அந்திம காலம்/அந்திம காலம் - 13

விக்கிமூலம் இலிருந்து

டாக்டர் ராம்லி, டாக்டர் லிம், மதர் மேகி மூவரும் அந்த அறையில் இருந்தார்கள். போன வாரத்தின் எக்ஸ்ரே படங்கள் அவற்றை ஒளிப்படுத்தும் பெட்டியின் மேல் தொங்கிக் கொண்டிருந்தன. அவரது கபாலம், நெஞ்சுக்கூடு, இடுப்பு என்ற உறுப்புகள் கருப்புப் புகைப் பின்னணியில் எலும்புக் கோடுகளாகத் தெரிந்தன. அவரது பழுதடைந்த செல்களை எலக்ட்ரான் நுண்பெருக்காடியில் பதிவு செய்து கணினியில் உயிரூட்டப்பட்ட வடிவங்கள் ஒரு கணினித் திரையில் மூன்று பரிமாணங்கள் கொண்ட படங்களாகச் சுற்றியவாறிருந்தன. "சுந்தரம் s/o சாமிநாதன்" என்ற தலைப்பிட்ட கோப்பு ஒன்று மேசையில் கிடந்தது. டாக்டர் ராம்லி வந்த இந்தச் சில நாட்களில் அந்தக் கோப்பில் இன்னும் பல குறிப்புகள் சேர்ந்து அது தடிப்பாகி விட்டிருந்தது.

டாக்டர் ராம்லி ஒரு மாணவனுக்குப் பாடம் நடத்துவது போல ஒரு சுட்டும் கம்பைக் கையில் வைத்துக் கொண்டு கணினித் திரையையும் எக்ஸ்ரே படங்களையும் சுட்டியவாறு தமது தடிப்பான குரலில் அமெரிக்க ஆங்கிலத்தில் உணர்ச்சி காட்டாமல் பேசினார்.

"மிகவும் அபூர்வமாக சில புற்று நோய் செல்கள் கதிரியக்கத்துக்கு மசிவதில்லை. அதற்கு மேலாக அவற்றை ஒழிப்பதற்காக ஊட்டப்படும் மருந்துகளையும் விரைவில் எதிர்க்கக் கற்றுக் கொண்டு செழிக்கின்றன. அப்படித்தான் உங்கள் உடலில் நிகழ்ந்து வருகிறது. சில பேருக்கு என்டிபயோட்டிக் மருந்துகள் கொடுக்கும்போது உடலிலுள்ள சில நோய்க் கிருமிகள் சாவதற்கு பதிலாக அதை மெதுவாக எதிர்க்கக் கற்றுக் கொள்ளுகின்றனவல்லவா, அது போல. இதோ பாருங்கள்: இது நீங்கள் இங்கு வந்து சேர்ந்த போது எடுத்த மூளை செல். இது இரண்டு நாட்களுக்குப் பிறகு. இது முதல் வார முடிவில். இது இரண்டாம் வார முடிவில். இது மூன்றாம் வார முடிவில் கடைசியாக எடுத்தது. மூன்று வாரக் கதிரியக்கம், மூன்று வார மருந்துகளின் முடிவில் அந்தப் புற்று நோய் செல்கள் முதலில் கொஞ்சமாக அழிந்து பின் பெருகியிருக்கின்றன."

கணினியில் அவர் சில பொத்தான்களைத் தட்ட அந்தப் பெருக்கம் விரைவு படுத்திக் காட்டப்பட்டது. அந்த கொலை செல்கள் அழகிய வண்ணங்களில் இருந்தன. ஒன்றின் மேல் ஒன்றாக ஏறிப் புற்றாகக் கட்டியிருந்தன.

"இந்தப் புற்று நோய் செல்கள் இப்போது உங்கள் உடலில் பல இடங்களில் பரவியிருப்பதை இரத்தப் பரிசோதனை முடிவுகள் காட்டுகின்றன. எக்ஸ்ரேயிலும் இருக்கிறது. உங்கள் எலும்புக்குள் உள்ள எலும்புச் சோற்றையும் இவை பாதித்துள்ளன. அதனால் இரத்த சோகை கடுமையாகியிருக்கிறது."

அந்த அறையில் ஒளியைக் குறைத்து வைத்திருந்தார்கள். பாதி இருளில் இருந்தது. வௌியில் உள்ள ஒலி உள்ளே புக முடியாமல் முற்றாகத் தடுக்கப்பட்ட அறை. ஏர் கண்டிஷனின் மெல்லிய சுருதி மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. டாக்டர் லிம்மோ மதர் மேகியோ சுந்தரமோ டாக்டர் ராம்லியின் பேச்சைக் கொஞ்சமும் தடை செய்யவில்லை.

