அதிசயப் பெண்/டபீர் ஸ்வாமி

விக்கிமூலம் இலிருந்து
டபீர் ஸ்வாமி

[தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாதையர் சொன்ன ஊறுகாய்க் கதைகளில் இது ஒன்று.]

கும்பகோணம் காலேஜில் ஐயரவர்கள் இருந்த போது ஆங்கிலம் முதலிய பாடங்களைக் கற்பிக்கும் பேராசிரியர்களும் அவர்களும் நெருங்கிப் பழகுவார்கள். மனங் கலந்து பேசி இனிமையாகப் பொழுது போக்குவார்கள். அங்கே ஒரு நாள் பல ஆசிரியர்கள் சேர்ந்து அமர்ந்து விநோதமாகப் பேசிக்கொண் டிருந்தார்கள். “இந்த ஊரில் டபீர் தெரு என்று ஒன்று இருக்கிறது. அதற்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? டபிரென்று அங்கே ஏதாவது வெடித்ததா? அல்லது வேறு காரணத்தால் வந்ததா?” என்று ஒருவர் கேட்டார்.

“டபீர் ஸ்வாமி என்ற ஒரு பெரியவர் இருந்தார். அவருடைய பெயரை இட்டு வழங்குகிறார்கள். அநேக 20 . அதிசயப் பெண்

மாக அவர் மகாராஷ்டிரராக இருந்திருப்பாரென்று. தோன்றுகிறது” என்று வேறு ஒர் ஆசிரியர் விடை கூறினார்.

முதலில் கேள்வி கேட்டவர் தொடர்ந்து, “அப்படி யானால், அந்தப் பெயர் அவருக்கு மாத்திரம் எப்படி வந்தது?” என்று வினவினார். -

அந்த வினாவிற்கு ஒருவரும் பதில் சொல்லவில்லை. சிறிது நேரங்கழித்து அங்கிருந்த ஆர். வி. ஸ்ரீநிவாசையர். என்ற பேராசிரியர் சிறிது கனைத்துக்கொண்டு, நான் சொல்லட்டுமா?’ என்று கேட்டார். கேட்கும்பொழுதே அவர்பால் தோன்றிய புன்னகை அவர் ஏதோ வேடிக் கையாகச் சொல்லப் போகிறார் என்பதைக் குறிப்பித்தது.

“சொல்லுங்கள், கேட்கலாம்” என்று ஆசிரியர் யாவரும் ஒரு முகமாகக் கேட்டார்கள்.

ஸ்ரீநிவாசையர் சொல்ல ஆரம்பித்தார்.

              *              *               *                 *             

தஞ்சாவூரில் மகாராஷ்டிர அரசர்கள் ராஜ்யபாரம் நடத்தி வந்த போது அவர்களுடைய உறவினர்கள் பலர் அந்த ஊரில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு அரண்மனையிலிருந்து ஊதியம் கிடைத்து வந்ததோடு, இயல் பாகவே பொருள் உடையவர்களாகவும் இருந்தார்கள். இவ்வாறு வாழ்ந்து வந்த மகாராஷ்டிர கனவான்களுள் ஒருவர் மிகவும் சுறு சுறுப்புடையவர். அவருடைய வாழ்க்கைக்குப் போதிய வசதிகள் இருந்தாலும் அவரது சுறுசுறுப்புக்கு ஏற்ற வேலை இல்லாமையால் அவருக்கு, உற்சாகம் குறையத் தொடங்கியது. அவருடைய மனைவியும் பிறரும் அரண்மனை உத்தியோகம் பெற்றுப் பார்க்கும்படி சொன்னார்கள். அரண்மனை வேலைக்கு ஏற்ற தகுதி அவரிடம் இல்லை. சாமானிய வேலைகளுக்குப் போகவும் அவருக்கு இஷ்டம் இல்லை.

இந்த நிலையில் அவர் திவிரமாக யோசனை செய்ய லானர். தம் கைப் பொருளைச் செலவு செய்தாவது ஏதேனும் உத்தியோகம் செய்யத்தான் வேண்டுமென்ற உறுதி அவருக்குள்ளே தோன்றியது. என்ன உத்தி யோகம் செய்வது? யோசித்து யோசித்துப் பார்த்தார். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். ஒரு நாளில் இருபத்து நாலு மணி நேரமும் வேலை செய்தாலும் செய்யும் படியான உத்தியோகம் ஒன்றைத் தாமே ஏற்படுத்திக் கொள்ள எண்ணிவிட்டார்.

