ஆண் சிங்கம்/பெரிய மனுஷி

விக்கிமூலம் இலிருந்து
பெரிய மனுஷி


ள்ளியம்மைக்கு சதா தெருவாசல் படியில் நிற்பது தான் பொழுது போக்கு. அதுவே அவளுடைய வேலை என்றும் தோன்றியது.

வள்ளியம்மை என்ற பெயரைப் பார்த்ததும் நாகரிகம் இல்லாத பெரிய பெண்ணாக இருப்பாள் அவள் என்று எண்ணுகிறவர்கள் ஏமாறுவார்கள்.

நாகரிக விஷயம் எப்படியும் போகட்டும். அது இந்தக் கதைக்கு முக்கியமானது அல்ல. வயசு?

அவளுக்கு இப்பொழுது எட்டு வயதுதான் ஆகிறது. ஆமாம். கட்டைப் பாவாடையும், அழுக்குச் சட்டையும், குலைந்து கிடக்கும் தலைமயிருமாய்க் காட்சி தருகிற சிறுமியே வள்ளியம்மை.

அவளுக்கு ஆந்தப் பெயர் பிடித்திருந்தது. தனது பெயர் தனக்கே பிடிக்காத மனிதப் பிறவியும் உண்டோ இம் மாநிலத்தில்?

சில சமயங்களில் அவளுக்குத் தன் பெயர் மீது கொஞ்சம் வெறுப்பு ஏற்படுவது உண்டு. அது எப் பொழுது என்றாலோ, இதர சிறுமிகள் ஒன்றாகக் கூடிக் கொண்டு, ராகம் போட்டு-

‘வள்ளி அம்மே தெய்வானே,
   உம் புருசன் வைவானேன்?
கச்சேரிக்குப் போவானேன்?
   கையைக் கட்டி நிப்பானேன்?

என்று இழுக்கும் போதுதான்.

அவ்வேளையில் அவளுக்கு ஒரு பதிலும் சொல்ல ஒடாது. கண்கள் நீரைக் கொட்டத் தயாராகிவிடும். அவள் உலகத்திலுள்ள வெறுப்பை எல்லாம் தனது சின்னஞ்சிறு உள்ளத்தில் சேர்த்து, கூடிய அளவு முகத் தில் கொண்டு வந்து நிறுத்தி, வவ்வவ்வே’ என்று கீழுதட்டைப் பற்களால் கடித்து வலிப்பு காட்டுவாள்.

மற்றப் பிள்ளைகள் சும்மா இருந்து விடுவார்களா? ‘வலிச்ச மோறையும் சுளிச்சுப் போம்–வண்ணாந் துறையும் வெளுத்துப் போம்’ என்று வேறொரு ‘கோரஸ்’ எடுப்பார்கள். அப்புறம் வள்ளியம்மை அழுதுகொண்டு போகவேண்டியதுதானே!

அப்படி அவள் அழுதபடி தனி இடம் தேடிப் போகிறபோது தான் அவளுக்கு அந்தப் பெயரை வைத்தவர்கள் மீது கோபம் கோபமாக வரும். கோபமெல்லாம் கொஞ்ச நேரத்துக்கே. பிறகு அதே பெயர் மிக அழகானதாக, இனியதாகத் தோன்றும் வள்ளிக்கு.

எட்டு வயது வள்ளி அம்மை எப்ப பார்த்தாலும் தெருவில் நிற்பதற்கு, அவளோடு சேர்ந்து விளையாடக் கூடிய பிள்ளைகள் அக்கம்பக்கத்து வீடுகளில் இல்லை என்பதும் ஒரு காரணம் தான். அடுத்த தெருவுக்குப் போகலாம். ஆனால் ‘ஏட்டி, நீ வாசல்படி தாண்டினியோ, அவ்வளவுதான். உன்னை வெட்டிப் பொங்கலிட்டிருவேன். ..உன் காலை முறிச்சிருவேன்...உன் முதுகுத் தோலை உரிச்சிருவேன்’ என்ற ரீதியில் மிரட்டக் கூடிய தாயார் இருக்கிறாளே. அம்மாவிடம் கொஞ்சம் பயமிருந்தது வள்ளிக்கு.