"தொடர்ந்து கெமோதெராப்பியில் உங்களுக்குக் கொடுக்கப் படும் மருந்துகளை அதிகரித்தால் அவை உங்கள் நல்ல செல்களையும் அடூத்து விடும். இப்போதே கல்லீரலில் ஒரு பகுதியும் இடது சிறுநீரகமும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. வயிற்றில் புண்கள் தோன்றியிருப்பதற்கும் இந்த மருந்துகள்தான் காரணம். உங்கள் வயிறு உணவைச் சிரமப்பட்டுத்தான் ஏற்கிறது. இது தொடர்ந்தால் வயிற்றின் சுவர்களில் துளை ஏற்பட்டு விடும்."

இப்படி என் நோய்க்கு விடிவே கிடையாது என்று எனக்கு அறிவிப்பதற்காகவா அமெரிக்கா போய் படித்து வந்திருக்கிறீர்கள் டாக்டர் ராம்லி? நீங்கள் மருத்துவரா மரணத்தின் தூதரா? என் நோய் குணமாகாது என இப்படி அறிவியல் பூர்வமாக இரண்டு சாட்சிகளை வைத்து அறிவித்து விட்டால் என்னைக் கொல்ல வேண்டும் என்கின்ற உங்கள் லட்சியம் எளிதாக நிறைவேறிவிடும் அல்லவா? அதுதான் நீங்கள் இங்கே நடத்துகிற நாடகம் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார் சுந்தரம்.

"ஆகவே இந்த வழக்கமான மருந்துகளை உங்களுக்குத் தொடர்ந்து கொடுத்து வருவதில் பயன் இல்லை என நானும் டாக்டர் லிம்மும் கருதுகிறோம்" டாக்டர் லிம் தலையாட்டி அதனை ஆமோதித்தார்.

டாக்டர் லிம், மதர் மேகி! மருத்துவப் போர்வையில் நடத்தப் படும் இந்த டாக்டர் ராம்லியின் சூழ்ச்சிகளை எப்படி உங்களுக்கு நான் விளக்கிச் சொல்லப் போகிறேன் என மனதுக்குள் சோர்ந்து போனார் சுந்தரம். அவர்கள் இருவரின் கவனமும் முற்றாக டாக்டர் ராம்லியின் மீது இருந்ததே தவிர சுந்தரத்தின் மீது இல்லை.

"பழைய மருந்துகள் உங்களுக்கு உதவா என நாங்கள் உறுதியாக நம்பியதால்தான் இந்தப் புதிய சிகிச்சை முறைய உங்களுக்கு அளித்துப் பார்க்க நான் முடிவு செய்தேன். இந்தப் புதிய முறை டாக்டர் லிம்முக்குப் பரிச்சயமில்லாத முறை ஆதலால் இந்த சிகிச்சைக்கு நானேதான் முற்றாகப் பொறுப்பேற்றுக் கொள்வேன்!"

எவ்வளவு வசதியாகப் போய்விட்டது! என நினைத்துக் கொண்டார். பரிவு மிக்க டாக்டர் லிம்மின் கைகளிலிருந்து என்னை முற்றாக எடுத்துக் கொண்டால் அப்புறம் நான் உங்கள் கையில் பொம்மை. நீங்கள் விரும்பியவாறு என்னை ஆட்டுவிக்கலாம்.

"இந்தப் புதிய சிகிச்சையில் உங்களுக்கு நான் ஹோர்மோன்தெராப்பியை அறிமுகப் படுத்தப் போகிறேன். உங்கள் இயற்கை ஹோர்மோன்கள் சிலவற்றைத் தணிக்கவும், இன்னும் சிலவற்றைப் பெருக்கவுமாக இவை வேலை செய்யும். செயற்கை ஹோர்மோன்கள் சிலவற்றையும் உங்கள் உடலில் செலுத்துவேன். ஏற்கனவே பெண்களுக்கு மார்பகப் புற்று நோய்க்கு இதனைப் பயன் படுத்தியிருக்கிறோம். ஆண்களுக்கு அதிகம் பயன் படுத்தியதில்லை. ஆண்களின் ஹோர்மோன் சுரப்பிகளில் வேலை செய்கின்ற புதிய மருந்துகள் இவை. அமெரிக்காவில் 55% பலன் கண்டிருக்கிறோம்." நிறுத்தினார்.

சுந்தரம் இடை மறித்து முதன் முறையாகப் பேசினார்: "55% பலன் கண்டிருந்தால் 45% பலன் இல்லை என்றுதானே அர்த்தம்?"

"ஆமாம் அப்படித்தான் அர்த்தம். அதை உங்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் சொன்னேன்!"

"பலன் இல்லை என்றால் எப்படி?"

"சில வேளைகளில் ஹோர்மோன்களில் நாம் நினைக்கும் மாற்றம் ஏற்படுவதில்லை. மாற்றம் ஏற்பட்டாலும் செல்களில் இவை ஏற்படுத்த வேண்டிய மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை"

"மாற்றங்கள் ஏற்படுத்தா விட்டாலும் நோயை அதிகரிக்காது இல்லையா?"

