல் பிறகு வெங்கா—அடுத்ததில் அரக்கோணம் ராமசாமி.

தூக்குக்குச் சென்றவன்போக, அதே தண்டனைபெற்று, காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆறு பேர், இங்கு இருந்து, வேறு பகுதிக்கு—பக்கத்திலேதான் —அனுப்பப்பட்டுவிட்டனர்.

இப்போது இருக்கும் பகுதிக்கும் ரயில்வே தண்டவாளப் பகுதிக்கும் இடையே அதிக தூரம் இல்லை; ஆகவே ரயில்வேக்களின் சத்தம் காதிலே விழுந்தபடி இருக்கிறது; கக்கும் புகை இந்தப் பகுதியில் அடிக்கடி கப்பிக்கொள்கிறது.

இந்தப் பகுதியிலிருந்து பார்க்கும்போது, எதிர்ப்புறத்தில் சென்ட்ரல் நிலையத்திலிருந்து, மவுண்ட்ரோட் போகும் வண்டிகளின் மேல்பாகம் நன்றாகத்தெரிகிறது—ஆக நகரத்தின் மத்தியிலே இருக்கிறோம் என்ற உணர்வு ஒருவிதமான மகிழ்ச்சியையும், நகரத்திலிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வு மனச்சங்கடத்தையும், மாறி மாறித் தருகிற இடம்.

பெரிய மரமாக ஓங்கி வளரப்போகிறேன் என்று அறிவிக்கும் தன்மையில், 'பருவ கருவத்துடன்' ஒரு மாமரம்; அறைக்கு எதிர்ப்புறம் இருக்கிறது. அதிலே பூ இல்லை, காய் இல்லை, ஆனால் சிட்டுக்குருவிகள் நூறுக்குமேல் என்று கருதுகிறேன், அதிலே இடம் பிடித்துக் கொண்டுள்ளன. என்னுடைய—நண்பர்களைப் போலவே, அந்தச் சிட்டுக் குருவிகளும் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டுள்ளன்—துளி அரவம்கூட இல்லை. ஆனால் விடியற்காலை, என்னை எழுப்புவதே, அந்தக் குருவிகளின் 'கோஷ்டி கானம்' தான். அடே அப்பா! இத்தனை சின்ன உருவத்திலிருந்து எப்படித்தான் அத்தனை பெரிய சத்தம் பிறக்கிறதோ தெரியவில்லை! சத்தம் என்று சொல்லிவிட்டதற்காக வருந்துகிறேன்—இசை—இன்னிசை! கவலை, பயம், தேவை, தவிப்பு எனும் எந்த உணர்ச்சிகளும் அற்ற ஓர் நிம்மதியான நிலையிலிருந்து எழும் இசை!

"எப்படி எல்லாமோ இருந்தேன்—இப்போது இப்படி ஆகிவிட்டேன்" என்று ஏக்கத்துடன் கூறுவது போன்ற நிலையில், மாவுக்குப் பக்கத்தில் ஒரு அரசமரம் இருக்கிறது. பல கிளைகள் வெட்டப்பட்டு விட்டுள்ளன. இலைகள் பசுமையற்று, கீழேயும் விழாமல், கிளைகளுடன் கொஞ்சிக்கொண்டு மில்லாமல், ஏழ்மைக் கோலத்தில் உள்ளன.

வேறோர் புறத்தில், இரு மரங்கள்—மரங்களாக வேண்டியவை—ஒரு வேம்பு, நுழைவு வாயிலருகே ஒரு பாதாமி மரம். இது, நான் இப்போது இருக்கும் இடத்தின் தோற்றம்.

இங்கு இருந்தவன் தூக்குக்குப் போன பிறகு, இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, எங்களை இங்கு கொண்டு வருவார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்—அவனைக் காலை ஐந்து மணிக்கு 'அனுப்பி'விட்டு, பத்து மணிக்கு, எங்களுக்குச் 'சேதி' அனுப்பினார்கள். 'இன்று பிற்பகல்', புதியஇடம்; சாமான்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள் என்று!

