அறநூல் தந்த அறிவாளர்/அறம் உரைத்த அன்னையார்

விக்கிமூலம் இலிருந்து

4. அறம் உரைத்த அன்னயார்

புலவர்களும் வள்ளல்களும்

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கடைச் சங்க காலத்தில் தமிழ்ப் புலவர்கள் பலர் வாழ்ந்தனர். அவர்களை ஆதரித்த அரிய வள்ளல்களும் வாழ்ந்தனர். அவர்களில் புலவர் பாடும் புகழ் உடையவராய்ச் சிறந்து விளங்கியவர் ஏழு பேர்கள் ஆவர். அவர்களைக் 'கடையெழு வள்ளல்கள்' என்று கற்றோர் போற்றுவர். அவ்வெழுவரில் ஒருவன் அதியமான் என்னும் அரசன்.

பாணர் குலத்துப் பாவையர்

அதியமானின் அரசவையில் விளங்கிய புலவர்களில் ஒருவர் ஔவையார். அவர் அவனது அவைப் புலவராக மட்டும் விளங்க வில்லை. அவனுக்கு உற்ற இடத்துத்தக்க அறிவுரையும் அறவுரையும் கூறும் அமைச்சராகவும் விளங்கினார். இத்தகைய ஔவையார் பாணர் மரபில் தோன்றிய பாவையார். ஆவர். பாணர் என்பார் யாழினை இசைத்துப் பண்ணுடன் பாடும் பண்புடைபார். அப்பாணர் குலத்தில் தோன்றிய பெண்களைப் பாடினியர் என்றும் விறலியர் என்றும் கூறுவர். பாணர் பாடும் பாட்டலுக்கு ஏற்றவாறு ஆடும் இயல்பு உடையார் விறலியர். தாமும் பாடிக் கொண்டு ஆடும் இயல்பு உடையார் பாடினியர் எனப்படுவர்.

ஒளவையார் துறவும் அமைச்சும்

ஔவையாரோ ஆடலிலும் பாடலிலும் வல்லவராக விளக்கினார். இளமையிலேயே தமிழ்ப் புலமை மிக்கவராகவும் விளங்கினார். அவருடைய அறிவும் திறமும் கண்ட ஆடவர், அவரை மணஞ் செய்து கொள்ள அஞ்சினர். அவரும் தமது புலமையை உலகிற்கு நன்கு பயன்படுத்த வேண்டும் என்று கருதினார். அதற்கு இல்லற வாழ்வு ஒரு தடையாக இருக்கும் என்று எண்ணினார். அதனால் இளமையிலேயே துறவுநெறி பூண்டார். தூய வாழ்வை மேற்கொண்டு ஒழுகினார். நல்லிசைப் புலமை மெல்லியலாராய் நாடு எங்கும் சுற்றி வந்தார். மன்னர்களையும் வள்ளல்களையும் தமது இன்னிசைப் பாக்களால் புகழ்ந்து பாடினார். அவர்கள் அன்புடன் வழங்கிய கொடையை, மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார். இத்தகைய தமிழ்ச் செல்வியாகிய ஒளவையாரை அதியமான் தனக்கு அமைச்சராக ஏற்றுக் கொண்டான்.

அதியமான் பெற்ற அமுதக்கனி

ஒரு சமயம் அதியமான் பொதிய மலைப் பக்கம் போயிருந்தான். அங்கே அவனுக்கு அரியதொரு நெல்லிக்கனி கிடைத்தது. அது பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒரு முறை தோன்றுவது. அக்கனியைத் தரும் நெல்லி மரத்தை நெருங்குவதே அருமை. எவரும் ஏற முடியாத மலையுச்சியில் அந்த மரம் நின்றது. பெரிய பாறைகளுக்கு இடையில் உள்ள பிளவு ஒன்றில் அது நின்றது. அந்த மரத்தைப் பருத்த வண்டுகள் சுற்றிச் சுற்றி மொய்த்துக் கொண்டு இருந்தன. அவ்வண்டுகளை அதியமான் மருந்து தூவி விலக்கினான். தக்க வலியவரைக் கொண்டு கனியைப் பறித்துவரச் செய்தான்.