"நோயை இந்த ஹோர்மோன்கள் அதிகரிக்காது. உண்மைதான். ஆனால் ஹோர்மோன்கள் மாறும் என்று நாம் காத்திருக்கும் மூன்று முதல் நான்கு வார காலத்தில் வேறு பல வழக்கமான மருந்துகளை நிறுத்தி விடுவதால் புற்று நோய் செல்கள் அந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டு விரைவாக முற்றி விடலாம். அதுதான் அபாயம்!"

வேறு ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் அவற்றைக் கேட்க வேண்டுமென்று அவருக்குத் தோன்றவில்லை. கேட்டால் நல்ல பதில்கள் வரும் என்றும் தோன்றவில்லை. டாக்டர் ராம்லி தொடர்ந்தார்:

"ஹோர்மோன்தெராப்பியின் பக்க விளைவுகள் சில கடுமையானவை. மார்பும் கழுத்தும் வீங்கலாம். தொண்டை கரகரப்பாகலாம். உங்களுக்குள் பய உணர்ச்சி அதிகமாகலாம். பயங்கரமான பிரமைகள் தோன்றலாம்! ஆனால் இவை யாவும் தற்காலிகமானவைதான். சில ஓரிரவில் தோன்றி மறைந்து விடக் கூடியவை. இந்த பக்க விளைவுகள் தோன்றத் தோன்ற அவற்றை முறியடிக்க நான் மாற்று மருந்துகள் கொடுப்பேன்"

என்னைக் கொல்வதென்று முடிவு செய்த பிறகு இந்தச் சித்திரவதைகளையும் நீங்கள் செய்து பார்க்கத் துணிந்து விட்டீர்கள் போலும் என்று எண்ணிக் கொண்டார். ஆனால் அவருக்குப் பெரிய அதிர்ச்சி ஏதும் ஏற்படவில்லை. தெய்வங்கள் அவருடைய முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என முடிவு செய்த விஷயம்தான். ராம்லி அவர்களின் தூதுவர்தான்.

"நீங்கள் இந்தப் புதிய சிகிச்சை முறையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது எந்த விதத்திலும் கட்டாயமில்லை. மறுத்து விடலாம். மறுத்து விட்டால் நாங்கள் உங்களைக் கைவிட்டு விட மாட்டோம். பழைய மருந்துகள் உங்களுக்குத் தொடர்ந்து கொடுப்போம். யார் கண்டார்கள்? இந்த நான்காவது வாரத்தில் அவை பயன் தர ஆரம்பிக்கலாம். அவற்றின் மூலம் உங்கள் புற்று நோய் குணமும் ஆகலாம். அந்த சாத்தியக் கூற்றை யாரும் மறுக்க முடியாது."

திடீரென அவருக்கு அந்த நப்பாசை தோன்றியது. இந்த டாக்டர் ராம்லியின் மரணப் பிடியிலிருந்து தப்ப, அல்லது தவணை பெற்றுக் கொள்ள இது ஒரு வழி எனத் தோன்றியது.

"அப்படியானால் இன்னும் ஒரு வாரம் பழைய சிகிச்சையைத் தொடர்ந்துவிட்டு, அப்புறம் இதைப்பற்றி யோசித்தால் என்ன?" என்று ஆர்வத்துடன் கேட்டார்.

"ஆமாம் அப்படிச் செய்யலாம். ஆனால் தொடர்ந்து இந்த மருந்துகள் இப்போது போலவே பலனளிக்காமல் இருந்தால் எந்த நேரத்திலும் உள் உறுப்புகள் ஒன்றில் உங்களுக்கு ரத்த ஒழுக்கு ஏற்பட்டு விடலாம். இந்த அபாயத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இரத்த ஒழுக்கை உடனடியாக அடைக்காவிட்டால் மருத்துவ உதவிக்கு அப்பால் நீங்கள் சென்று விடுவீர்கள்!"

"அதாவது செத்து விடுவேன் என்கிறீர்கள்!" என்றார் சுந்தரம்.

"ஆமாம். அப்படித்தான்!" என்றார் டாக்டர் ராம்லி.

மற்ற இருவரின் முகங்களையும் பார்த்தார் சுந்தரம். டாக்டர் லிம் சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தார். மதர் மேகி அந்த புன்னகைக் கோடு மாறாத முகத்துடன் இருந்தார்.

டாக்டர் ராம்லியைப் பார்த்தார். நீ என்னை ரட்சிக்க வந்த தெய்வமா கொல்ல வந்த யமனா என்பதைப் பார்த்து விடுவோம் ராம்லி! என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு "சரி! டாக்டர் ராம்லி! நான் இந்த ஹோர்மோன்தெராப்பிக்குச் சம்மதிக்கிறேன்" என்றார்.

