அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/122-383

விக்கிமூலம் இலிருந்து

118. யாருக்குக் கல்விவிருத்தி செய்ய வேண்டும் பொல்லார்க்கின்றி நல்லோர்க்கேயாம்

பொல்லார் யாவர். தங்களைப்போல் எதிரிகள் சுகம்பெறலாகாதென்றெண்ணுவோரும், தங்களைப்போல் எதிரிகள் கல்வியும் நாகரீகமும், பெறலாகாதென் றெண்ணுவோரும், ஆயிரங் குடிகள் கெட்டு நாசமடைந்தாலுமடையட்டும், தங்கள் குடி சுகம்பெற்றால் போதுமென்று எண்ணுவோரும், வஞ்சினத்தால் வதைக்க முயல்வோரும் பொறாமெயால் குடிகெடுக்க முயல்வோரும், பேராசையால் கூடிக் கெடுக்க நாடுவோரும் பொல்லார்களென்னப்படுவர்.

  நல்லோர்கள் யாவர். தாங்கள் கெடினும் எதிரிகள் சுகம்பெற வேண்டுமென்றெண்ணுவோரும், தாங்கள் கற்றக் கல்வியைப்போலும் நாகரீகத்தைப்போலும் எதிரிகளும் பெறவேண்டுமென்று எண்ணுவோரும், தங்கள் குடி கெட்டாலும் நூறுகுடிகள் சுகமாக வாழ்கவேண்டுமென்று எண்ணுவோரும், வஞ்சினமற்றோரும், பொறாமெயற்றோரும், பேராசையற்றோரும், நல்லோர்கள் என்னப்படுவர்.
  உலகில் தோன்றியுள்ள மக்களுக்கும் சீவராசிகளுக்கும் உபகாரிகளாக விளங்கும் யாவரையும் நல்லோரென்றும் நியாயரென்றுங் கூறப்படும். உலகில் தோன்றியுள்ள மக்களுக்கும் சீவராசிகளுக்கும் அபகாரிகளாக விளங்கும் யாவரையும் பொல்லாரென்றும் தீயாரென்றும் கூறப்படும்.
  இத்தியாதி சீவகாருண்யமற்ற படுபாவிகளாம் பொல்லார்களுக்குக் கல்விவிருத்திச் செய்வதினால் வித்தியா கர்வமாம் மமதை தோன்றிவிடுகின்றது. அக்கர்வத்துடன் கிஞ்சித்து பொருள் சேர்ந்துவிடுமாயின் மற்றவர்களைத் தாழ்த்தி புறங்கூறுதற்கும், தங்களையொத்த மனிதனென்றறிந்தும் அவனை இழிவுபடுத்துவதற்கும் அஞ்சான். கல்வியும் செல்வமிரண்டுடன் தான் சொல்லும் வாக்கும் செல்லுமாயின் தனக்கு எதிரிகளாகத் தோன்றுங் குடிகள் யாவரையும் கெடுப்பதற்கு அஞ்சான். கல்வியும், செல்வமும், செல்வாக்குமாகிய மூன்றும் நல்லோர்களுக்கு உண்டாமாயின் சருவ மக்களுக்கும் சருவ சீவராசிகளுக்கும் உபகாரிகளாக விளங்குவதுமன்றி நித்திய சுகமும் பெறுவார்கள்.

விவேகசிந்தாமணி

பொல்லார்க்கும் கல்விவரில் கர்வமுண்டாம் அதனூடு பொருளுஞ் சேர்த்தால்
சொல்லாதுஞ்சொல்லவைக்கும் சொற்சென்றால் குடிகெடுக்கத் துணிவர்கண்டாய் நல்லோர்க்கிம் மூன்றுருண முண்டாகி வருளதிக ஞானமுண்டா
யெல்லோர்க்கு முபகாராயிருந்து பரகதியை யெய்துவாரே.

சத்திய தன்மபோத நீதிநூற்களை அநுசரியாது கல்விவிருத்தி பெற்றவர்களும், செல்வவிருத்தி பெற்றவர்களும், சொல்லும் வாக்கு செல்லும் விருத்திபெற்றவர்களும் இவ்விந்துதேசத்தில் எம்மக்களை சீர்திருத்தி எச்சீவராசிகளைப் பரவச்செய்து எத்தொழில் விருத்தியை பெருக்கி தேசோபகாரிகளாக விளங்கி இருக்கின்றனர்.

கற்றக் கல்வியில் சுகசீவனம் பார்ப்போரும், பெற்ற செல்வத்தால் தங்கள் சுற்றத்தைக் காப்போரும், செல்வாக்கால் அதிகார சுகம் பெறுவோர்களுமாக விளங்குகின்றார்களன்றி நீதிநூற்களை வாசித்து உலகோபகாரிகளாக விளங்கினார்களில்லை.

இத்தேசத்தோருட் சிலர் தாங்கள் கற்றக் கல்வியாலும் பெற்றச் செல்வத்தாலும் செல்லும் வாக்காலும் பத்து பெயர் சேர்ந்துக்கொண்டு இராஜத்துவேஷச் செயல்களைப் பெருக்கித் தாங்கள் பத்து பெயர் கெடுவதுடன் தங்கள் குணானுபவம் அறியாது தங்களுடன் சேர்ந்து கொண்டு கூச்சலிடும் பத்தாயிர மக்களுக்கும் சீர்கேட்டையும் இராஜ விரோதத்தையும் தேடிவைத்துவிடுகின்றார்கள். இத்தகையக் கல்வியும் செல்வமும் பெற்றோர் பொதுப்பிரயோசனத்தை நாடி, சகல மக்களின் ஈடேற்றத்தைக் கருதி தங்களை விருத்திபெறச்செய்த ராஜாங்க விசுவாசம் வைத்து தாங்கள் கற்றக் கல்வியையும் செல்வத்தையும் உபயோகிப்பார்களாயின் குடிகளும் சுகம்பெறுவர். தேசமும் சிறப்புறும். கோனும் ஆறுதல் பெறும்.

அங்ஙனமின்றி தாங்கள் கற்றக் கல்வியையும் பெற்ற செல்வத்தையும் சுயப்பிரயோசனத்தை நாடி உபயோகிப்பதினால் தேசமுஞ் சீர்கெட்டு குடிகளும் பாழடைந்து போவதுடன் யாதுமறியா ஏழை மக்களையும் இராஜ விரோதிகளாகக் காட்டிக்கொடுத்துவிட்டுத் தாங்களொன்றுமறியாதவர்கள் போல் மீனுக்கு வாலையும் பாம்புக்கு தலையையும் காட்டும் விலாங்குபோல் சமயம் பார்த்திருக்கின்றனர்.

பொதுவாகிய தேசத்தின் சீர்திருத்தத்தை நாடாத கல்வி கற்றென்ன கல்லாது போயிலென்ன. தன்னுயிர்போல் மன்னுயிர்களை ஆதரிக்காத செல்வமிருந்தென்ன யில்லாமற் போயிலென்ன. ஆதலின் நமது கருணைதங்கிய ராஜாங்கத்தோர் தாங்களாளுந் தேசச்சிறப்பையும் குடிகளின் சுகத்தையும் தங்கள் குடிகள் யாவரும் இராஜவிசுவாசத்தில் ஒழுகவேண்டிய ஒழுக்கத்தையும் கருதுவார்களாயின் நல்லோர்க்குக் கல்வி விருத்திச்செய்து ஆதரிக்க கோறுகிறோம்.

- 3:39; மார்ச் 9, 1910 -