அங்கு நாங்கள் போவதற்கு ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தபோது, ராஜகோபால் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக, எனக்குத் தந்தி கொடுத்தது, வந்தது. எத்தனை 'இன்பமான செய்தி' அனுப்பிவைக்கிறார்கள் பாருங்களேன். நண்பர்கள்! நான் இருப்பது சிறையில், என் மனதில் குடைவது ஓராயிரம் கவலைகள், நான் இழந்திருப்பது என் சிற்றன்னையை, நான் நடத்தப்படுவது ஒரு கைதி என்ற முறையில், எனக்கு வெளியிலிருந்து அனுப்பப் படும் 'விருந்து' இதுபோல! இதை மற்றவர்களுக்குச் சொல்லி, அவர்கள் மனதைச் சங்கடப்படுத்துவானேன் என்று நினைத்து, 'தந்தி' பற்றி ஏதும் சொல்லவில்லை. ஆனால், சில மாதங்கள் 'உள்ளே' இருக்கும் நிலையில், வெளியே என்னென்ன ஏற்பட்டுவிடுகின்றன என்பதை எண்ணி மெத்த வருத்தப்பட்டேன். மறுநாள் பத்திரிகையில், உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டு விட்டதாகவும், ஏன் இருக்க நேரிட்டது என்பதற்கான விளக்கமும் கண்டேன். கழக நடவடிக்கைகளை மேற்கொள்ளுபவர்கள், அவர்களுக்குச் சரி என்றுபட்ட செயலில் ஈடுபடும்போது, அந்தச் செயல், நம்மிலே சிலருக்குக் கசப்பும் கோபமும் ஏமாற்றமும் எரிச்சலும் ஏற்படுத்தக் கூடும்; ஆனால் முடிவெடுத்துச் செயல்படும் பொறுப்பை மேற்கொண்டவர்கள், வேண்டுமென்றே தவறான முறையைக் கைக்கொண்டிருக்க மாட்டார்கள். அப்படி அவர்கள் மேற்கொண்ட முறை குறையுடையது என்று தோன்றினாலும், அதன் விளைவாக நமக்கு வேதனையே ஏற்பட்டாலும், அதற்குப் பரிகாரம், பொறுத்துக்கொள்வதிலேயும், நோக்கத்திலே தவறு காணாமலிருப்பதிலேயும், நம்முடைய கடமையை மறவாதிருப்பதிலேயும் கிடைக்க முடியுமேதவிர, கோபம், கொந்தளிப்பு, எதிர்ப்பு வருத்திக்கொள்ளுதல், ஆகியவற்றினாலே அல்ல என்பதை நமது கழகத் தோழர்கள் இன்னமும் முழு அளவிலும் நம்பிக்கையுடனும் உணரவில்லை. அதாவது இன்னமும் 'பக்குவம்' ஏற்படவில்லை. இது எனக்கு மிகுந்த வருத்தத் தைக் கொடுக்கிறது. இவ்விதமாக, நான் வருத்தப்படக் கூடிய நிகழ்ச்சிகள் கழகத்தில் ஏற்பட்டுவிடும்போது, நான் வேதனை மட்டுமல்ல, வெட்கப்படக்கூடச் செய்கிறேன். என்ன செய்வது? 'இன்னமும் சிறிது காலம் தேவைப்படுகிறது போலும்' பக்குவம் ஏற்பட.

இங்கு நான் பார்க்கிறேன்—உணருகிறேன்—புதிய பாடம் கூடப் பெறுகிறேன்—ரொட்டி சுடுவதற்கு, மாவு பிசைகிறோம். மாவு பிசைந்து ஓரளவு 'இளகிய' நிலை அடைந்த பிறகுதான், அதை உருட்டி தட்டை வடிவமாக்குகிறோம்—ஆனால், 'இளகிய' நிலையில் மாவு இருப்பதால், அதை உருட்டித் தட்டை ஆக்கும்போது ஒட்டிக்கொண்டு விடுகிறது; ஒட்டிக்கொள்ளாதிருக்க, உருட்டுவதற்காகப் பயன்படுத்தும் பாண்டத்தின்மீது, உலர்ந்த நிலையிலுள்ள மாவுதூவி, அதன்மீது, பிசைந்த மாவை வைத்து உருட்டித்தட்டையாக்கி எடுத்து, பிறகு, 'ரொட்டி' சுடுகிறோம். இந்த 'மாவு' ரொட்டி ஆகாது! ஆனால், இந்த மாவு தூவாவிட்டால், பிசைந்தது கைக்கு வராது. பாண்டத்திலேயே ஒட்டிக்கொள்கிறது. சாதாரண 'ரொட்டி' சுட்டெடுக்க, 'இத்தனை பக்குவம்' தேவைப்படுகிறது. மிருகத்தனமான எதிர்ப்புக்கு இடையிலே, மிகப்பெரிய மக்கள் இயக்கத்தை நடத்திச்செல்லும் மகத்தான காரியத்தில் வெற்றி காண, எத்தனை பக்குவம் தேவைப்படும்! அடுப்படியில் அமர்ந்திருக்கும்போது, நான் இதனை எண்ணாமலில்லை.

