அவள் ஒரு எக்ஸ்ட்ரா/2

விக்கிமூலம் இலிருந்து

2

அவன் ஒரு 'எக்ஸ்ட்ரா'.

சினிமா உலகத்தில் இடம் பெற வேண்டும் எனும் ஆசை உந்த ஊரை விட்டு ஓடிவந்தபோது அவள் நினைத்ததில்லை என்றும் தான் 'எக்ஸ்ட்ரா' வாகவே இருக்க வேண்டியிருக்கும் என்று.

அவள் பெயர் புஷ்பர். இன்று,

முன்பும் அதே பெயர்தானா ? - சொல்வு முடியாது, அநேகமாக, அவள் பூர்வாசிரமப் பெயர் புஷ்பா என்று இராது. ஏதாவது பிச்சம்மாளாகவோ, பேச்சியம்மாள் என்றோ --இந்த தினுசில் எப்படியோ ஒன்று - இருந்திருக்கலாம். சின்மா உலகில் புகுந்தவுடன் ஆளே மாரிவிடவேண்டும் என்பதற்கு அடையாளம் தானோ என்னவோ முதலில் ஏற்கபடுகிற பெயர் மாற்றம்!.

எப்படியோ போகிறது! அவளுக்கு புஷ்பா என்ற பெயர் அழகாக இருந்தது.

அவள் அழகும் -பிரமாதம் என்று வியக்கத் தக்கதாயில்லை யெனினும் --- சில நட்சத்திரங்களின் அழகை விட நன்றாகத் தானிருந்தது. திறமையாக மேக்கப் செய்தால் அவளும் ஜொலிக்கும் நட்சத்திரமாக மாற முடியும்.

அந்த நம்பிக்கை தான் முக்கிய தூண்டுதல் அவளை சினிமா உலகுக்கு பிடித்துத் தள்ள . அவள் எதிரேயிருந்த கண்ணாடி ஆசையை வளர்த்தது. ஆர்வத்தீயை அதிகரிக்க உதவியது. 'அவளுக்கும் இவளுக்கும், எந்த ஸ்டாருக்கும் நான் என்ன மட்டமா? நான் அழகாகத்தான் இருக்கிறேன்' என்று இப்படியும் ஆட்டி அசைத்து, சாய்ந்து வளைத்து, நிமிர்த்து, பலவிதப் 'போஸ்கள்' சித்தரித்து மகிழ்ந்தாள். கண்களைச் சுழட்டிக் கொண்டாள் எழிலாக நின்று பார்த்தாள், ஒயிலாக அசைந்து நடந்தாள் சினிமாவில் கண்டு ரசித்த பலவிதக் கோணங்களை, ஸ்டைல்களை யெல்லாம் தானே நடித்துப் பார்த்துக்கொண்டாள், ரொம்ப நல்லாருக்கு இவ்வளவு போதாதா!' என்று அவள் தனக்குத் தானே ஸர்டிபிகேட் கொடுத்துவிட்டாள். அவளைப் பொறுத்தவரையில் தான் சினிமா ஸ்டாராகவே ஆகிவிட்டதாக நினைப்பு.

அவளிடம் அழகிருந்தது கொஞ்சம் படித்திருந்தாள். சினிமா உலகத்தில் உள்ளவர்களில் எத்தனையோ பேருக்கு ஆங்கிலத்தில் கையெழுத்துப் போடக்கூடத் தெரியாது, தமிழில் சரியாகக் கையெழுத்திட தெரிந்தவர்கள் தான் என்ன ரொம்ப ரொம்ப பேர்கள் இருந்துவிடப் போகிறார்கள்! படங்களில் பலர் தமிழைக் கொலை செய்வதிலிருந்தே அவர்கள் படிப்பு லட்சணம் தெரிகிறதே. தனக்கோ ஆங்கிலம் கூட வாசிக்கத் தெரியும், ஹிந்தி வேறு படித்திருக்கிறாள் போதாதா? கொஞ்சம் ஆங்கில பதங்களை இடையிடையே தூவி தமிழைத் தெளிவாகப் பேசினால் அவள் படித்தவள் என்பது லேசாக புரிந்துவிடும். நேரே போக வேண்டியது; பட முதலாளியப் பார்க்க வேண்டியது கவர்ச்சிக்கும் முறையில் பேசி தன் ஆர்வத்தைப் பற்றிச் சொன்னதுமே, தனக்கு 'சான்ஸ்' கிடைத்துவிடும் என்று நம்பினாள். அவள் எண்ணற்ற படங்களைப் பார்த்திருக்கிறாள். அவற்றின் மூலம் அவள் அறிந்தது என்ன? தமிழ்ப் படத்திலே நடிக்க நடிப்புத் திறமை. தேவையில்லை சும்மா அலங்காரப் பாத்திரமாக வந்து வந்து போனால் போதும். பாடும் திறமைக்கூடத் தேவையில்லை, 'பிளே பாக்' முறை என்று ஒன்று இருக்கிறதாமே அதன்படி சரிக்கட்டிக்கொள்வார்கள். நாட்டியம் கலாபூர்வமாகத் தெரிய வேண்டும் என்றில்லை கைகளை ஆட்டி, கால்களை உதைத்து, இடுப்பை நெளித்து, குதித்துக் குதித்து ஆடினால் போதும் அவள் 'டிரில்' செய்து பழகியவள் தான். ஸ்கிப்பிங், ஜம்பிங் எல்லாவற்றிலும் தேர்ந்தவள் தான். அதனால் சினிமாவுக்குத் தேவையான டான்ஸை சுலபமாகக் கற்றுக் கொள்ளலாம். பாட்டு என்று கத்தும் திறமை அவளிடமிருந்தது. நடிக்க முடியும் என்ற நம்பிக்கையிருந்தது, அப்புறமென்ன? அவள் ஏன் சினிமா நடிகையாக முடியாது? இல்லை, ஏன் ஆகக்கூடாது?.....

