அறவோர் மு. வ/மு. வ. நாவல்களில்

விக்கிமூலம் இலிருந்து

V

மு. வ. நாவல்களில்

சமுதாய நோக்கு


இருபதாம் நூற்றாண்டு இலக்கியம் பல துறைகளில் வளர்ந்து செழித்தது. பாரதியின் கவிதையில் தொடங்கிய மறுமலர்ச்சி, பல துறைகளிலும் பயன் நல்கியது. ஆங்கிலேயர் தொடர்பால் வேகமாக வளர்ந்த தமிழ் உரைநடை, தமிழில் சிறுகதை, நாவல், நாடகம் முதலான இலக்கிய வகைகள் தோற்றமும் தொடக்கமும் வளர்ச்சியும் வாழ்வும் பெற வகை செய்தது. முற்காலக் காப்பியங்களின் இடத்தினை நாவல் கைப்பற்றிக் கொண்டது. காரணம், நாவல்கள் நாம் வாழும் சமுதாயத்தைப் பிரதிபலிப்பனவாக அமைந்து விளங்கத் தொடங்கின. எனவே நாவலைப் படிக்கும்போது நம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தையே பார்க்கிறோம் என்னும் உள்ளுணர்வு தோன்றத் தலைப்பட்டது. அவ்வுள்ளுணர்வு நாவல்களில் நம்மை ஆழமாக ஈடுபடுத்திக் கொள்ள வைத்தது. சுருங்கச் சொன்னால் இன்று எழுதப்படும் சமூக நாவல்கள் நாம் வாழும் சமுதாயத்தின் பிரதிபலிப்பு எனலாம்.

டாக்டர் மு. வரதராசனார் தமிழ் பயின்ற சான்றோர்; அறிஞர் பெருமக்கள் பலரோடு பழகியது போன்றே சமுதாயத்தின் பல்வேறு வாழ்க்கை நிலைகளைக் கொண்ட மக்களோடும் நேயங்கொண்டும் நெருங்கியும் பழகியவர். தம் கூர்த்த நோக்காலும் மதியாலும் தம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தை நுணுகிக் கண்டவர். தாம் கண்டவற்றையும் தாம் கண்டபோது தம் உள்ளம் உணர்ந்தவற்றையும் அவர் தம்முடைய நாவல்கள் அனைத்திலும் பிரதிபலித்துக் காட்டியுள்ளார். புரையோடிப் போன சமுதாயத்தை மட்டும் நாவலாசிரியர் சிலர் நமக்குத் தெற்றெனக் காட்டி விட்டு வாளா விட்டு விடுவர். ஆனால் மு. வ. போன்ற நாவலாசிரியர் அத்தோடு நின்று விடுவதில்லை. சமுதாயப் புண்ணிற்கு மருந்திடும் சமுதாய மருத்துவராய்த் துலங்கினர். தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்களோடு நெருங்கிய தொடர்பு பூண்டிருந்தவர் தண்டமிழ்ச் சான்றோர் மு. வ. ஆவர். திரு. வி. க. அவர்கள் எப்படித் தம் உரைநடைத் திறத்தால் சமுதாயப் பிணி தீர்க்கும் பெருந்தகை மருத்துவராக விளங்கினாரோ அம்முறையிலேயே மு. வ. அவர்களும் தம் பேச்சால் எழுத்தால் சமுதாயப் படப்பிடிப்போடு நின்று விடாமல் சமுதாய நோய்களை இனங்கண்டு காட்டி அவற்றைத் தீர்க்கும். தேர்ந்த மருத்துவ மேதையாக விளங்கினார் எனலாம். 'நோய் நாடி, நோய் தணிக்கும் வாய் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செய்தவர்' மு. வ. ஆவர்.