கிடைத்ததைப் பயன்படுத்துவது, இருப்பதற்கு ஏற்றபடி ஆக்கிக்கொள்வது, சேதமானதுபோக மீதமுள்ளதைப் பயன்படுத்திக்கொள்வது, என்பவைகளெல்லாம், இங்கே நான் பெற்றுள்ள பாடங்கள். வாழைப் பழத்தில் முன் பாகமோ, அடிப்பாகமோ, தளதளவென்று ஆகிவிட்டால், பழமே வேண்டாமென்று போட்டுவிடுகிறோம்—வெளியே! இங்கே? தளதளவென்று ஆகிவிட்ட பகுதியை நீக்கிவிட்டு மற்றதைப் பயன்படுத்திகொள்கிறோம்—இங்கு என்ன பழக்கடையா இருக்கிறது, இது வேண்டாம் வேறுகொடு என்று கேட்க? அதிலும் நான் கெட்டுப்போன பாகத்தைக்கூட வீணாக்கிவிடாமல், பறவைகள் கொத்தித் தின்னட்டும் என்று, அதற்கேற்ற இடமாகப் பார்த்துத்தான் போட்டு வைக்கிறேன். வடித்த சாதம் குழைந்து போய்விட்டால், அன்று தயிரன்னமாக்கப்படுகிறது; விறைத்துப்போய்விட்டால் புளிச்சாதம் ஆக்கப்படுகிறது; இன்று காலையில், சமையலிடத்தில் வாடி வதங்கிப்போய், சத்தற்ற நிலையில், 'வெண்டை' ஒரு குவியல் தனியாக இருந்தது—வீசி எறிய வேண்டியதுதான் என்றார் பார்த்தசாரதி. வேண்டாம் வற்றல் போடுவோம் என்று சொல்லி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மோரில் ஊறவைத்து, உலரவைத்திருக்கிறேன்—நாளையோ மறுநாளோ, வெண்டைக்காய் வற்றல் விருந்தாகப் போகிறது. இது, சாப்பாட்டுக்காக, நிலைமைக்குத் தக்கபடி நாம் மேற்கொள்ளவேண்டி வருகிற முறை. நமது கழகம், நாட்டுக்குப் புதிய பொலிவு நிலை சமைத்திட அமைந்திருக்கிறது; எத்தனை எத்தனை விதமான 'பக்குவம்' நாம் மேற்கொள்ளவேண்டும்; கற்றுக் கொள்ளவேண்டும். மேலவைத் தேர்தல் சம்பந்தமாக ஏற்பட்டுவிட்ட சில விரும்பத்தகாத நிலைமைகளைக் கண்டபோது, நான் இவ்விதமெல்லாம் எண்ணிக்கொண்டேன். தூக்கிவாரிப் போடுவதுபோல, மேலவை உறுப்பினர் பதவியை, நண்பர் எம். ஜி. இராமச்சந்திரன் ராஜிநாமாச் செய்துவிட்டாராம், என்று இன்று மாலை மதியழகன் தன் தம்பியைப் பார்த்துவிட்டு வந்து தெரிவித்தார். திகைத்துப் போனேன் ; ஆனால், அடுத்தகணமே, மதியழகன், நமது நண்பர்களின் சீரிய முயற்சியினால், அந்த நிலைமை மாற்றப் பட்டுவிட்டதாகக் கூறி, என் மனதைக் குளிரச் செய்தார்.