தெருவாசல் படியில் நிற்பதனால் பொழுது போகும் என்பதோடு, புதிய புதிய அனுபவங்களும் கிட்டும், அது வள்ளிக்கு நன்ருகத் தெரியும். ஒரு சமயம் வெள்ளைக்கார துரை ஒருவன் அந்த வழியாகப் போனான். தோள் மீது துப்பாக்கியைச் சுமந்து கொண்டு, ‘தொப்பியும் கால்சராயும் பூட்சும் போட் டுக்கிட்டு, செக்கச் செவேல்னு–ஏயம்மா, அது என்ன நிறம்கிறே! கருணைக்கிழங்கை தோலுரிச்சுப் போட்ட மாதிரி–போனான் என்று, அவனைப் பார்த்த பெண்கள் பேசினார்கள். ‘மலைக்குப் போயிருப்பான். முசலு வேட்டையாட’ என்று ஒருவர் அறிவித்தார்.

அவனைக் கண்டதும் அநேக குழந்தைகள்–சில பெரியவர்கள்கூட–வீட்டுக்குள் ஒடிப்போய் விட்டார்கள். அவ்வூருக்கு வெள்ளைக்காரன் வருவது லேசுப்பட்ட விஷயம் இல்லைதான். அதற்காக அவனை வேடிக்கை பார்த்து நிற்க முடியுமா? இந்த அச்சம் பலருக்கு. ஆனல் வள்ளி அம்மை என்ன செய்தாள்? தன் வலது கையை உயர்த்தி, நெற்றியில் வைத்து *ளலாம், தொரெ!” என்றாள். அவன் திரும்பிப் பார்த்தான். புன்னகை புரிந்தான். குட்மார்னிங் அறிவித்துவிட்டு, தன் வழியே போனான். அப்புறம் வள்ளியைக் கைகொண்டு பிடிக்க முடியவில்லை'! துள்ளினாள். ஆடினாள். குதியாய்க் – குதித்தாள். ‘வெள்ளைக்கார துரை எனக்கு ஸலாம் போட்டாரே!’ என்று பாடினாள். அவள் பெருமை அந்தத்_தெருவில் சிறிது உயர்ந்துவிட்டது என்பதும் உண்மையே.

‘என்ன இருந்தாலும் இந்தப் புள்ளெக்கு ரொம்ப தைரியம்தான்’ என்று பலரும் சொன்னார்கள்...

அது போக்குவரத்து மிகுந்த ரஸ்தா அல்ல. தெருக்காரர்கள் ஏதாவது சோலியின் பேரில் அப்படியும் இப்படியும் போவார்கள். வேறு தெருக்காரர்கள் எங்காவது செல்வார்கள். எப்பவாவது ஒரு வண்டி போகும். கட்டைவண்டி, மை போடப்படாத, சக் கரங்கள் கிரீச்சிட, ‘கடக் டடக்’ என்று ஓசையிட்டுக் கொண்டு நகரும். வண்டி மாடுகளின் கழுத்து மணி ஒசை ஜோராக ஒலிக்கும். நாய் ஒன்று வேலையில்லா விட்டாலும், ஏதோ அவசர அலுவல்மேல் போகிறது போல், தெற்கே இருந்து வடக்கே ஒடும். அங்கொரு வீட்டுத் திண்ணைக்குப் பக்கத்தில் நின்று மோந்து பார்க் கும். பிறகு தும்பைச் செடியை மோந்து பார்க்கும். காலைத் தூக்கி, செடியை நனைத்துவிட்டு, வேகமாக நடக்கும். அப்புறம்: புறப்பட்ட இடத்தில் எதையோ மறதியாக விட்டுவிட்டு வந்ததுபோலவும், அதை எடுப் பதற்காக விரைவது போலவும் அது வடக்கேயிருந்து தெற்கு நோக்கி ஓடியே போகும். பிச்சைக்காரன் வருவான். காய்கறி விற்பவள் வருவாள்.–இப்படி எவ்வ ளவோ வேடிக்கைகள்! ‘எத்தனையோ கோடி இன்பங் கள்'!

