உள்ளடக்கத்துக்குச் செல்

ஆண்மை/பறிமுதல்

விக்கிமூலம் இலிருந்து

பறிமுதல்

43 நெ. கைதி ஒரு பயங்கரப் புரட்சிக்காரன். அவன் பேரில் அரசியல் விஷயமாகக் கொலைக் குற்றம் சாட்டப்பட்டுக் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பயங்கரப் புரட்சிக்காரன் என்று சமுதாயத்தின் சார்பாக, அரசாங்கம் முடிவு கட்டி விட்டது. ஆனால் அவனைப் பார்த்தால், அப்படித் தோன்றாது. இயற்கைச் சிருஷ்டியில் வசீகரப்படுத்தும் ஒரு ஜீவன் இருந்தால், அது 43 நெ. கைதி.

அவன் இருக்கும் அறை தனி. வெளிச்சம் வருவதற்காக அல்லாமல், காற்று வருவதற்கு மட்டும் ஒரு சிறிய துவாரம். அதன் வழியாகப் பெரிய பூனை நுழையலாம். ஆனால் புரட்சிக்காரர்கள் பூனை வடிவம் எடுக்கக் கூடுமென்று பயந்தோ என்னவோ, அதிலும் இரும்புக் கம்பி.

இந்தத் தனிமையில் ஒருவனுக்குப் பித்துப் பிடிக்காமல் இருந்தால், அவன் மன உறுதியை என்னவென்று கூறுவது!

வாரத்திற்கு ஒரு முறை (தவறுதலாகவோ என்னவோ) அவனது சிநேகிதியைப் பார்க்க அனுமதித்தார்கள். அதுதான் காரணம், அவன் அந்தச் சிறையிலிருந்து ஒரு அற்புதமான கிரந்தத்தை எழுத.

தூக்குத் தண்டனை அனுபவிக்க இன்னும் பதினைந்து நாட்கள். இன்னும் ஒரு முறை வருவான். கிரந்தம் உலகத்திற்குப் போய் விடும். அதற்கு மேல் சாந்தி. வேறு என்ன வேண்டும்?

அந்தச் சின்ன அறையில் இரகசியங்களை மானசீகமாகத் தவிர, வைத்துக் காப்பாற்ற முடியுமா?

ஜெயில் சூப்பிரண்ட் பரமேசுவரத்திற்கு, திடீரென்று சோதனை போடவேண்டும் என்று பட்டது. மகாத்மா “எனது அந்தராத்மா” என அடிக்கடி சொல்லுகிறாரே, அது போல் இவருக்கும் கொஞ்சம் இருக்குமோ என்னவோ?

கேட்பானேன்? வெகு நுணுக்கமாக எழுதிய அந்தக் காகிதக் கத்தை அகப்பட்டுக் கொண்டது; அதைப் பறிமுதல் செய்தார்.

43 நெ. அதை எடுத்துக் கொள்ளும் பொழுது, பட்ட துடிதுடிப்பைப் பார்க்க வேண்டுமே. உயிரையே வேண்டுமென்றாலும், பணயம் வைப்பது போல்… இவனைக் கேட்காமலே, பிரியப் போகிற இந்தப் பொக்கான உயிரை மட்டுமா? தனது சக்தி முழுவதையும வைத்துப் போராடினான். நான்கு வார்டர்களும், ஒரு சூப்பிரண்டும் எதிர்க்கும் பொழுது, அந்தச் சின்ன அறையில், எப்படிப்பட்ட சண்டைக்கும் ஒரே விதமான முடிவுதான் உண்டு. அதுதான் நடந்தது.

43 நெ. க்குப் பலத்த காயம். புற உடம்பில் மட்டுமா? அது மட்டுமானால்தான், அதை ஒரு பொருளாக மதிக்க மாட்டானே? ஆத்மா, உலகம், இலட்சியம் எல்லாம் பறி போனது போல், துடித்தான்; சோர்ந்தான். அந்தப் பெண், தனது சினேகிதி வந்தால்… .ஐயோ!… அவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது.

ஜெயில் ஆஸ்பத்திரியில் மருந்து போட்டார்கள். தூக்குத் தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது.

அன்று சிநேகிதியைக் காண அனுமதிக்கவில்லை.

II

ல்லார், அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” என்பது ஒரு தத்துவப் பிரமை. இதற்கு எதிர்மறையாக தீயார். அவர் பொருட்டாகச் சிலரை வலுவாகச் சிறை செய்ய வேண்டியது என்பது ஒரு சமூக உண்மை.

பரமேச்வரம் சூப்பிரண்டாக இருந்தாலும், ஒரு சிறைவாசிதான். அந்தச் சமூக உண்மைக்கு உதாரணம், இவரும் அந்த ஜெயில் காம்பௌண்டிற்குள்தான் குடியிருக்கிறார். இவர் இஷ்டம் போல், அனாவசியமாகச் சுற்ற முடியாது. கைதிகளைக் காப்பதற்கு, இவரும் சிறை வாசம் செய்ய வேண்டியிருக்கிறது. காம்பௌண்ட் சுவற்றிலிருந்து ஒரு கருத்த உருவம் குதிக்கிறது.

கடமை! வார்டர்களைக் காணோம். அந்தப் பக்கம் சற்று ஒரு மாதிரிதான்.

ஒரே பாய்ச்சலில் எட்டிப் பிடித்துக் கொள்ளுகிறார்.

சல்லடம் தரித்த பெண்.

அவன் சிநேகிதை.

“நீ” என்றார்.

“ஆம்! அவரைப் பார்க்க வேண்டும். அனுமதி இல்லாவிட்டால், வழியுண்டு.”

“பார்க்கக் கூடாது! வீணாக நீயும் அகப்பட்டுக் கொள்ளாதே. போய் விடு. நீ சிறுமி!”

“நான் பெண்ணுமல்ல, சிறுமியுமல்ல. எங்கள் சமுதாயத்தின் அடிமை; தொண்டர்.”

“நம்முடைய சமுதாயமில்லையா?” என்று சிரித்தார்.

“நீ ஒரு துரோகி. உனக்கு அங்கு இடம் கிடையாது” என்றாள்.

அவள் கையில் தொங்கிக் கொண்டிருந்த பையில் என்னமோ சிறிய கட்டு, பொத்தென்று விழுந்தது.

இருவரும் மெளனமாக நிற்கின்றனர்.

“நீ” என்றாள்.

“போ! போ!”

அவளை ஒரு தூக்காகத் தூக்கி, காம்பௌண்ட் மதில் மேல் வைத்தார். அடுத்த நிமிஷம், அந்த உருவம் மறைந்தது.

“பறிமுதல் செய்யப்பட்ட சிறு காகிதக் குப்பை, கைதி 43 நெம்பரின் பைத்தியக்கார உளறல்களாக இருந்ததால், அழிக்கப் பட்டது” என்று எழுதி விட்டு, நாற்காலியில் சாய்ந்தார்.

எது பறிமுதலானது?

"https://ta.wikisource.org/w/index.php?title=ஆண்மை/பறிமுதல்&oldid=1694225" இலிருந்து மீள்விக்கப்பட்டது