அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் மூன்று/கர்ணனுக்கு மோட்சம்

விக்கிமூலம் இலிருந்து
பாவியோடு கூடிப் படைசெய்த கர்ணனுட
ஆவிக்கு மோட்சம் அருளுவதோ மாயவரே
என்றுரைக்க வியாகர் எடுத்துரைப்பா ரெம்பெருமாள்
நன்றுநன்று மாமுனியே நானுரைக்கக் கேட்டருள்வாய்
பண்டு இலங்கைப் பாரழிக்கவே நினைந்து
தொண்டு பண்ணிநின்ற துய்யவான ரங்களிலே
வல்ல பிலமுள்ள வாலியிவன் முப்பிறவி
நல்லவனாய் முன்னே நாட்டிலி ருக்கையிலே
இராவணனோடே கூடி ராமசரத் தாலிறந்தான்
ஶ்ரீராமனாய் நானிருந்து செயித்த விதமறிந்து
வந்து பணிந்தானே வாலியவனென் காலில்
நன்றியுள்ள மாலே நானுனக்கு ஏவலனாய்
முன்னே நீர் அமுர்தம் உவரிதனில் கடைய
என்னை யொருபுறத்தாய் ஏவல்கொண்ட மாயவரே
பத்துத் தலையுள்ள பாவியந்த ராவணனை
கொத்திச் சிரசறுத்துக் கொல்லேனோ நானடியேன்
என்றந்த வாலி இறைஞ்சி நின்றனெனையுமே
அன்றந்த வாலிதனக்கு அருளினது நீகேளு
எனக் கேவலாக இப்பிறவி நீபிறந்து
தனக்கேராப் பாவிதனைச் சங்காத்தங் கொண்டதினால்
இனிமே லவனோடிருந்து என்சொல் கேள்க்கவைத்து
கனியான மோச்ச கயிலாசமே தருவேன்
என்றவனை அழைத்து இப்பிறவி அய்வரிடம்
முந்தியுதித்து முதல் பிறவி செய்தவனை
அரவக் கொடியோன் இடத்தில் அனுப்பிவைத்து
இரவலர்க்கு மீந்து என்புத்தி யுள்ளிருத்தி
அன்னை பிதாசொல் அசராமல் அய்பேருக்கு
தன்னே ஒருகணைமேல் விடேனென்ற உத்தமன்காண்
ஆனதால் முன்னே அருளிவைத்த சொல்படிக்கு
மானமாய் மோட்சம் வகுதே னிவனுக்கென்றார்
நல்லது தானென்று நன்முனிவந்தான் மகிழ்ந்தான்
எல்லைவைத்த பாரதப்போர் இன்று முடிந்ததென்று
கொண்டாடி ஐபேரும் குருமுனியைத் தெண்டனிட்டு
வண்டாடும் வண்ணமகள் மயிர்முடித்து நீராடி
ஐய்பேரும் பத்தினியும் அச்சுதரையும் போற்றி
மெய் போகமான வியாகரரையுங் குவித்து
ஆண்டார்கள் சீமை அச்சுதனார் உண்டெனவே
பாண்டவர்கள் நன்றாய்ப் பாராளும் நாளையிலே