உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/323

விக்கிமூலம் இலிருந்து

323. புலிவரி எக்கர்ப் புன்னை!

பாடியவர் : வடமவண்ணக்கன் பேரிசாத்தனார்.
திணை : நெய்தல்.
துறை : தோழி இரவுக்குறி நேர்ந்தது.

[(து-வி.) தலைவனும் தலைவியும் பகற்போதில் சந்தித்து மகிழ்தற்கு இயலவில்லை. தலைவன் இரவுக்குறியை விரும்புகின்றான். அதற்கு உடன்பட்ட தோழி, அவர்கள் சந்திப்பதற்கு ஏற்றதான இடத்தைக் குறிப்பிட்டுக் கூறுகின்றாள்.]


ஓங்கித் தோன்றும் தீங்கள் பெண்ணை
நடுவண் அதுவே தெய்வ மடவரல்
ஆயமும் யானும் அறியாது அவணம்
ஆய நட்பின் மாணலம் ஒழிந்துநின்
கிளைமை கொண்ட வளையார் முன்கை 5
நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம்
புலிவரி எக்கர்ப் புன்னை உதிர்த்த
மலிதாது ஊதும் தேனோடு ஒன்றி
வண்டின் இன்னிசை கறங்கத் திண்தேர்த்
தெரிமணி கேட்டலும் அரிதே 10
வருமாறு ஈதவண் மறவா தீமே.

தெளிவுரை : எம்மைப் போலும் மடப்பம் வருதலையுடைய ஆயமகளிரோடும் கொண்ட நட்பாகிய மாட்சிமையுடைய நன்மையினையும் ஒழிந்துபோகக் கைவிட்டாள் அவள். நின் உறவையே பெரிதானதாகப் போற்றிக் கொண்டாள். வளைகள் ஒலி முழங்கும் முன்னங்கையினளான நல்லோளாகிய நின் காதலியின் நிலைமை இது. அவள் தந்தையது சிறுகுடியையுடைய பாக்கமானது, இனிய கள் வடிதலையுடைய அதோ உயர்ந்து தோன்றுகின்ற பனைமரங்களின் நடுவே உளதாயிருப்பது கண்டாய். அவ்விடத்தே, புலியின் மேலுள்ள வரிகளைப் போல வரிகளைக் கொண்ட மணல்மேடு உள்ளது. அம் மணல் மேட்டில் புன்னையினின்றும் உதிர்ந்த தேன் நிரம்பிய பூந்தாதினை ஊதி உண்ணுகின்ற பெண்வண்டுகளுடனே ஆண்வண்டுகளும் சேர்ந்து இன்னிசைபோல ஒலித்தபடியிருக்கும். அவ்விடத்திற்கு வருவாயானால், நின் திண்ணிய தேரிலுள்ள விளங்கிய மணிகளின் ஒலியைப் பிறர் கேட்டலும் அரிதாகும்; அங்கு நீதான் வருவதற்குரிய வழியும் இதுவாகும். ஆகவே மறவாது வந்து அவட்கு அருள்வாயாக.

கருத்து : "யான் குறித்த இடத்திற்கு வருவாயானால், யாமும் அங்கு வந்து காத்திருப்போம்" என்பதாம்.

சொற்பொருள் : ஓங்கித் தோன்றும் – உயரமாக வளர்ந்து காணப்படும். தீங்கள் பெண்ணை – இனிய கள்ளையுடைய பெண்ணை; நீயும் இனிதாக அருந்திச் செல்லலாம் என்பது குறிப்பு. மடவரல் – மடப்பம் வருதலை உடைய. அவணம் – அவ்விடம்; தாம் முன்பே போந்து காத்திருப்போம் என்பவள் இவ்வாறு சுட்டுகின்றாள். மாண் – சிறந்த. கிளைமை – உறவாம் தன்மை. 'நல்லோள்' என்றது தலைவியை. புலிவரி எக்கர் – புலிக் கோடுபோல வரிகள்பட்டுத் தோன்றுகின்ற மணல் மேடு. தேன் –வண்டு. கறங்க – ஒலிக்க. தெரி மணி – விளங்கும் மணி.

இறைச்சிப் பொருள் : புன்னை உதிர்த்ததாதினை வண்டுகள் ஆரவாரித்தபடி உண்ணும் என்றனள். இது அவ்வாறே நீயும் தலைவியின் நலத்தை அஞ்சாது வெளிப்படையாக உண்டு மகிழலாம் என்றனள் என்பதாம்.

விளக்கம் : பனைமரங்கள் நிறைந்த மணல் மேடாதலால், பிறர் அறியாத வகையிற் கூடி மகிழ்வதற்கு ஏற்ற இடம் என்பதாம். அஞ்சாமல் வரலாம் என்பாள், 'பிறர் நின் தேரின் மணியோசையைக் கேட்பது அரிதாகும்' என்றனள். கள் வடிதலையுடைய பனை என்றது, நெய்தல் வளத்தினைக் காட்டுவதாகும்.

'புலிவரி எக்கர்ப் புன்னை' என்றது கூடுதற்கான இரவுக்குறியிடம் சுட்டியதாகும்.

புன்னை உதிர்த்த பூந்தாதினைத் தேனோடு வண்டினம் கூடியுண்ணும் என்றது, அவ்வாறே தந்தை தேடிக்குவித்த செல்வவளத்தை உறவும் சுற்றமும் விருந்தும் கூடியுண்டு களிக்கும் என்றதாம். இது தந்தை வீட்டு வளநிலை சுட்டிக் கூறியதாகும்.

பயன் : ஊர் அலர் பெரிதாயினதால் அவனுடன் மகிழ்தலை இழந்தேம் என்று குறிப்பாகக் கூறி, அவன் உள்ளத்தை மணவினையிற் செலுத்தி விடுகின்றாள் தோழி என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/323&oldid=1698603" இலிருந்து மீள்விக்கப்பட்டது