பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

57



போருக்குப் பின்னே எழும் அமைதி போல; வான மண்டலப் போருக்குப் பின், வில் மட்டும்தான் தனியே நின்றது!

பயங்கரக் காட்டிலே வழி தவறி வந்துவிட்ட குழந்தை எவற்றைப் பார்த்தாலும் தனது பிஞ்சு விழிகளை உருட்டி உருட்டிப் பார்த்து மிரள்வதைப் போல, வானவில்லும் நீண்ட நெடு வானத்திலே காட்சியளித்து, உலகைக் கண்டு மிரண்டு நின்றது!

பசுமையான செடிகொடிகளையும், இதழ் விரித்த பூக்களின் அழகையும் பார்த்துச் சிரிக்கும் கள்ளங் கபடமற்ற குழவியைப் போல; வானவில்லும் உலகிலே நடைபெறும் மக்கட் கூட்டத்தின் திருவிளையாடல்களைக் கண்டு; தனது வண்ணத்தைக் காட்டிச் சிரித்தது!

அந்த வில் அமைதிக்காக வளைந்ததா? மற்றொரு அம்பைக் காற்றிலே மிதக்கவிட வளைந்ததா?

வினாக் குறியாக வில் விளங்கியது. இருப்பினும்; வானவில் வானவில்தானே!

மனிதன் மழலையினின்று வளர்ந்தவனன்றோ குழவி புத்தி, வாலிபத்தில் வடிவம் காட்டுவதும் இயல்புதான்!

வானவில்லைக் கண்டேன்! கைகொட்டி நகைக்கும் சிறுபிள்ளையானேன்!

எனது எண்ணங்கட்கு இறக்கைகள் முளைத்தன!

வானவில்லின் விளிம்புகளில் நின்றவாறே உலாவர ஆரம்பித்தேன்!

என்னுடைய ஒருமுனை வழியாக ஏறினேன்! அதன் உச்சியை அடைந்தேன்!

என்னுடைய எண்ணங்கள் எதையோ ஒன்றை அறிவதைப் போல எண்ணித் துடித்தன!

ஏதோ ஒன்றை நான் பெறுவதும், அதை இழக்கத் தயாராக இல்லாததும் போன்ற உள்ளுணர்வு எனக்கு ஏற்பட்டது!

தன்னம்பிக்கையை நான் தழுவிக் கொண்டேன். சோர்வோ - தளர்வோ என்னை நாட அச்சப்பட்டன!