'உலகப் பேரேடு' என்னும் கட்டுரை நூலில் மு. வ. அவர்கள் சமுதாயத்தைப் பற்றித் தாம் கொண்டுள்ள கருத்தினைப் பின்வருமாறு குறிப்பிடுவர்:

"மனித சமுதாயம் ஒரு குழந்தை போல் வளர்ந்து வருகிறது; இன்னும் ஒரு குழந்தையின் நிலையிலேயே இருக்கிறது. இந்தக் குழந்தைக்கு இப்போது வயது நான்கு என்று சொல்வதா, ஐந்து என்று சொல்வதா தெரியவில்லை. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித இனம் வளர்ந்துவந்த பிறகும், இன்னும் சமுதாயம் குழந்தை நிலையிலேயே இருப்பதை எண்ணி வியப்புத் தோன்றுகிறது."
'உள்ளம் திருந்தினால் உலகம் திருந்தும்' என்பது மு. வ. வின் அசைக்க முடியாத நம்பிக்கை. எனவேதான் அவர் சொல்கிறார்: "எல்லாரும் உலகத்தைத் திருத்த முயல்கிறார்கள். உள்ளத்தைத் திருத்த அவ்வளவு முயற்சி செய்வதில்லை செய்ய முடிந்ததைச் செய்யாமல் முடியாததற்காக உழைத்துச் சலிப்பும் வெறுப்பும் அடைகிறார்கள்" என்று குறிப்பிட்டு விட்டு 'அந்த நாள்’ என்னும் தம் தொடக்க கால நாவலில் மனத்தின் சிறப்பினையும் அதனைப் பண்படுத்த வேண்டும் என்ற கடப்பாட்டினையும் தம் இலக்கிய நெஞ்சம் விளங்கப் பின்வருமாறு எடுத்துரைக்கின்றார்:
"மனம் ஒரு பெரிய உலகம்; அந்த மன உலகில் அந்தியின் அழகும் உண்டு; காலையின் கவர்ச்சியும் உண்டு; நள்ளிரவின் குளிர் மயக்கமும் உண்டு; நண்பகலின் கொதிப்பும் உண்டு. அந்த மன உலகில் கருமுகில்களும் உண்டு. ஆழ்ந்த கடல்களும் உண்டு. அந்த மன உலகில் வெயில் பரப்பும் கதிரவனும் உண்டு; வெண்ணிலாப் பொழியும் திங்களும் உண்டு; வெப்பமும் உண்டு; தட்பமும் உண்டு; மழையும் உண்டு; பனியும் உண்டு; வளமும் உண்டு; வறட்சியும் உண்டு. அந்த மன உலகை அல்லவா காண வேண்டும்; ஆராய வேண்டும்; பாட வேண்டும்; பண்படுத்த வேண்டும்.”

இவ்வாறு உள்ளத்தின் சிறப்பை உணர்ந்த காரணத்தால் அவர் கூறுகிறார்:

"நாம் வாழ்வதற்கு மூன்று நன்றாக இருக்க வேண்டும். ஒன்று நம் உள்ளம். மற்றொன்று உடம்பு மூன்றாவது சுற்றுப்புறம். நாம் விரும்பினால் உள்ளத்தை முழுதும் நன்றாக வைத்திருக்க முடியும்; ஆனால் எல்லாரும் சேர்ந்து விரும்பினால்தான் சுற்றுப்புறத்தை நன்றாக அமைக்க முடியும்."

"உள்ளம் எவ்வளவு உயர உயரப் பரந்தாலும் காற்றாடி நூலால் பிணிக்கப்பட்டிருப்பது போல் அது உடம்பின் தொடர்பால் சின்ன உணர்ச்சிகளுக்குச் சிறிது கட்டுப்பட்டே இருக்கிறது."

"உடம்பில் அழுக்கு ஏற்படுகிறது; பிறகு குளிக்கிறோம். உள்ளமும் அப்படித்தான். தூய எண்ணங்களில் அடிக்கடி குளித்துக் கொண்டிருக்க வேண்டும்".

