திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எரேமியா/அதிகாரங்கள் 39 முதல் 40 வரை

விக்கிமூலம் இலிருந்து
"மெய்க்காப்பாளரின் தலைவர் நெபுசரதான், நகரில் எஞ்சியிருந்த மக்களையும் தம்மிடம் சரணடைந்திருந்தவர்களையும் பாபிலோனுக்கு நாடுகடத்தினார்." - எரேமியா 39:9

எரேமியா (The Book of Jeremiah)[தொகு]

அதிகாரங்கள் 39 முதல் 40 வரை

அதிகாரம் 39[தொகு]

எருசலேமின் வீழ்ச்சி[தொகு]


1 யூதா அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற
ஒன்பதாம் ஆண்டு பத்தாம் மாதத்தில்,
பாபிலோனிய மன்னன் நெபுகதனேசர்
அவனுடைய எல்லாப் படைகளோடும்
எருசலேமுக்கு எதிராக வந்து அதை முற்றுகையிட்டான்.
2 செதேக்கியாவின் பதினொன்றாம் ஆண்டு
நான்காம் மாதம் ஒன்பதாம் நாள்
நகர மதிலில் ஒரு திறப்பு உண்டாக்கப்பட்டது.
3 நேர்கல் சரேட்சர், சம்கூர் நெபோ,
சர்செக்கிம் ரப்சாரிம், நேர்கல் சரேட்சர் ரப்மாகு உள்படப்
பபிலோனிய மன்னனின் தலைவர்கள் அனைவரும்
உள்ளே புகுந்து, நடுவாயிலில் அமர்ந்தார்கள்.
4 யூதாவின் அரசன் செதேக்கியாவும்
போர் வீரர் அனைவரும் அவர்களைக் கண்டவுடன்
அரச பூங்காவின் இரு மதில்களுக்கிடையே அமைந்த
வாயில் வழியாக இரவோடு இரவாய் நகரைவிட்டு வெளியேறி,
அராபாவை நோக்கித் தப்பியோடினர்.
5 ஆனால் கல்தேயப் படையினர் அவர்களைப் பின்தொடர்ந்து,
எரிகோ சமவெளியில் செதேக்கியாவைப் பிடித்து,
ஆமாத்து நாட்டின் ரிப்லாவில்
பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடம் கொண்டு சென்றார்கள்.
மன்னன் அவனுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கினான்.
6 பாபிலோனிய மன்னன் ரிப்லாவில்
செதேக்கியாவின் புதல்வர்களை
அவன் கண்முன்னே கொன்றான்.
மேலும் யூதாவின் தலைவர்கள் அனைவரையும் கொன்றான்.
7 அவன் செதேக்கியாவின் கண்களைப் பிடுங்கியபின்,
விலங்கிட்டு அவனைப் பாபிலோனுக்கு இழுத்துச்சென்றான்.
8 அரச மாளிகையையும் மக்களின் வீடுகளையும்
கல்தேயர் தீக்கிரையாக்கினர்;
எருசலேம் மதில்களையும் தகர்த்தெறிந்தனர்.
9 மெய்க்காப்பாளரின் தலைவர் நெபுசரதான்,
நகரில் எஞ்சியிருந்த மக்களையும்
தம்மிடம் சரணடைந்திருந்தவர்களையும்
பாபிலோனுக்கு நாடுகடத்தினார்.
10 ஆனால் யாதுமற்ற ஏழைகளை
மெய்க்காப்பாளரின் தலைவர் நெபுசரதான்
யூதா நாட்டில் விட்டுவைத்ததோடு
திராட்சைத் தோட்டங்களையும்
வயல்களையும் அவர்களுக்கு வழங்கினார்.

எரேமியாவின் விடுதலை[தொகு]


11 பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர்
எரேமியாவைக் குறித்து
மெய்க்காப்பாளரின் தலைவர் நெபுசரதானுக்குக்
கொடுத்த கட்டளை:
12 "இவரைக் கூட்டிக்கொண்டு போய்
நன்கு கவனித்துக் கொள்;
தீங்கு எதுவும் அவருக்குச் செய்யாதே;
அவர் விருப்பப்படியே அவரை நடத்து."
13 மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான்,
அரசவையோர் தலைவன் நெபுசஸ்பான் ரப்சாரிம்,
நேர்கல் சரேட்சர் ரப்மாகு உள்படப்
பாபிலோனிய மன்னனின் தலைவர்கள் அனைவரும் ஆளனுப்பி,
14 காவல் கூடத்தினின்று எரேமியாவைக் கூட்டி வந்தனர்.
வீட்டுக்கு அவரை அழைத்துச் செல்லும்படி
சாப்பானின் பேரனும் அகிக்காமின் மகனுமான கெதலியாவிடம்
அவரை ஒப்படைத்தனர்.
எனவே அவர் மக்களிடையே வாழ்ந்துவந்தார்.

