அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/272-383

விக்கிமூலம் இலிருந்து

268. இராஜாங்க சீர்திருத்தம் முந்த வேண்டுமா குடிகள் சீர்திருத்தம் முந்தவேண்டுமா

குடிகள் சீர்திருத்தமே முந்தல் வேண்டும். அதனது கூட்டமும் ஒழுக்கமுங்கொண்டு இராஜாங்க சீர்திருத்தந் தோன்றும். அதாவது நீருயர வரப்புயரும், வரப்புயர பயிறுயரும், பயிறுயர் குடியுயரும், குடியுயர் கோனுயருமென்பது அனுபவக்காட்சியாதலின் குடிகளினது ஒற்றுமெயும் சீர்திருத்தமுமே முந்தல் வேண்டும். அதன் பின்னர் குடிகளது குறைவு நிறைவுகளையும், கஷ்டநஷ்டங்களையுஞ் செவ்வைசெய்து காப்பதற்கு இராஜங்க சீர்திருத்தந்தோன்றும். அவ்வகையாயக் குடிகளைக் காக்க இராஜாங்கத் தோன்றியுங் குடிகள் கோணுமாயின் இராஜாங்கமுங் கோணலுற்றே பின்னர் சீர்திருத்தும், யாதென்னில் குடிகளிடத்து துஷ்ட கிருத்தியந் தோன்றுமாயின் இராஜாங்கத்தின் சிஷ்டை கிருத்தியந் தோன்றியே தீரும். அக்காலத்தில் இராஜாங்கத்தோர் சிட்சிக்கின்றார்களே சிட்சிக்கின்றார்களே, எனக் கூச்சலிடுவது வீண் கோஷமேயாம்.

இதன் முன்னரே குடிகளுக்குள்ள ஒற்றுமெயும் அன்பும் சீவகாருண்யமும் பெருகநிற்குமாயின் இராஜாங்கத்தின் அன்புங் காருண்யமுங் கவிழ்ந்து நிற்கும். அங்ஙனமின்றி குடிகள் ஒற்றுமெயற்றும், காருண்யமற்றும் இருக்குமாயின் நான் பெரியசாதியான், நீ சிறியசாதியான் என்னும் சாதிகர்வம் பெருகியும், நான் தனவான், நீ ஏழை என்னும் தனகர்வம் பெருகியும், நான் கல்வியில் மிகுத்தோன், நீ கல்வியில் சிறுத்தவன் என்னும் வித்யாகர்வம் பெருகியும், நான் பெரிய உத்தியோகஸ்தன் நீ சிறிய உத்தியோகஸ்தனென்னும் உத்தியோக கர்வம் பெருகியும் எங்கள் சாமி பெரியசாமி உங்கள் சாமி சிறியசாமியென்னும் மதகர்வம் பெருகியும் எழும்பும் துற்குணத்தாலும் தற்செயலாலும் மாறாப்பொறாமெயுந் தீரா பற்கடிப்புந் தோன்றி குடிகள் சீர்கெட்டிருக்குமாயின் அவற்றை சீர்திருத்துவதற்கும், காப்பதற்கும், சாதிகர்வம் அற்றவர்களும், தனகர்வம் அற்றவர்களும், வித்தியாகர்வம் அற்றவர்களும், உத்தியோக கர்வம் அற்றவர்களும், மதகர்வம் அற்றவர்களுமாகிய இராஜாங்கத்தோரே நிலைக்கத் தோன்றல்வேண்டும். அதனால் சாதிகர்வமுள்ளோரை சாதிகர்வமற வடக்கியாளவும், மதகர்வமுள்ளோரை மதகர்வமற அடக்கியாளவுங்கூடும்.

சாதிவூழலும் மதவூழலும் நிறைந்துள்ள தேசத்தில் இவ்விரண்டுமற்ற தன்னவர் அன்னியர் என்னும் பேதம்பாரா அரசே நிலைத்தல் அழகாம்.

இவற்றுள் சாதிகளினால் உண்டாம் சீர்கேடுகளும், மதங்களினால் உண்டாம் சீர்கேடுகளும், வித்தைகளினால் உண்டாம் சீர்கேடுகளும், விவசாயத்தினால் உண்டாம் சீர்கேடுகளும் இவ்விந்திய தேசத்துள் தற்காலம் நிறைந்துள்ளதன்றி மற்றும் எத்தேசத்திலும் கிடையாது. இத்தகைய சீர்கேடுகளை குடிகளே முன்னின்று சீர்திருத்திக்கொள்ள வேண்டும். இவ்வுள் சீர்திருத்தங்களை குடிகளே முந்தி செய்துக்கொள்ள வெளி தோன்றுவதே அழகாம். அங்ஙனமின்றி அரசாங்கத்தோரே முந்த செய்யவேண்டுமென்பது நியாயவிரோதமேயாம். ஏதோ இத்தேசத்தோர் பூர்வபுண்ணியத்தால் சாதிபேதமற்றதும், மதபேதமற்றதும், அன்பு மிகுத்ததும், சீவகாருண்யமுற்றதுமாகிய பிரிட்டிஷ் ராஜாங்கம் தோன்றியிருக்கின்றது. இத்தகையத் தன்னவர் அன்னியரென்னும் பேதமற்றதும், வித்தைமிகுத்ததும், கருணை நிறைந்ததுமாகிய இராஜாங்கத்தைக் கண்டேனுந் தங்களுள் சீர்திருத்தங்களை செவ்வை செய்துக் கொள்ளாது சகல சீர்திருத்தங்களையம் இராஜாங்கத்தோரே முந்த செய்ய வேண்டும் என்பது இழுக்கேயாம். குடிகள் சீர்திருத்தம் முந்துமாயின் இராஜாங்கம் அவற்றை அநுசரித்தே தட்டி சீர்திருத்திவிடும். ஆதலின் குடிகளால் சீர்கெட்டுள்ளதை குடிகளே சீர்திருத்த முந்தவேண்டுமென்பது துணிபு.

- 6:12; ஆகஸ்டு , 28, 1912 -