ஒளவையாருக்குக் கனியை அளித்தல்

அக்கனி, உண்டவர்க்கு உரமான உடலைத் தர வல்லது; வளமான நீண்ட கால வாழ்வையும் தர வல்லது. இவ்வளவு அருமை வாய்ந்த கனியை உண்ணும் எண்ணத்துடன் அதியமான் கையில் எடுத்தான். அச்சமயத்தில் தமிழ் மூதாட்டியாராகிய ஔவையார், தன்னை நோக்கி வருவதைக் கண்டான். உடனே, அவன் உள்ளம் மாறி

விட்டது. 'இக்கனியை நாம் உண்ணுவதிலும் இவ்வன்னையார் உண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இவர் நீண்ட காலம் வாழ்வார் உலகிற்கு அரிய உண்மைகளை ஆராய்ந்து உரைப்பார். அதனால் மக்கள் மிக்க நலத்துடனும் வளத்துடனும் வாழ்வார்கள் அல்லவா?' என்று எண்ணினான். உடனே, தன்னை நோக்கி வந்த தமிழ் மூதாட்டியாரை அன்புடன் வரவேற்றான். தன் கையில் இருந்த கனி அவர் கையில் அளித்தான். 'தாயே! இதனைத் தாங்கள் உண்ணுங்கள்' என்று வேண்டினான்.

அமுதக்கனி உண்ட அன்னையார்

வள்ளலின் சொல்லைத் தட்டாத தமிழன்னை அக்கனியை வாயில் இட்டுச் சுவைத்து மென்று தின்றார். அது பிற கனி களைப் போல் அல்லாமல், அரிய சுவை உடையதாக இருந்தது. அமிழ்தினும் இனிய சுவை உடையதாக இருந்தது. அச்சுவையினைத் தெரிந்த பிறகுதான் அதியமானிடம் அதன் அருமையைக் கேட்டு அறிந்தார். அதனை அவன் உண்ணாது, தமக்கு அளித்த உயர்ந்த உள்ளத்தை நினைந்து நினைந்து உருகினார். அவ்வள்ளலின் உயர்ந்த பண்பைச் சிறந்த தமிழ்ப் பாட்டு ஒன்றால் புகழ்ந்தார். 'பெருமானே! நீ நீல மணிமிடற்றுச் சிவனைப் போல நிலைபெற்று வாழ்க' என்று வாயார வாழ்த்தினார்.

சுந்தார் காலத்தில் ஔவையார்

அதியமான் அளித்த அமுத நெல்லிக் கனியை உண்ட ஒளவையார் எவ்வளவு காலம் வாழ்ந்திருக்க முடியும்? சைவ சமய ஆசாரியருள் ஒருவராகிய சுந்தரர் காலத்தில் ஔவையார் என்ற பெயருடைய பெண் புலவர் ஒருவர் வாழ்ந்தார். அவர், சுந்தரர் கயிலாயம் செல்லுவதைக் கேள்வியுற்றார். சிவபெருமான் அனுப்பிய வெள்ளை யானையின் மீது ஏறி, அவர் விரைந்து செல்லுவதாகத் தெரிந்தார். அவரைப் பின் தொடர்ந்து, சேரமான் பெருமாள் என்னும் அரசரும் செல்லுவதாகத் தெரிந்தார். அவ்வரசர் குதிரை மீது ஏறிச் செல்லுவதாகவும் செய்தி அறிந்தார்.

ஔவையார் கயிலாயம் அடைதல்

இங்ஙனம் யானை மீதும் குதிரை மீதும் ஏறிச் செல்லும் இருவர்க்கும் முன்னால் ஔவையார் கயிலாயம் சென்று வீட நினைத்தார். அதற்காக விநாயகப் பெருமானை வேண்டினார். அவ்வாறு வேண்டிப் பாடிய அருள் நூலே 'விநாயகர் அகவல்' என்று கூறப்படுகிறது. ஒளவையாரின் அகவலைக் கேட்டருளிய விநாயகர், அவ்வம்மையாருக்கு அருள்புரிந்தார். சுந்தரருக்கும் சேரமான் பெருமாளுக்கும் முன்னால் அவரைக் கயிலாயம் கொண்டு சேர்த்தார். கயிலாயத்தை அடைந்த ஔவையார், தமக்குப் பின் வந்த இருவரையும் அங்கு வரவேற்றார் என்பர்.

