அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/121-383

விக்கிமூலம் இலிருந்து

117. நெடால் எமிகிரேஷன்: இந்தியர் கைத்தொழிற்சாலைகளுக்கு கூலியாட்கள் கிடைக்காமல் போகின்றதாமே

அந்தோ! நமது தேசப் பத்திரிகைகள் கூறுவது சாதிபேதம் வைத்துள்ளக் கூலியாட்களையா அல்லது சாதிபேதம் அற்றுள்ளக் கூலியாட்களையா தெரியவில்லை.

அன்னிய தேசங்களுக்கு இத்தேசத்துக் கூலியாட்களை அனுப்பி விடுகிறபடியால் இவ்விடம் ஏற்படுத்திவரும் கைத்தொழிற்சாலைகளுக்கு கூலியாட்கள் கிடைக்காமல் மெத்த கஷ்டப்படுகிறார்களென்று சிற்சில பத்திராதிபர்கள் கூறுவது விந்தையாக விளங்குகின்றது. காரணம் இன்ன சாதியார், இனியசாதியாரென்று இதுகாரும் விளங்காமலிருக்கும் கனந்தங்கிய பச்சையப்பன் காலேஜில் கைத்தொழில் கற்பிக்கும் கலாசாலை இயற்றுவதற்காய் விளம்பரப் பத்திரிகை வெளியிட்டதுள் சாதிபேதம் வைத்துள்ளார்கள் மட்டிலும் அக்கலாசாலையில் வந்து கற்றுக்கொள்ளலாம், மற்ற சாதிபேதம் அற்றுள்ளவர்களுக்கு அதில் இடம் கிடையாதென்று பயிரங்கப்படுத்தி இருந்தார்கள்.

இத்தகைய பட்சபாதமுள்ளோர்கள் நாட்டி வரும் நெசிவுசாலைகளிலும், இயந்திரசாலைகளிலும் சாதிபேதம் அற்றோர்களை சேர்ப்பார்களோ, ஒருக்காலுஞ் சேர்க்கமாட்டார்கள். எவ்வகையாலென்பீரேல் அச்சாலைகளில் பிரதம உத்தியோகங்களில் அமர்ந்திருப்போர் ஆட்களை நியமிக்கும்போது நீரென்னசாதி - நான் கவரை, நீரென்னசாதி - நான் வேளாளன், நீரென்னசாதி - நான் ரெட்டி என்பார்களாயின் அவர்கள் யாவரையும் சேர்த்துக் கொள்ளுவார்கள். மற்றொருவனைக் கேட்குங்கால் அவன் எனக்கு சாதியில்லை என்பானாயின் அவன் பறையன் அவனுக்கு இங்கு வேலை கிடையாதென்று துரத்தி விடுவார்கள். அவர்களை மட்டிலும் ஏன் துரைத்திவிடுகிறீர்களென்று கேட்டாலே தங்களுக்கு சாப்பாடு கொண்டு வருவதற்கும், சலமுதலியன மொண்டு கொடுப்பதற்கும் இடைஞ்சலாகிவிடும். ஆதலால் அவர்களை சேர்ப்பதில்லையென்று திட்டமாகக் கூறுகின்றார்கள்.

ஈதன்றி பொதுவாய் பிரிட்டிஷ் ராஜாங்க உத்தியோகசாலைகளிலேயே இச்சாதி பேதமற்றவர்களை சேரவிடாமலும், நெருங்கவிடாமலும் தாழ்த்தி நாசப்படுத்திவந்தவர்களும், வருகிறவர்களுமானோர் தங்கள் சொந்தமாகியத் தொழிற் சாலைகளில் இவர்களைச் சேர்த்து சீவிக்கவிடுவார்களோ என்பதை அநுவத்திலறிந்துக் கொள்ளவேண்டியதேயாம். அதாவது நல்லத்தண்ணீரை மொண்டு குடிக்கவிடாத பொறாமெயுள்ளோர்களும் அம்மட்டர்களை சவரஞ் செய்யவிடாத பொறாமெயுள்ளோர்களும், வண்ணார்களை வஸ்திர பொறாமெய் உள்ளோர்களும், சுபாகபகாலபறை அடிப்போரை பறையடிக்கவிடாமல் தடுக்கும் பொறாமெயுள்ளோர்களும், இரண்டுகாணி பூமியை வைத்துக்கொண்டு சீவிக்கப்பொறுக்காத பொறாமெயுள்ளோர்களும், நல்ல ஆடைகளையும் ஆபரணங்களையும் அணைந்துவருவதை நேரிற் காணப்பொறுக்காத பொறாமெய் உடையோர்களும் சாதிபேதமற்ற ஏழை கூலிகளுக்காக இதங்கிப் பாடுபடுகின்றார்களென்பது கனவிலும் நம்பக்கூடியதன்று.

  சாதிபேதமற்ற ஏழைக்கூலிகள் சாதிபேதம் வைத்துள்ளோர்வசம் படாதபாடுபட்டு பிரிட்டிஷ் ஆட்சியின் கருணையால் சற்று சீவனுண்டாகி அன்னிய தேசங்களுக்குக் கூலிகளாகச்சென்று ஆனந்தமாக உழைத்து பொருள் சேகரித்து இவ்விடம் சுகசீவிகளாக வந்து வாழும் வாழ்க்கையைக் காண்போர் மனஞ் சகியாது, மற்றுங் கூலிகளைக் குடிகெடுத்து கோலுங்குடுவையும் கையிற்கொடுக்கப் பார்க்கின்றார்கள். தங்கள் சொந்த கலாசாலைகளில் சேர்ந்து வாசிக்கக் கண்டு பொறுக்காதவர்கள் தங்கள் தொழிற்சாலைகளுக்கு கூலிகள் கிடைக்காமல் போகின்றதென்று கூறுவது பத்திரிகைகளின் கூற்றேயன்றி தொழிற்சாலையோர் முறைபாடன்றாம். ஆதலின் கூலிகளைப்பற்றி இராஜாங்கத்திலும், பத்திரிகைகளிலும் பேசுவோர் சாதிபேதம் வைத்துள்ள கூலியாட்களுக்குப் பரிந்துப் பேசுவதே நலமாகும். அங்ஙனமின்றி சாதிபேதமில்லாக் கூலியாட்களுக்காய்ப் பரிந்து பேசுகிறோமென்று அபிநயிப்பது ஆடுகள் நனைவதென்று புலிகள் புரண்டழுவதற் கொக்கும்.
  யதார்த்தத்தில் சாதிபேதமற்ற ஏழைக் குடிகளின் பேரில் இதக்கமுள்ளவர்களாயின் இத்தேசத்தில் சாதிபேதம் வைத்துள்ளோர் சாதிபேதமில்லாக் கூட்டத்தோரை மனிதவகுப்போரென பாவிக்காது மிருகங்களினும் கீழாக நடாத்திவரும் செயலை அகற்றி மனிதர்களாக பாவிக்கச் செய்யவேண்டும். சுயதேசத்திற் செய்யவேண்டிய சீர்திருத்தங்களை செவ்வனே செய்யாது புறதேசத்திற் சென்று சீவிப்போர்மீது சிங்கநாதம் செய்வது சீர்கேட்டிற்கே மூலமாதலின் கருணை தங்கிய இராஜாங்கத்தோர் சாதிபேதமற்றக் கூலிகளை எங்கு செல்வதற்குத் தடைசெய்யாதிருக்கக் கோருகிறோம்.
- 3:39; மார்ச் 9, 1910 -