விவேகசிந்தாமணி 81-100

விக்கிமூலம் இலிருந்து

விவேகசிந்தாமணி[தொகு]

பாடல்: 81 (தன்மானங்)[தொகு]

தன்மானங் குலமானந் தனைவேண்டி யடைந்தோர் தங்கள் மானம்
என்மான முடன்சமமா மென்றெண்ணி யெவரிடத்து மினிமை யான
நன்மானம் வைத்தென்று மார்வமுட னவர்களுக்கு நலஞ்செய் வோனை
மண்மாண வடைந்தோரைக் காக்கின்ற வள்ளலென வாழ்த்த லாமே.



பாடல்: 82 (மங்கைகைகேசி)[தொகு]

மங்கை கைகேசி சொற்கேட்டுத் தசரதன் மரண மானான்
செங்கம லச்சீதை சொற்கேட்டுச் சீராமன் சென்றான் மான்பின்
தங்கை சூர்ப்பணகை சொற்கேட் டிராவண னிறந்து போனான்
நங்கை சொற்கேட்டாற் கேடுவரு நகைப்ப ருலகோர் தானே.


பாடல்: 83 (தடாரிதண்ணுமை)[தொகு]

தடாரி தண்ணுமை பேரிகை சல்லரி யிடக்கை
படாது கூடியே யொலித்திடல் போலவிப் பாரில்
விடாது நாணகன் றன்னிய புருடனை விரும்பி
யடாது செய்தமங் கையின்வசை யொலித்திடு மன்றே.


பாடல்: 84 (புத்திமான்)[தொகு]

புத்திமான் பலவா னாவான் பலமுளான் புத்தி யற்றால்
எத்தனை விதத்தி லேனு மிடரது வந்தே தீரும்
மற்றொரு சிங்கந் தன்னைக் குறுமுயல் கூட்டிச் சென்றே
உற்றதோர் கிணற்றில் சாயல் காட்டிய வுவமை போலே.


பாடல்: 85 (அன்னையே)[தொகு]

அன்னையே யனைய தோழி வன்புட னிருக்கு மாதே
உன்னையோ ருண்மை கேட்பே னுணர்ந்திட வுரைத்தல் வேண்டும்
என்னையே புணரு வோர்க ளெனக்கு மோரின்ப நல்கிப்
பொன்னையுங் கொடுத்துப் பாதப் போதினில் வீழ்வ தேனோ.



பாடல்: 86 (பொம்மெனப்)[தொகு]

பொம்மெனப் பணைத்து விம்மிப் போர்மதன் மயங்கி வீழும்
கொம்மைசேர் முலையி னாளே கூறுவேன் நன்கு கேண்மோ
செம்மையி லறஞ்செய் யாதார் செல்வந்தான் சிதற வேண்டி
நம்மையுங் கள்ளுஞ் சூதும் நான்முகன் படைத்தா னன்றோ.


பாடல்: 87 (ஒருநான்கீரரை)[தொகு]

ஒருநான் கீரரரையு மொன்றே கேளாய் உண்மையாய் ஐயரையு மரையுங் கேட்டேன்
இருநான்கு மூன்றுடனே வொன்றுஞ் சொல்லாய் யிம்மொழியைக் கேட்டபடி யீந்தா யாயின்
பெருநான்கு மறுநான்கும் பெறுவாய் பெண்ணே பின்னையோர் மொழிபுகல வேண்டா மின்றே
சரிநான்கும் பத்துமொரு பதினைந் தாலே சகிக்கமுடி யாதினி யென்சகியே மானே.



பாடல்: 88 (தேனுகர்வண்டு)[தொகு]

தேனுகர் வண்டு மதுதனை யுண்டு தியங்கியே கிடந்ததைக் கண்டு
தானதைச் சம்பு வின்கனி யென்று தடங்கையி லெடுத்துமுன் பார்த்தாள்
வானுறு மதியம் வந்ததென் றெண்ணி மலர்க்கரங் குவியு மென்றஞ்சிப்
போனது வண்டோ, பறந்ததோ பழந்தான் புதுமையோ விதுவெனப் புகன்றாள்.

பாடல்: 89 (கானலைநீரென்)[தொகு]

கானலை நீரென் றெண்ணிக் காடுவெளி திரியு மான்போல்
வானுறு யிலவு காத்த மதியிலாக் கிள்ளை யேபோல்
தேனினை யுண்டு தும்பி தியங்கிய தகைமை யேபோல்
நானுனை யன்ப னென்று நாளையும் போக்கி னேனே.

பாடல்: 90 (தங்குமன்பின்)[தொகு]

தங்கு மன்பின் மணவாளன் றன்னை நினைக்கும் போதெல்லாம்
பொங்குங் கடலு முறங்காது, பொழுதோ நாளும் விடியாது
திங்க ளுறங்கும் புள்ளுறங்குந் தென்றலுறங்கும் சிலகாலம்
எங்கு முறங்கு மிராக்கால மென்கண் ணிரண்டு முறங்காவே.


