அரசிலே மூன்றும், அவர்கொடி மூன்றும்,
தோன்றிய தூய்மைச் சங்கமோர் மூன்றும்
ஊன்றிப் பல்கிய ஒண்டமிழ் நாட்டில்...
குடிதழுவி நின்ற கோனாட்சி மறைந்து,
கடிதோச்சும் மாற்றார் படைநடத்தி வந்து,
வேற்று மொழிகள், விரவுநா கரிகம்
தோற்று வித்ததால் துவண்டது தமிழகம்!
ஐம்பெருங் காப்பியம், அகம்புறங் கூறும்
செம்பொருள் எட்டுத் தொகையும், சீரிய
பத்துப் பாட்டும் பதினெண்கீழ்க் கணக்கும்
எத்தனை இலக்கியம், இதிகாச புராணம்,
சித்தர் பாடலும், சிவன்புகழ் பேசியே
பக்தியை வளர்க்கும் பாசுரம் மல்கிய
திருவா சகமுதல் தேவா ரங்களும்,
திருவாய் மொழியுடன் திவ்யப்ர பந்தமும்,
பெரிய புராணம், திருவிளை யாடல்
அரிய திருப்புகழ், உரிய பெருமைசேர்
கம்ப ராமாயணக் காவியம், பாரதம்,
அன்பால் திருமூலர் அளித்த மந்திரமும்
அருட்பெருஞ் சோதியால் இருட்பகை ஓட்டிட
அருட்பா நல்கிய அடிகளார் வாக்கும்
சீறாப் புராணமும் தேம்பா வணியும்
பாரதி, தாசன், கவிமணி பாடலும்