இவ்வாறு உள்ளம் திருந்தி உயர்ந்து தனி மனிதன் சிறந்தால் பின்னர்ச் சமுதாயமும் திருத்தமுறும் என்பது மு. வ. கூறும் கருத்து.

"தனிமனிதன் இன்புற வேண்டுமானால் சமுதாயம் நன்றாக அமைந்திருக்க வேண்டும், சமுதாயம் பழங் காலத்துத் தேர் போன்றது. அதை எல்லோரும் இழுக்க வேண்டும். அப்போதுதான் எல்லோருக்கும் இன்பம் உண்டு. பலர் ஏறி உட்கார்ந்து கொண்டு இன்பம் உற, சிலர் இழுத்துச் செல்கின்ற தேர் அன்று இது. ஒவ்வொருவரும் தம் கடமையைக் குறைவில்லாமல் செய்ய, ஒவ்வொருவரும் தமக்குரிய பங்கைப் பெறுமாறு அமைந்திருப்பதே நல்ல சமுதாயம் ஆகும்."

இவ்வாறு நல்ல சமுதாயம் அமையவில்லையானால் விளையப்போவது என்ன என்பது குறித்தும், அந்தத் தீமைகளைப் போக்கி ஒழுங்கான சமுதாயத்தினை அமைப்பதற்குமேற்கொள்ளப்பட வேண்டிய கடமை குறித்தும் அவர் ஆழமாகச் சிந்தித்துத் தம் கருத்தைப் பின்வருமாறு அமைக்கிறார்:

"எப்படியும் நல்ல சமுதாயம் அமையவில்லையானால் அமைதியான வாழ்க்கை இல்லாமற் போகும். நூற்றுக்கு ஒருவர் இருவரை மட்டும் திருத்தி இனிப் பயன் விளையாது. பெரும்பாலோர் நெறியோடு வாழ்வதற்கு உரிய வழிவகைகளை அமைக்கவேண்டும். இரண்டில் ஒன்று நடக்கவேண்டும். இன்றைய பெரிய ஊர்களும் பெரிய அமைப்புகளும் குறைந்து பழங்காலம்போல் மனச்சான்று விளங்கும் சிறிய ஊர்களும் சிறிய அமைப்புகளும் ஏற்படவேண்டும். அதுதான் காந்தியடிகளின் நெறி. மற்றொரு வழி, பழங்காலத்தில் நம்பிக்கையும் உறுதியும் ஊட்டியதாகிய சமயத்திற்கு ஒப்பாக இக்காலத்தில் வேறொன்று ஏற்படவேண்டும். எல்லோருடைய நன்மைக்காகவும் எல்லோரும் சேர்ந்து செய்யும் சட்டத்தைக் கடவுளின் ஆணைபோல் போற்ற வேண்டும்."

சமுதாயத்தில் நாம் காணுகின்ற கெட்டவர்களையும் போக்கிரிகளையும் அடியோடு ஒழித்துவிட முடியும் என்றோ, அல்லது அடியோடு ஒழித்துவிட வேண்டும் என்றோ கூறாமல், அவர்கள் மேல் நாம் இரக்கங் கொள்ள வேண்டுமென்றும் அவர்களைத் திருத்துவதற்கு விடாது தொடர்ந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டு. மென்றும் அவர் 'மண் குடிசை' என்ற நாவலிலும் 'மண்ணின் மதிப்பு' என்ற கட்டுரை நூலிலும் குறிப்பிட்டிருக்கக் காணலாம்:

"ஒரு நாட்டில் சர்வாதிகாரி திடீரென்று தோன்றுவதில்லை. பலர்க்கு அவனைப் போன்ற மனம் வந்த பிறகுதான் அவன் தோன்றுகிறான். பலருடைய மனம் ஏமாற்றத்தாலும் நம்பிக்கையின்மையாலும் கெட்ட பிறகுதான், துணிச்சல் மிகுந்த ஒருவன் அப்படி ஆகிறான். சமுதாயத்தில் போட்டியாலும் ஏக்கத்தாலும் பலருடைய மனம் கெட்ட பிறகுதான் ஒரு சிலர் கொடியவர்களாக வளர்கிறார்கள். அவர்கள் கோபுரம் போன்றவர்கள். கோபுரத்தை மட்டும் இடிப்பதால் பயன் இல்லை. உண்மையாக உணர்ந்தால், அவர்கள் மேல் இரக்கம் கொள்ளவேண்டும்.

