அங்கும் இங்கும்/சமுதாய ஒருமைப்பாடு

விக்கிமூலம் இலிருந்து


2. சமுதாய ஒருமைப்பாடு

கீவ் நகரத்து ஆராய்ச்சிப் பண்ணையில் எங்களுக்குப் பத்துப் புதுவகை ஆப்பிள்களைக் கொடுத்த அம்மாணவிகள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்? அம்மாணவிகள், ஆராய்ச்சியாளர்கள், கட்டாயத்தால் ஆராய்ச்சியில் ஆழ்ந்தவர்கள் அல்லர் அவர்கள். கசப்போடு ஆராய்ச்சி செய்பவர்களும் அல்லர். பணத்திற்காகப் பண்ணைக்கு வந்தவர்களும் அல்லர். விருப்போடு புதுப் பயிர் இடுபவர்கள்.

அந்நகரத்திலுள்ள பல உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் அங்கு வருவார்கள். ஒவ்வொரு பள்ளியும், பயிர்த்தொழிலில் தனி அக்கறை உடையவர்களை மட்டும் பொறுக்கி, அங்கு அனுப்பி வைக்கும். அவர்கள் தனித்தனியாகவும், குழுக்களாகவும் இருந்து, பயிர்த்தொழில், தோட்டத் தொழில் ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறார்கள். அவற்றிகான வசதிகளெல்லாம் அப்பண்னையில் உள்ளன செலவு முழுவதும் அரசினருடையது. ஆர்வமுடையவர்கள் மட்டும், சாதனமுடையில்லாமல், துணிந்து ஆராய்வதால் புதுப் புதுச் சாதனைகளை எட்டிப் பிடிக்கிறார்கள்.

எங்களுக்குக் கொடுத்தது போன்ற, புதுப் பழவகைகளைப் பயிராக்கிக் காட்டுகிறார்கள், இத்தகைய சாதனைகளைக் காட்டி, வேளாண்மைக் கல்லூரிகளில் சேர்கிறார்கள் நம்மைப்போல, எதிலோ பெற்ற மார்க்குகளைக் காட்டியல்ல. 'வாய்ச்சாங் கொள்ளிதனத்திற்காக'வுமல்ல. ஆகவே, சோவியத் நாட்டில் சாதித்துக் காட்டும் செயல் விஞ்ஞானிகளைக் காண்கிறோம். மதிப்பெண்களையே கடவுளாக்கி விட்ட நாமோ, பட்டத்தின் மேல். பட்டத்தை அடுக்கிக் காட்டும் சொல் - விஞ்ஞானிகளையே பெறுகிறோம்.

சமதர்மத்தில் மேதைகளை வளர்ப்பதற்கு வழியேது என்ற ஐயம், 'மேதைகள்’ என்று தமக்குத் தாமே பட்டம் சூட்டிக்கொண்டுள்ள பலருக்கும் எழுவதுண்டு. எனக்கும் எழுந்ததுண்டு. எல்லாரும்-எல்லாருமென்றால் எல்லாருமே, சமாளிக்கும் நிலைக்கும் இறங்கி வந்து கல்வித் திட்டம் அமைத்து, பொதுக்கல்வியை எல்லாருக்கும் அளித்துவிட்டு தனித்திறமை உடையவர்களை அந்தந்தத் துறையில், அதிகம் கற்க. மேலும் மேலும் கற்க அவரவர் வேகத்திற்கு ஊக்குவதும், அதற்கான எல்லா வாய்ப்புகளையும் வசதிகளையும் தாராளமாகச் செய்து தருவதுமே, மேதைகளையும் அறிவு மலைகளையும் சாதனைப் பெரியவர்களையும் பெருக்குவதற்கு வழி என்பதை உணர்ந்தோம்; எங்கள் ஐயம் அகன்றது.

