அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/149-383

விக்கிமூலம் இலிருந்து

145. கனந்தங்கிய இந்திரதேச கவர்னர் ஜெனரல் மிண்டோ பிரபு அவர்களும் கனந்தங்கிய சென்னை ராஜதானி கவர்னர் ஆர்த்தர் லாலி பிரபு அவர்களும்

இந்த இரண்டு பிரிட்டிஷ் ஆட்சி தலைவர்களும் இந்தியாவை விட்டு நீங்கி இவ்வருடம் இங்கிலாந்துக்குப் போய்விடுகிறபடியால் இவர்களது பெயரும் கீர்த்தியும் என்றும் அழியாது இந்தியாவில் பிரகாசிக்கத்தக்கப் பேருபகாரஞ் செய்துப்போவார்களென்று நம்புகிறோம்.

அதாவது, ஏறக்குறைய ஆயிரவருடங்களாக தாழ்ந்த சாதியோர்களென நசுக்கப்பட்டுவரும் பூர்வ சாதிபேதமற்ற திராவிடக் குடிகள்மீதுக் கிருபாநோக்கம் வைத்து தற்கால பிரிட்டிஷ் ஆட்சியின் கருணையால் முன்னுக்கு வந்து விவேக மிகுத்தவர்களாயிருப்பவர்களிற் சிலரைக் கண்டெடுத்து (லெஜிஸ்லேட்டிவ் கவுன்சல்) சங்கத்தில் சேர்த்துவிட்டுப் போய்விடுவார்களாயின் ஆயிரவருடகாலம் அல்லலடைந்திருந்த அறுபது லட்சத்திற்கு மேற்பட்டக் குடிகளை அல்லலிலிருந்து ஆதரித்து முன்னேறச் செய்தவர்கள் கவர்னர் ஜெனரல் மிண்டோ பிரபுவும், கவர்னர் ஆர்த்தர் லாலிப் பிரபுவுமென்றே இந்திரதேசப் பூர்வக் குடிகள் கொண்டாடுவதுமன்றி அவர்களது பெயரும் கீர்த்தியும் பூலோக முள்ளவரைப் பிரகாசிக்குமென்பதேயாம்.

பௌத்த தன்ம சத்துருக்களாகத் தோன்றி பெளத்த தன்மங்களைப் பாழ்படுத்தியதுமன்றி அந்த தன்மத்தில் நிலைத்திருந்த நீதிமக்களுக்கும் தாழ்ந்த சாதிகளென்னும் பெயரைக்கொடுத்து, பலவகையாலும் முன்னேற விடாமற் கெடுத்து, சீரழிக்கப்பெற்று, சிந்தைநைந்திருந்தவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் நீதிவன்மெயால் சொற்பசீரமைந்துள்ளவர்கள் நமது வங்காள கவர்னர் ஜெனரலவர்களையும். நமது சென்னை கவர்னரவர்களையும் நோக்கி எங்களுடைய குறைவு நிறைவுகளையும், கஷ்ட நிஷ்டூரங்களையும் ராஜாங்கத்தோருக்கு விளக்கிக் காட்டுவதற்காய் எங்களுக்கென்று ஓர் பிரதிநிதியை ஆலோசினை சங்கத்தில் நியமிக்கவேண்டுமென்று விண்ணப்பமனுப்பியகாலம் இவ்விருவர் ஆட்சியின் காலமாதலின் அவ்விண்ணப்பத்தில் அடங்கியுள்ள முறைப்பாடுகளை இவ்விருவர்களே கண்ணோக்கி இவ்விருவரும் இந்தியாவை விட்டு நீங்குமுன் ஏழைக் குடிகளுக்கு ஓராதரவும் அவர்கள் முன்னேறும். சுகவழியும் ஊன்றச்செய்து விட்டுப்போவார்களென்று ஏழைக்குடிகள் யாவரும் எதிர்பார்த்திருக்கின்றார்கள்.

இவ்விரு ஆட்சித் தலைவர்களும் இந்தியாவில் வாழும் பெரிய சாதியோர்களுடன் சிறியசாதியோர்களை சேர்க்கப்படாதென்னும் எண்ணங் கொண்டு ஏழைகளின் விண்ணப்பத்தின் மீது கண்ணோக்கம் வையாது மவுனஞ் சாதிக்கின்றார்களோ யாதோ விளங்கவில்லை.

அத்தகைய எண்ணம் இருக்குமாயின் பெரியசாதிகளென்று சொல்லிக் கொள்ளுகிறவர்களையும், சிறிய சாதியோரென்று அழைக்கப்படுவோர்களையும் நேரிலழைத்து விசாரிணைப்புரிந்து உயர்ந்தசாதியோரென்பவர்களின் செயலையும், தாழ்ந்தசாதியோர் என்பவர்களின் தொழிலையும் நன்கறிந்து நீதியளித்திடுவர்களேல் அதனினும் மேலாயச் செயலாகும். அதாவது தாழ்ந்த சாதியோர் என்போரை ஆலோசனை சங்கத்திற் சேர்ப்பதற்கு முன் தாழ்ந்த சாதிகள் என்பவர்கள் யார். உயர்ந்தசாதிகள் என்பவர்கள் யாவரென்று தேறவிசாரிணைச்செய்து நியமிப்பது மேலான காரணமாதலின் இரு ஆட்சியோருங் கருணைகூர்ந்து சாதிவிசாரணையை முதற்செய்து ஏழைகளை சங்கத்திற் சேர்ப்பது நலமாகுமென்று வேண்டி நிற்கின்றார்கள். ஏழைகளின் விண்ணப்பம் சாதியாசாரத்தை அனுசரித்தே மவுனத்தில் வைத்திருப்பது வாஸ்த்தவமாயின் சாதியாசாரங்களை நேரில் விசாரித்து நீதி அளிப்பதே மேலான தருமம் என்னப்படும்.

சொற்ப ஜனத்தொகை உள்ளவர்களுக்கெல்லாம் நியாயவாத சுதந்திரங்கள் கொடுத்துவிட்டு அறுபது லட்சத்திற்கு மேற்பட்ட பூர்வக் குடிகளுக்கு யாதொரு சுதந்திரமுங் கொடாமல் சத்துருக்களிடம் இன்னுந் தாழ்த்தும்படிக் காட்டிக்கொடுத்துவிட்டு ஏகாமல் இருவர்களும் இந்தியாவிலிருக்கும்போதே கார்ப்பார்களென்னும் கருத்துள்ளோம். ஆதலின் தன்னவரன்னியரென்னும் பட்சபாதமற்ற பிரிட்டிஷ் ஆட்சியோர் ஏழைகள் மீது இதக்கம் வைத்து எவ்விதத்தேனும் ஈடேறத்தக்க ஓர் வழியை வகுத்து விட்டேகுவார்களென்று எதிர் பார்க்கின்றோம்.

- 4:7; சூலை 27, 1910 -