உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/314-383

விக்கிமூலம் இலிருந்து

310. நமது இந்தியதேசச் சக்கிரவர்த்திப் பிரிதிநிதியார் வருகையின் ஆனந்தத்தில் படுபாவிகளின் பயமுமுண்டோ

பூர்வகாலத்தில் இந்திய மக்கள் யாவரும் தங்களரசன் எப்போது வீதிவலம் வருவரோ என்னும் இராஜவிசுவாசமும் அன்புங்கொண்டு எதிர்நோக்கி பலரது திருஷ்டியால் அவருக்கேதேனும் சோகம் உண்டாம் என்றெண்ணி கற்பூரம் உலார்த்தி ஏந்தி கனகமலர் தூவிக்கர்த்தனே வாழ்க, வாழ்கவென்று ஆசிகூறி ஆனந்தமுற்றிருந்ததாக பெளத்த சரித்திரங்கள் கூறுகின்றது.

இத்தகைய ராஜவிசுவாசமும் அன்பும் நிறைந்திருந்த தேசத்தில் இராஜதுரோகிகளும் வஞ்சகர்களும் கொடுங்செயல் குடிகொண்டுள்ள படுபாவிகளும் எங்கிருந்து வந்து சேர்ந்துள்ளார்களோ என்பது விளங்கவில்லை. நமது சக்கிரவர்த்தியார் பிரிதிநிதியின் வருகைக்கு ஒரு பால் ஆனந்தமும் ஒரு பால் பயமுமே யிருந்ததாக நமது போலீசதிகாரிகளால் விளங்குகின்றது. அவை யாதென்னிலோ பிரிதிநிதியாய வரசன் ஆனந்தமாக வந்தபோதினும் கருணை என்பதற்று கொடுஞ்செயலே குடிகொண்டுள்ள படும்பாவிகள் எவரேனுமிருப்பார்களென்னும் பீதியால் நமது போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் போலீஸ் கமிஷனர் முதல் ஈராகவுள்ள கான்ஸ்டேபில்கள் வரையிலும் இரவும் பகலும் நித்திரையின்றியும் தங்குமிடமின்றியும் தங்கள் காவலை அதிவூக்கத்துடன் நடாத்தி வந்திருக்கின்றார்கள்.

இத்தியாதி ஜாக்கிரதைக்கும் ஊக்கத்திற்குங் கஷ்டத்திற்கும் படுபாவிகளே காரணமாவர். அப்படுபாவிகளைக் கண்டு பிடித்துப் படுசூரணஞ் செய்விக்க ஏதுவாய பெரியோர்களாம் ஆரூடக்கியானிகள் எங்கும் இல்லையா, அத்தகைய ஆரூடஞானிகளாம் மேலோர்களில்லை என்பதாயினும் கால்பாக நல்லோர்கள் அரைபாக நல்லோர்களாயினும் இராமற் போயினரோ? இருப்பராயின் இவ்விராஜ துரோகிகளாம் படுபாவிகளை கண்டுபிடிக்க வியலாதோ. இயலுமாயினும் அத்தகைய வன்னெஞ்சரிருப்பார்களாயின் ராஜாங்கத் தோர் பயந்துகொண்டே நாம் கேட்கும் அதிகாரவுத்தியோகங்கள் யாவையும் நமக்குக் கொடுப்பார்கள் அல்லாவிடில் கொடமாட்டார்களென்றெண்ணி பாலுக்குங் காவல் பூனைக்குந் தோழனுமாக விருக்கின்றனரோ. அவ்வகையிருப்பராயின் இவர்களையும் அந்தரங்க வன்னெஞ்சப்படும் பாவிகளென்று எண்ணற்கு இடமில்லாமற்போமோ, அவ்வன்னெஞ்சமே அவரவர்களுக்கு சாட்சியாயிருந்து வஞ்சித்தே தீரும். உப்பிருந்த பாண்டமும் உளவிருந்த நெஞ்சமுந் தட்டி உடையாமல் தானே உடையுங்காலம் வந்துபோம். அக்காலத்தில் இராஜ துரோகிகள் படுங் கஷ்டங்களுடன் அந்தரங்கவுளவாளிகளும் அன்னோர் வரிசையாளரும் அர்த்தநாசமடைவார்கள் என்பதே திண்ணம்.

அத்தகைய நாசகாலம் வருவதற்குமுன்பே இராஜதுரோகிகளாம் படுபாவிகளைக் காட்டிக்கொடுப்பதே அழகாம்.

ஒரு கிராமத்தில் ஓர் கள்ளனிருப்பானாயின் அக்கிராம அதிகாரிக்கு கிராமக்குடிகள் யாவரைங் அநுமானிக்க இடம் உண்டாகும். அக்கிராமக் குடிகள் யாவரும் கூடி அக்கள்ளனைப் பிடித்தே கொடுத்துவிடுவார்களாயின் கிராமக்குடிகள் மீதுள்ள அநுமானிப்பு ஒழிந்து கவலையற்றிருப்பார்கள். அது போல் தேசத்திலுள்ள இராஜ துரோகிகளை அத்தேசக்குடிகளே பிடித்துக் கொடுத்து விடுவார்களாயின் தேசம் ஆறுதலடைவதுடன் தேச மக்களும் ஆனந்த சுகவாழ்க்கை பெற்று அரசரைக் கேட்கும் அலுவலையும் அடைந்து பெருவாழ்வுற்றிருப்பார்கள். அங்ஙனமின்றி ராஜத் துரோகிகளும் இருத்தல் வேண்டும். தாங்களும் பெரிய பெரிய உத்தியோக அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும் என்னும் விரோதச் சிந்தையையே வளர்த்துக் கொண்டிருப்பார்களாயின் மாளா துக்கத்திற்கே ஏதுவாவதுடன், பிரிட்டிஷ் ஆட்சி சரிவர நிலை கொள்ளுமாறு அதிகார உத்தியோகங்கள் யாவற்றிற்கும் ஐரோப்பிய துரைமக்களே இருந்து ஆட்சிபுரிவதற்கு இடமுண்டாகிப்போம். அத்தகைய செயலின்றி தேசத்தோரும் சுகம்பெற்றுய்ய வேண்டுமென்னும் இராஜ விசுவாசிகள், இராஜ துரோகிகளைக் காட்டிக்கொடுப்பார்களென்று நம்புகிறோம்.

இராஜாங்கத்தோர்க்கு மனக்கவலையும் குடிகளுக்கு பயமும் மிகுத்துள்ள தேசம் எக்காலுஞ் சீர்பெறாவாம்.

- 7:26; டிசம்பர் 3, 1913 -