வாய்ப்புகள் என்றதும் அமெரிக்கக் கல்வி முறையில் கண்டது நினைவிற்கு வருகிறது. அந்நாட்டில், ஆதியில் அரசினால், உள்ளாட்சி மன்றங்களால். ஊராட்சிகளால் கல்விக்கூடங்கள் தொடங்கப்படவில்லை. இங்கும் அங்கும் தொடங்கப்பட்ட கல்விக்கூடங்கள்-லெளகீகக் கல்விக் கூடங்கள்-மதச்சபைகளின் சார்பில் தொடங்கப்பட்டன. பின்னர் தனியார் பலர், முடிந்தால் தனித்தனியாகவும், முடியாத போது பலர் சேர்ந்தும், கல்விக்கூடங்களை அமைத்தனர் : நடத்தினர். இன்றும் நடத்துகின்றனர். நாளையும் நடத்துவர். தனியார் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் அரசினரின் உதவி கிடையாது. அரசின் கல்வி உதவி, அரசினர் கல்விக்கூடங்களுக்கே விஞ்ஞான வளர்ச்சிக்கென்று மட்டும் சில ஆண்டு களாக, ஏதோ ஒரளவு தனியார் பள்ளிகளுக்கு உதவுகிறார்கள்.

தனியார் கல்விக்கூடங்களையே நம்பியிருப்பது, எதிர் வீட்டுக் கதவை, நம் வீட்டுக் காவலுக்கு நம்பியிருப்பது போன்றது. இந்நிலையும் உணர்ச்சியும் அந்நாட்டில் உருவாயின. எனவே பொதுத் துறையில் (உள்ளாட்சிக் கழகங்களின் சார்பில்) கல்விக்கூடங்கள் எழுந்தன. தொடக்க நிலை கல்விக்கூடங்களோடு நிற்கவில்லை. அவர்களது அந்தக்கால நினைப்புகூட தொடக்கப்பள்ளி நிலையில் நின்று விடவில்லை. ஆகவே, உயர்நிலைப் பள்ளிகளையும் நிறுவினர். தோன்றிய கல்விக்கூடங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருந்துவிடவில்லை, எண்ணிக்கையற்ற கல்விக் கூடங்கள் எழுந்தன. உள்ளாட்சி மன்றங்கள் பள்ளிக்கூடம் நடத்தினால், இராச்சிய அரசுகள் கல்லூரிகளையும் பல்கலைக் கழகங்களையும்-பெரிய பெரிய பல்கலைக் கழகங்களையும் - நடத்துகின்றன.

இன்று வளமிக்க அமெரிக்க நாட்டில் மொத்தத்தில், கல்வித் துறையில்-எல்லா நிலைக் கல்வியிலும் - தனியார் துறையைவிடப் பொதுத் துறையில்தான் அதிக இடம் உண்டு; அதிக வசதிகள் உண்டு ; அதிக வாய்ப்புகளும் உண்டு. எனவே, கல்வி ஒடையில் உயர்கல்வி ஒடையில்கூட ஏழை எளியவர்கள், பொதுமக்கள் (பெருமக்கள் மட்டுமல்ல) நேராகப் பருக முடிகிறது. பொதுத்துறைக் கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் அவற்றின் முதல்வர்கள், வேண்டுமென்றே, தெரிந்தே, மார்க்குக் குறைந்த பலரை, வாட்டி வதைக்கும் வறுமைச் சூழ்நிலையிலிருந்து வரும் பலரை, எழுத்தறியாக் குடும்பங்களிலிருந்து கல்லூரியை எட்டிப் பார்க்கும் பலரைச் சேர்த்துக் கொள்வதாக அமெரிக்காவில் கேள்விப்பட்டபோது திடுக்கிட்டேன்.

தேவைக்கு மேல் இடம் இருப்பதால் காலியாக விடுவதற்குப் பதில், கண்டவர்களைச் சேர்த்துக் கொள்கிறார்களோ என்ற ஐயம் எழுந்தது. அங்கும் கல்விக்கூட இட நெருக்கடி இருப்பதைப் புள்ளி விவரங்களோடு விளக்கினார்கள். இட நெருக்கடியிலும் மார்க்கில் உயர்ந்தவர்களோடு நிற்காமல, மார்க்கில் குறைந்தவர்களையும் தேடிப் பிடித்துச் சேர்த்துக் கொண்டால், பிந்தியவர்களுக்குப் பலன் உண்டா ? அவர்கள் பாஸ் ஆவார்களா ? அவர்களாலே கல்லூரிக்குக் கெட்ட பெயர் வராதா ? நல்ல மணிகளாகச் சேர்த்தால் அத்தனையும் தேறின என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாமே ! இப்படியெல்லாம் என் அறிவைக் கலக்கிக் கொண்டேன். அக்கலக்கத்தை அறிவித்தும் விட்டேன். விளக்கம் தந்தனர். விளகக்கத்தின் சுருக்கம் இதோ:

மனிதன் மாறும் இயல்பினன். அவன் வளர்வதும் உண்டு; தேய்வதும் உண்டு. வளர்வானோ தேய்வானோ என்பது அவன் அவன், முன்பின் சூழ்நிலையையும் அவன் அவன் பெறும் வசதிகளையும் ஊக்கத்தையும் பொறுத்தது. சமுதாயத்தின் கீழ்மட்டத்திலிருந்து, வேண்டுமென்றே மார்க்குக் குறைந்தவர்களைச் சேர்த்ததால், நல்ல பலனே விளைகிறது. அவர்கள் மார்க்குக் குறைந்தவர்கள் என்பது சேர்க்கிறபோதே தெரிகிறது. ஆபத்தான நிலையிலுள்ள நோயாளியை அடிக்கடி கவனிக்கும் மருத்துவர்போல், மார்க்குக் குறைந்தவர்களை அடிக்கடி கவனிக்கிறோம். அப்போதைக்கப்போது ஆலோசனை கூறி வழிக் காட்டுகிறோம். நம்பிக்கை ஊட்டுகிறோம். ஊக்குவிக்கிறோம். மற்றவர்களை விட அதிகம் படிக்க வைக்கிறோம். அறிவு வளர்ச்சி என்பது பெருமளவு முயற்சியின் விளைவே. எனவே, மார்க்குக் குறைந்தவர்களும் கல்லூரிகளில் கொடுக்கும் தனிக் கவனத்தால், வசதிகளால், தூண்டுதல்களால், தோழமையால் மற்றவர்களைப்போல் தேறிவிடுகிறார்கள்.

அவர்களில் தோற்பவர்களே இல்லையா ? கல்விக்கு முழுக்குப் போட்டுவிட்டுப் போய் விடுவோர் இல்லையா ? உண்டு. ஒரு சிலர் உண்டு. பள்ளிப் படிப்பின் இறுதியில் இலாயக்கற்றவர்களாக இருந்தவர்களின் எண்ணிக்கையில் சிறு விழுக்காடே கல்லூரியை விட்டுவிடுவோர் எண்ணிக்கை. அப்படி விலகுவோர், மனக்குறையோடு, கசப்போடு வெறுப்போடு. வஞ்சம் தீர்க்கும் போக்கோடு வெளியேறுகிறார்களா ? இல்லை. நம் சமுதாயத்திடம் வஞ்சம் இல்லை. எவ்வளவு வாய்ப்புகள் கொடுக்க முடியுமோ அவ்வளவும் கொடுத்தார்கள். வசதிகளையும் வழங்கினார்கள். கொடுத்த ஊக்கமும் கொஞ்ச நஞ்சமல்ல. மட்டந்தட்ட முயலவில்லை. மீண்டும் மீண்டும் தட்டிக் கொடுத்தும், நாமே தவறி விட்டோம். அவர்களைக் குறைசொல்ல என்ன இருக்கிறது ? சமுதாயத்தை வெறுப்பதற்கும் என்ன இருக்கிறது ? நம்மை நாமே நொந்து கொள்வானேன் ? முதல் முயற்சி முன்பின் தான் இருக்கும். மூன்று தலைமுறை கல்லூரிக்குச் சென்று வந்தபின், நாங்களும் நன்னிலைக்கு உயர்ந்துவிடுவோம். இப்படி எண்ணுகிறார்கள் பாதியிலே வெளியேறியவர்களும்.