-மண் குடிசை: ப. 443
"ஒரு சில நாட்களில் சமுதாயத்தைத் திருத்தி அமைத்துவிட வேண்டும் என்ற வேகம் உடையவர்களுக்கே உள்ளத்தில் சோர்வு ஏற்படுகிறது. நீதியின் பெருமை, நேர்மையின் மதிப்பு, மனச்சான்றின் வலிமை ஆகிய மூன்றும் சமுதாயத்தில் விளங்குமாறு நம்மால் இயன்ற தொண்டு செய்யவேண்டும் என்ற அமைதியான ஆசை கொண்டிருந்தால் அந்தச் சோர்வு ஏற்படாது. சமுதாயம் என்பது தனிமனிதர்களால் ஆனது. அவர்களில் எத்தனை பேருடைய மனப் பான்மையை நம்மால் திருத்த முடியுமோ அவ்வளவும் செய்வோம். இதுவே அடிப்படைத் தொண்டு என்று நம்புவோம்."
-மண்ணின் மதிப்பு: ப. 41-42

சமுதாய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகளாக விளங்கும் தகாதவர்களைத் தண்டித்து விடுவதால் மட்டும் பயன் விளைந்து விடாது, மாறாகக் குறை எங்கே உள்ளது என்று கண்டு, அதற்கு மாற்றுத் தேட முற்படவேண்டும் என்று அவர்தம் 'அல்லி’ என்னும் தொடக்க கால நாவலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

"இதுவரையில் தவறு செய்தவர்களைப் பிடித்துப் பிடித்து விடாமல் தண்டித்து வந்து என்ன பயன் கண்டோம்? குற்றங்கள் வளர்ந்து வருகின்றனவே தவிர, குறையவில்லை. உடம்பில் உட்கார்ந்து கடித்த கொசுக்களாகப் பார்த்து அவைகளை வேட்டையாடி நசுக்கிப் பொசுக்கி விடுவதில் வல்லவர்களாக இருக்கிறோம். அதற்காகவே நீதிமன்றங்கள், சிறைக் கூடங்கள் எல்லாம் ஏற்படுத்தி, ஏராளமாகச் செலவழித்து வருகிறோம். ஆனால் கொசுக்கள் வளர்வதற்கு இடம் தருகின்ற சாக்கடைகளையும் தேக்கங்களையும் ஒழித்துச் சீர்ப்படுத்துவதற்கு அதில் கால்பங்கு முயற்சியும் செய்வதில்லை".
-அல்லி, ப. 145.146

மேலும் மு. வ. அவர்கள் சமுதாயத்தை வெறும் அறவுரைகளால் மட்டும் திருத்திவிட முடியாது, என்று உறுதியாக நம்புகின்றார். விவேகானந்தரும், காந்தியடிகளும் பட்டினியால் வாடும் ஏழையிடம் முறையே கடவுளைப் பற்றியும், சுதந்தரத்தைப் பற்றியும் பேசமாட்டோம். அவர்களுக்குக் கடவுள் கஞ்சியின் வடிவில், ரொட்டியின் வடிவில் தான் காட்சியளிப்பார் என்று கருதியது போல டாக்டர் மு. வ. அவர்களும் சமுதாயம் புரையோடிப் போயிருப்பதற்குக் காரணம் வறுமையும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும்தாம் என்று வற்புறுத்திக் கூறுகின்றார்,