நாங்கள் இங்குவந்து சேர்ந்த மறுநாள் சிறை மேலதிகாரி, வந்திருந்தார்—மெத்த கவலையுடன், சட்ட சபையில் சிறைநிலைமை குறித்து, நமது கழகத் தோழர்கள் கேட்டிருந்த கேள்விகள்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அதன் விளைவாக, எங்களை, இனி நீங்கள் வேலை ஏதும் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டாரா என்றால், இல்லை; காலையில் 7-30—லிருந்து மாலை 4-30 வரையில், சிறை உடையில் இருக்கவேண்டும்; நூற்புவேலையைச் செய்திடவேண்டும் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டுச் சென்றார். அது அவருடைய கடமை, நான் அதற்காக வருத்தப்பட வில்லை. இங்கு நாங்கள் வேலை செய்யாமலில்லை—செய்கிற வேலை வேண்டுமானால், பயனற்றதாக இருக்கலாம்—நூற்புவேலை. ஆனால் முறையாக வேலைசெய்து வருகிறோம்.

நேற்றும் இன்றும், கிருத்துவ மார்க்கத்தின் துவக்க கட்டத்தைப் பின்னணியாகக் கொண்ட ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு புறத்தில் செல்வச் செருக்கும் மூட நம்பிக்கையும்; மற்றோர் புறம் அருளாளரின் அறநெறி. இந்த இருவேறு நிலைமைகள் ஒன்றை ஒன்று எந்த வகையிலே பற்றியது என்பதை இந்த நூலிலே வெகு அழகாக விளக்கி இருக்கிறார் ஆசிரியர். தூங்கு முன்பு, அனேகமாக முடித்துவிடுவேன். இடையில் சிறிதுநேரம் நாலடியார் படித்துக்கொண்டிருந்தேன்.

14—3—64

இன்று காலைப் பத்திரிகைகளில் எம்.ஜி.ஆர் மேலவை உறுப்பினர் பதவியைத் துறந்துவிட்டார்; அந்த நிலையை மாற்ற நாவலரும் மற்றவர்களும் எடுத்துக்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை என்ற செய்தி கண்டு, திடுக்கிட்டுப் போனேன். கழகத்தில் ஆழ்ந்தபற்றும் என்னிடம் பாசமும் மிக்கவர். நான் சிறையில் இருக்கும் சமயத்தில், வெளியே எழும்பும் சில நிலைமை காரணமாக, இவ்விதமான முடிவுக்கு வந்தார் என்றால், எனக்கு மிகுந்த வேதனை ஏற்படாமலிருக்க முடியுமா? ஆனால், என்ன செய்ய முடியும்! நிலைமைகளை அறிந்து கொள்ளவோ, அவரிடம் பேசி நிலைமையைச் சீராக்கவோ முடியாத இடத்திலல்லவா இருக்கிறேன். பகலெல்லாம், இங்குள்ள நண்பர்கள் இது குறித்தே மிகச் சங்கடப்பட்டுக் கொண்டனர். எனக்கு, என்னுடைய மனச்சங்கடத்தை அடக்கிக் கொள்ளும் வேலையுடன், மற்ற நண்பர்களின் சங்கடத்தைத் துடைக்கும் பொறுப்பும் சேர்ந்து, நெஞ்சுக்குப் பெரும் சுமையாகிவிட்டது. கழகத்துக்கும் எம்.ஜி.ஆருக்கும் அமைந்து விட்ட பாசம், சொல்லிக் கொடுத்து ஏற்பட்டதல்ல, தூண்டிவிட்டுக் கிளம்பியதுமல்ல, தானாக மலர்ந்தது. 'கனி என் கரத்திலே வந்து விழுந்தது' என்று பெருமிதத்துடன், 'நாடோடி மன்னன்' வெற்றி விழாக்கூட்டத்திலே நான் பேசியது என் நினைவிற்கு வந்தது. அவர் கழகத்தைத் துறந்துவிடுவதோ, கழகம் அவரை இழந்துவிடுவதோ, நினைத்துக்கூடப் பார்க்கக் கூடாது. எனவே அவர், மேலவை உறுப்பினர் பதவியை விட்டு விலகினாலும், கழகத்தை விட்டு விலகமாட்டார், என் நெஞ்சிலிருந்து விலகமாட்டார் என்று எனக்கு உறுதி உண்டு. அந்த உறுதியைத் துணையாகக் கொண்டு, மனச்சங்கடத்தை மாற்றிக்கொள்ள—குறைத்துக்கொள்ள முனைவதிலேயே இன்று பெரும் பகுதி சென்றுவிட்டது. படித்து முடித்திட திட்டமிட்டிருந்தபடி, கிருத்தவ மார்க்கத் துவக்க நிலைபற்றிய புத்தகத்தையும் படிக்க மனம் இடம் தரவில்லை.

