உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/309-383

விக்கிமூலம் இலிருந்து

305. சுயராஜாங்க விவரம்

சுயராஜாங்க விவரமாயது யாதெனில் தற்காலம் நமது கருணை நிறைந்த பிரிட்டிஷ் ஆட்சியார் தங்களது புஜபல பராக்கிரமத்தாலும் விவேக விருத்தியாலும் ஒற்றுமெயினாலும் அனந்தராட்சியங்களைக் கைப்பற்றி அரசுபுரிந்து வருகின்றார்கள் அவைகளுள் சில தேசத்தார் முயன்று பிரிட்டிஷ் அரசாட்சியே மேலாயதாயினும் தங்கள் ராட்சிய பாரத்தைத் தாங்களே தாங்கிக்கொண்டு ஏதோ ஓர் வரியிறையோ, கப்பமோ, சுங்கமோ தங்களால் தருவதாக முயன்று சுயராட்சியங் கேட்டு வருகின்றார்கள். அவ்வகைக் கேட்போர்களும் சுயராட்சியம் பெற்றுள்ளோர்களும் எத்தகையோர்கள் என்னில் கொள்வினை கொடுப்பினையிலும், உண்பனை தின்பனையிலும் பேதமற்ற ஒரே சாதியினரும் ஒரே பாஷையினரும், ஒரே மதத்தினருமாவர்.

இத்தகைய சாதியோரை மேற்கொள்ளுமாறு வேறு சத்துருக்கள் எழுவிய போதினும் தங்களுக்குள்ள வல்லப மிகுதியாலும் புத்தியின் கூர்மையாலும் தங்களாலியன்றவரை போர்புரிந்து இயலாத காலத்து பிரிட்டிஷ் ஆட்சியின் உதவியைத் தேடிக்கொள்ளுவார்கள். அவர்களுக்குள் தேசத்தையும் தேச மக்களையுங் கெடுத்து ஒருவரைக் கண்டால் ஒருவர் சீறும் ஒற்றுமெக் கேடாய சாதிபேத வக்கிரமச் செயல் அவர்களுக்குக் கிடையாது. சோம்பேரி சீவன மதக்கடை பரப்பி என்சாமி பெரிது உன்சாமி சிறிதென்னுஞ் சண்டையிட்டு வித்தியா விருத்திக் கேடாய மதபேத மதியிலிருப்போர் கிடையாது. வித்தையையும் புத்தியையும் மேலாகக் கருதி அதே ஊக்கமுற்றிருப்பவர்களாதலின் கொடுத்துள்ள சுயவரசாட்சியை செவ்வனே நடத்தி சீர்பெற்றிருப்பதுடன் இனி சுயராட்சிய பாரந்தாங்கிக் கொள்ளப் போகின்றவர்களும் அவ்வகையே நடந்து சீர்பெற்றுப் போவார்கள் என்பதும் திண்ணம்.

அவைபோல் நமது இந்திய தேயவாசிகள் சுயராட்சியம் நடாத்த அருகராவார்களோ என்பதை ஆலோசிப்போமாக.

இத்தேசவாசிகளில் இந்தியர்களென்றும், இந்துக்களென்றும், மகமதியர்களென்றும், கிறிஸ்தவர்களென்றும் நான்கு வகுப்போருண்டு. இவர்களுள் இந்தியரென்போர்களே பூர்வக் குடிகளாவர். அதாவது இந்திரரென்னும் புத்தரையே சிந்தித்து அவர் போதித்துள்ள சத்தியதன்ம நீதிநெறி ஒழுக்கத்தின்று சாதிபேத மதபேதமென்னுங் கேடுபாடுகளின்றி அந்தணத்தொழிலிலும் அரசத் தொழிலிலும், வாணிபத் தொழிலிலும், வேளாளத்தொழிலிலும் நிலைத்து வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்க வழி நடந்து ஐயிந்திரியங்களை வென்ற புத்தராம் இந்திரர் தன்மத்தை ஏற்று இந்திர விழாக்களும் இந்திய திருக்களுங் கொண்டாடி வந்தவற்றால் இத்தேசத்தை இந்திய தேசமென்றுங் குடிகளை இந்தியர்களென்று வழங்கிவந்த ஆதரவைக்கொண்டு நாளதுவரையில் இந்தியர்களென்றே வழங்கப் பெற்று வருகின்றார்கள். அவர்கள் யாவர் என்பரேல் ஆயிரத்திச்சில்லரை வருடங்களுக்குள் இத்தேசத்திற் பிச்சையிரந்துண்டே குடியேறி நூதன வேதங்களையும் நூதன வேதாந்தங்களையும் உண்டு செய்துக் கொண்டுள்ள சத்துருக்களது மித்திரபேதக் கொடூரத்தாலும் வஞ்சினத்தாலும் நசுங்குண்டு பறையர்களென்றும் சாம்பார்களென்றும் வலங்கையரென்றும் பஞ்சமரென்றும் தாழ்ந்த சாதியோரென்றும் வகுக்கப்பட்டுள்ள ஆறுகோடி மக்களே யாவர். இவர்கள் யாவரும் இப்பிரிட்டிஷ் அரசாட்சியில் கல்வியிற் சீர்திருந்தி இராஜ விசுவாசத்தில் நிலைத்து சுகச்சீர் பெறுவார்களாயின் சுயராட்சியங் கேட்பதற்கு ஓர் ஆதாரமுண்டு. காரணம் இத்தேசசீர்த்திருத்த உழைப்பாளிகளும் பூர்வக் குடிகளாயதினாலேயாம்.