அந்தச் சின்னஞ்சிறு உள்ளத்துக்கு–களங்கமற்ற நீலப் பெரு விழிகளுக்கு–எல்லாமே இனிமைகள்தான்; எல்லாம் அற்புதமே.

அனைத்தினும் மேலான வேடிக்கை ஒன்று உண்டு. ஒரு மணிக்கு ஒரு தடவை டவுண் பஸ் அந்த வழியாக வரும். கால் மணி நேரம் கழித்துத் திரும்பிப் போகும். அப்படி வருகிற போதும், போகிற போதும் பஸ்ஸினுள் இருப்பவர்களைப் பார்ப்பதில் வள்ளி அம்மை அலுப்படைவதே இல்லை. ஆனால் உள்ளத்தில் ஒரு ஆசையை வளர்த்துவந்தாள் அவள்.

‘தினந்தோறும் எத்தனையோ தடவைகள் கார் வந்துபோகுதே. அதில் நான் ஒரு தடவைகூடப் போக முடியலியே. என்றாவது ஒரு நாள் நானும் காரில் ஏறி, அது போற இடத்துக்கெல்லாம் போவேன். ஆமா. போகத்தான் வேனும்’–இப்படி ஆசைப்பட்டாள் வள்ளி.

குளத்தின் ஒரு மூலையில் எப்படியோ வந்து சேருகிற நீலோற்பலச் செடி, பையப் பைய நீர்ப்பரப்பு முழுவதும் பச்சைப் பசேலென அடர்ந்து படர்ந்து, கொத்துக் கொத்தான வண்ண மலர்களைப் பூத்துச் சொரிவது போல, அந்தச் சின்னஞ்சிறு பெண்ணின் உள்ளத்தடத்திலே பதிந்த ஆசை மெது மெதுவாகப் பரவியது. அடர்த்தியாக மண்டியது. இனிய கற்பனை களே மலர வைத்தது.

ஊருக்குள் வந்து திரும்பிய ஒவ்வொரு பஸ்ஸும், அவற்றிலே வந்திறங்கிய–அல்லது, கிளம்பிச் சென்ற –ஒவ்வொரு ஆளும் அவளுடைய எண்ணங்களை ஏக் கங்களை, கனவுகளை வளர்க்கும் வாய்ப்புகளாகவே விளங்கினர், எப்பவாவது அவளுடன் சேர்ந்து விளையா இம் எந்தச் சிறுமியாவது ‘நான் ஊருக்குப் போயிருந் தேன். தாத்தா வீடு டவுனில் இருக்குதே’ என்ற தன் மையில் ஆரம்பித்து, பெருமையடிக்கும்போது வள்ளி அம்மையின் உள்ளம் பொறாமை கொள்ளும் தனது எரிச்சலையும் பொறாமையையும் காட்ட அவள் ‘பிரவுடு! பீத்துறா!’ என்று கரிப்பாள்.

‘பிரவுடு’ என்கிற பதத்திற்கு அர்த்தம் புரிந்தோ புரியாமலோ வள்ளி அம்மையைப் போன்ற சிறுமிகள் அதைத் தாராளமாக உபயோகித்து வந்தார்கள். அதை ஒரு ஏச்சுபோல் உபயோகித்தார்கள். அதை அழுத்தமாக உச்சரிப்பதில் வள்ளிக்கு ஒரளவு திருப்தி உண்டாகும். அவ்வளவுதான். அவளுடைய ஆசையோ மேலும் கொஞ்சம் வளர்ந்திருக்கும்.

வள்ளி அம்மை, பஸ்ஸில் போய் வருகிறவர்கள்–போக விரும்புகிறவர்களுக்கு அனுபவ மொழி புகன்றவர்கள் எல்லோரது பேச்சுக்களையும், சந்தர்ப்பம் கிட்டிய போதெல்லாம் கூர்மையாகக் கவனித்து வந்தாள். தானும் சிலரிடம் கேள்வி கேட்டுச் சில விஷயங்களைத் தெரிந்துகொண்டாள்.