இரண்டாம் ஔவையார்

அதியமான் காலத்திற்கு ஆயிரம் ஆண்டு கட்குப் பின்னால் சுந்தரர் வாழ்ந்தவர். சுந்தரர் காலம் வரை அந்த ஔவையார் வாழ்ந்தார் என்று கொள்ள முடியுமா? அவ்வாறு கொண்டால் ஒருவர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார் என்று கொள்ள வேண்டும். அவ்வாறு கூறுவதை அறிஞர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆதலின் சுந்தரர் காலத்தில் வாழ்ந்த ஒளவையார் மற்றொருவரே.

ஒளவையார் மூவர்

எனவே, ஔவையார் என்ற பெயருடைய பெண் புலவர்கள் இருவரைப் பற்றித் தெரிந்தோம். ஒருவர் அதியமான் காலத்தில் வாழ்ந்த ஒளவையார்; மற்றொருவர் சுந்தரர் காலத்தில் வாழ்ந்தவர். இவர்கள் இருவரை அல்லாமல், மற்றும் ஓர் ஒளவையார் நானூறு ஆண்டுகட்கு முன் வாழ்ந்தார். அவரே ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய சிறு நூல்களைப் பாடிய செல்வியார்.

வான்கோழியைப் பாடிய ஒளவையார்

பிற்காலத்தில் வாழ்ந்த மூன்றாவது ஔவையார் பாடிய நூல்களில் ஒன்று மூதுரையாகும். அதனை 'வாக்குண்டாம்' என்றும் வழங்குவர். அந்நூலில் 'வான்கோழி' என்ற ஒரு பறவையைப் பற்றி ஒளவையார் குறிப்பிடுகிறார். காட்டில் மயில் தனது அழகான தோகையை விரித்து ஆடியது. அக்காட்சியை வான்கோழி ஒன்று கண்டது. அது தன்னையும் மயிலென எண்ணிக் கொண்டு, தன் அழகு இல்லாத சிறகை விரித்து ஆடியது. இவ்விரண்டு பறவைகளும் ஆடுகின்ற காட்சியை ஒளவையார் கண்டார். இதனை உவமையாகக் கொண்டு, அழகான பாட்டு ஒன்றைப் பாடி னார். 'கற்றவன் ஒருவன் கவி பாடினான். அவன் பாடுவதைக் கண்ட முடன் ஒருவனும் கவி பாடினால் அச்செயல் எப்படி இருக்கும்? வான் கோழி, மயில் ஆடுவதைக் கண்டு தானும் ஆடுவதை ஒக்கும்' என்று பாடலை அமைத்தார்.

'கான பயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தினும் அதுவாகப் பாவித்துத்-தானுந்தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி'

அமெரிக்க நாட்டு வான்கோழி

இப்பாட்டில் கூறப்படும் வான்கோழி தமிழ்நாட்டுப் பறவையன்று; அமெரிக்க நாட்டில் வாழ்வது. இப்பறவை நானூறு ஆண்டுகட்கு முன்புதான் தமிழ் நாட்டுக்குக் கொண்டுவரப் பட்டது. ஆதலின் வான்கோழியின் இயல்பை வருணித்துப் பாடிய ஒளவையார் நானூறு ஆண்டுகட்கு முற்பட்டவர் அல்லர். அவர் பதினாறாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட காலத்தில் வாழ்ந்தவரே.

சிறுவர்க்கு அறிவுரைகள்

எனவே, வான் கோழியைப் பாடிய ஔவையாரே சிறுவர்க்கு அறிவுரையாக விளங்கும் 'ஆத்திசூடி' போன்ற அறநூல்களைப் பாடினார். இவர் தாம் பாடிய நான்கு சிறு நூல்களிலும் விநாயகப் பெருமானுக்கே வணக்கம் கூறுகிறார். ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வாக்குண்டாம் ஆகிய மூன்று நூல்களும் அந்நூல்களின் முதற்பாடலின் முதல் தொடரையே பெயராகக் கொண்டுள்ளன. இவ்வாறு வழங்கும் பெயர்களை இலக்கணத்தில் முதற்குறிப்புச் சொல்லுக்கு உதாரணமாக உரைப்பர்.