டாக்டர் ராம்லி அந்த பதிலைக் கேட்டு மகிழ்ந்தவராகவோ வருந்தியவராகவோ தெரியவில்லை. வழக்கம் போன்ற சீரியசான முகத்துடன் அவருடைய கோப்பைத் திறந்து ஏதோ பத்திரங்களை வௌியில் எடுத்தார். மேசைமேல் வைத்தார்.

"சரி! நீங்கள் அப்படிச் சம்மதிப்பதானால் சில பத்திரங்களில் கையெழுத்திட வேண்டும். இந்த அபாயங்களைத் தாங்கள் உணர்ந்துள்ளதாகவும் அவற்றை உணர்ந்து இந்தப் புதிய சிகிச்சை முறைக்கு முழு மனதுடன் சம்மதிப்பதாகவும் சட்ட பூர்வப் பத்திரங்கள் தயாரித்திருக்கிறோம். அதில் நீங்கள் கையெழுத்துட வேண்டும்!" என்றார் ராம்லி.

"இது ஏன் தேவை?" என்று கலவரத்துடன் கேட்டார் சுந்தரம்.

"இது இந்த மருத்துவ மனைக்கும் டாக்டர்களுக்கும் இன்சூரன்ஸ் வழக்குகளிலிருந்து தற்காப்பு அளிக்கும். நாங்கள் தவறான மருந்துகளை உங்களுக்குக் கொடுத்ததாக வழக்குகள் பின்னால் எழுந்தால் அதை முறியடிக்க இவை சான்றாக இருக்கும். இதை உறுதிப் படுத்திக்கொள்வதற்காகத்தான் இவ்வளவும் உங்களுக்கு விளக்கிச் சொன்னேன்!" என்றார் ராம்லி.

சுந்தரம் பெருமூச்சு விட்டு அமைதியாக இருந்தார். எல்லா வகையிலும் இந்த டாக்டர் கெட்டிக்காரர். என் கழுத்துக்குக் கத்தியை வைத்து விட்டு, அறுத்ததற்கு நான் பொறுப்பில்லை என்று என்னிடமே கையெழுத்தையும் வாங்கிக் கொள்ளும் அபார புத்திசாலி. ராம்லி! உன் கெட்டிக்காரத் தனத்தை உன் பழைய ஆசிரியர் என்ற முறையில் மெச்சுகிறேன்.

மதர் மேகி முதன் முறையாகப் பேசினார். "சுந்தரம். உங்களுக்கு யோசிக்க அவகாசம் வேண்டுமானால் நேரம் எடுத்துக் கொள்ளலாம். உங்கள் குடும்பத்தாரோடு பேசி முடிவு செய்வதானாலும் சரி. வேண்டிய அவகாசம் எடுத்துக் கொள்ளலாம்!" என்றார்.

மதர் மேகியின் அன்பு முகத்தைப் பார்த்தார் சுந்தரம். வழக்கம் போல் அதில் கருணையும் சிரிப்பும் இருந்தன. சுந்தரம் கேட்டார்: "மதர் மேகி இதில் நான் கையெழுத்திடு முன் உங்களிடம் தனியாக ஒரு அரை மணி நேரம் பேசலாமா?"

மதர் மேகி கொஞ்சமும் யோசிக்கவில்லை. "கண்டிப்பாகப் பேசலாம். வாருங்கள் என்னறைக்குப் போகலாம். டாக்டர்கள் அவர்கள் வேலையைப் பார்ப்பார்கள். நாம் எப்பொழுது பேசி முடிக்கிறோமோ அப்பொழுது அடுத்த நடவடிக்கையைப் பற்றி யோசிக்கலாம்" என்றார்.

மதர் மேகி எழ அனைவரும் எழுந்து விட்டார்கள். சுந்தரத்தின் கையை ஆதரவாகப் பிடித்துக் கொண்டு அவரைத் தன் அறைக்கு வடூநடத்திச் சென்றார் மதர் மேகி.


      • *** ***

மதர் மேகி அறையில் ஒரு தெய்வீகம் இருந்தது. அதிகமாகத் தளவாடச் சாமான்கள் இல்லாத எளிமையான அறை. ஏசு சிலுவையில் தொங்கும் பெரிய படம் ஒன்று இருந்தது. நாங்கள் பாரம் சுமக்கவே பிறந்தவர்கள் என்று அனைவருக்கும் அறிவிப்பது போல் இருந்தது அந்தப் படம். சுந்தரம் கொஞ்ச நேரம் அந்தப் படத்தை உற்றுப் பார்த்து விட்டுப் பேசினார்.