ஒருபுறம், ராஜகோபாலின் 'உண்ணாவிரதம்'—மற்றோர்புறம், எம். ஜி. ஆரின் விலகல். எதற்கும் காரணமாக என் சொல்லோ செயலோ இல்லை—ஆனால், அவைகளால் ஏற்பட்டுவிடும் வேதனையின் முழு அளவும் எனக்கு. இப்படி ஒரு நிலைமை எனக்கு! நானாகத் தேடிக் கொண்டது—எனக்காக அல்ல, நாட்டுக்கு நல்லது விளையும் என்ற நம்யிக்கையுடன் நாம் நடத்திச்செல்லும் கழகத்துக்காக! என் இயல்பு தனித்தன்மை வாய்ந்தது; நான் கழகத்தை நடத்திச் செல்லும் முறை அந்த இயல்பை ஒட்டியே பெரிதும் அமைந்து விட்டிருக்கிறது. கழகத்தை நான் வெறும் அரசியல் கட்சியாகக் கருதுபவனல்ல—எவர் ஒப்புக்கொண்டாலும் மறுத்தாலும், நான் மிக ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருப்பது 'கழகம் ஒரு குடும்பம்' என்ற கருத்தினை. அரசியலை விளக்கும் சிலபல ஏடுகளை அதிலும் கட்சி மாச்சரியங்கள், கட்சி உட்பூசல்கள், தலைமைக்காக மேற் கொள்ளப்படும் முறைகள் ஆகியவற்றை விளக்கும் ஏடுகளைப் படித்த சிலர், 'குடும்ப பாசம்' என்ற இந்தக் கருத்தையே தவறு என்கிறார்கள்—தீது என்று என்னிடமே கூட வாதாடினார்கள். அவர்களுக்கும் எனக்கும் இருந்த உறவுதான் முறிந்ததே தவிர—அவர்களாக முறித்துக்கொண்டார்களே தவிர—குடும்ப பாசம் என்ற கருத்துக்கும் எனக்கும் ஏற்பட்டுவிட்ட பிடிப்பு என்னைவிட்டுப் போய்விடவில்லை—போகாது. இந்தப் பாச உணர்ச்சிதான், நமக்கு வலிவும் பொலிவும் தருவது; இது குறைந்தால், வலிவும் பொலிவும் மறையும்.

வலிவும் பொலிவும் தருகிற இந்த உணர்ச்சி காரணமாகத்தான், கழகத்திலிருந்து எவரேனும் விலகுகிறார் என்றால், மெத்தச் சங்கடமாகிவிடுகிறது. அதிலும் எம்.ஜி.ஆர். போன்ற நட்புக்குப் பொருத்தமிக்கவர் மனச்சங்கடம் கொண்டு விலக முனையும் போது, சங்கடம் வேதனையாகிவிடுகிறது.

இதே கிழமை இதழில் பார்க்கிறேன், பஞ்சாப் முதலமைச்சரை விலகச் செய்ய வேண்டும் என்பதற்காக, நேரு பண்டிதர் மாளிகை முன்பு, ஒருவர் உண்ணாவிரதம் மேற் கொள்ளப்போகிறார் என்ற ஒரு செய்தியும்.

கடலூர் நகராட்சிமன்றத் தலைவராக, காங்கிரஸ் கட்சி ஒருவரை குறிப்பிட்டுவிட்டதால் மனம் குமுறி, அவ்ஊர் இளைஞர் காங்கிரசார் கண்டன ஆரவாரமும், ஊர்வலமும் நடத்துவது பற்றிய செய்தியும்.

தமிழ்நாடு காங்கிரஸ் துணைத்தலைவர் திரு.அருணாசலம் பொறுப்பிலிருந்து வேதனையுடன் விலகும் செய்தியும் வெளிவந்துள்ளன.