ஆத்திசூடியின் அருமை

தமிழ் நூல்களில் சிறு பிள்ளைகள் படிப்பதற்கு ஏற்ற தொடக்க நூலாக 'ஆத்தி சூடி' அமைந்துள்ளது. குழந்தைகள் மனப்பாடம் செய்து கொள்வதற்கு ஏற்றவாறு சிறு சிறு தொடர்களால் அந்நூல் அமைந்துள்ளது. தாயுள்ளம் படைத்த தமிழ் மூதாட்டியாராகிய ஔவையார், குழந்தைகளின் உள்ளத்தைத் தெரிந்து அவ்வாறு பாடியுள்ளார். அறஞ் செய் விரும்பு, ஆறுவது சினம், இங்ஙனம் அகர வரிசையில் அமைக்கப்பட்ட நூற்றெட்டுத் தொடர்கள் இதில் உள்ளன. இவை இறை வழிபாட்டுக்கு ஏற்ற நூற்றெட்டு மந்திரங்கள் போல் அமைந்திருப்பது ஓர் அழகாகும். இச்சிறு நூல் குழந்தைப் பருவத்தில் உள்ள பிள்ளைகள் எளிதில் கற்று உள்ளம் கொள்ளத் தக்கது அன்றோ?

நாற்சீர் அறநூல்

இதற்கு அடுத்த படியில் விளங்குவது 'கொன்றை வேந்தன்' என்னும் அறநூல் ஆகும். இஃது இளந்தைப் பருவத்துப் பிள்ளைகள் கற்பதற்கு ஏற்ற எளிமையுடையது ஆகும். நான்கு சீர்களைக் கொண்ட நற்றமிழ்த் தொடராக அமைந்த இந்நூலில் தொண்ணூற்றொரு தொடர்கள் அமைந்துள்ன. ஆத்திசூடியில் குறித்த அறங்களே இந்நூலில் காரணங்களுடன் விளக்கப்படும். ஆத்திசூடியில் 'ஒளவியம் பேசேல்' என்ற ஓளவையார், கொன்றை வேந்தனில் 'ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு' என்று அதன் விளைவையும் விளக்கினார்.

முதுரை முப்பது

இதனையடுத்துக் காளைப் பருவத்து இளைஞர்கள் கற்றற்கு உரிய சிறிய நூலே 'மூதுரை' என்பது ஆகும். இந்நூலை 'வாக்குண்டாம்' என்றும் வழங்குவர், மூதுரை நூலின் முதற்பாடல் 'வாக்குண்டாம்' என்று தொடங்கும். ஆதலின் இந்நூல் 'வாக்குண்டாம்' என்றும் பெயர் பெற்றது. இதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக முப்பது பாடல்கள் உள்ளன. தமிழில் உயிரும் 

மெய்யும் ஆகிய முதல் எழுத்துக்கள் முப்பது அன்றோ ! அவை போன்று, இந்நூல் முப்பது இனிய வெண்பாக்களைக் கொண்டு விளங்குகின்றது.

நீரளவே யாகும் நீராம்பல்

‘வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர் தம்
உள்ளத்(து) அனைய(து) உயர்வு’

என்பது வள்ளுவர் வாக்கு. நீரில் பூக்கும் பூக்களின் தண்டுகள், அந்நீரின் ஆழத்திற்கு ஏற்ற நீளம் உடையனவாக இருக்கும். அதைப் போன்றே மக்களுக்கு உயர்வெல்லாம், அவர்கள் மனத்தில் எழும் ஊக்கத்திற்கு ஏற்ப அமையும் என்பது அப்புலவர் கருத்து. இக்குறளில் வரும் உவமையை மட்டும் ஔவையார் எடுத்துக் கொண்டார். ‘வெள்ளத் தனைய மலர்நீட்டம்’ என்பதை, ‘நீரளவே யாகுமாம் நீராம்பல்’ என்று கூறினார். இந்த ஓர் உவமையை வைத்துக் கொண்டு மூன்று உண்மைகளை விளக்கினார் ஔவையார். ‘ஒருவன் கற்ற நூலின் அளவோட துண்ணறிவு அமையும்; முன்பு செய்த தவத்தின் அளவே செல்வம் அமையும்’. பிறந்த குலத்தின் அளவே குணம் அமையும்.' இவற்றை ஒரு பாட்டில் காட்டும் அவர் திறத்தை என்னென்று போற்றுவது!

