அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/015

விக்கிமூலம் இலிருந்து

கஸ்தூரிபாய் மறைந்தார்:
காந்தியடிகள் கண்ணி மல்க 'ஹேராம்' எழுதினார்

தேவதாஸ் காந்தி, காந்தியடிகளின் இளைய மகன். சக்கரவர்த்தி ராஜாஜியின் மருமகன்! அவர் தனது தாயாரின் இறுதி நேரத்தைப் பற்றி எழுதியுள்ள மரண வரலாறு இதோ:

"எனது அன்னையாருக்கு கடைசி நேரம் வரை, ஒரு முறை கூட உணர்வு தவறவில்லை. பிப்ரவரி 20-ஆம் நாள் அவருடைய உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது.

"ஆங்கிலேய அரசு அறிக்கை வெளியிட்ட போதும், எப்படியாவது நோய் நீங்கிப் பிழைத்து விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது அவருக்கு.

"இருதயம் பலவீனமாக இயங்கியதால் சிறு நீர்ப்பை அவருக்குச் சரியாக வேலை செய்யவில்லை. அத்துடன் தாயாருக்கு நிமோனியாக் காய்ச்சலும் கண்டுவிட்டது. ரத்த வேகமும் குறைந்து விட்டதால் டாக்டர்கள் என் தாயார் உயிர்மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள்.

"திங்கள் கிழமை காலை நான் தாயாரைப் பார்க்கச் சென்றேன். அவர் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். உறவினர்களும், நண்பர்களும் செய்த ஓரளவு பணிவிடைகளால் அவர் நலமடைந்தவர் போலக் காணப்பட்டார்.

"அன்றிரவு டாக்டர்கள் சொன்னதற்கு மாறாக தாயார் உயிருடன் இருந்தார். இந்த உலகத்தில் அவர் உயிரோடு இருந்தது அன்று இரவுதான். அந்த இரவிலே நண்பர்களும், சுற்றத்தாரும், எனது தந்தையும் அம்மாவுக்கு வேண்டிய பணிகளைச் செய்தார்கள்.


"ஏதாவது கேள்வி கேட்டால், அம்மா அரைகுறை நினைவோடு ஒரே வார்த்தைதான் பதில் கூறுவார். அதுவும் இயலாத போது தலையை மட்டும் ஆட்டுவார். ஒருமுறை அப்பா அருகில் சென்று உட்கார்ந்த போது, அம்மா கைகளைத் தூக்கி அவர் யார்? என்று அப்பாவைப் பார்த்துக் கேட்டார்.

"அம்மா அருகிலே இருந்து சில பணிகளைச் செய்ததன் மூலம் அப்பா ஓர் ஆறுதல் கிடைத்தது போலக் காணப்பட்டார். அம்மாவுக்கு அருகில் இருந்த அப்பா, அப்போது சில ஆண்டுகள் குறைந்து விட்ட வயதினரைப் போலத் திகழ்ந்தார். ஆனால், அப்பா கைகள் மட்டும் நடுங்கிக் கொண்டே இருந்தன.

"அந்த சமயம், முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் நடந்த ஒரு நிகழ்ச்சி எனது நினைவுக்கு வந்தது. அப்போதுதான் எனது தாயார் சிறையிலே இருந்து வெளியே வந்தார். உடல் நலம் மிகவும் மோசமாக இருந்தது. எனது பெற்றோருக்கு அறிமுகமான ஓர் ஐரோப்பியர் இவர்களை ரயில்வே நிலையத்தில் சந்தித்தார். 'மிஸ்டர் காந்தி இவர் உங்கள் தாயாரா?' என்று அப்பாவைப் பார்த்து, அம்மாவைக் காட்டிக் கேட்டார்.

"பொழுது விடிந்தது. அன்னையின் உடல் நிலை முன்பு இருந்ததை விட, கவலை தருவதாக இருந்தது. என்றாலும். அம்மா அமைதியாக இருந்தார். திங்கட்கிழமை எப்படியும் பிழைத்து விடலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. செவ்வாய்க்கிழமை 'பகவான் விட்ட வழி' என்று சரணாகதியாகி விட்டார்.

திங்கட்கிழமை முதல் மருந்து அருந்த மறுத்து விட்டார். தண்ணீரும் ஏற்கவில்லை. ஆனால், செவ்வாயன்று மாலை கங்கை தீர்த்தம், ஒரு துளி வாயில் விட்டார்கள். அவராகவே வாய்திறந்தார். பிற்பகல் மூன்று மணிக்கு என்னைக் கூப்பிட்டு ஆள் அனுப்பினார். "நான் போனதும், என்னை அருகில் அழைத்து, 'நான் போகிறேன், என்றாவது போகத்தானே வேண்டும், இன்றே ஏன் போகக் கூடாது?" என்றார்.