–அவ்வூரிலிருந்து டவுணுக்கு ஆறு மைல். பஸ் சார்ஜ் நாலரை அணா...போக நாலரை அணா, வர நாலரை அணா; ஆக ஒன்பதணா வேண்டும்...ஒரு பஸ்ஸில் ஏறினால், அது முக்கால் மணி நேரத்துக்குள் டவுண் போய்ச் சேரும். அதிலிருந்து இறங்காமல், இன்னொரு நாலரை அணாவைக் கொடுத்து டிக்கட் வாங்கிக் கொண்டு உட்கார்ந்து விட்டால். அதே பஸ்ஸில் உடனேயே திரும்பிவிடலாம். அதாவது மத்தியானம் 1 மணிக்கு பஸ் ஏறினால் 1–45க்கு டவுணில் இருக்கலாம். அதே பஸ்ஸில் பட்டணப் பிரவேசம் மாதிரிச் சுற்றி வருவதானால் இரண்டே முக்கால் மணிக்குள் ஊருக்கு வந்து சேர்ந்துவிடலாம்.

இந்த வாய்ப்பாட்டை வைத்துக்கொண்டு வள்ளி அம்மையின் பிஞ்சு மனம் என்னென்ன கணக்குகளைப் போட்டதோ! சரியான விடை காண்பதற்காக, எவ்வளவு தடவைகள் அழித்துக் கழித்துத் திருத்திக் கஷ்டப்பட்டதோ! வழிவகைகளைக் கண்டுபிடிப்பதற் காக என்னென்ன ஆராய்ச்சி பண்ணியதோ!

 முடிவில் ஒரு விடை அதற்குக் கிடைத்திருந்தது என்பது பின்னர் புரிந்தது...

‘இரண்டு மணி பஸ்’ ஊர் எல்லையைத் தாண்டி, பெரிய ரஸ்தாவில் திரும்பிய போது ‘கார் நிக்கட்டும்! கார் நிக்கட்டும்! என்று மெல்லிய குரல் ஒன்று எழுந்தது. சிறுகை ஒன்று முன் நீண்டு சைகையும் காட்டியது.

பஸ்ஸின் வேகம் குறைந்தது. கண்டக்டர் எட்டிப் பார்த்து, யாரு வரப்போறாங்க? சீக்கிரம் ஒடி வரச் சொல்லு’ என்று கத்தினான்.

‘காரு நிக்கட்டும்! நான் ஏறணும்! என்று மிடுக்காகக் குரல் கொடுத்தாள் எட்டு வயது வள்ளி அம்மை.

ஒகோ. அதும் அப்படியா!’ என்று சிரிப்புடன் சொன்னான் அவன்.

‘எது எப்படியோ–எனக்குத் தெரியாது. நான் டவுனுக்குப் போகனும், இந்தா நாலரை அணா’ என்று நீட்டினாள் அவள்.

‘சரி சரி முதல்லே ஏறு என்று கூறிய கண்டக்டர், அவள் பக்கம் கைநீட்டி, அவளை பஸ்ஸுக்குள் தூக்கி வைத்தான்.

‘நான்தான் ஏறி வாறேனே. அதுக்குள்ளே நீ ஏன் அவசரப்படுறே?’ என்று வள்ளி அம்மை மூஞ்சியைச் சுளித்தாள்.

கண்டக்டர் கொஞ்சம் தமாஷ் பேர்வழி. ‘கோவிச்சுக்காதிங்க, மேடம், ஸீட்லே உட்காருங்க... எல்லாரும் வழிவிடுங்க, ஸார், பெரிய மனுஷி வாறாங்க” எனறான்.

பொதுவாக அந்நேரத்து பஸ்ஸில் கூட்டம் இராது. அங்கொருவர் இங்கொருவராக ஆறேழு பேர்கள் இருந் தனர். எல்லோரும் வள்ளி அம்மையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். கண்டக்டரின் பேச்சைக் கேட்டுச் சிரித்தார்கள்.