இப்படி. அடிக்கடி எண்ணி வந்த அவளுக்கு ஆட்சேபணை எதுவுமில்லை. அவளுக்குத் தந்தையில்லை. தாய் தான் இருந்தாள் அவளிடம் தன் ஆசையைத் தெரிவித்தாள். அவளோ 'உனக்கு எதுக்கு இந்தப் புத்தி? ஒழுங்காக லட்சணமாயிரு. வர்ர தை மாசத்திலே கலியாணத்தைப் பண்ணி வைக்கலாம்னு நான் அலைஞ்சு திரிகிறேன். இவள் என்னடீன்னா கூத்தாடிச்சியாக போகப் போகிறாளாம்' என்று சீறினாள். அதற்காக அவள் ஆசை ஒடுங்கி விடுமா? சமயம் பார்த்திருந்து ஒரு நாள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல், சென்னைக்கு டிக்கட் எடுத்துவிட்டாள்.

சினிமாவில் சேர்ந்துவிடவேணும் என்கிற ஆசை இந்த யுகத்திலே எத்தனை எத்தனையோ பேர்களை -- ஆண்களையும் பெண்களையும் தான் பற்றிக் கொண்டு விடாது ஆட்டி வைக்கிற வியாதி, இதற்குக் காரணம் புகழப்பசியும், சுலபமாகப் பணமும் நிறையப் பெற்றுவிடலாம், இவற்றால் பெருமையோடு வாழலாம் என்கிற ஆசையும் தான் அதனால் எத்தனையோ பெண்கள் ஊரை விட்டு ஓடிவந்து விடுகிறார்கள். 'கெட்டும் பட்டணம் சேர்' என்கிற பழமொழியை மாற்றி விடுகிறார்கள். இவர்கள் பட்டணத்துக்கு வந்து கெட்டி குட்டிச் சுவராகத் தயாராகி விடுகிறார்கள்.

அவளும் இவ்விதம் வந்தவள் தான். அவளுக்கு பட்டணத்தில் யாரையும் தெரியாது. எந்த இடமும் தெரியாது என்றாலும் துணிந்துவிட்டாள். நேராக சினிமாக் கம்பெனி எதற்காவது போவது; அல்லது சினிமா பத்திரிகைக்காரர்களில் யார் உதவியுடனாவது செல்வது என்ற எண்ணத்துடன் வந்தவள் அவள். அது மாதிரி வேட்டையாடத் துணிந்த சந்தர்ப்பத்தில் தான் அவள் முதன் முதலில் நானிருந்த பத்திரிகை ஆபீஸீக்கு வந்தது.

இதையெல்லம் எனக்கு அறிவித்தது ஸ்டுடியோ நண்பன் ஒருவன். அவனுக்குத் தொழிலே இது தான். 'எக்ஸ்ட்ரா' வியாபாரம் என்று சொல்லலாம். படங்களுக்[க்த் தேவையான் எக்ஸ்ட்ரா நடிகைகளை முதலாளிகளிடம் அழைத்து வருவதும், சினிமாவில் சேர ஆசைப்படுகிற பெண்களுக்கு சான்ஸ் தேடித்தருவதும், ஒன்றிரு படங்களில் நடித்த பின் பிழைப்பின்றி அவதியுறும் எக்ஸ்ட்ராக்களுக்கு சான்ஸ் வாங்கித் தருவதும்; அந்த உதவிக்காக நடிகையிடமும் முதலளியிடமும் பணம் பெற்றுக்கொள்வதும்தன் அவன் பிழைப்பு, வாழ்க்கை அனைத்துமே. அவன்தான் அவளையும் சினிமாவில் சேர்த்து விட்டதாகச் சொன்னான்.

