உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைச் செல்வம்/நாஞ்சில் நாடு

விக்கிமூலம் இலிருந்து

39. நாஞ்சில் நாடு

[நாஞ்சில் நாடு தென்திருவாங்கூரில் ஒரு சிறு பகுதி. பண்டை நாளில் சேர, சோழ, பாண்டிய அரசர்கள் நிரந்தரமாகப் போராடுதற்கு இவ்வளநாடு இடமாயிருந்ததாம். தெற்கும் மேற்கும் குமரிக் கடலையும் வடக்கும் கிழக்கும் பொதிகைமாமலையின் கிளைகளையும் எல்லையாகப் பெற்றிருக்கும் இந்நாடு நீர்வளம் செறிந்ததாகும்.]

மாமதில் போலமலை சூழும் நாடு - வானம்
     மாதமும் மாரி பொழியும் நாடு;
பூமக ளின்முக மாகும் நாடு - சேரர்
     பொன்முடி சூடிப் புரக்கும் நாடு. 1

பாண்டியர் வந்தனை செய்த நாடு - சோழர்
     பண்டு முடிதரித் தாண்ட நாடு;
வேண்டு பொருள்கள் விளையும் நாடு - சோலை
     வேலியாய்ச் சூழ்ந்தணி செய்யும் நாடு. 2

நெஞ்சில் மிகுந்த கருணையெல்லாம் இங்கு
     நீராக மாறி நிறைந்திடவே
வஞ்சிமன் கட்டிய பேய்ச்சிப்பாறை-ஏரி
     வற்றாது பாயும் வளநாடு. 3

ஆயிரங் காலால் நடந்து நடந்தமுது
    அன்னை பழையா றளிக்கும் நாடு ;
தீய்வு கரிவறி யாத நாடு - நித்தம்
    செல்வம் பொழியும் திருநாடு. 4

பண்ணை பெருத்த பழநாடு - சுற்றிப்
    பார்த்திடக் கண்கள் குளிரும் நாடு;
மண்ணையும் பொன்னாக மாற்றும் நாடு - கவி
    வாணர் புகழும் தமிழ்நாடு. 5

செந்நெற் பயிர் அலை மோதும் நாடு - வாழை
     தென்னை கமுகு செழிக்கும் நாடு;
மன்னிய முல்லை மருக்கொழுந்தின் - நல்ல
     வாசம் எழுந்து கமழும் நாடு. 6

காடு மலையெல்லாம் மேய்ந்துவந்து - பசு
     கன்றினை ஊட்டிக் களிக்கும் நாடு ;
ஆடுகள் மந்தையாய் வாழும் நாடு - கண்ணுக்கு
     ஆனந்தக் காட்சி யளிக்கும் நாடு. 7

தேவர் திருக்கோவில் ஓங்கும் நாடு - மேழிச்
     செல்வர் பதிகள் சிறக்கும் நாடு;
மூவர் தமிழும் முழங்கும் நாடு - திரை
     மூத்தினை வீசிக் கொழிக்கும் நாடு. 8

வெற்றி சுதந்திரம் வேண்டும் நாடு - சாதி
     வேற்றுமை என்றும் வெறுக்கும் நாடு;
ஒற்றுமை யாக ஒழுகும் நாடு - தேச
     ஊழியத் தாலே உயரும் நாடு. 9

தென்றல் உலவித் திரியும் நாடு-உடற்
     சீக்கெலாம் ஓட்டித் துரத்தும் நாடு;
என்றும் தழைத்தறம் ஏறும் நாடு - வையத்து
     ஏதும் இணையிலா நாஞ்சில் நாடே 10