சமுதாய ஒருமைப்பாட்டிற்குக் கொடுக்க வேண்டிய விலை, பின்னணியில் தயங்குகிறவர்களையும் தேடிப்பிடித்து, வாய்ப்பைக் கொடுத்து, வசதியைப் பெருக்கி, தட்டிக்கொடுத்து வளரவிடுவதே. அதற்காகும் செலவைக், கவனத்தை, உழைப்பைத் தாராளமாகக் கொடுப்பதால், ’பல நாட்டு நாடோடிகளின் சமுதாயமாக இருந்தும், அமெரிக்க சமுதாயத்தில் துரோகிகள் குறைவாக உள்ளனர். ’அமெரிக்கர்’ மிகமிக அதிகமாக உள்ளனர். நிறைய "மார்க்கு’ வாங்கியவர்கள் இடத்தை மற்றவர்கள் பறித்துக் கொள்ளலாமா ? இதையும் கேட்கத் தவறவில்லை நான். நோய் இல்லாத ஒருவருக்கு, உடம்பு நன்றாக இருக்கிறதா என்று மட்டும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒருவருக்கு, எதற்கு ஆஸ்பத்திரி படுக்கை ? அவர் அப்போதைக்கப்போது வந்து போனாலே போதுமே. நோய்வாய்ப்பட்டிருப்பவரையல்லவா ஆஸ்பத்திரியிலே வைத்திருந்து வேளைக்கு வேளை பார்த்துக் குணப்படுத்த வேண்டும். 'மார்க்குப் பெரியவர்கள், எங்கிருந்தும் படித்துக் கொள்ளலாம் என்ற பதில், கிண்டலான அல்லது புரட்சிகரமானதொரு எதிர்காலக் கல்வித் திட்டத்தின் முளையா ? எதிர்காலமே காட்டட்டும்.

நம் கல்வி வாய்ப்பினையும் வசதிகளையும் மேலும் பெருக்க விரும்புகிறீர்களா ? பொதுத் துறைக் கல்விக் கூடங்களை ஏராளமாக்க ஆசையா? பரிந்துரை கூற ஆள் இல்லாத அவைகளிலும் முதல் தரமான வசதிகளைக் கொடுக்க வேண்டுமென்று விரும்புகிறிர்களா ?

கங்கை, யமுனை. கோதாவரி, கிருஷ்ணா ஆகிய ஆறுகளில் நீர்ப்பெருக்கை முழுக்க முழுக்கப் பாசனத்திற்கும் மின்சார உற்பத்திக்கும் பயன்படுத்தும் பெரும் பணியில் பெரும் கவனத்தைத் திருப்ப வேண்டுமென்று விரும்புகிறீர்களா ? நல்லது. பெரியவர்களிடம் சொல்லத் தவறாதீர்கள். ஆளை மாற்றுவதைப் பற்றிப் பரிந்துரை கூறுவதோடு, ஆற்று நீரை மாற்றுவதைப் பற்றியும் கூறுங்கள்.

கல்விக்கூடம்தோறும் பயிர்த்தொழிலுக்கு ஏற்பாடு செய்யக்கூடாதா ? இப்படி கேட்கிறதா உங்கள் அறிவு ? செய்யக்கூடும். செய்ய வேண்டும். மனம் உண்டானால் இடம் உண்டு.

பஞ்சாயத்து ஆட்சி வந்த பிறகு, ஊர்தோறும் உள்ள புறம்போக்கு ஊருக்குச் சொந்தம். அதிலே ஒரு பங்கை பள்ளிக்கூடத் தோட்டத்திற்கு ஒதுக்கி வைத்துப் பயன்படுத்தச் செய்தால் எவ்வளவு விளையும் ? உழைப்பிற்கு உயர்வளிக்கும் மனப்போக்கு மட்டுமல்ல விளையப் போவது; மலைமலையாக நெல்லும் கோதுமையும், வண்டி வண்டியாக வாழையும் கிழங்கும், காய்களும், கனிகளும் பயிரிட்டுக் குவிக்கலாம். ஆமாம், மலைக்காதீர்கள் !

இன்று கல்விக்கூடங்களின் எண்ணிக்கை சிலவல்ல, சில நூறுகள் மட்டுமல்ல, இலட்சோப இலட்சம். தமிழ்நாட்டில் மட்டும் முப்பத்து மூவாயிரம்-இவற்றில் உள்ளவர்களோ கோடான கோடி, கோடி கோடி கைகள் கூடிக்கூடி உழைத் தால், கோடி கோடி பொருள்கள், நாடி நாடி வருமே.