பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

அதிகமான் நெடுமான் அஞ்சி

பரிசிலைப் பெற்றுக்கொண்டு செல்வதற்காகவே வந்திருக்கிறேன் என்று என்பால் அன்பு வைத்தருளி, இதைப் பெற்றுக் கொண்டு இப்படியே போகட்டும் என்று சொல்லி அனுப்பினானே. அவன் என்னை எப்படி அறிந்திருக்கிறானோ, அறியேன். என்னைக் காணாமல் வழங்கிய இந்தப் பொருளைக் கொண்டுசெல்ல நான் வாணிக நோக்கமுடைய பரிசிலன் அல்லேன். பணம் ஒன்றே குறியாக நினைத்து நான் இங்கே வரவில்லை. மனம் மகிழ்ந்து முகம் மலர்ந்து கண்டு அளவளாவி, தரம் அறிந்து கொடுத்தனுப்புவதாக இருந்தால், அவர்கள் கொடுப்பது தினையளவாக இருந்தாலும் எனக்கு இனியது” என்று பாட்டினாற் சொல்லிப் புலவர் புறப்பட்டுச் செல்வதற்காக எழுந்துவிட்டார்.

“நீங்கள் சினம் கொள்ளக் கூடாது. தயை செய்து அமரவேண்டும்” என்று சொல்லி உள்ளே ஓடினார் அதிகாரி. “நான் வாணிகப் பரிசிலன் அல்லேன்” என்று அழுத்தந்திருத்தமாகப் புலவர் சொன்னது அவர் காதிலே புகுந்து குடைந்தது. அதை அப்படியே போய் அதிகமானிடம் சொன்னார்.

அதிகமான் உடனே எழுந்துவந்தான்; ஔவையாரைக் காக்கவைத்தது எப்படிப் பிழையோ, அப்படியே புலவரைக் காணாமல் பிச்சைக்காரர்களுக்குப் பிச்சையிடச் செய்வதுபோலப் பரிசிலை அனுப்புவதும் பிழை என்பதை உணர்ந்துகொண்டான். “குற்றத்தைப் பொறுக்க வேண்டும்” என்று சொல்லிக் கொண்டே வந்தான்.

“நீர் கிழிய எய்த வடுப்போல மாறுமே, சீரொழுகு சான்றோர் சினம்” என்பார்கள். அதிகமானைக் கண்டவுடன் பெருஞ்சித்திரனாருடைய சினம் மாறியது.

அதிகமான் அவரை உபசரித்துப் பேசிக்கொண்டிருந்தான். அவர் சினத்தாற் பாடிய பாடலை மறுபடி