நீரளவே யாகுமாம் நீராம்பல்; தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு :-மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்:
குலத்தளவே ஆகும் குணம்’

இவ்வாறு உவமைகளைக் கொண்டு பல உண்மைகளைச் சிறுவர்க்கு எளிதாக விளக்கும் திறத்தை மூதுரையில் கண்டு மகிழலாம்.

முத்தமிழ் வேண்டும் மூதாட்டியார்

ஒளவையார் பாடிய மற்றோர் அறநூல் ‘நல்வழி’யாகும். இந்நூல் வயதால் முதிர்ந்தவர்க்கு அறநெறி காட்டும் திறம் உடையதாகும். இந்நூலின் முதற் பாடலில் ஒளவையார் விநாயகப் பெருமானிடம் ‘சங்கத் தமிழ் மூன்றும் தா’ என்று வேண்டுகிறார். முச்சங்கத்தார் போற்றி வளர்த்த முத்தமிழ் நூலறிவை வேண்டும் அவர், அவற்றிற்கு ஈடாகத் தாம் நான்கைத் தருவதாகவும் கூறுகிறார் பால், தேன், பாகு, பருப்பு என்னும் நான்கையும் கலந்து உண்ணுவதற்கு நான் தருவேன். நீயோ எனக்கு முத்தமிழைத் தந்தால் போதும் என்று வித்தகமாக அப்புலவர் கேட்பது வியப்பைத் தருவதாகும்.

பெரியோரும் சிறியோரும்

இவ்வாறு விநாயகப் பெருமானிடம் வேண்டிய ஒளவையார் சங்கத் தமிழ்  நூல்களின் அரிய கருத்துக்களையே நல்வழியாகத் திரட்டிக் கொடுத்துள்ளார். “சாதி இரண்டேயன்றி வேறில்லை; அவை பெரியோர், சிறியோர் என்ற சாதிகளே; இல்லாத ஏழை மக்களுக்கு இட்டார். எல்லாரும் பெரியோர் ஆவர்; இடாதார் எல்லாரும் சிறியோர் ஆவர்; இவ்வாறு சாதியைப் பற்றி வேதமே விளக்குகின்றது” என்று உயர்ந்த உண்மையை மிகவும் எளிதாகவும் உறுதியாகவும் ஔவையார் நல்வழியில் விளக்குகின்றார்.

தமிழர் கற்கத் தக்கன

தமிழர் கற்கத் தக்க நூல்கள் எவை என்பதை ஒளவையார் ஒரு பாட்டில் காட்டினார். ‘திருக்குறள், வேதத்தெளிவாய்விளங்கும். சிவஞானபோதம், மூவர் தமிழாகிய தேவாரம், சேக்கிழார் பாடிய திருத்தொண்டர் புராணம், மாணிக்கவாசகர் பாடிய திருக்கோவையார், திருவாசகம், திருமூலர் அருளிய திருமந்திரம் ஆகிய ஏழு நூல்களையும் தமிழர் கட்டாயம் கற்றல் வேண்டும். அவை ஏழும் ஒப்பற்ற நூல்கள்’ என்று நல்வழியில் வற்புறுத்தியுள்ளார்.

‘தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனி மொழியும்-கோவை

திருவா சகமும் திருமூலர் சொல்லும் .
ஒருவா சகம் என்(று) உணர்’

என்பது ஔவையார் காட்டிய நல்வழி .

கவிமணி பாராட்டு

இங்ஙனம் தமிழ் நாட்டுச் சிறுவர்க்கு நல்வழி காட்டிய மூதாட்டியாரைக் கவிமணி இனிய கவியால் பாராட்டுகிறார்.

‘ஔவைக் கிழவி நம்கிழவி
அமுதின் இனிய சொற்கிழவி
செவ்வை செறிகள் பற்பலவும்
தெரியக் காட்டும் பழங்கிழவி’