இவைகள் யாவும், அரசியல் கட்சிகளிலே ஏற்பட்டு விடும் நடவடிக்கைகள்—இவை கட்சியிலுள்ளோருக்கு வேதனை தருவதில்லை.

நாம் அப்படி அல்ல. நம்முடைய இயல்பும் முறையும் முற்றிலும் வேறு—சட்டை கிழிந்து போவதற்கும் சதை பிய்ந்து விடுவதற்கும் உள்ள பேதம் தெரியுமல்லவா—மற்ற கட்சிகளிலே ஏற்பட்டுவிடும் விலகல் போன்றவைகள், சட்டை கிழிந்துவிடுவது போன்றது; நம்முடைய கழகத்திலே ஏற்பட்டு விடும் நிகழ்ச்சிகள் சதை பிய்ந்துவிடுவது போன்றது—வேதனையில், விளைவில்—

இவ்விதமாக பலப்பல எண்ணங்கள் குமுறிக் கொண்டிருக்கும் நிலையில், வழக்கம்போல் அடுப்படியில் இருந்தேன். எத்தனையோ முறை பார்த்ததைத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன். அடுப்பு எரிந்துகொண்டிருக்கிறது—மேலே வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தில் நறுக்கி எடுத்த காய்கள் வெந்துகொண்டிருக்கின்றன. காய்களை நறுக்கி எடுத்து, அடுப்புக்குள் போட்டா வேகவைக்கிறோம்—கருகிப்போகுமே! காய்வேக நெருப்பின் வெப்பமும் தேவை, அதேபோது அந்த வெப்பம் வேகவைக்கும் அளவிலும் முறையிலும் அமைந்திருக்க வேண்டும்; அதற்காகவே ஒரு பாத்திரம்! வெப்பத்தால், பாத்திரம் தாக்குண்டு காய் வேகுமளவுக்கு வெப்பத்தை அதன் பக்கம் திருப்பிவிட்டு, மற்றதைத் தான் பெற்றுக்கொள்கிறது. பாத்திரம் கரிபிடித்து விடுகிறது—காய் வெந்து சுவைப்பண்டமாகிறது. கழகத்துக்கு நான் அப்படிப்பட்ட ஒரு பாத்திரமாக இருக்கிறேன்—மகிழ்கின்றேன்! வேதனையை முழுவதும் நான் தாங்கிக் கொள்ளவேண்டி ஏற்பட்டுவிடுவது, அடுப்பின் மீது ஏற்றப்பட்டுள்ள பாத்திரத்தின் நிலைக்கு என்னைக் கொண்டு சேர்க்கிறது. ஆனால், சமையலுக்கு, ஒரு பாத்திரம் போதாது! பல வேண்டும்! என் நண்பர்களை, நான், இதுபோன்ற பாத்திரமாகும்படி கேட்டுக்கொள்வது தவிர, வேறு விளக்கம் ஏதும் கூறத் தேவையில்லை என்று கருதுகிறேன். கழகத்திலே ஏற்பட்டுவிடும் விரும்பத்தகாத நிகழ்ச்சிகளால் ஏற்பட்டுவிடும், வெப்பத்தை பாத்திரம் போல, நாம் இடையே இருந்து தாங்கிக்கொண்டால்தான் சமையல் காரியம் ஒழுங்காக முடியும். இவ்விதமாக நானாக எண்ணிக்கொண்டு, என் மனக்குழப்பத்தை மாற்றிக்கொள்ள முனைந்தேன். வெற்றி பெற்றேன் என்று சொல்வதற்கில்லை.

இன்று மாலை, அன்பழகனுடைய துணைவியார் அவரைச் சந்தித்து, நாய் கடித்ததால், மகனுக்கு எந்தவிதமான தொந்தரவும் ஏற்படவில்லை என்று ஆறுதல் கூறினார்கள். மகனே, தைரியம் சொன்னானாம்—எனக்கு ஒன்றும் இல்லை அப்பா! பயம் வேண்டாம் என்று.

இதை அன்பழகன் என்னிடம் சொன்னார்—மனம் நிம்மதி அடைந்தது.