அவளுக்கு வெட்கமும் கூச்சமும் ஏற்பட்டன. தலையைக் குனிந்தபடி நடந்து ஒரு இடத்தில் வசதியாக அமர்ந்தாள்.

“புறப்படலாமா அம்மா? என்று கேட்டு சிறு முறுவல் பூத்த கண்டக்டர் ரைட் கொடுத்தான். பஸ்ஸும் உறுமிக்கொண்டு கிளம்பியது.

அது நேர்த்தியான பஸ். புத்தம் புதுசு. வெளிப்புறம் வெள்ளை வெளேர் என்றிருந்தது. பச்சை வர்ணம் பல இடங்களில் பளிச்சிட்டது. உள்ளே, கைப் பிடிக்க உதவும், உருளைக் கம்பிகள் எல்லாம் வெள்ளி மாதிரி மினுமினுத்தன. எதிரே ஜோரான கடியாரம் ஒன்றிருந்தது. ஸீட்டுகள் ஜம்மென்று–அருமையான மெத்தை மாதிரி–விளங்கின.

அனைத்தையும் பார்வையால் விழுங்கினாள் வள்ளி யம்மை. ‘ஜன்னல்களுக்கு’ கண்ணாடி மறைப்பு இருந் தது அவள் பார்வையைச் சிறிது மறைத்ததால். வள்ளி ஸீட் மீது நின்று வெளியே பார்த்தாள்.

குளத்தங்கரை ரஸ்தா மீது பஸ் ஒடிக்கொண்டிருந்தது. குறுகலான– நொடி விழுந்த–பாதை. ஒரு புறம் குளம். அதற்கப்பால் பனைமரங்களும், புல் வெளியும், தூரத்து மலையும், நெடுவானும்...இன்னொரு பக்கம் பெரும் பள்ளம், பசும் பயிர் தலையாட்டும் வயல்கள். நெடுகிலும் வயல் பரப்பு. எங்கு பார்த்தாலும் ஒரே பச்சை...

எல்லாம் கண்கொள்ளாக் காட்சி அவளுக்கு...

‘ஏ பாப்பா!’ என்ற குரல் அவளை உலுக்கியது. ‘அப்படி நிற்காதே. உட்காரு.’

அவள் இறங்கி நின்று, தலை நிமிர்ந்து பார்த்தாள். பெரியவர் ஒருவர் நல்லது எண்ணிப் பேசினார். பிறர் மற்றவர்களுக்காக எண்ணுகிற ‘நல்லது’ அந்த மற்ற வர்களுக்குப் பிடிக்கவேண்டும் என்கிற விதி எதுவு மில்லையே! வள்ளி அம்மைக்கும் அவர் பேச்சுப் பிடிக்க வில்லை.

‘இங்கே யாரும் பாப்பா இல்லே. ஆமா...நான் காசு குடுத்திருக்கேனாக்கும்’ என்றாள், சற்று சினத்தோடு.

கண்டக்டர் முன்வந்தான். ‘இவங்க பெரிய அம்மா ஆச்சுதுங்களே. பாப்பா வந்து தனியாக டவுனுக்குப் போகக் காசு எடுத்துக்கிட்டு வரமுடியுங்களா? என்றான்.

வள்ளி அம்மை அவனை கோபமாகப் பார்த்தாள். நான் ஒண்னும் அம்மா இல்லே. ஆமா...நீ இன்னம் எனக்கு டிக்கட் தரலே’ என்றாள்.

‘ஆமா’ என்று அவள் தொனியில் அவன் உச்சரிக்கவே மற்றவர்கள் சிரித்தார்கள். அவளும் சிரித்தாள்.

அவன் டிக்கட்டைக் கிழித்து அவளிடம் கொடுத்தான். ‘ஜோரா ஸீட்டிலே உட்காரு. நீ தான் காசு கொடுத்திருக்கிறியே. ஏன் நிற்கணும்?’ என்றான்.

‘உங்கிட்டே ஒண்னும் கேட்கலே...ஆமா என்று தலையைத் தோள்மீது இடித்தாள் வள்ளி. உட்கார்ந் தாள்.

