உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தை செல்வம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

குழந்தைச் செல்வம்


இரவைப் பகலா யியற்றுதம்மா! - வெப்பம்
      இல்லா திளைப்பெலாம் ஓட்டுதம்மா!
அரவம் விழுங்கினும் அஞ்சாதம்மா!-எங்கள்
      ஆண்டவன் சூடும் மணியே அம்மா! 10

பொன்மரம் காய்த்த கனியிதுவோ? - இந்தப்
      பூமகள் ஆடும் கழங்கிதுவோ?
கன்மன முங்களி கொள்ளக் - கவினொளி
      காட்டி விளங்கும் மதியிதுவோ? 11

கண்ணுதல் உள்ளக் கருணையதோ? - கொற்கைக்
      காவலர் கண்ட புகழதுவோ?
மண்ணகஞ் செய்திடு புண்ணியமோ?- இன்று
      வானகம் வந்து நிலவுதம்மா! 12

22. வெண்ணிலா

மீன்கள் கோடி கோடிசூழ, வெண்ணிலாவே! - ஒரு
வெள்ளியோடம் போலவரும் வெண்ணிலாவே ! 1

பானுவெங் கதிர்குளிக்கும் வெண்ணிலாவே! - நித்தம்
பாற்கடலும் ஆடுவையோ? வெண்ணிலாவே! 2

ஆம்பல்களி கூரவரும் வெண்ணிலாவே! - உனக்கு
அம்புயம்செய் தீங்கெதுவோ? வெண்ணிலாவே! 3

இரவையும்நண் பகலாக்கும் வெண்ணிலாவே! - உன்னை
இராகுவும் விழுங்கிடுமோ? வெண்ணிலாவே! 4

வளர்ந்து வளர்ந்துவந்த வெண்ணிலாவே! - மீண்டும்
வாடிவாடிப் போவதேனோ? வெண்ணிலாவே! 5

கூகை ஆந்தை போலநீயும், வெண்ணிலாவே! - பகல்
கூட்டினில் உறங்குவாயோ? வெண்ணிலாவே! 6