இன்றிரவு மீண்டும், குறையாக விட்டிருந்த புத்தகத்தைப் படித்துவிட்டுப் படுத்தேன்.

15—3—64

நான் படித்த புத்தகத்தில் குறிப்பிட்டிருந்த சம்பவங்கள் பற்றி மேற்கொண்டு தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தில், இன்று 'பைபிள்' படித்துக் கொண்டிருந்தேன்—தமிழில் ஆக்கப்பட்டது.

ரோமானியர்களிடம் சிக்கிச் சீரழிந்த நாடுகளிலே பஞ்சமும் பசியும், பிணியும் பகையும், மூடமதியும் கேடுகளும் நெளிந்து கொண்டிருந்த நிலைமையையும், அறநெறி காட்டிட எவருமின்றி, அந்த மக்கள் மாக்களாகிக் கிடந்ததையும், அந்த இருளையும் இழிவையும் துடைக்க ஏசுநாதர் மேற்கொண்ட அருள்வழி பற்றிய விவரமும் படித்து, மன நிம்மதி பெற்றேன்.

இதோ விதை விதைக்கிறவன் விதைக்கப் புறப்பட்டான்.

அவன் விதைக்கிறபோது சில விதைகள் வழியோரத்தில் விழ ஆகாய்ப் பறவைகள் வந்து அவைகளைப் பட்சித்துப் போட்டன.

சில விதைகள் அதிக மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்து மண் ஆழமில்லாததினாலே, உடனே முளைத்தன.

ஆயினும் சூரியன் எழும்பவே, அவைகள் எரிந்து, வேரில்லாமையால், உலர்ந்துபோயின.

சில விதைகள் முள்ளுகள் நடுவே விழவே, முள்ளுகள் எழும்பி, அவைகளை நெருக்கிப் போட்டன.

வேறு சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்து, ஒன்றுக்குச் சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலனைத் தந்தது.

நீண்ட நேரம், இந்தப் பகுதியைப் பற்றிச் சிந்தித்து, சிந்திக்கச் சிந்திக்க கருத்துச்சுவை கிடைக்கப்பெற்று, மகிழ்ந்தேன்.

நண்பர் அன்பழகனுடன், இதுபற்றி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.

பொதுவாக, மார்க்கங்கள், தூய்மைப்படுத்தும் இயக்கங்கள் மலரும்போது, அந்த இடங்களிலும், நாட்களிலும் நெளிந்துகொண்டுள்ள அக்ரமங்களை ஒழித்திடும் விதமாக ஆற்றல் பெறுகின்றன; தூய்மையும் வாய்மையும் கனிகின்றன; கெடுமதியும் கொடுஞ்செயலும் அழிந்து படுகின்றன, நன்னெறியும் நல்லறிவும் அரசோச்ச வருகின்றன, இருள் அகலுகிறது, இழிவு துடைக்கப்படுகிறது, வெற்றிகிட்டுகிறது, மனித குலத்துக்கு மேம்பாடு கிடைக்கிறது.

ஆனால், அக்ரமத்தை ஒழிப்பதிலே வெற்றி பெற்ற இயக்கங்கள், மீண்டும் அதுபோன்ற அக்ரமங்கள் எழ முடியாத நிலையை நிலைத்திடச் செய்ய முடிவதில்லை. தூய்மைப்படுத்தப்பட்ட இடம் மீண்டும் பாழ்படுகிறது; அரசோச்ச முற்பட்ட வாய்மை மீண்டும் வாட்டி வதைக்கப்படுகிறது. கொடுமைகள் புதிய வடிவில் கொக்கரித்துக் கிளம்புகின்றன.

ஒழிக்கப்பட்டது ஒழிந்து போய்விடவில்லை—துடைக்கப்பட்டது துல்லியமாகி விடவில்லை—அடக்கப்பட்டது அடங்கிப்போய்விடவில்லை. இது விந்தையாக இருக்கிறது என்பதுபற்றி, அன்பழகனிடம் பேசிக் கொண்டிருந்தேன். வெட்ட வெட்டத்துளிர்த்தெழுவதுபோல, மனித குலத்தை அலைக்கழிக்கும் கேடுகள், தூய்மையாளர்களால் அவ்வப்போது தாக்கித் தகர்க்கப்பட்டு வந்தபோதிலும், மீண்டும் மீண்டும் கேடுகள் தலை தூக்குகின்றன. மனிதகுலத்தைப் பாழ்படுத்துகின்றன; தூய்மைப்படுத்தும் முயற்சி தொடர்ந்து நடந்தபடி இருக்கவேண்டும் போலும் என்று பேசிக் கொண்டோம்.