"நான் அவருடைய கடைசிக் குழந்தை. நான்தான் அவருடைய வழியை மறித்துக் கொண்டது போல் இருந்தது. வேறு பல கனிவான வார்த்தைகளைக் கூறி என் அணைப்பிலிருந்து அவர் விலகினார். அதற்கு முன்னால் அவருடைய சொற்கள் இவ்வளவு தெளிவாக இருந்ததில்லை என்று எனக்குத் தோன்றியது.

"பேசியானதும், யாருடைய உதவியையும் நாடாமல் விரைந்து எழுந்து உட்கார்ந்தார். இருகைகளையும் குவித்துத் தம்மால் முடிந்த அளவு உரத்த குரலில் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்தார். அவருடைய பிரார்த்தனையில் மீண்டும் மீண்டும் வந்த சொற்களை, நான் இவ்வாறு தான் மொழி பெயர்ப்பேன். 'ஆண்டவனே அபயம்; கருணை வேண்டி வணங்குகிறேன்!'

"கண்ணிரைத் துடைத்துக் கொள்வதற்காக நான் அறையிலிருந்து வெளியே வந்தேன். ஆகாகான் அரண்மனைக்கு அப்பொழுதுதான் பென்சிலின் ஊசி வந்தது. அதைப் பயன்படுத்த டாக்டர்கள் விரும்பவில்லை. சிறுநீர்ப்பைகளைப் பென்சிலின் இயக்காது, நிமோனியாவைக் குணப்படுத்தக் கூடிய இந்த மருந்தைத் தருவதற்கு ஏற்பாடுசெய்தார்கள். சுமார் ஐந்து மணிக்குத் தைரியப்படுத்திக் கொண்டு அம்மாவைப் பார்க்கச் சென்றேன். என்னைக் கண்டதும் அவர் புன்னகை புரிந்தார். அந்தப் புன்னகைதான் நாற்பத்து மூன்று ஆண்டுகளாய் என்னைக் கெடுத்து வந்தது. மகனுக்குத் தைரியம் கூற மரண வேளையில் அன்னை வழங்கிய புன்னகை அது. என் தாய் புனிதத் தன்மையின் வடிவம். அவர் என்னிடம் மிகுதியாக அன்பைப் பொழிந்தார். அவரிடம் காணப்பட்ட இந்த வஞ்சவைக்காக அவரை மன்னிக்க வேண்டும் என்று அவருக்குத் தெரிந்த எல்லோரிடமும் அவர் சார்பில் வேண்டிக் கொள்கிறேன்.

“தம்முடைய படைப்பிலே, எல்லா விதங்களிலும் சிறந்து விளங்கிய ஓர் ஆன்மாவின் சின்னஞ்சிறு குறைகளைக் கடவுள் கட்டாயம் மன்னிப்பார். என் தாயாரின் புன் சிரிப்பினால், பென்சிலின் மருந்தின்மீது எனக்குப் பெருத்த நம்பிக்கை உண்டானது. அதைப் பற்றி டாக்டர்களோடு பேசினேன். அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. எனக்காகச் சோதனை செய்து பார்க்க அவர்கள் சம்மதித்தார்கள்.

"ஊசி குத்தி அன்னையை ஹிம்சை செய்ய நான் இசைந்ததைத் தந்தையார் அறிந்தார். மாலையில் வழக்கப்படி தோட்டத்தில் உலாவச் செல்லாமல் என்னோடு இதைப் பற்றிப் பேசவந்தார். 'நீ எவ்வளவு அரிய மருந்தைக் கொண்டு வந்து கொடுத்தாலும், உன் தாயாரை இனிமேல் குணப்படுத்த முடியாது. நீ வற்புறுத்துவதால் நான் சம்மதிக்கிறேன். ஆயினும், நீ செய்வது தவறு.

