உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணாவின் தலைமை உரைகள்/அண்ணாவின் பேச்சு—ஓர் ஆய்வு

விக்கிமூலம் இலிருந்து

அண்ணாவின் பேச்சு - ஓர் ஆய்வு

1. பொருள்


இந்நூலின்கண் உள்ள தலைமை உரைகள் 28-இல் முதல் பேச்சு இன்பக்கனவு. இறுதிப் பேச்சு திறமைமிகு தமிழ்நாடு காவல் படை. இவற்றில் கலை, அரசியல், ஜனநாயகம், பொருளாதாரம், வரலாறு, தன் வரலாறு, வாழ்க்கை வரலாறு, கல்வி, நாட்டுப் பிரச்சனைகள் முதலிய பொருள்கள் பற்றிப் பரவலாகப் பேசப்படுகின்றன,

அண்ணா கருத்துப்படிக் கலையும் அரசியலும் கைகோத்து செல்பவை, சமூகத்தை உயர்த்துபவை.

தி. மு. க. ஆட்சிக்கு வந்த நிலையில், அதிகப் பொறுப்புணர்ச்சி அதற்குத் தேவை. எதிர்க் கட்சியின் ஒத்துழைப்போடு மக்கள் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் கட்சி வேறு அரசு வேறு என்ற நிலையில், அது பாடுபடவேண்டும். என்பது அண்ணா துணிவு.

மொழிப் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை, மது விலக்குப் பிரச்சினை எனப் பல பிரச்சினைகள் உள்ளன. பிரச்சனைகளை மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். தீர்வு காண்பதைத் தலைவர்களிடமும் அரசிடமும் விட்டுவிட வேண்டும். கலந்துரையாடலே பிரச்சினைக்கு ஏன்றும் நிலையான தீர்வு காணும் முறை என்பதையும் அண்ணா வற்புறுத்திச் சொல்கின்றார். ஏனெனில், அவர் சிறந்த ஜனநாயகவாதி. ஆசிரியர்கள் அளிக்கும் செல்வம் அறிவுச் செல்வம். ஆகவே, அவர்கள் சிறப்புடையவர்கள், அனைத்திந்திய அடிப்படை எங்கும் எதிலும் இருக்கத் தேவை இல்லை, இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை உயர்த்தி நாட்டின் பொருள் வளத்தைப் பெருக்கவேண்டும் என்பவை

அண்ணாவின் உயர்ந்த கருத்துக்கள்.

மனித சமுதாயத்திற்குச் சிறந்த தொண்டாற்றியவர். மாமனிதர் மகாவீரர். மக்கள் தலைவர் காமராசர் தமிழ் மக்களுக்குச் சீரிய தொண்டாற்றியுள்ளார். பன்மொழிப் புலவர் அப்பாதுரையார் சிறந்த தமிழறிஞர். மாநில அரசு உறவுகள் நாட்டின் வளர்ச்சியை மையமாகக்கொண்டு அமைய வேண்டும். இந்தியாவில் அனைத்திலும் ஏற்றத் தாழ்வு இல்லாத நிலையே உண்மையான ஒருமைப்பாடு. ஜனநாயகம் இந்தியாவில் நிலைத்துவிட்ட ஒன்று. அதற்கு மக்களை விடத் தலைவர்களாலேயே அதிக ஆபத்து. அண்ணா தம்மைப்பற்றி ஆறு இடங்களில் தன் வரலாறாகக் கூறு கின்றார். அவற்றில் ஒன்று நகைச்சுவையானது (பக்கம் 45) மற்றொன்று உள்ளத்தை நெகிழச்செய்வது. ( பக்கம் 65) மது விலக்கிலும், ஆறுகளைப் பயன்படுத்துவதிலும் தேசியக் கொள்கை உருவாகவேண்டும், உழைக்கும் தொழிலாளிக்கு உரிய பங்கு அளிக்கவேண்டும், தமிழ் உலகலாவிய தன்மை உடையது. ஒரு நாட்டின் பெருமை, அடிப்படை என்றும் அது அளிக்கும் கல்வியிலேயே உள்ளன. பெண் கல்வி மிகமிக வேண்டப்படுவது. தமிழ்நாடு காவல்படை திறமை மிகுந்தது, சவாலைச் சமாளிப்பது. இவ்வாறு முத்தான கருத்துகள் தலைமை உரைகளில் மிளிர்கின்றன,