அரண்மனைக்குப் போகும் சாலையில் அரண்மனைக்குச் சிறிது தூரத்தில் பரந்த வெளியாக இருந்த இடத்தில் ஒரு பகுதியை விலைக்கு வாங்கினார். அங்கே ஒரு சிறிய கட்டிடம் கட்டிக்கொண்டார். நாற்காலி, மேஜை, பேனா, பென்ஸில், மைக்கூடு, காகிதங்கள், குறிப்புப் புத்தகங்கள் முதலிய உபகரணங்களெல்லாம் தம் கைப் பொருளைச் செலவு செய்து வாங்கி நிரப்பி அதைத் தம்முடைய உத்தியோகசாலையாக ஆக்கிக்கொண்டார். நல்ல நாளில், நல்ல வேளையில் சம்பளமில்லாத அந்த உத்தியோகத்தைப் பார்க்கத் தொடங்கிவிட்டார். சம்பளம் இல்லாவிட்டால் என்ன? அவருக்குப் பணம் இல் லையா? உத்தியோகம் செய்கிறோம் என்ற உற்சாகமும்,


2

சோம்பேறியாகப் பொழுதைப் போக்காமல் சுறுசுறுப்பாக இருக்கிறோம் என்ற திருப்தியுமே அவருக்கு ஊதிய மாயின.

தினந்தோறும் காலையில் எட்டு மணிக்கு அவர் நல்ல உடைகளை அணிந்துகொண்டு போய்விடுவார். உணவு கொள்ள வேண்டிய வேளைகளில் வீட்டுக்குப் போய் வருவார். இல்லையானல் அந்த இடத்திற்கே உணவை வருவித்துக் கொள்வார். இரவு எட்டு, ஒன்பது மணி வரையில் தம் உத்தியோகத்தைப் பார்ப்பார். பிறகு காரியாலயத்தைப் பூட்டிக்கொண்டு போய் விடுவார். சில நாட்கள் உற்சாக மிகுதியினால் இரவு நேரங்களிலும் அங்கே தங்கிவிடுவது உண்டு.

அது என்ன உத்தியோகம்! சரியானபடி வேலை வாங்கும் உத்தியோகந்தான். சோம்பலில்லாமல் ஒவ்வொரு நிமிஷமும் ஜாக்கிரதையாகக் கவனித்துச் செய்ய வேண்டிய காரியம். வீதி வழியாக யார் யார் போகிறார்கள், அவர்கள் உருவம், உடை, காதில் விழுந்த பேச்சு, போகும் நேரம்-இவைகளை எல்லாம் குறித்து வரும் வேலையை அவர் யாருடைய ஏவலுமின்றி, ஊதியத்தை எதிர்பாராமல் செய்துவந்தார். சாலையில் எந்த நிமிஷத்தில் யார் வருவாரென்று கண்டார்கள்? இளைய அழகிய மங்கை ஒருத்தி போவாள்; அடுத்த கணத்தில் கிழட்டு எருமை ஒன்று அந்த வழியே ஒடும். கோபத்தோடு இருவர் பேசிக்கொண்டே போவார்கள்; தொடர்ந்து கொம்மாளம் போட்டுக்கொண்டு சில சிறுவர்கள் நடப் பார்கள். எல்லாவற்றையும் ஒன்று விடாமல் குறித்துக் கொள்ளும் கைங்கரியத்தை அந்த மகாராஷ்டிர கன வான் செய்துவந்தார். தேதி வாரியாக, மணி வாரியாக நிமிஷ அடைவிலே கடிகாரத்தைப் போல அவர் உத்தியோகம் பார்த்தார். எவ்வளவு பொறுப்புள்ள வேலை!

தம்முடைய உத்தியோகசாலையின் ஜன்னல் வழியே உலகத்தைப் பார்த்து, அதன் பல வேறுபட்ட போக்கு களையும் குறிப்பெடுக்கும் ஆராய்ச்சியாளரைப் போல் அவர் வெகு சிரத்தையுடன் வேலை செய்தார். ‘கலை, கலைக்காகவே’ என்று சொல்வார்களே, அந்த மாதிரி அந்த வேலையை வேறு பயன் எதையும் கருதாமல் அவர் செய்து வந்தார்.

அவருக்குத் தாம் செய்து வந்த உத்தியோகத்தினால் ஏற்பட்ட உற்சாகம் கிடக்கட்டும்! அவர் வீட்டாருக்கோ அவர் ஏதோ பொறுப்புள்ள அரண்மனை உத்தி யோகத்தை ஏற்றுக்கொண்டிருக்கறார் என்ற கெளரவ புத்தி உண்டாயிற்று. இவர் என்ன செய்கிறார்? என்று அறிய எண்ணிய யாரோ சிலர் அவர் ஏகாக்கிர சித்தத்தோடு வேலை செய்வதைப் பார்த்து, இடையிட விரும்பாமல் போய்விட்டார்கள். அவர் உத்தியோகம் யாதொரு தடையுமின்றி இவ்வாறு நடைபெற்று வந்தது.