"இரண்டு நாட்களாக உனது தாயார் மருந்து உண்பது இல்லை; தண்ணீர் குடிக்கவும் மறுத்து விட்டாள். இப்போது அவள் பகவானின் வசம் இருக்கிறாள். உனக்கு விருப்பமானதைச் செய். ஆனால், நீ செய்வது சரியல்ல என்று எச்சரிக்கிறேன். சாகப்போகும் தாயை, நான்கு அல்லது ஆறு மணிக்கு ஓர் ஊசியால் குத்தி வலியால் துடிக்கச் செய்ய விரும்புகிறாய் என்றார் அவர். அவரை மறுத்துப் பேசுவது சரியாகாது, முறையாகாது. ஊசி குத்தும் யோசனையை நான் கைவிட்டதாக அறிந்ததும் டாக்டர்களும் அதை நிறுத்தி விட்டார்கள்.

"நானும் தந்தையாரும் இவ்வளவு அழகாய் ஒரு நாளும் பேசிக் கொண்டதில்லை. அது முடிந்ததும் அம்மா அப்பாவை அழைப்பதாகத் தகவல் வந்தது. அவர் உடனே போனார். அம்மாவை ஏந்தி அணைத்துக் கொண்டிருந்தோரிடமிருந்து விலக்கித் தாமே மார்போடு சாய்த்து அனைத்துக் கொண்டார்; தம்மால் முடிந்த ஆறுதலை அளித்தார்.

"அங்கிருந்த பத்துப் பேர்களோடு நானும் அம்மாவைப் பார்த்தபடியே நின்றேன். அப்போது அவர் முகத்தில் இருள் சூழ்ந்தது. அம்மா பேசினார். இன்னும் வசதியாக இருப்பதற்காகச் சிறிது அசைந்தார்.

"இமைப் பொழுதில் முடிவு வந்தது. அப்பா கண்ணீரை அடக்கிக் கொண்டார். மற்றவர்கள் கண்ணீர் பெருக்கினார்கள். எல்லோரும் பிறைவடிவில் கூடி, அம்மாவுக்குப் பிரியமான பிரார்த்தனைப் பாடலைப் பாடினார்கள். இரண்டே நிமிடங்கள். எல்லாம் முடிந்தன. அம்மா 7.35 மணிக்கு உயிர் நீத்தார்.

அன்று 1944-ஆம் ஆண்டு சிவராத்திரி நாள் புண்ணிய தினம்! அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எழுபத்தைந்து வயது. அம்மா உயிரைத் துறந்த போது அவருடைய மூன்று பிள்ளைகள், டாக்டர் சுசிலா நய்யார், பியாரேலால், பிரபாவதி தேவி, டாக்டர் கில்பர், கனுகாந்தி, சுவாமி ஆனந்தா ஆகியோர், அங்கு இருந்தார்கள். மரணத்துக்குச் சற்று நேரத்துக்கு முன்னால் கஸ்தூரி பாயின் ஒரே சகோதரர் மாதவதாஸ் கோகுல்தாஸ் பரபரப்பாக உள்ளே வந்தார். கணவன் மடியில் உயிர்துறந்தார் கஸ்தூரிபாய்!

மறுநாள் காலை பத்தேமுக்கால் மணியளவில் வெள்ளைக் கதர் புடவை கட்டி, நெற்றியில் குங்குமப் பொட்டு இட்டு, கிச்சிலி நிறப்போர்வையால் அன்னையின் உடலைப் போர்த்தி மூடினார்கள். மலர்களால் அலங்கரித் தார்கள். பிள்ளைகளும், உறவினர்களும் மயானத்துக்குக் கொண்டு சென்று கஸ்தூரிபாய் உடலைத் தகனம் செய்தார்கள். இறுதிச் சடங்குகளை இளைய மகன் தேவதாஸ் காந்தி செய்தார். அப்போது சுமார் நூறு பேர் கூடியிருந்தார்கள்.

கஸ்தூரிபாய் சடலத்தைச் சிதையில் வைத்த போது மகாத்மா காந்தியடிகள் போர்வையால் தனது முகத்தை மறைத்துக் கொண்டு அழுதார். கீதை, குரான், பைபிள் முதலிய சமய நூல்கள் ஓதப்பட்டன. காந்தி அடிகளும், கஸ்தூரிபாயும் தங்கள் மக்களுள் ஒருவராகப் போற்றிய மகாதேவ தேசாய் சமாதிக்கு அருகிலேயே கஸ்தூரிபாய் அடக்கம் செய்யப்பட்டார்.

அன்னை கஸ்தூரி பாய் சமாதி மீது மகாத்மா காந்தியடிகள் தம்முடைய கைகளால் சிறுசிறு சங்குகளைக் கோர்த்து, ஹேராம் என்று எழுதினார் கஸ்தூரி பாய் சகாப்தம் முடிந்தது.

xxx