‘நின்றால், பஸ் ஆடுற ஆட்டத்திலே நீ தவறி விழ நேரலாம். மண்டை உடையலாம். அதுக்காகத் தான், பாப்பா...’

‘நான் பாப்பா இல்லேங்கிறேன், நீ என்னா? எட்டு வயசுப் பொண்ணு மாதிரியா இருக்கும் பாப்பா? என்று வெடுவெடுத்தாள் அவள்.

‘ஆமா! எட்டு வயசு ஆயிட்டா அவங்க பெரியவங்களாக வளர்ந்துடுவாங்க என்பது தெரியலியே, நீங்க என்னா ஸார்...’ என்று கண்டக்டர் சொன்னான். அவன் பஸ்ஸை நிறுத்தி, வேலையைக் கவனிக்க வேண்டியிருந்ததால், தொடர்ந்து பேசமுடியவில்லை.

ஒருவர் இறங்கினார். இருவர் ஏறினார்கள். ரைட் என்று கத்தினான் கண்டக்டர்.

வள்ளி வேடிக்கை பார்ப்பதில் ஆழ்ந்திருந்தாள்.

‘ஏம்மா, நீ தனியாவா போறே? என்று ஒரு குரல் அவள் கவனத்தைக் கவர்ந்தது. புதிதாக ஏறிய எவளோ ஒருத்தி, வயசு முதிர்ந்தவள். ‘அவள் பாம்படமும், தொள்ளைக் காதும்! கருப்பட்டிப் புகையிலையும் வெத்திலைச் சாரும்! ...உவே, மூஞ்சியைப் பாரு!’ என்றிருந்தது வள்ளிக்கு.

‘ஆமா. தனியாத்தான் போறேன். நான் டிக்கட் வாங்கியாச்சு’ என்று மிடுக்காகச் சொன்னாள்,

‘ஆமா. டவுனுக்குப் போறாங்க. நாலரை அணா டிக்கட்டு என்றான் கண்டக்டர்.

‘நீ போயேன் ஒன் சோலியைப் பாத்துக்கிட்டு’ என்று சொன்னாள் வள்ளி. சிரிப்பு வந்தது அவளுக்கு.

அவன் குறும்புத்தனமாகச் சிரித்தான். ஒன்றும் சொல்லவில்லை.

‘சின்னப்புள்ளெ இப்படி ஒத்தையிலே புறப்பட்டு வரலாமா? டவுணிலே எங்கே போகனும்? வீடு தெரி யுமா, தெரு தெரியுமா? என்று நீட்டினாள் பெரியவள்.

‘ஓங்கிட்டே ஒண்ணும் கேட்கலே, எனக்கு எல்லாம் தெரியும் போ’ என்று எரிந்து விழுந்தாள் வள்ளி, மேலே பேச்சைக் கேட்கவோ – பேச்சைக் கொடுக்கவோ – விரும்பாதவளாய் வெளியே பார்த்தபடி இருந்தாள்.

இது அவளுடைய முதல் யாத்திரை. மகாப் பெரிய யாத்திரை எத்தனை காலமாக ஆசைப்பட்டு, கனவு கண்டு, திட்டமிட்டு, இன்று பலித்திருக்கிறது. இது. ‘நாலரையும, நாலரையும் ஒன்புதணா!’ சுலபமாகத் தோன்றலாம் நமக்கு. வள்ளி அதைச் சேர்க்க எவ்வளவு சிரமப்பட நேர்ந்தது. அரையணா காலணாவாக – ஒரு அணாவாக... நல்லவேளை, ஒரு மாமா வந்தார். திருவிழாத் துட்டு என்று நாலணா கொடுத் 

தார்... அவள் பேராசை’ ஒன்றைத் தணிக்கும் முயற் சியில் முழு மனசையும் ஈடுபடுத்தியதால், எத்தனை எத்தனை சில்லரை ஆசைகளைக் கொல்ல வேண்டியிருந்தது. நாவுக்கு ஆசை காட்டும் தின்பண்டங்களைத் தியாகம் செய்தாள் அவள். கண்ணை வசீகரிக்கும் பலூன், சிறு பொம்மை முதலியவைகளை வேண்டாமென்று ஒதுக்கினாள்... குடை ராட்டினம் சுற்றுவது அது எப்பேர்ப்பட்ட விஷயம்! அதில் ஏறலாம் என்று மனம் என்னமாய்க் குதித்தது. ரெண்டணா போய் விடுமே என்ற பயமல்லவா அவளைப் பின்னுக்கு இழுத்தது.