"களவு ஒழிய வேண்டுமானால் நாட்டில் வறுமை இல்லாதவாறு செய்யவேண்டும். ஒருபுறம் முப்பது ரூபாய்ச் சம்பளமும் மற்றொரு புறம் முப்பதாயிரம் ரூபாய் வருவாயும் உள்ள மிக இழிவான நிலையைப் போக்கவேண்டும். ஆயிரம் மடங்கு உள்ள வேறுபாட்டை அகற்றி, இரண்டு மூன்று பங்கு வேறுபாடு தான் என்ற நிலைக்குக் கொண்டு வரவேண்டும்... இந்த மண்ணில் பிறந்த எல்லோருக்கும் வாழ்வு உண்டு, வளம் உண்டு என்ற நல்ல நிலைமை ஏற்படுத்த வேண்டும். இந்த மண்ணின் மதிப்பு உயர்வதற்கு அதுதான் தக்க வழி"

-மண்ணின் மதிப்பு: ப. 10-11

என்கிறார். மேலும் அவர்,

"இன்று அறிஞர்கள் மேற்கொள்ள வேண்டிய கடமை தனிமனிதரைத் திருத்துவது அல்ல. சமுதாயத்தைத் திருத்துவதே ஆகும். ஆசையோடு போராடுவது அல்ல; அமைப்போடு போராடுவதே ஆகும். பொருட்பற்றைப் போக்குவது அல்ல; பணவேட்டையைப் போக்குவதே ஆகும்"

என்றும் குறிப்பிட்டுள்ளார். இன்றையச் சமுதாயச் சீர்கேடுகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் அறவுணர்வு அற்றுப் போனமையும், அறத்தில் பற்று நெகிழ்ந்து போனமையுமே ஆகும் என்கிறார்.

"தனிமனிதன் வாழ்க்கைக்கு உணவும் உறக்கமும் இருந்தால் போதும். மக்கள் பலர் கூடிவாழும் சமுதாய வாழ்க்கைக்கு அறம் கட்டாயம் வேண்டும். மக்கள் எல்லோரும் கூடி நடத்தும் அரசியலுக்கே அறம் சிறப்பாக வேண்டும். உடம்பின் நன்மைக்கு இரத்த ஓட்டம் எப்படிக் கட்டாயம் வேண்டுமோ, அதுபோல உலக நன்மைக்கு அறத்தின் அடிப்படை கட்டாயம் வேண்டும்...அரசியலில் அல்லல் விளைப்பதற்கெல்லாம் முதல் காரணம் அறமாகிய அடிப்படையைப் புறக்கணிப்பதுதான் என்று உணர வேண்டும்."

-அறமும் அரசியலும், ப. 40

இவ்வாறு அறத்திற்குச் சார்பாக நின்று பேசும் அறவோராம் மு. வ. அவர்கள், சமுதாயம் அறத்தில் அசையாத நம்பிக்கை வைத்திருப்பவர்களை என்ன செய்கின்றன என்பதனைக் 'கரித்துண்டு' என்ற தம் நாவலில் பின்வருமாறு விளக்குகின்றார்:

"நாம் எல்லோரும் சேர்ந்து என்ன செய்து வருகிறோம் தெரியுமா? அறத்தை நம்பும் நல்லவர்களை முதலில் வறியவர்களாக ஆக்குகிறோம்; பிறகு இரக்கமற்றவர்களாக மாற்றுகிறோம்...மாசற்ற மனிதப் பண்போடு கரவற்ற குழந்தைகளாய்ப் பிறந்து வளர்ந்தவர்களை முதலில் ஏழைகளாக்கி, பிறகு பொல்லாத போக்கிரிகளாக்கி விடுகிறோம்."

இன்றுள்ள சமுதாயத்தை மண்குடிசையோடு ஒப்பிட்டுப் பின்வருமாறு பேசுகின்றார் மு.வ.

