அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/014

விக்கிமூலம் இலிருந்து
‘வெள்ளையனே வெளியேறு’
போராட்டம்: கஸ்தூரிபாய் கைது!


1942-ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டம் தொடங்கியது. இதுதான் எனது கடைசிப் போராட்டம் என்று காந்தியடிகள் கூறிவிட்டார். அந்த ஆண்டு ஆகஸ்டு 9-ஆம் நாள் இந்திய தேசிய காங்கிரஸ் செயற்குழு பம்பாயில் கூடுவதாக இருந்தது!

விடியல் நேரம்! இருள் இரவை விட்டுப் பிரியாத வேளை! மகாத்மாவும் கஸ்தூரிபாயும் அன்று பிர்லா மாளிகையில் தங்கி இருந்தார்கள். அப்போது ஆங்கிலேயர் அரசு அந்தக் கருக்கல் இருட்டு நேரத்தில் மகாத்மா காந்தியைக் கைது செய்தது!

அன்று மாலை சிவாஜி பூங்காவில் காந்தி அடிகள் பொதுக் கூட்டத்தில் பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவரை ஆட்சி கைது செய்து விட்டதால், கஸ்துரிபாய் அடிகளாருக்குப் பதிலாக பேசுவார் என்று கூறப்பட்டது.

அன்றுமாலை இரண்டு காவலர்கள் பிர்லா மாளிகைக்கு வந்து, இன்றைய பொதுக்கூட்டத்தில் கஸ்தூரிபாய் பேசப்போகிறாரா என்று அங்குள்ளவர்களைக் கேட்டார்கள். உடனே ஆம் நான் தான் பேசப் போகிறேன் என்று அந்த அதிகாரிகளிடம் கஸ்தூரிபாய் கூறினார். உடனே போலீசார், கஸ்தூரி பாயையும், பியாரிலாலையும், சுசிலா நய்யாரையும் கைது செய்தார்கள். ஏற்கனவே கைது செய்யப்பட்ட காந்தியடிகளை பூனாவில் உள்ள ஆகாகான் அரண்மனையில் அதிகாரிகள் சிறைவைத்திருந்தார்கள். அதே இடத்திற்கு கஸ்தூரிபாயையும் அழைத்துச் சென்று அவர்கள் சிறை வைத்தார்கள்.

அன்னையின் உடல் நலம் ஏற்கனவே மிகவும் பலவீனம் பெற்றிருந்தது. அடிகளுடனே சிறை வைக்கப்பட்டதால் அவர் மகிழ்ச்சி அடைந்தார்.

இந்த நேரத்தில், மகாத்மாவின் நேர்முகச் செயலாளராகவும், அவரது மகனைப்போன்று நம்பிக்கையுடன் உழைத்த வரும், தேசிய காங்கிரசின் செயல் வீரராக விளங்கியவரும், கர்ந்தியடிகளுடன் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப் பட்டிருந்தவருமான மகாதேவதேசாய் என்பவர் மரணமடைந்து விட்டார். இவர் மகாத்மாவுக்கு சேவை செய்தவாறே தாம் இறக்கவேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தவர். அவர் இறப்பு காந்தியடிகளை உலுக்கிவிட்டது. சோகமே உருவானார் அடிகள்.

"மகனே! மகாதேவ தேசாய் செல்வமே; என்னை விட்டு விட்டு எங்கேயடா சென்றாய்?" என்று கஸ்தூரிபாய் கதறி அழுதார்!

ஆனால் காந்தியடிகள், துக்கத்தை அடக்கிக் கொண்டு ஆறுதலடைந்தவராய், காங்கிரஸ் தொண்டர்களைக் கைது செய்த ஆணவ ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து இருபத்தொரு நாள் உண்ணாவிரதப்போரைத் துவக்கி விட்டார். அதை ஆண்டவன் கட்டளை என்று மனைவியிடம் கூறிவிட்டார்.

தேசாய் மறைந்த துக்கம் தாளவில்லையே என்று கஸ்தூரிபாய் அழுது கண்ணீர்விட்டார். இருந்தாலும் கணவனை மாற்ற முடியாது; அவர் அறிவித்தால் அறிவித்ததுதான் என்று ஆண்டவனைத் தொழுதுகொண்டு, தேசத்துக்காகக் கணவன் தொடங்கிய போராட்ட வேள்வி வெற்றி பெற்றிட கடவுளை வேண்டினார்.

காந்தியடிகளின் படுக்கையைச் சுற்றிச் சுற்றி அந்த மெலிந்த உடல் வலம் வந்து பணிசெய்து கொண்டே இருந்தது. வயது ஏறிய அந்த மாதரசி, தள்ளாத நேரத்திலும் கணவன் சேவையே கடவுள் சேவை என்று நாட்டுக்காகவும், கணவரது உடல் நலத்துக்காகவும், தனது தள்ளாமையையும் பாராமல் அவருக்குரிய தேவைகளை செய்து கொண்டே இருந்தார்.

1943-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அன்னைக்கு இருமுறை இருதய நோய் தாக்கியது. அதற்கடுத்து டிசம்பர் மாதத்தில் மீண்டும் இரு முறை வந்தது. இத்தனை உடல் நெருக்கடியிலும் குணமாகி, குணமாகி மீண்டும் மீண்டும் கணவருடைய சேவையே தெய்வச் சேவை என்று செய்து கொண்டே வந்தார். 1944-ஆம் ஆண்டில் மீண்டும் மார்பு அடைப்பு நோய் வந்தது. இந்த நோய் வந்த போதெல்லாம் ஆங்கில அரசு தக்க சிகிச்சைகளை அவருக்குத் தந்து, அவரது உடல் நிலை விவரங்களை நாட்டிற்குத் தெரிவித்துக் கொண்டே இருந்தது.

அதே நேரத்தில் இந்திய மக்கள், கஸ்தூரி பாயை விடுதலை செய் என்று குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். இதே போலவே இங்கிலாந்திலே வாழும் இந்தியர்களும் அன்னையை விடுதலை செய் என்று போராடினார்கள். ஆனாலும், ஆங்கிலேய அரசு அன்னையை விடுதலை செய்யவில்லை.

xxx