உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/382

விக்கிமூலம் இலிருந்து

382. நண்ணார் தூற்றும் பழி!

பாடியவர் : நிகண்டன் தலைக்கோட்டுத் தண்டனார்.
திணை : நெய்தல்.
துறை : ஒருவழித் தணந்த காலத்துப் பொழுதுபட ஆற்றாள் ஆகிநின்ற தலைமகளைத், தோழி ஆற்றுவிக்கல்லாள் ஆயினாட்குத், தலைமகள் சொல்லியது.

[(து-வி.) களவுறவிலே இடையில் ஏதோ ஒரு செயல் பற்றித் தலைவன் சில நாட்கள் வாராதிருக்கின்றனன். அக்காலத்து மாலைவேளைகளில் தலைவி படும் துயரைக் கண்டு தோழி மிகவும் வருத்தமுற்றுச் சோர்ந்து போகின்றாள். அவளைத் தேற்றும் வகையிலே, தலைவி, தான் ஆற்றியிருப்பதாகக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


கானல் மாலைக் கழிநீர் மல்க
நீல்நிற நெய்தல் நிறையிதழ் பொருந்த
ஆனாது அலைக்கும் கடல்மீன் அருந்திப்
புள்ளினம் குடம்பை உடன்சேர்பு உள்ளார்
துறந்தோர் தேஎத்து இருந்துநனி வருந்தி 5
ஆருயிர் அழிவ தாயினும்—நேரிழை!
கரத்தல் வேண்டுமால் மற்றே, பரப்புநீர்த்
தண்ணம் துறைவன் நாண,
நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே.

தெளிவுரை : நேரியவான கலன்களணிந்த தோழியே! பரவிக் கிடக்கும் கடல் நீரையுடைய குளிர்ந்த துறைக்குத் தலைவனாகிய நம் காதலன் நாணும்படியாக நமக்குப் பகையாயினோர் ஒருசேரத் தூற்றுகின்ற பழிச்சொல்லுந்தான் மிகுதியாக உண்டல்லவோ! ஆதலினாலே—

கானற் சோலையிலே, மாலைப் பொழுதிலே, கழியிடத்து நீரானது மிகுதியாகப் பெருகிற்று; நீல நிறத்தையுடைய நெய்தலின் நிரையாகிய இதழ்கள் குவிந்து விட்டன; அமைந்திராதே அலையெழுந்து உலவும் கடலிடத்தே சென்று, மீன்களைப் பற்றித் தின்றுவிட்டுப், புள்ளினங்களும் தத்தம் கூட்டினிடத்தே ஒருசேரச் சென்று சேர்கின்றன; இவற்றைத் தாமும் கண்டறிந்தும் நம்மை நினையாதவராயினார் நம் தலைவர். நம்மைப் பிரிந்து சென்ற அவர், நம்மை இருக்கவென விட்டுச் சென்ற இத்தேசத்திலேயே இருந்தபடி, அவரை நினைந்து நினைந்து மிகவும் வருந்தி, நம் அரிய உயிரே அழிவதானாலும் அழிவதாக. நாம் நம் துயரம் புறத்தார்க்குத் தோன்றாதபடி மறைத்தலே எவ்வாற்றானும் வேண்டுங்காண்!

கருத்து : 'உயிரே போவதாயினும் நம் துயரம் வெளித்தோன்றாதவாறு மறைத்தல் வேண்டும்' என்பதே என் நிலை என்பதாம்.

சொற்பொருள் : கானல் – கானற் சோலை. மாலைக் கழிநீர் மல்க – மாலைப் போதிலே கழியிடத்தே நீரானது பெருக; அலை பெரிதாக எழுந்து மோதுதலால் கழியிலே கடல் நீர் புகுந்து, அது பெருகுவதாயிற்று என்க. நிரையிதழ் – வரிசையாக அமைந்த இதழ். பொருந்த – குவிந்து மூடிக்கொள்ள. ஆனாது – அமையாது. அலைக்கும் – அசைந்தபடியிருக்கும். குடம்பை – கூடு. உடன் சேர்பு – ஒன்றாகக் கூடிச் சேர்ந்து, ஆணும் பெண்ணும் ஒன்றாகக் கூடியபடி தத்தம் கூட்டிற் சென்று சேரும் என்க. துறந்தோர் தேஎத்து – துறந்தோர் இருக்கவெனக் கைவிட்டுச் சென்ற இந்நாட்டிடத்து. காத்தல் – மறைத்துக் காத்தல். பரப்பு நீர் – பரவிய நீர். நாண் – நாணும்படியாக.

விளக்கம் : கானலை முதற்கண் கூறியது, இயற்கைப் புணர்ச்சி பெற்ற இடமாதலால், அந்நினைவே முதற்கண் உளத்தெழுதலால். நீலநிற நெய்தல் நிரையிதழ் பொருந்துதலைக் கூறியது, தான் இதழ் பொருந்தாதே உறக்கமின்றித் துயரப் படவேண்டியதை நினைத்துக் கூறியதாம். கடல் மீன் அருந்திய புள்ளினம் குடம்பைக்கு ஒருசேரச் சென்றது கூறியது, அவரும் பொருள் தேடியதும் தன்னை நாடி வராததை நினைந்து வருந்தியதாம். நண்ணார் தூற்றும் பழியாவது, அவன் மீண்டு வருங்காலத்தே, தலைவி தான் துயரத்தால் உயிரிழந்து போகக் கண்ட அயற்பெண்டிர், அவள் சாவுக்கு அவனே காரணன் என்று பழிப்பதை உளங்கொண்டு சொன்னதாம். இதன் அமைப்பு, இவள் காதலன் கடல் கடந்து வினைமேற் கொண்டு வேற்றுநாடு சென்று, குறித்த நாளிலே மீண்டு வராதே காலம் தாழ்த்தவன் என்பதையும் காட்டும்.

பயன் : தோழி, தலைவி ஆற்றியிருப்பாள் என்று தெளிந்து தன் மனத்துயரம் தீர்வாள் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/382&oldid=1698704" இலிருந்து மீள்விக்கப்பட்டது