"இன்று உள்ள சமுதாயம் மண்குடிசை போன்றது. அதில் எலிகள் வளை தோண்ட முடிகிறது. பெருச்சாளிகள் கடைக்காலையே தோண்டுகின்றன. பலவகைப் பூச்சிகளும் குடிபுகுகின்றன. எல்லாம் சேர்ந்து குடிசையைப் பாழாக்க முடிகிறது. மண்குடிசையாக உள்ள வரையில் இவைகளைத் தடுக்க முடியாது. ஒன்று, குடிசையை விட்டு, இயற்கையோடு இயற்கையாய்க் குகையில் தங்கி வெட்டவெளியில் திரிய வேண்டும். அல்லது, ஒழுங்கான கல் வீடு கட்டி வாழ வேண்டும்; அப்போது எலிகள் முதலியன தோன்றி வளர முடியாது."

சமுதாயத்தில் தீமைகள் பல்கிப் பெருகி வளர்ந்து கொண்டே செல்கின்றன என்றும், இதற்கு இக்காலத்தில் தேர்தல் முறை ஒரு தீங்கான காரணமாய் அமைகிறது என்றும் குறிப்பிட்டுப் பின்வருமாறு மு.வ. கூறுகின்றார்:

“சமுதாயம் பெருகப் பெருக, நன்மை தீமைகளைக் கலந்து பங்கிட்டுக்கொள்ள வேண்டி இருக்கிறது. பொதுத்தொண்டிலும் இந்தக் கலப்புத்தான் நிற்கிறது. ஆகையால் பணத்தை வாங்கிக் கொண்டு தேர்தலில் ஓட்டுப்போடும் மக்களைக் குறை சொல்வதா? தேர்தலில் வென்ற பிறகு செலவான பணத்திற்கு மேல் ஊழல் வழிகளில் சேர்த்துக்கொள்ள முயலும் உறுப்பினர்களைக் குறை கூறுவதா? அவர்களுக்கு லஞ்சம் கொடுத்தாவது தம் வேலைகளை முடித்துக் கொள்ள விரும்பும் மக்களைக் குறை கூறுவதா? எல்லாருடைய குறைகளும் ஒன்று கூடி உருவாகிப் பயன்அளிக்கின்றன. நல்லவர்களின் பொதுத்தொண்டும் இதில் கலந்து கரைந்து போகிறது. சமுதாய அமைப்பிலும் தேர்தல் முறையிலுமே ஒரு புது மாறுதல் வந்தால் தான் இந்த நோய் தீரும்."

எனவே டாக்டர் மு.வ. அவர்கள் ஒரு புத்துலகம் காண விழைகிறார். அந்தப் புத்துலகத்தின் அமைப்பினைப் பின்வருமாறு காண்கின்றார்:

“இதுவரை இருந்த உலக அமைப்பு வேறு. இனி வரப்போகும் புத்துலக அமைப்பு வேறு. பழைய உலகத்தில் பொதுமக்கள் பொருளாதாரப் போராட்டத்தில் சிக்குண்டவர்கள்... இனி அவர்களை அந்தக் கடலில் தத்தளிக்க விடும் கொடுமை இருக்காது. பொருட் போராட்டம் ஒழிந்து வாழ்க்கையில் அறப் போராட்டம் ஒன்றே நிற்க வேண்டிய அமைப்பே புத்துலக அமைப்பாகும்."