ஒருநாள் அவள் ஸ்டுடியோ ஒன்றின் வாசலில் நின்று கொண்டிருந்தாளாம். காலை எட்டு மணியிலிருந்து நின்றாளாம். மத்தியானம் இரண்டு இரண்டரை மணியாகியும் கூட அவள் அங்கேயே நின்றிருக்கிறாள். உள்ளே அவளை அனுமதிக்காமல் வழி மறைத்திருந்தது காவல். அவள் முதலளியைப் பார்க்க வேண்டும் என்றாளாம், எந்த முதலாளியை? எதற்காக என்ற கேள்விகள் எழுந்தன. அவள் ஏதாவது படத்திலே நடிக்க சான்ஸ் கேட்கவேணும் என்று சொல்லவும், வாசல் காப்பவன் என்னவோ கேலி பேசியிருக்கிறான். அவள் முகம் கறுத்து நின்றாளாம். வெயில் வேறு தகித்திருக்கிறது. சாப்பிடவில்லை. பசி பணமில்லையே என்ற கவலை, எதிர்காலம் பற்றிய கவலை, ஏமாற்றம், அவமானம் எல்லம் சேர்ந்து அவளைச் செயலற்றவளாக்கி விட்டன. அவள் செய்வது என்னவென்று அறியாமல அங்கேயே நின்றாள். அப்பொழுது, கழுகு மாதிரி அங்கேயே வட்டமிட்டுக் கொண்ட்டிருந்த அவன்-- எக்ஸ்ட்ரா தரகன் -- அவளருகில் வந்து அன்பாகப் பேச்சுக் கொடுத்தான், அவளைத்தன் வீட்டுக்கு அழைத்துப் போய் உபசரித்தானாம். 'பிறகு அவரையும் இவரையும் பார்த்து சான்ஸ் வாங்கிக் கொடுப்பதற்கு என்னப் பாடா பட்டேன். அப்பப்பா, அன்னைக்கு நான் மட்டும் உதவி புரியலேன்னு சொன்னா, புஷ்பா பாடு அவ்வளவு தானே, தெரு நாய் மாதிரிச் சீரழிஞ்சு போயிருக்க மாட்டாளா சீரழிஞ்சு?' என்று சொன்னான் அவன்.

'அவ நன்றி கெட்ட நாய் ஸார். இவ்வளவெல்லம் உதவி செய்தேனே அதை நினைச்சுப் பார்க்கிறாளா? ஊஹூம் எவனோ ஒரு அஸிஸ்டன்ட் டைரக்டரின் உறவு கிடைச்சிட்டுது, அப்புறம் என்னை ஏன் கவனிக்கப் போறா ? இந்த எக்ஸ்ட்ராக்களே அப்படித்தான், ஸார். படத்துக்குப் பின் படம் என்று சான்ஸ் வாங்கிக் கொடுக்கிற வரைக்கும் அண்ணே, அண்ணேன்னு பின்னாலே திரிவாளுக, தொடர்ந்து சான்ஸு கிடைத்து, கண்ணைச் சுழட்டி, ஜாடை காட்டி கம்பெனியிலுள்ள. எவனையாவது கைக்குள்ளே போட்டுக் கொண்டால் சரிதான், பிறகு என்னை மறந்து விடுவாங்க. நீ யாரோ, உன்னை யாரு கண்டா என்று விரட்டி விடுவாங்க தேவடியாப் புத்தி எங்கே ஸார் போகும்? என்றான்.

இவன் இப்படிச் சொல்கிறான் அவள் என்ன சொல்வாளோ? இவன் சொல்வதையும் சசரி சரியென்று கேட்டுக் கொள்ள் வேண்டியதுதான் என்று என் மனம் பேசியது.

அப்படியானால் இப்பல்லாம் புஷ்பாவுக்கு நல்ல சான்ஸு தானா? என்று கேட்டேன். 'என்ன சான்ஸு, எரு விழுந்த சான்ஸு! இந்த பீல்டே அப்படித்தான் ஸார். ஆளுக்கு ஆளு பழகுகிறதைப் பொறுத்திருக்கு. அந்த உதவி டைரக்டர் தயவு இப்ப இருக்கு அவளுக்கு. அது என்றும் நிலைத்திருக்கும்னு என்ன ஸார் நிச்சயம்? எக்ஸ்ட்ராக்கள், சில்லறை நடிகர்கள் பாடு கஷ்டம் தான். வாழ்க்கை ஒரே நிதானமாக இருக்கும்னு சொல்ல முடியாது' என்றான் அனுபவஸ்தன்.

முடிவு எனா ஆயிற்று? அவன் சொன்னதுதான் நடைமுறையில் நிகழ்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=அவள்_ஒரு_எக்ஸ்ட்ரா/2&oldid=1062450" இலிருந்து மீள்விக்கப்பட்டது