ரு நாள் அரண்மனையில் ஒரு தங்கப் பாத்திரம் காணாமற் போயிற்று. எங்கெங்கோ தேடிப் பார்த்தார்கள்; கிடைக்கவில்லை. யார் திருடினார்கள் என்று தெரிந்துகொள்ள முடியவில்லை. பலவகையில் ஆராய்ச்சி செய்து விசாரித்தபோது அன்று மாலையில் அதை யாரோ ஒருவன் எடுத்துப் போயிருக்கிறான் என்று தெரியவந்தது. அரண்மனைக்கு அடிக்கடி வந்து போகும்

பழக்கமுடைய அவனைச் சந்தேகித்துச் சோதனை போட்டார்கள், பண்டம் அகப்படவில்லை.

யாரோ ஒருவர், “இந்தத் துப்புத் துலங்க வேண்டு மானால் கடைசியாக ஒரு வழி இருக்கிறது. இதோ இந்தச் சாலையில் ஒரு மகாராஷ்டிரர் இருக்கிறார். அவர் ஒரு பைத்தியக்கார உத்தியோகம் பார்த்து வருகிறார். அவரிடமுள்ள குறிப்புகளைப் பார்த்தால் நமக்கு ஏதாவது உளவு கிடைக்கலாம்” என்று சொன்னார். அரண்மனை உத்தியோகஸ்தர்கள் அதையும் பார்த்துவிடலாம் என்று எண்ணி அந்த மகாராஷ்டிர கனவானுடைய உத்தி

யோகசாலைக்கு வந்தார்கள். -

அவர்களை அந்தக் கனவான் வரவேற்றார், பிறகு அவர்கள் விரும்பியபடி தம்முடைய தினக் குறிப்புக்களைக் காட்டினார். ‘ஒரு பிரயோஜனமும் இல்லாமல் வேலையற்றுப் போய் இந்த மனிதன் இப்படி எழுதிக் குவித்திருக் கிறானே!’ என்று அவர்கள் எண்ணி நகைத்தனர். பிறகு தங்கப் பாத்திரம் களவு போன நாளில் எழுதியவற்றைப் பார்த்தார்கள். அன்று காலேயிலிருந்து இரவு வரையில் அந்தச் சாலையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் இருந்தன; பின் வரும் குறிப்பு அவர்கள் கண்களில் பட்டது:

“மாலை ஆறரை மணி. ஒரு குட்டையான மனிதன் தன் மேல் வேஷ்டியில் எதையோ ம்றைத்தபடியே வந்தான் அரண்மனை யிலிருந்து வந்திருக்கலாம். எதிரே உள்ள் சாக்கடைக்கு அருகில் உட்கார்ந்தான். உடனே டபீர் என்ற சத்தம் கேட்டது; அடுத்த நிமிஷம் அவன்

எழுந்து போய்விட்டான்.’’

இதை வாசித்தவுடன் அரண்மனையிலிருந்து வந்தவர்கள் சாக்கடைப் பக்கம் போய் அதற்குள் ‘டபீர்’ என்று விழுந்த வஸ்து எதுவாயிருக்கலாமென்று தேடினார்கள்.

என்ன ஆச்சரியம்! அவர்கள் எதைத் தேடி அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்தார்களோ, அந்தப் பண்டமே அதற்குள் இருந்தது. ‘அரண்மனையிலிருந்து திருடிக் கொண்டு வந்தவன் அப்போதைக்கு இங்கே போட்டு வைத்திருக்கலாம். திருட்டு விசாரணை நடந்து ஓய்ந்த பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணிப் போட்டிருக்கிறான்’ என்று ஊகித்துக்கொண்டார்கள்.

‘டபீர் என்ற சத்தம் கேட்டது’ என்ற குறிப்பு இல்லா விட்டால் திருட்டுப்போன பண்டம் கிடைத்திருக்காது என்பதை எண்ணியபோது, அந்தச் சம்பளமில்லாத உததியோகஸ்தரிடத்தில் அவர்களுக்கு அபார மதிப்பு ஏற்பட்டுவிட்டது.

அவரை அரசரிடம் உபசாரத்தோடு அழைத்துச் சென்று, திருட்டுப் போன பாத்திரம் அவரால்தான் கிடைத்தது என்று சொல்லி அவர் உத்தியோகச் சிறப்பையும் எடுத்துரைத்தார்கள். டபீர் என்ற சத்தத்தைக் கவனித்துக் குறிப்பு எழுதிய அந்தக் கனவானுக்கு ‘டபீர் ஸ்வாமி’ என்ற பட்டமும், ராஜ சன்மானமும் கிடைத்தன.

***

கதையைச் சொல்லிவிட்டு, “டபீர் ஸ்வாமியின் வரலாறு பொருத்தமாக இருக்கிறதா?” என்றார் ஸ்ரீநீவாசையர்.