பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

45

வாழை ஒன்று குலை தள்ளிய பிறகு, அதனடியிலேயே வேறோர் வாழைக் கன்று வாரிசாக வளர்வது போல, டால்ஸ்டாய் நடத்திய ஆரம்பப் பள்ளியைப் பின் தொடர்ந்து வேறு சிலர் அதே போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட சில பள்ளிகளை தொடங்கி நடத்தலானார்கள். அதனால், டால்ஸ்டாய் நோக்கம் மக்கள் இடையே வெற்றிபெற்றிடும் நிலையேற்பட்டது.

இதற்குப் பிறகுதான் ருஷ்ய அரசாங்கம், டால்ஸ்டாயின் கல்விச் சோதனைகளையும், அதன் உயர்ந்த லட்சியங்களையும், அடிப்படை உணர்வுகளையும் புரிந்து கொண்டது.

ருஷ்யாவில் பொதுவுடைமைவாதிகளின் நோக்கங்கள் மக்களிடையே உணர்வு பூர்வமாகப் பரவி வந்த நேரம் அது என்பதால், இக் கல்வி முறைத் தத்துவத்தால் பொதுவுடைமைவாதிகளுக்கு அதிக செல்வாக்கும் பெருமையும் புகழும் பரவி, எதிர்காலத்தில் கம்யூனிஸ்டுகள் அதிகமாகிவிடுவார்களோ என்று ஜார் மன்னனது அரசு அச்சம் கொண்டது.

அந்த அச்சத்தின் அடிப்படையில் யோசித்த அரசு, அந்தப் பள்ளிகள் வளர்ந்தால் நாட்டின் நிலை என்னவாக இருக்கும் என்பது பற்றிய ஓர் அறிக்கையை விவரமாக அனுப்பி வைக்குமாறு அரசுக் கல்வித் துறைக்குக் கட்டளையிட்டது.

டால்ஸ்டாயின் கல்வித் தத்துவம், அவர் செய்து காட்டிய முன்மாதிரிப் பள்ளி நிர்வாக நடவடிக்கைகள் எல்லாமே போற்றத் தக்கவை, பாராட்டத்தக்கவை, எதிர்காலக் கல்வி வளர்ச்சி முன்னேற்றத்துக்கு ஏற்கத்தக்கவை என்றும், கல்வித் துறையின் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் தகுந்த அடிப்படையான ஒரு கல்விச்சோதனைக்குரிய அறிவியல் நெறிகள் என்றும் ருஷ்ய அரசு கல்வித்துறை 1862-ஆம் ஆண்டின் இறுதி வாக்கில் அரசுக்கு விரிவான அறிக்கையை அனுப்பி வைத்தது.