"மதர் மேகி, என்னைப் பலவகையிலும் தண்டிப்பதற்கு எல்லா தீய தெய்வங்களும் சேர்ந்து முடிவு செய்திருக்கின்றன. என்னைச் சித்திரவதை செய்ய வேண்டும் என்றும், அணு அணுவாகக் கொல்வதென்றும் முடிவு செய்திருப்பது போல் தெரிகிறது!"

மதர் மேகி அமைதியாகக் கேட்டார். பிறகு சொன்னார். "சுந்தரம் நீங்கள் அப்படி நினைக்க வேண்டியதில்லை. இந்த நோயை கடவுள் கொடுத்த தண்டனை என்று நினைக்க வேண்டாம். ஒரு சோதனை என்று நினைத்துக் கொள்ளுங்கள்! தனக்கு விருப்பமானவர்களைத்தான் இறைவன் எப்போதும் சோதிப்பானாம்" என்றார்.

"நான் என் நோயை மட்டும் கருதி இப்படிச் சொல்லவில்லை மதர் மேகி!" என்றார்.

"அப்புறம்?"

பெரு மூச்சு விட்டார். தயங்கினார். மெல்லச் சொன்னார்: "எனக்கொரு ஒரு பேரப் பிள்ளை இருக்கிறான். மூன்று வயது. என் மகளின் பிள்ளை. என் புற்று நோய் உறுதி செய்யப்பட்ட அதே நாளில் என் வீட்டுக்கு வந்து சில சந்தர்ப்பங்களினால் பெற்றோர்களைப் பிரிந்து என் பொறுப்பில் விடப்பட்டு வந்து எங்களோடு தங்கியிருக்கிறான். வந்ததிலிருந்து இருமலும் காய்ச்சலுமாக இருந்தான். டாக்டரிடம் கொண்டு காட்டினோம். அவனுக்கு..."

எப்படி அவரையும் மீறி இந்த உணர்ச்சி தொண்டைக்குள் வந்ததோ தெரியவில்லை. தொண்டை அடைத்து விக்கியது. அவர் எவ்வளவோ அடக்க முயன்றும் முடியாமல் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. டாக்டர் மேகி அவர் கையைப் பிடித்து மெதுவாக அழுத்தினார்.

"அவனுக்கு லியூகேமியா என்று மருத்துவப் பரிசோதனைகள் காட்டுகின்றன. இன்றைக்கும் மருத்துவ மனைக்குப் போயிருக்கிறான். இன்றைக்குத்தான் அது உறுதியாகும்!" வழிகின்ற நீரைக் கூடத் துடைக்காமல் நிமிர்ந்து மதர் மேகியின் முகத்தைப் பார்த்தார். 57 வயது ஆண்பிள்ளை ஒரு மேற்கு நாட்டுப் பெண் முன் அழுவது அவருக்கே வெட்கமாக இருந்தது. ஆனால் உணர்ச்சிகள் அவருடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கவில்லை.

மதர் மேகி அவருடைய தோளில் கை வைத்தார். "அப்படியா! மிக வருந்துகிறேன் சுந்தரம். நான் சமாதானம் எதையும் கூற முயல்வதற்கு முன் இதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள். இந்த விஷயத்தை நீங்கள் டாக்டர் லிம்மிடமும் டாக்டர் ராம்லியிடமும் சொல்ல வேண்டும். இந்தப் புற்று நோய்க்குப் பாரம்பரிய காரணங்கள் அல்லது தலைமுறைக் காரணங்கள் இருக்கின்றனவா என அவர்கள் ஆராய்வார்கள்.

"அது எப்படியிருந்தாலும் உங்களுக்கும் உங்கள் பேரக் குழந்தைக்கும் ஒரே நேரத்தில் புற்று நோய் வந்து தாக்கியிருப்பது எந்த மனிதரையும் உருக்கக்கூடிய ஒரு விஷயம்தான். ஆனால் மீண்டும் ஒரு முறை இதை ஒரு தெய்வத் தண்டனை என நீங்கள் நினைக்க வேண்டாம். உங்களையும் உங்கள் பேரப் பிள்ளையை மட்டும்தான் இந்த நோய்களுக்குக் கடவுள் தேர்ந்தெடுத்திருக்கிறார் என நினைக்க வேண்டாம். அந்த நினைவு உங்களைக் கடவுளிடமிருந்து அன்னியப் படுத்தி விடும். இது நீங்கள் கடவுளை நெருங்கியிருக்க வேண்டிய நேரம். கோபப்பட்டு விலகி நிற்க வேண்டிய நேரம் அல்ல.

"ஆயிரக் கணக்கில் மில்லியன் கணக்கில் மக்கள் நோய்வாய்ப்படுகிறார்கள். மரணத்தைப் போலவே நோய்களும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான். அதை முன்னின்று எதிர்க்கப் பாருங்கள். அது உங்கள் உடலை அடிமைப் படுத்தினாலும் மனத்தை அடிமைப் படுத்த விடாதீர்கள்" என்றார்.