பாடல்: 91 (சொல்லுவார்)[தொகு]

சொல்லுவார் வார்த்தை கேட்டுத் தோழைமை யிகழ்வார் புல்லர்
நல்லவர் விசாரி யாமல் செய்வரோ நரிசொற் கேட்டு
வல்லரி யெருதுங் கூடி மாண்டதோர் கதையைப் போலப்
புல்லிய ரொருவ ராலே போகுமே யனைத்து நாசம்.


பாடல்: 92 (அன்னம்பழித்த)[தொகு]

அன்னம் பழித்தநடை யாலம் பழித்தவிழி யமுதம் பழித்த மொழிகள்
பென்னம் பெருத்தமுலை கன்னங் கறுத்தகுழல் சின்னஞ் சிறுத்த விடைப்பெண்
என்னெஞ் சுறுத்த வவடனெஞ்சு கற்றகலை யென்னென் றுரைப்ப தினிநான்
சின்னஞ் சிறுக்கி யவள்வில் லங்க மத்தனையுந் தெய்வங் களுக்கபயமே.


பாடல்: 93 (உண்ணல்)[தொகு]

உண்ணற் பூச்சூட னெஞ்சுவத் தலொப்பனை
பண்ணலெல் லாமவர் பார்க்கவே யன்றோ
அண்ணலின் பிரிவினை யறிந்துந் தோழினீ
மண்ண வந்தனை யிதுமடமை யாகுமால்.


பாடல்: 94 (பூதலத்தில்)[தொகு]

பூதலத்தில் மானிடராய்ப் பிறப்ப தரிதெனப் புகல்வர் பிறந்தோர் தாமும்
ஆதிமறை நூலின் முறையருள் கீர்த்தியாந் தலங்கள் பண்பாய்ச் சென்று
நீதிவழு வாத வகைவழக் குரைத்து நல்லோரை நேசங் கொண்டு
காதவழி பேரில்லார் கழுதை யென்றே கருதிடுவர் பாரில் தானே.


பாடல்: 95 (வல்லியந்தனைக்)[தொகு]

வல்லியந் தனைக்கண் டஞ்சி மரந்தனி லேறும் வேடன்
கொல்லிய பசியைத் தீர்த்து ரட்சித்த குரங்கைக் கொன்றான்
நல்லவன் றனக்குச் செய்த நலமது மிக்க தாகும்
புல்லர்க்கு நன்மை செய்தாற் போக்குவ ருயிரைத் தானே.


பாடல்: 96 (மாகமாமேடை)=[தொகு]

மாகமா மேடை மீதில் மங்கைநின் றுலாவக் கண்டு
ஏகமா மதியென் றெண்ணி யிராகுவந் துற்ற போது
பாகுசேர் மொழியி னாளும் பதறியே பாதம் வாங்கத்
தோகைமா மயிலென் றெண்ணித் தொடர்ந்தரா மீண்ட தன்றே.


பாடல்: 97 (அருகில்வர)[தொகு]

அருகில்வர வருகில்வர வருகில்வர வுருகும்
கரியகுழல் மேனியிவள் சாயல்மயில் மறுகும்
பெரிதுதனம் சிறிதுயிடை பேதையிவ ளையோ
தெருவிலிவள் செல்லுகையிற் றுள்ளுமுளந் தானே.


பாடல்: 98 (குரங்குநின்)[தொகு]

குரங்கு நின்று கூத்தாடிய கோலத்தைக் கண்டே
அரங்கு முன்புநா யாடிக்கொண் டாடியது போல
கரங்கள் நீட்டியே பேசிடும் கசடரைக் கண்டு
சிரங்க ளாட்டியே மெச்சுத லறிவிலார் செய்கை.


பாடல்: 99 (இந்திரன்பெருமை)[தொகு]

இந்திரன் பெருமை குன்று மிறையவர் மகிமை குன்றும்
மந்தர மலைக ளாடு மறுகயல் வறுமை யாகும்
சந்திர சூரியன் சாயும் சகத்தினிற் றேசு மாறும்
அந்தணர் கருமங் குன்றி லவனியில் வாழ்வார் யாரே.


பாடல்: 100 (பண்புளருக்)[தொகு]

பண்புளருக் கோர்பறவை பாவத்திற் கோரிலக்கம்
நண்பிலரைக் கண்டக்கால் நல்லிருக்கை- திண்புவியை
யாள்வா ரழகிய சொக்கர்க் கரவம்
நாடோ றுமேநன் னிலம்.


விவேகசிந்தாமணி முற்றும்[தொகு]

பார்க்க
விவேகசிந்தாமணி 01-20
விவேகசிந்தாமணி 21-40
விவேகசிந்தாமணி 41-60
விவேகசிந்தாமணி 61-80
"https://ta.wikisource.org/w/index.php?title=விவேகசிந்தாமணி_81-100&oldid=22408" இலிருந்து மீள்விக்கப்பட்டது