எபேதுமெலேக்கு[தொகு]


15 எரேமியா காவல்கூடத்தில் இன்னும் அடைபட்டிருக்கையில்,
ஆண்டவர் வாக்கு அவருக்கு அருளப்பட்டது:
16 நீ போய், எத்தியோப்பியரான எபேதுமெலேக்கிடம் சொல்;
இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர்
இவ்வாறு கூறுகிறார்:
இந்நகருக்கு எதிராக நான் கூறியிருந்தவற்றை நிறைவேற்றுவேன்;
நன்மையை அல்ல, தீமையையே வருவிப்பேன்.
அந்நாளில் இவை உன் கண் முன்பாகவே நிகழும்.
17 ஆயினும், அந்நாளில் நான் உன்னை விடுவிப்பேன்,
என்கிறார் ஆண்டவர்.
நீ யாரைக் குறித்து அஞ்சுகிறாயோ
அம்மனிதர்களிடம் நீ கையளிக்கப்பட மாட்டாய்.
18 நான் உறுதியாக உன்னை உயிரோடு காப்பாற்றுவேன்.
நீ வாளால் மடிய மாட்டாய்.
உன் உயிரே உனது கொள்ளைப்பொருளாய் அமையும்;
ஏனெனில், நீ என்னில் நம்பிக்கை வைத்துள்ளாய்,
என்கிறார் ஆண்டவர்.


அதிகாரம் 40[தொகு]

கெதலியாவுடன் எரேமியா[தொகு]


1 எருசலேமினின்றும் யூதாவினின்றும் விலங்கிடப்பட்டு
நாடுகடத்தப்பட்டோராய்ப்
பாபிலோனுக்குச் சென்று கொண்டிருந்த மக்களிடையே
எரேமியாவும் விலங்கிடப்பட்டிருந்ததைக் கண்ட
மெய்க்காப்பாளரின் தலைவர் நெபுசரதான்
அவரை இராமாவில் விடுதலை செய்தார்.
அதன்பின் ஆண்டவரிடமிருந்து
எரேமியாவுக்கு வாக்கு அருளப்பட்டது.
2 மெய்க்காப்பாளரின் தலைவர்,
எரேமியாவைத் தம்மிடம் அழைத்து,
"உம் கடவுளாகிய ஆண்டவர்
இந்த இடத்தின்மீது இத்தீங்கு வரும்
என்று அறிவித்துள்ளார்.
3 அவர் சொன்னவாறே எல்லாம் நிகழவும் செய்துள்ளார்.
ஆண்டவருக்கு எதிராக நீங்கள் பாவம் செய்துள்ளீர்கள்.
அவருடைய குரலுக்கு நீங்கள் செவிசாய்க்கவில்லை.
ஆகவே தான் இத்துன்பம் உங்களுக்கு நேர்ந்துள்ளது.
4 இதோ, நான் கைவிலங்கினின்று உம்மை இன்று விடுவிக்கிறேன்.
என்னோடு பாபிலோனுக்கு வர உமக்கு விருப்பமானால் வாரும்;
நான் உம்மை நன்கு கவனித்துக் கொள்வேன்.
என்னோடு வர உமக்கு விருப்பமில்லை எனில்,
நீர் இங்கேயே இருந்து கொள்ளும்.
நாடு முழுவதும் உம் கண்முன் உள்ளது;
எங்குச் செல்வது நல்லது என்றும் வசதியானது என்றும்
உமக்குப் படுகிறதோ அங்கே நீர் செல்லும்.
5 நீர் இங்கேயே தங்க விரும்பினால்,
யூதாவின் நகர்களுக்கு ஆளுநராய்ப்
பாபிலோனிய மன்னன் ஏற்படுத்தியிருக்கும்
சாப்பானின் பேரனும் அகிக்காமின் மகனுமான
கெதலியாவிடம் போய்,
அவனோடு மக்களிடையே வாழும்.
இல்லையெனில் எங்குப் போக உனக்கு விருப்பமோ,
அங்கேயே செல்லும்" என்று கூறினார்.
பின்னர் மெய்க்காப்பாளரின் தலைவர்
உணவுப் பொருள்களும் அன்பளிப்பும் எரேமியாவுக்கு அளித்து,
அவரை அனுப்பிவைத்தார்.
6 எரேமியா மிஸ்பாவுக்குச் சென்று,
நாட்டில் எஞ்சியிருந்த மக்களிடையே
அகிக்காமின் மகன் கெதலியாவுடன் வாழ்ந்துவந்தார்.