"அறத்தைக் காக்கத் துணை செய்யும் என்று போற்றிய அந்த நெருப்பு - பணம் - இன்று வாழ்வையே பற்றி எரித்துக் கொழுந்து விட்டு ஓங்குகின்றது; அற நாட்டத்திற்கே இடமில்லாமல் செய்து விடுகின்றது. போகட்டும்; பழைய சமுதாய அமைப்பு மறைந்து சாம்பலானால், புதிய சமுதாய அமைப்பு ஒன்றைக் காண மக்களால் முடியும். அந்த அமைப்பில் பணம் இருக்கும்; பணவேட்டைக்கு இடம் இருக்காது. அறம் வாழும்; அறநாட்டம் அடிப்படையாக அமையும். பணம் அறத்தின் அடிப்படையில் சமுதாயத்திற்குப் பயன்பட்டு வாழ்க்கை திருந்தும். அன்றுதான் விமானங்களில் வானில் பறக்கக் கற்ற மக்கள், கப்பல்களாலும் நீர்மூழ்கிகளாலும் கடலில் நீந்தவும் மூழ்கவுங் கற்ற மக்கள், நிலத்தில் அமைதியாகவும் இன்பமாகவும் வாழ முடியும் என்பதை மெய்ப்படுத்துவார்கள்; பணம் ஒரு கருவி, அறம் நெறி, வாழ்வே குறிக்கோள் என்பதை மெய்ப்படுத்துவார்கள்."
-அறமும் அரசியலும் - பக். 65 - 66

சமுதாயத்தைக் கூர்ந்து நோக்கி அங்குள்ள அவலக் காட்சிகளைப் படம்பிடித்துக் காட்டிய அறவோர் டாக்டர் மு. வ. அவர்கள் 'நெஞ்சில் ஒரு முள்’ என்னும் நாவலில் சமுதாய மாற்றத்திற்கு அனைவரும் ஆற்ற வேண்டிய அரும்பணி இன்னதெனத் தெளிவாகச் சுட்டுகின்றார்:

"இந்த உலக வாழ்க்கையிலும் தனி ஒருவர் எண்ணம் நிறைவேறி விடாது. தொன்றுதொட்டு இதுவரையில் வளர்ந்து வந்துள்ள கருத்துகளும் இன்று உள்ளவர்களின் விருப்பு வெறுப்புகளும் சேர்ந்தே சமுதாய வாழ்க்கையை உருப்படுத்துகின்றன. மாற்ற முயற்சி செய்யலாம்; உடனே பயன் விளையாது; போதிய பயன் விளையாது. ஆகையால் நம் கடமையைச் செய்வோம்; நடப்பது நடக்கட்டும் என்று இருப்போம். அதுவே அறிவுக்கு அழகு. கடமையைச் செய்வதற்கே நமக்கு உரிமை உண்டு; பயனைப் பற்றிக் கவலைப்படுவது அறியாமை."
-நெஞ்சில் ஒரு முள் - ப. 443 - 444

இதே கருத்தினை 'மண்குடிசை’ நாவலின் இறுதியிலும் தெளிவுறுத்துகின்றார்:

"உலகத்தைத் திருத்த நம் பங்கு முயற்சி செய்வோம். பணவேட்டையும் புகழ் வேட்டையும் அவற்றால் ஆகிய பலவகை ஏக்கங்களும் கவலைகளும் இல்லாமல் சமுதாயம் சீராக அமைவதற்கு உரிய வகையில் அறிவை வளர்ப்போம்; அறநெறியைப் பரப்புவோம். உடனே பயன் காண முடியாமல் போகலாம். கவலை வேண்டா. எதிர்கால நன்மையைக் கருதிக் கடமையைச் செய்வோம். ஆங்காங்கே நல்ல விதை களைத் துரவிச் செல்வோம்; அதுவும் இயலாத நிலையானால், இயன்றவரையில் நிலத்தைப் பண் படுத்தி விட்டுச் செல்வோம். அது நம் கடமை, நல்ல கடமையை உணர்ந்து செய்வதே நல்வாழ்க்கை.”
-மண்குடிசை - ப. 504

ஆக, அறிவாற்றலும், கூரிய பார்வையும் கொண்டு சமுதாயத்தை நோக்கிய டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் சமுதாய மருத்துவராகவும் விளங்குவதனை அவருடைய படைப்புகளில் தெளிவுறக் காணலாம்.

- சென்னை, வானொலி நிலையப் பேச்சு,
27-2-1979