அன்று அந்த நண்பர் வந்திருக்கிறாரா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள வழியில்லை. அவரைப் பார்க்க வேண்டியது அவசியமாக இருந்தது. நேரே போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என்று டாக்ஸியில் ஏறிக்கொண்டு போனேன். அவர் வரவில்லை. அவர் வந்து தங்கும் இடம் ஒரு டாக்டர் வீடு. டாக்டரிடம் அவர் வந்தாரா என்று கேட்டபோது, “அவர் எங்கே ஸார், சொன்னபடி வருகிறார்? நீங்கள் மயிலாப்பூரிலிருந்து வீணாக வந்து அலைவது தான் மிச்சம். டெலிபோன் பண்ணிக் கேட்டிருந்தால் நான் சொல்லியிருப்பேனே! பாவம் உங்களுக்கு வீண் அலைச்சல்” என்றார்.
“டெலிபோன் இருக்கிற இடம் தேடிப்போய்ப் பேச வேண்டுமே!” என்று முணுமுணுத்தேன்.
வேறு ஒரு சமயம், அவசரமாக ரெயிலுக்குப் போக வேண்டியிருந்தது. ஏதோ ஒன்றை எழுதிக் கொண்டிருந்தேன். அதை ஒரேயடியாக முடித்து விடவேண்டும் என்று தோன்றியது. அதை முடிப்பதாக இருந்தால் ரெயிலுக்குப் போக முடியாது. எங்கும் மழை பெய்து பல இடங்களில் உடைப்பு எடுத்திருந்ததனால் சரியான நேரத்தில் ரெயில்கள் புறப்படுவதில்லை, வருவதில்லை என்று பத்திரிகையில் பார்த்தேன். அப்படியானல் நான் புறப்-