காசுப் பிரச்னை ஒரு மாதிரியாகத் தீர்ந்ததும், காலப் பிரச்னை குறுக்கே நின்றது: எப்ப போவது? அம்மாவுக்குத் தெரியாமல் போகவேண்டுமே. ‘அம்மா, சும்மா நான் காரிலே போய்விட்டு வாறேன்னு சொன்னுல், ‘எடு வாரியலை! என்று பாயமாட்டாளா அவள்? எத்தனை தடவைகள் வள்ளி அழுதாள், கெஞ்சினாள்? பலனேற்பட்டதா? ‘ஊர்வழி போறதுக்கு இன்னும் வயசு வரலே எல்லாத்துக்கும் வேளையும் பொழுதும் வரட்டும்’ என்று ஆர்வத் தீயிலே அம்மா பச்சத் தண்ணியை வாளி வாளியாக அள்ளிக் கொட்டி னாளே!... அம்மாளின் அனுமதியோடு பஸ்ஸில் பிரயா ணம் செய்ய முடியாது என்பது நிச்சயமான உடன் தான், அவள் வேறு வழிகளைப்பற்றி யோசிக்கலானாள்.

அவள் அம்மா மத்தியானச் சாப்பாட்டுக்குப் பிறகு – ஒரு மணி முதல் நாலு நாலரைவரை – படுத்துத் தூங்குவாள். ‘அடிச்சுப் போட்டதுபோல் ‘கிடப்பாள். அந்த நேரத்தில்தான் வள்ளி தெருக்கோடி வீடு, அடுத்த தெரு, கோயில் மண்டபம் என்று அலைந்து திரிவது வழக்கம். அஞ்சு மணி வரை வீட்டுக்குள் வராமல் போய்விட்டால்தான் அவளுக்கு ‘மண்டகப் படி கிடைக்கும்!”

– உலகத்தை ஆராய வேணும் என்ற எண்ணம் மனித உள்ளத்தில் ஏன் ஏற்படுகிறது, எப்படி ஏற்படுகிறது என்று புரியவில்லை. அந்தத் துடிப்பு பெற்று விட்டவர்கள் எந்தவிதக் கஷ்டங்களையும் சகித்துக் கொள்ளத் தயாராகி விடுகிருர்கள். அனுபவம் பெற வேண்டும் என்ற தவிப்பு அவர்களை முன்னே முன்னே இழுக்கிறது.

வள்ளி அம்மைக்கும் அதே நிலை ஏற்பட்டது. அதன் பலன்தான் அவள் பஸ்ளில் தனியாக – தனது துணிச்சலை துணையாக – ஏறி உட்கார்ந்திருந்தாள். அதற்காக அவள் வருத்தப்படவில்லை...

பஸ் வெட்டவெளி நடுவே பாய்ந்து ஓடியது, சிற்றூர்களைத் தாண்டிச் சென்றது. வண்டிகளையும், பாத சாரிகளையும் விழுங்குவது போல் பாய்ந்து, ஒதுங்கி, பின் நிறுத்திவிட்டு வேகமாக முன்னேறியது. மரங்கள் ஒடி வந்தன. ஒன்றும் செய்ய முடியாமல் நின்றன... புதிய இடங்கள், புதிய காட்சிகள் எல்லாமே புதிய அனுபவம்!