2. பண்புகள்

எல்லா உயுரிய பண்புகளையும் அண்ணாவின் தலைமை உரைகள் கொண்டுள்ளன. கூட்டப்பேச்சுகளின் பிழிவையும், அவைபற்றிய தம் கருத்துக்களையும் அண்ணா தருகின்றார். இனிய முன்னுரை, தங்குதடையிலா வளர்ச்சி, அரிய முடிவுரை ஆகியவற்றை அவை கொண்டுள்ளன. மேதகு மேற்கோள் மொழிகள், உலகளாவிய செய்தி, நாட்டுச்சிக்கல்களுக்குரிய நல்ல தீர்வுகள் முதலியவை அவற்றில் பளிச்சிடுகின்றன. அறிவார்ந்த அணுகுமுறை, முதிர்ந்த பகுப்பாய்வு ஆகியவை அவற்றில் இழையோடுகின்றன. ஆற்றொழுக்கு, ஆன்ற சொல் விரைவு ஆகியவையும் குறிப்பிடத் தக்கவை. உயரிய வழக்காறுகளும் பண்பாடுகளும் நன்கு மதிக்கப்படு கின்றன, பரந்த நோக்கு, விரிந்த பார்வை ஆகியவை அவற்றில் எடுப்பாக உள்ளன.

3. நடை

பேச்சுக் கலையில் ஈடு இணையற்றவர் அண்ணா. தம் தலைமையுரைகள் விழுப்பம் பெறுவதற்குரிய எல்லா நுட்பங்களையும் அவர் கையாளுகின்றார். உவமை, சொல் திறம், மேற்கோள் மொழிகள் முதலியவை அந்நுட்பங்கள்.

பொதுவாக அண்ணாவின் மொழி வனப்பும் வண்ணமும் வியப்பும் வீறும் உடையது. தம் நுணுகியறிந்த படிப்பால் வியத்தகு முறையில் அவர் மொழியினைக் கையாளுகின்றார். உரைகள் முழுவதும் கருத்து வளம் நிரம்பியுள்ளது, வேறுபட்ட அவையினருக்குப் பேசுவதால், ஆற்றொழுக்குள்ள எளிய நடையை அவர் பயன்படுத்துகின்றார், அவர் தம் நடையில் ஆழ்ந்த அறிவாண்மையும் பெருமித உணர்வுப் பெருக்கும் வெளிப்படுகின்றன. -

பழுத்த அறிவு, உயரிய அறிவு நுட்பம், அகன்ற காட்சி அறிவு ஆகியவை அவர் தம் நடையினை அணிசெய்கின்றன. அதில் அவர் தம் ஆளுமையும் முனைப்பாகப் புலப்படுகிறது. கருத்து முதன்மையும் முழுமையும், கருத்து வெளிப்பாட்டு விழுப்பமும் அவர்தம் நடையின் தலைசிறந்த பண்புகள் ஆகும். சுருக்கம், தெளிவு, இனிமை, ஓசை, இன்பம், அறிவாழம் முதலியவை அவர்தம் நடையின் ஏனைய பண்புகள். முடிவாகக் கூறுமிடத்து, அவர் தம் நடை ஒரு தனி வீேறும் தனியாண்மையும் கொண்டது எனலாம்,

அஃதே அண்ணாவின் நடை

அ. கி. மூர்த்தி.

அண்ணா, குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன், ஆளுநர் உஜ்ஜல் சிங், திருமதி உஜ்ஜல் சிங் சென்னையில் கண் கொள்ளாக் காட்சியாக நடத்தப்பட்ட இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு ஊர்வலத்தைக் காணல்.



11-6-68 அன்று சென்னையில் முதலமைச்சர்கள்.மாநாட்டில் அண்ணா உரையாற்றுதல்.