நாளையத் தினம் மேயர் தேர்தல்—என்ன ஆகுமோ என்பதுபற்றிய ஏக்கம் ஏற்பட்டுவிட்டது. "மக்கள் கழகத்துக்குப் பேராதரவு காட்டியுள்ளனர். மாநகராட்சி மன்றத்தில் அரசோச்சும் பொறுப்பை ஒப்படைத்துள்ளனர்—ஆட்சியைப் பெறுவதற்கான எண்ணிக்கையும் கிடைத்திருக்கிறது. எனவே ஏக்கம்கொள்ளத் தேவை இல்லை" என்று மதியழகன், தைரியம் கூறினார். ஆனாலும், காங்கிரஸ் கட்சி, 'பண பாணத்தை' ஏவி, கழகத்தைச் சிதறடிக்கப் போகிறது என்ற மிரட்டல்கள் இதழ்களிலே வந்திருந்த காரணத்தால், நான் சற்றுக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். மாலை, நெடுநேரம் இது குறித்து பேசிக்கொண்டிருந்தோம்.

இரவு, பைபிள், 'பழைய ஏற்பாடு' படித்தேன்.

16—3—64

இன்று பிற்பகல் 2 மணிக்குக் கூடி, மேயர் தேர்தல் நடத்தப்போகிறார்கள் என்ற செய்தியுடன், காங்கிரசின் சார்பில், கே.எம். சுப்பிரமணியம் என்ற செல்வவான் நிறுத்தப்பட முடிவாகி இருக்கிறது என்ற செய்தியையும், கழகம் கிருஷ்ணமூர்த்தியை நிறுத்த இருக்கிறது, தி.மு.க.ஆதரவு பெற்ற இவர், சென்ற முறையும் இதேபோல் நின்று காங்கிரசிடம் தோற்றுப்போனார் என்ற செய்தியையும் இணைத்து, இதழ்கள் வெளியிட்டிருந்தன. நிலைமை விளக்கம் அல்ல, தமது நினைப்பை வெளிபடுத்தி இருந்தனர்.

தேர்தல்களை நடத்வதுதிலே திறமை பெற்றவர்கள் என்று பட்டயம் பெற்றுள்ள காங்கிரஸ் தலைவர்கள், மேயர் தேர்தலை நடத்திவைக்க வருகிறார்கள் என்றும், இதழ்கள் மிரட்டி இருந்தன.

நமது கழக சம்பந்தமாக என்ன ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன என்பதையும் அறிந்து கொள்ள முடியாத நிலையில், அல்லற்பட்டுக் கொண்டிருந்தோம்.

இன்று காலை 9 மணிக்கு என்னைப் போலீஸ் பாதுகாப்புடன், பெரிய மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள்—எனக்கு ஏற்பட்டுள்ள தோள்வலி எந்த நிலையிலே இருக்கிறது என்பதைக் கண்டறிய டாக்டர் நடராசனிடம் கொண்டு போயினர். வழக்கம் போல, போலீஸ் காவல். டாக்டர் நடராஜன் பரிசோதனை நடத்தினார். இடக்கரத்தை, வலக்கரம் போல இலகுவாக இன்னமும் தூக்க முடியவில்லை என்பதையும், பனி நீங்கி வெப்ப நாட்கள் துவங்கியது முதல், வலி ஓரளவு குறைந்திருக்கிறது என்பதையும் கூறினேன். இதற்கு வைத்தியம் உங்களிடமேயேதான். இருக்கிறது—இடக் கரத்தில் உள்ள பிடிப்பு போக, தேகப்பயிற்சி செய்தபடி இருக்கவேண்டும் என்று கூறினார். நாளைக்கு மூன்றாக உட்கொண்டு வரும் நொவால்ஜின் மாத்திரையை, இனி இரண்டாகக் குறைத்துக்கொள்ளலாம் என்று கூறி அனுப்பிவிட்டார்.