யூதாவின் ஆளுநன் கெதலியா[தொகு]

(2 அர 25:22-24)


7 அகிக்காம் மகன் கெதலியாவைப்
பாபிலோனிய மன்னன் ஆளுநராக ஏற்படுத்தியிருக்கிறான் என்றும்,
பாபிலோனுக்கு நாடு கடத்தப்படாத ஏழைகளான
ஆண், பெண், சிறுவர்களை
அவரது பொறுப்பில் விட்டுள்ளான் என்றும்
நாட்டில் ஆங்காங்கே இருந்த படைத்தலைவர்கள் எல்லாரும்
அவர்களுடைய ஆள்களும் கேள்வியுற்றனர்.
8 அவர்களுள் நெத்தனியாவின் மகன் இஸ்மயேலும்,
காரயாகின் புதல்வர் யோகனானும் யோனத்தானும்,
தன்குமேத்தின் மகன் செராயாவும்,
நெற்றோபாவைச் சார்ந்த ஏப்பாயின் புதல்வரும்,
மாக்காவின் மகன் யாசனியாவும்,
அவர்களுடைய ஆள்களும்
மிஸ்பாவில் இருந்த கெதலியாவிடம் சென்றார்கள்.
9 அவர்களிடமும் அவர்களுடைய ஆள்களிடமும்
சாப்பானின் பேரனும் அகிக்காமின் மகனுமான
கெதலியா ஆணையிட்டு,
"கல்தேயருக்கு அடிபணிய நீங்கள் தயங்க வேண்டாம்.
இந்நாட்டில் தங்கி வாழுங்கள்;
பாபிலோனிய மன்னனுக்குப் பணிந்திருங்கள்;
அது உங்களுக்கு நலம் பயக்கும். [*]
10 நானோ மிஸ்பாவில் தங்கியிருப்பேன்;
நம்மிடம் வரவிருக்கும் கல்தேயர்முன்
உங்கள் பிரதிநிதியாய் இருப்பேன்;
நீங்கள் போய்த் திராட்சை இரசம், பழங்கள்,
எண்ணெய் முதலியவற்றைச் சேகரித்துப்
பாத்திரங்களில் வையுங்கள்.
நீங்கள் கைப்பற்றியுள்ள நகர்களில் குடியிருங்கள்"
என்று சொன்னார்.
11 இதே போன்று மோவாபிலும்
அம்மோனியரிடையிலும் ஏதோமிலும்
மற்ற நகர்களிலும் வாழ்ந்து வந்த
யூதா நாட்டினர் அனைவரும்,
பாபிலோனிய மன்னன்
யூதாவில் சிலரை விட்டுவைத்துள்ளான் என்றும்,
சாப்பானின் பேரனும் அகிக்காமின் மகனுமான கெதலியாவை
அவர்களின் ஆளுநராக ஏற்படுத்தியுள்ளான்
என்றும் அறிய வந்தார்கள்.
12 அப்பொழுது யூதா நாட்டினர் அனைவரும்
தாங்கள் விரட்டியடிக்கப்பட்டிருந்த
எல்லா இடங்களினின்றும்
தங்கள் சொந்த நாட்டுக்கே திரும்பிவந்து,
மிஸ்பாவில் இருந்த கெதலியாவிடம் சேர்ந்து கொண்டார்கள்.
அங்குத் திராட்சை இரசமும் பழங்களும்
மிகுதியாய்ச் சேர்த்துவைத்தார்கள்.

கெதலியா கொலைசெய்யப்படல்[தொகு]

(2 அர 25:25-26)


13 காரயாகின் மகன் யோகனானும்
நாட்டில் ஆங்காங்கே இருந்த
படைத்தலைவர்கள் அனைவரும்
மிஸ்பாவில் இருந்த கெதலியாவிடம் சென்று,
14 "அம்மோனியரின் மன்னனாகிய பகலீசு
உம்மைக் கொல்லும் பொருட்டு
நெத்தனியாவின் மகன் இஸ்மயேலை
அனுப்பி வைத்துள்ளான் என்று
உறுதியாய் உமக்குத் தெரியுமன்றோ!" என்று கூறினர்.
ஆனால் அகிக்காமின் மகன் கெதலியா
அவர்களை நம்பவில்லை.
15 பின்னர் காரயாகின் மகன் யோகனான்
மிஸ்பாவில் கெதலியாவிடம் தனியாகச் சென்று,
"நான் போய், நெத்தனியாவின் மகன் இஸ்மயேலைக் கொல்ல
எனக்கு அனுமதி கொடும்.
அது யாருக்கும் தெரியவராது.
உம்மை ஏன் அவன் கொலைசெய்யவேண்டும்?
அதனால் உம் பொறுப்பில் கூடி வாழும்
யூதா நாட்டினர் அனைவரும் சிதறிப் போவார்கள்;
யூதாவின் எஞ்சினோரும் அழிவார்களே!"
என்று சொன்னான்.
16 அகிக்காமின் மகன் கெதலியாவோ
காரயாகின் மகன் யோகனானை நோக்கி,
"நீ இச்செயலைச் செய்யாதே.
ஏனெனில் இஸ்மயேலைப் பற்றி
நீ கூறுவது பொய்" என்றார்.


குறிப்பு

[*] 40:7-9 = 2 அர 25:22-24.


(தொடர்ச்சி): எரேமியா:அதிகாரங்கள் 41 முதல் 42 வரை