இந்துக்களென்போர்களோ இந்திய தேசத்தில் நூதனமாகக் குடியேறி பிழைக்கவந்தவர்களும், நூதனமாய சாதிபேதங்களை உண்டு செய்து தேச, மக்களொற்றுமெயைக் கெடுத்தவர்களும் மதபேதங்களை உண்டு செய்து வித்தியா விருத்தியையும் விவசாயவிருத்தியையும் பாழ்படுத்தியவர்களாவர். இத்தகை நூதனக் குடியேறியவர்கள் பிரிட்டிஷ் ராஜாங்கத்தோரின் கருணையாலும் அவர்களது பேருதவியாலும் ஆங்கில பாஷையில் தேறி அவர்களால் பற்பல உத்தியோகங்களைப் பெற்று மேலாய அந்தஸ்திற்கு வந்திருந்த போதிலும் இந்திய தேசத்திற்கு அவர்கள் ஏது வழியாலுஞ் சுதந்தரர் ஆகமாட்டார்கள். அதனால் சுய ராஜ்ஜியம் விரும்பற்கு அதிகாரிகளுமாகார், அருகருமாகார். காரணமோ வென்னில் ஏதோர் அதிகாரமுமின்றி தந்திரத்தாலும் மித்திரபேதங்களாலும் பொய்யாய சாதிபேதங்களை உண்டு செய்து அதில் தங்களை தலைமெ வகுத்து தங்கள் குடிகள் சுகம் பெற்றால் போதும் ஏனையக் குடிகள் எக்கேடு கெட்டாலுங்கெடட்டுமென்று அடக்கி ஆண்டு வதைத்து வந்தவர்களாதலால் அத்தகையோர் சுயராஜ அதிகாரத்தையே பெற்றுக் கொள்ளுவார்களாயின் இப்போது பிரிட்டிஷ் அரசாட்சியின் கருணையால் சீருஞ்சிறப்பும் பெற்றிருப்போரெல்லாம் பேரும் ஊருமற்று பிழைப்பிற் கேதுவின்றி இஞ்சித்தின்ற குரங்கைப் போல் பல்லிளித்துப் பாழடைவார்கள். அதனால் தேச சிறப்பும் சகலபாஷை மக்கள் விருத்தியுங் கெட்டு சீரழிந்துப் போவார்களென்பதேயாம்.

மகம்மதியர் சுயராட்சியங் கேட்பதற்கும் பெறுவதற்கும் ஆதாரமுண்டோ வென்னில் இந்திய தேச சிற்சில விடங்களில் அவர்கள் அரசாண்டவர்களாதலால் ஆதாரமுண்டெனினும் அவர்களும் சுய ராஜாங்கத்திற்கு அருகராகார்கள். காரணமோவென்னில் அவர்கள் பெருத்த மதவைராக்கிகளாதலால் இஸ்லாம் ஆனவர்களெல்லவரும் நம்மவர்களென்றும் அல்லாதவர்களை எல்லாங் கொல்லுங்களென்ரே அல்லோகல்லோவென அழித்துப் பாழ்படுத்தி விடுவார்களென்பதேயாம்.

இந்தியக் கிறிஸ்தவர்கள் சுயராட்சியம் கேட்பதற்கும் பெறுவதற்கும் ஆதாரமுண்டோ வென்னில் இராஜாங்கத்தைச் சேர்ந்த மதமாதலால் கிஞ்சித்து ஆதாரம் உண்டெனினும் அதற்கருகராகார்கள். காரணமோவென்னில் கிறிஸ்தவருக்குள் கத்தோலிக்குக் கிறீஸ்தவர்களென்றும் பிராடெஸ்டென்ட் கிறீஸ்தவர்களென்றும் இருவருப்போருண்டு. அவ்விருவரும் ஒருவருக்கொருவர் இப்போதே பொறாமெயும் பற்கட்டிப்பும் உள்ளவர்களாயிருக்கின்றார்களென்பது அவர்களால் வெளியிடும் பத்திரிகைகளாலும் புத்தகங்களாலுமே பரக்க விளங்குகின்றது. அதனால் இராட்சிய பாரமும் இருகட்சியுற்று ஒருவருக்கொருவர் வெட்டி மாய்ந்தே போவார்களென்பதேயாம். ஆதலால் இந்திய தேசத்தில் நூதனமாகத் தோன்றியுள்ள சாதிபேதம் மதபேதங் கட்டோடு ஒழியுமளவும் இந்தியர்களாயினும் இந்துக்களாயினும் மகமதியர்களாயினும் கிறீஸ்தவர்களாயினும் இந்திய தேசத்தை ஆளவருகராகார்கள் என்பதே துணிபு. அதுகொண்டே தற்காலம் ஆண்டுவரும் கருணை தங்கிய பிரிட்டிஷ் ஆட்சியே நிலைத்து அரசு புரியுமாயின் இப்போது சுகம் பெற்றுவரும் சகல மக்களும் இன்னும் சுகச்சீர் பெற்று ஆனந்தத்தில் நிலைப்பார்களென்பது சத்தியம் சத்தியமேயாம்.

- 7:20; அக்டோபர் 22, 1913 -