"என் கதை இன்னும் முடியவில்லை மதர் மேகி! நீண்ட கதை. உங்கள் நேரத்தை வீணாக்குவதற்கு மன்னியுங்கள்!" என்றார்.

"சொல்லுங்கள் சுந்தரம். நோயாளிகளின் மனதுக்குள் என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிவதும் எங்கள் சிகிச்சையில் ஒரு பகுதிதான். ஆகவே என் நேரத்தை வீணாக்குவதாக நீங்கள் நினைக்க வேண்டாம். நீங்கள் சொல்ல நினைப்பதையெல்லாம் சொல்லலாம்!" என்றார்.

கண்ணீரைத் துடைத்துவிட்டு மெதுவாக ராதாவைப் பற்றிச் சொன்னார். அவள் கணவனைப் பற்றிச் சொன்னார். அவர்கள் வாழ்க்கையின் விரிசல் பற்றிச் சொன்னார். பரமா தன் பொறுப்புக்கு வந்து சேர்ந்த சூழ்நிலைகளைச் சொன்னார். சிவமணியின் மிரட்டலையும் அவன் இன்றிரவு வரவிருக்கும் விஷயத்தையும் சொன்னார்.

மதர் மேகி எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டார். அவர் கேட்கக் கேட்க சுந்தரத்தின் மனது கொஞ்சம் இலேசானது. ஆனால் இந்த அந்தரங்கமான குடும்பக் கதையையெல்லாம் ஏன் ஒரு வேற்றுப் பெண்ணிடம் சொல்லுகிறோம் என்ற வெட்கமும் எழுந்தது. ஆனால் மதர் மேகியை ஒரு வேற்றுப் பெண்ணாகவும் நினைக்க முடியவில்லை. தான் வெகு காலத்திற்கு முன் இழந்து முகமும் மறந்து போன தாய் போல அவர் இருந்தார்.

சுந்தரம் கதையை நிறுத்தி சோர்ந்து மௌனம் சாதித்த ஓரிடத்தில் மதர் மேகி சொன்னார். "உங்களுக்கு என்ன ஆறுதல் கூறுவதென்று எனக்குத் தெரியவில்லை. எனக்கே நடந்திருந்தாலும் உங்களைப் போலத்தான் குலைந்து போயிருப்பேன். ஆனால் இப்படியெல்லாம் அடுத்தடுத்து நடப்பதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும் சுந்தரம். அது என்னவென்று நமக்குச் சரியாகப் புரியமாட்டேனென்கிறது. நீங்கள் இதைக் கடவுளின் தண்டனை என நினைப்பதால் உங்களுக்கு ஓர் உண்மைக் கதை சொல்கிறேன். கேட்கிறீர்களா?" என்று மதர் மேகி சுந்தரத்தின் முகத்தைக் கூர்ந்து நோக்கினார். சுந்தரம் சரி என்று தலையாட்டினார்.

"அமெரிக்காவில் வெர்ஜினியாவில் ரோய் சல்லிவன் என்ற ஒரு மனிதர் இருந்தார். 1942-க்கும் 1977-க்கும் இடையில் இந்த மனிதரை மின்னல் ஏழு முறை விரட்டி விரட்டித் தாக்கியிருக்கிறது. முதல் தாக்குதலில் அவர் தன் பெருவிரல் நகத்தைப் பறி கொடுத்தார். அடுத்தது அவருடைய புருவங்களை எரித்தது. அதற்குப் பிந்தைய தாக்குதல்களில் தோள்பட்டை, கால், மார்பு, வயிறு ஆகிய உறுப்புக்களில் கடுமையான தீப்புண்கள் ஏற்பட்டன. அவர் தலைமுடி இரண்டு முறை தீப் பிடித்துக் கொண்டது. இந்தக் கதையை கின்னஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்சில் நீங்கள் பார்க்கலாம். ஆனால் இதனால் எல்லாம் இறக்காத இந்த மனிதர் 1983-இல் தன்னுடைய காதலி இவரை மறுத்ததனால் மனமுடைந்து இறந்து போனாராம். இது தெய்வ தண்டனை என்றா நாம் எடுத்துக் கொள்வது?

"எரிமலை வெடிக்கிறதே என்று பயப்படுகிறோம். ஆனால் அதனால்தான் நிலத்திற்கு வளமான எரு கிடைக்கிறது. காடுகள் எரிகின்றனவே என்று கவலைப் படுகிறோம். அதனால்தான் நோய்வாய்ப்பட்ட பழைய பெரிய மரங்கள் எரிந்து புதிய கன்றுகள் வளர முடிகிறது. அந்த நெருப்பினால்தான் காடுகள் செடூக்கின்றன. கடலுக்கடியில் பூகம்பம் ஏற்பட்டு அலைக்கழிக்கிறது. கப்பல்களைக் கவிழ்த்து கடல் பொங்கி மீனவர் கிராமங்களை அடூக்கிறது. ஆனால் அதுவே கடலுக்கு மத்தியில் புதிய நிலத்தை உருவாக்கி புதிய உயிர்களையும் உற்பத்தி செய்கிறது. ஆகவே இந்த உலக நியதிக்கு இதெல்லாம் உட்பட்டதுதான் எனத்தான் நாம் அமைதி கொள்ள வேண்டும்" என்றார்.

