170
அறிஞர் அண்ணா நினைவஞ்சலி
தேனில் சுவையை -
வயலில் ஆட்டத்தை -
புயலில் பேயாட்டத்தை - நெருப்பில் சூட்டை -
நிலவில் குளிர்ச்சியை
உண்டாக்கி, மகிழ்ந்து, ஓய்வெடுக்கும் தாயே.
உனது பெயரில் எனது ஜீவன் தாலாட்டுப் பாடுகிறது.
நீதி மன்றத்தில் நின்று அநீதியைக் கண்டிக்கின்றவளே, பள்ளியிலே இருந்து புதுப் பாடத்தைச் சொல்லிக் கொடுப்பவளே, விருந்திலே அறுசுவை படைப்பவளே! உன்னை நான் ஒன்று கேட்பேன்!
எனது பூர்வ காலத்தியச் சொத்து எல்லாம், நீ எழுதிவைத்தவைதான். அதையே, கேள்வி ரூபத்தில் உனக்கு அனுப்பி வைக்கிறேன்.
எனது உடலைப் பார்த்தாயா? வாழ்க்கையின் வெடிப்பும் - வறுமையின் கீறலும் - துன்ப வடுவும் - அதிலே, சோக ரேகைகளோடு பின்னிக் கிடக்கின்றன!
அக்கினித் தழலால் வெந்து போன என் மனம், உனது அருள் மருந்துக்காகக் காத்துக் கிடக்கின்றது.
இந்த நாட்டின் ஜீவநாடி என்று, உன்னைக் கூறுகிறார்கள். எந்தக் காலத்திலும், நீ - தூங்கி அறியாதக் கண்களை வைத்துக் கொண்டிருப்பவள்.
நோஞ்சானுக்கு நேசக்கரமும் - எதிரிக்கு வீரக்கரமும் நீட்டுபவள்.
இப்போது என் நிலை, பயங்கரமான அரசியல் முட்காட்டில் செல்லுபவனைப்போல் இருக்கிறது.
நான், மேற்கொண்டு எனது பயணத்தைத் தொடர்வதற்கு முன்னால், நீ வந்து என்னை அள்ளி எடுத்து, உன் இதயக் கடலிலே மிதக்கவிடு.