உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் கதைப் பாடல்கள்/இரண்டு பானைகள்

விக்கிமூலம் இலிருந்து

காற்று ஓங்கி அடித்தது.
கனத்த மழையும் பெய்தது.
ஆற்று வெள்ளம் பொருள்களை
அடித்துக் கொண்டு வந்தது.

அந்த வெள்ளம் தன்னிலே
அசைந்து, அசைந்து ஆடியே
வந்த பானை ஒன்றுமே
மண்ணி னாலே ஆனதாம்.

மண்ணில் செய்த பானையை
வந்து நெருங்க லானது,
வெண்க லத்தால் ஆனதோர்
மிக்க அழகுப் பானையாம்.


அந்தப் பானை மிகமிக
அருகில் நெருங்கி வந்ததும்
இந்தப் பானை அதனிடம்
ஏக்கத் தோடே உரைத்தது.

“வெண்க லத்தால் ஆனநீ
மெதுவாய் என்னைத் தொடினுமே
என்றன் வாழ்வு முடிந்திடும்.
எட்டி நிற்பாய்; புண்ணியம்!

இருவர் பெயரும் ஒன்றுதான்.
இருந்த போதும், நாமுமே
உறவு கொள்ள முடியுமோ?
ஒதுங்கிப் போவாய்” என்றது.

‘குணத்தில் அதிக வேற்றுமை
கொண்ட இருவர் நண்பராய்
இணங்கி வாழ்தல் அரிதுதான்’
என்றே கதையில் அறிகிறோம்.