அந்தமான் கைதி/28

விக்கிமூலம் இலிருந்து


காட்சி 28.


இடம் : திவான்பகதூர் மாளிகை.

காலம் : மாலை.

பாத்திரங்கள் : திவான்பகதூர், முனியாண்டி, ஜம்பு
[பொன்னம்பலம் வருத்தமாக உட்கார்ந்திருக்கிறார். முனியாண்டி வருகிறான்.]

முனி: நமஸ்காரமுங்க! என்ன இப்படி ஒரு மாதிரியா இருக்குறீங்க?

பொன் : (வெறுப்போடு முறைத்துவிட்டு மறுபுறம் திரும்பிக்கொள்ளுகிறார்.)

முனி : ஏங்க? என்னைப் பார்க்கப் புடிக்கிலிங்களா? ஆமாமா ஒங்க காரியந்தான் முடிஞ்சுபோச்சே இன்னெமே இவனைப் பார்த்து என்ன பிரயோசனம்? உம், நீங்க என்னைப் பாக்காட்டிப் பரவாயில்லே, பேசினபடி பணத்தைக் கொடுத்திடுங்க!

பொன் : (கோபமாக) பணமாவது பிணமாவது, ஏதுடா பணம்! அயோக்கியப் பயலே!

முனி : என்னங்க இப்படிச் சொல்றீங்க! எப்படியாவது கல்யாணத்தே முடிச்சுப்புட்டா ரூவா ஐநூறு தாரென்னு நீங்கதானே சொன்னீங்க!

பொன்: போதும், போதும்; நான் கல்யாணம் முடித்ததும் கட்டையிலே போனதும்; இதுவரை உன் பேச்சைக் கேட்டு அழுததெல்லாம் போதாதென்று இன்னும் உனக்கு வேறு அழவேண்டுமா? எரிகிற வீட்டில் கிடைத்தது ஆதாயமென்றா பார்க்கிறாய்? இனிமேல் ஒரு பைசாகூடக் கொடுக்கமாட்டேன். மரியாதையாய்ப் போய்விடு. தெரியுமா?

முனி : இங்கே பாருங்க, என்னாது? காரியம் முடிஞ்சு போச்சின்னா இப்படிப் பேசுறீங்க? இதெல்லாம் நல்லால்லேங்க!

பொன் : டேய் யாரடா அங்கே? (ஜம்புவும் மற்றொரு வேலையாளும் வருகிறார்கள்; அவர்களிடம்) இந்த அயோக்கியப் பயலைப் பிடித்து வெளியில் தள்ளுங்கள்.

(என்று சொல்லிவிட்டு திவான்பகதூர் உள்ளே போய் விடுகிறார்.)

ஜம்பு: ஏய் முனியாண்டி! என்ன கலாட்டா இது?

முனி : ஏய்யா! நீங்க இருக்கும் போதுதானே சொன்னாரு. காரியம் முடிஞ்சதும் ரூவா ஐநூறு தாரேன்னு. இப்பக் கேட்டா, போடா வாடாப் பொட்டக் கண்ணான்னு ஓட்டுனா அதுக்கு நானா மசிவேன்!

ஜம்பு : காரியம் முடிய நீ என்ன சாதித்து விட்டாய்? இவர் இல்லாவிட்டால் காரியம் முடிந்திருக்குமோ?

முனி : யாரு இல்லேன்னா அது வேறே நமக்குள்ளே ஒத்துப்போற விஷயமுல்லே அது. இப்ப அவரு பணங் குடுத்தா நான் தான் என்ன, மறந்துடுவேனா? அது வழக்கப்படி உள்ள கமிஷன் உங்களுக்குக் குடுத்திடுவேன். இப்படி அடியோட ஒண்னுமில்லேன்னா? அது நாயமாங்குறேன்?

(ஜம்பு முனியாண்டி காதில் ரகசியமாக ஏதோ சொல்கிறான்)

 முனி: சரி சரி அப்படியா சமாச்சாரம், ஊம். நகத்துங்க. ஓகோ அதானே நானும் என்னடா சோழியங் குடுமி சும்மா ஆடாதேன்னு பார்த்தேன். அப்ப சரிங்க, மறந்திடாதிங்க நான் வர்ரேங்க, சில்லரை...

ஜம்பு: ஆகட்டும் காரியம் முடியட்டும்.

முனி : மகமாயி!

(போகிறான்).

"https://ta.wikisource.org/w/index.php?title=அந்தமான்_கைதி/28&oldid=1073520" இலிருந்து மீள்விக்கப்பட்டது