சுந்தரம் கேட்டுவிட்டுச் சொன்னார். "மதர் மேகி, இவற்றையெல்லாம் நான் சொன்னது இப்போது நான் சொல்லப் போவதற்கு ஒரு முன்னுரையாகத்தான். இதையும் கேட்டுவிட்டு இதெல்லாம் எனக்கொரு தண்டனை என்று நான் நினைப்பதில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்று சொல்லுங்கள்!"

மதர் மேகி அவருடைய கண்களைக் கூர்மையாகப் பார்த்தவாறு அடுத்து வரும் செய்திக்காக ஆர்வத்துடன் காத்திருந்தார்.

"இந்த டாக்டர் ராம்லி இருக்கிறாரே, இவர் என்னுடைய பழைய மாணவர்" என்று ஆரம்பித்தார்.

"உங்கள் பழைய மாணவரா? சொல்லவே இல்லையே! அவருக்குத் தெரியுமா?" என்றார்.

"அவருக்குத் தெரிந்துதான் எனக்குச் சொன்னார்!" என்றார். பின் அந்தப் பழைய காலத்தில் தன் பள்ளியில் ராம்லி செய்ததையும் தான் அவரைப் பிடித்ததையும் அந்த சம்பவம் முடிவடைந்த விதத்தையும் சுருக்கமாகச் சொன்னார்.

"என்ன ஒரு விசித்திரம்? அவரே உங்களுக்கு டாக்டராக வந்திருக்கிறாரே!" என்றார் மதர் மேகி.

"டாக்டராக வந்திருக்கிறாரா, யமனாக வந்திருக்கிறாரா என்பதுதான் இப்போது என் மனதை அரித்துக் கொண்டிருக்கும் கேள்வி!" என்றார் சுந்தரம்.

மதர் மேகி வியப்புடன் அவரைப் பார்த்தார். "என்ன சொல்கிறீர்கள்? அந்தப் பழைய பகையை இன்னும் நினைவில் வைத்து உங்களுக்குத் தீங்கு செய்யப் போகிறார் என்றா?"

சுந்தரம் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

"இல்லை சுந்தரம். அந்த எண்ணமே எனக்கு அருவருப்பாக இருக்கிறது. ஒரு டாக்டருக்கு இப்படி ஒரு சிந்தனை தோன்றும் என்று கூட என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. நீங்கள் இதை மிகவும் பெரிது படுத்திக் கொண்டு பயப்படுகிறீர்கள்."

டாக்டர் ராம்லி தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட முறை பற்றியும் தன்னுடன் சுமுகமாகப் பேசாமல் பரிவு காட்டாமல் இருப்பது பற்றியும் மதர் மேகிக்குச் சொன்னார்.

"டாக்டர் ராம்லியின் சமூக உறவு கொஞ்சம் நயமில்லாமல் இருக்கலாம் ஒத்துக் கொள்ளுகிறேன். அதைப் பகைமை, வஞ்சம் என அர்த்தப் படுத்திக் கொள்ள முடியுமா? பல மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சியிலேயே முழுதாக மூழ்கி விடுகிறார்கள். நோயாளிகளை கேஸ்களாக நினைக்கிறார்களே தவிர மனிதர்களாக நினைப்பதில்லை. அப்படி இருப்பதால்தான் இந்த மாதிரி மருத்துவ மனைகளில் என்னைப் போன்றவர்களையும் வைத்து மனித நேயத்தை வளர்க்கிறார்கள். டாக்டர் ராம்லி அப்படிப் பட்டவர் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. உணர்ச்சிகளுக்கு இடங் கொடுக்காத ஆராய்ச்சியாளர். எனக்கும் அவரைக் கொஞ்ச நாளாகத்தான் தெரியும். ஆனால் இவரைப் போன்று பல உணர்ச்சியே காட்டாத பல டாக்டர்களை நான் என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். டாக்டர் உணர்ச்சியைக் காட்ட ஆரம்பித்தால், அல்லது நோயாளியின் சுக துக்கங்கள் தன்னைப் பாதிக்க அனுமதித்தால் அவரால் அவருடைய கடமையை ஆற்ற முடியாது சுந்தரம்!"

சுந்தரம் கேட்டார்: "டாக்டர் ராம்லிக்கு என் மேல் பகைமை இல்லை என்பதை எப்படி உறுதிப் படுத்திக் கொள்வது?"

மதர் மேகி பெருமூச்சு விட்டார். பின்னர் பேசினார். "இரண்டு வழிகள் உள்ளன. இந்த சிகிச்சை வேண்டாம் என நீங்கள் ஒதுக்கிவிட்டு முன்பு போல் டாக்டர் லிம்மிடமே சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் புதிதாகக் கிடைக்கும் சிகிச்சை முறையை நீங்கள் பயன் படுத்திக் கொள்ள முடியாமல் போகும். இரண்டாவது வழி..."

மதர் மேகி நிறுத்தி யோசித்தார். "ஒரு டாக்டரிடம் இந்தக் கேள்வியைக் கேட்பதே ஒரு மானப் பிரச்சினையாக இருக்கும் என அஞ்சுகிறேன். ஆனால் நீங்கள் சந்தேகம் கொண்டிருப்பதால் உங்கள் சந்தேகத்தை அவரிடமே சொல்லி விளக்கம் கேட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன். அப்படிச் செய்ய நான் தயார்!" என்றார்.

சுந்தரத்திற்கு அது பிடித்திருந்தது, "சரி! இதை மட்டும் நீங்கள் உறுதி செய்து கொண்டால் அந்தப் பத்திரங்களைக் கையோடு கொண்டு வாருங்கள். டாக்டர் ராம்லியின் புதிய சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டு கையெழுத்துப் போட நான் தயார்" என்றார் சுந்தரம். சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள இதுதான் வடூ என்று தோன்றியது. சந்தேகப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துப் பிழைப்பதை விட ஒரேயடியாக இதை வௌிப்படுத்திச் சரிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.

"இங்கேயே இருங்கள்!" என்று சொல்லிவிட்டு மதர் மேகி அறையை விட்டு வௌியேறினார்.

வெற்றுச் சுவரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் சுந்தரம். "தவறு செய்து விட்டாய் சுந்தரம்! ஒரு டாக்டரின் மேல் தேவையில்லாத சந்தேகத்தை எழுப்பிவிட்டாய். பள்ளிக்கூட நாட்களில் ராம்லி செய்த தவறு உறுதியாகத் தெரிந்தது. குற்றம் சாட்டியதில் நியாயம் இருந்தது. ஆனால் இன்று ராம்லி ஒரு டாக்டர். அவர் மேல் சந்தேகத்தின் பேரில் குற்றம் சாட்டி அவர் நல்ல பெயருக்கும் களங்கம் விளைவித்து மருத்துவத் துறைக்கும் களங்கம் விளைவிக்கிறாய்!" என உள்ளம் சொல்லிக் கொண்டே இருந்தது. குழம்பி உட்கார்ந்திருந்தார்.

மதர் மேகி ஒரு பத்து நிமிடங்களில் திரும்பிவிட்டார். அவர் கையில் அந்தப் பத்திரங்கள் இருந்தன. சுந்தரத்தைப் பார்த்துச் சிரித்தார். "சுந்தரம். நான் தௌிவாகக் கேட்டுவிட்டேன். டாக்டர் ராம்லி அந்தச் சம்பவத்தையே மறந்திருந்தாராம். உங்களை இங்கு பார்த்ததும்தான் அந்தப் பழைய சம்பவங்கள் நினைவுக்கு வந்ததாம். தன் மனதில் பகையில்லை என்று மட்டும் சொன்னார். ஆனால் உங்கள் மனதில் சந்தேகம் இருந்தால் இந்த சிகிச்சையை நீங்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதுதான் நல்லது என்று சொன்னார். என் ஆலோசனையும் அதுதான்! ஒரு நாள் எடுத்துக் கொள்ளுங்கள். இன்றிரவு உங்கள் குடும்பத்தாரோடும் மனம் திறந்து பேசுங்கள். நாளைக்குக் கையெழுத்துப் போடுவது பற்றி முடிவு செய்யுங்கள்" என்றார்.

சுந்தரம் கை நீட்டி அந்தப் பத்திரங்களை வாங்கிக் கொண்டார். "மதர் மேகி! ஏற்கனவே தேவையில்லாத சந்தேகங்களை எழுப்பி உங்களையெல்லாம் குழப்பிவிட்டேன். வருத்தி விட்டேன். இனியும் நானும் காத்திருந்து உங்களையும் காக்க வைத்துக் குழப்ப விரும்பவில்லை! எங்கே என்று சொல்லுங்கள், கையெழுத்துப் போடுகிறேன்!" என்றார்.

மதர் மேகி கோடுகளைக் காட்ட கையெழுத்தைப் போட்டார். போடும் அந்த நேரத்திலேயே ராம்லி தன்னுடைய குற்றச் சாட்டை இவ்வளவு சாதாரணமாகத் தள்ளி விட்டாரே என்ற ஒரு சந்தேகம் குறுகுறுத்துக் கொண்டே இருந்தது.