திடீரென்று கைகொட்டிச் சிரித்தாள் வள்ளி. எதிரே – பஸ்ஸுக்கு முன்னால் – ஒரு மாடு. அழகான இளம் பசுமாடு. வாலைத் தூக்கிக்கொண்டு, நாலு கால் பாய்ச்சலில் முன்னே ஓடியது. பஸ்ஸிடம் பந்தயமிடுவது போல, மிரண்டு போய், அது முன்னே ஒடிக் கொண்டிருந்தது, டிரைவர் ஹார்ன் அடிக்க அடிக்க, அது துள்ளி ஒடியதே தவிர விலகவில்லை.

அது மிகுந்த வேடிக்கையாகப்பட்டது வள்ளிக்கு... கண்களில் நீர் பொங்கும்வரை, விழுந்து விழுந்து சிரித்தாள் அவள்.

‘அம்மா, நாளைக்கு ஊரு கூடிச் சிரிக்கப் போறாகளாம். அப்ப நீயும் சேர்ந்து சிரிக்கணும். பாக்கி வச்சிரு. இப்பவே பூராவையும சிரிச்சுக் கொட்டிப் பிடாதே’ என்றான் கண்டக்டர்.

பசு ஒரு தினுசாக விலகிக்கொண்டது...

பெரிய ஊர் ஒன்றின் நடுவே பஸ் ஓடியது. ‘ரயில்வே கேட் அடைத்துக் கிடந்ததால், காத்து நின்றது. ரயில் வண்டி ஓடியது. பிறகு பஸ் புறப்பட்டு, பரபரப்பு மிகுந்த ஜங்ஷனை அடைந்தது. நட.

மாட்டமும் நாகரிகமும் முட்டி மோதிய கடைவீதி வழியாக, பெரிய ஹைரோடு வழியாக ஓடியது. டவுணுக்குள் பிரவேசித்தது. பெரிய வீதிகளில் சென்றது.

‘அதிசய உலகத்தில் புகுந்த அலைஸ்’ மாதிரி, வியப் பால் விரிந்த கண்களோடு வள்ளி அம்மை எல்லாவற் றையும் விழுங்கினாள். ஏயம்மா, எவ்வளவு கடைகள்: என்னென்ன சாமான்கள்; என்ன பகட்டு: எத்தனை ரகப் பட்டாடைகள்! வர்ண விஸ்தாரங்கள்... அவள் பிரமித்துவிட்டாள்...

‘என்னம்மா இறங்கலியா? நீ கொடுத்த நாலரையணா செமிச்சுப் போச்சு’ என்றான் கண்டக்டர்.

‘நான் இறங்கலே. இதே காரில் திரும்பப் போறேன். இந்தா நாலரையணா என்று, சட்டைப் பையிலிருந்த அணாக்களை எடுத்து நீட்டினாள் வள்ளி.

அவன் அந்தச் சிறுமியை அதிசயமாகப் பார்த்தான். ஏன், என்ன விஷயம்?’ என்றான்.

ஒண்னுமில்லே. காரிலே வரணும்னு நினைச்சேன், அதுதான்.”

‘கீழே இறங்கி, ஊரைப் பார்க்கணும்கிற ஆசை இல்லையா? என்று அவன் கேட்டான்.

‘ஒத்தையிலேயா? அடியம்மா எனக்கு பயமாயிருக்குமே என்றாள் வள்ளி. அவள் அதைக் கூறிய விதமும், காட்டிய முகபாவமும் அவனுக்கு இனித்தன. ‘காரிலே வாறதுக்கு மட்டும் பயமாக இருக்கலியோ’

‘இதிலே என்ன பயம்’ என்று சவாலிட்டாள் சிறுமி.

‘சும்மா கீழே இறங்கி, அந்த ஓட்டலுக்குள்ளே போயி, காபி சாப்பிடு. பயம் ஒண்னும் ஏற்படாது’ என்றான் கண்டக்டர். ‘ஊகும். நான் மாட்டேம்மா!’

‘சரி. நான் உனக்கு மிக்ஸ்சர், பக்கடா ஏதாவது வாங்கி வரட்டுமா?

‘வேண்டாம். என்கிட்டே காசு இல்லே. ஒரு டிக்கட் கொடு. அது போதும் என்று உறுதியாகச் சொன்னாள் அவள்.

‘நீ காசு தரவேண்டாம். நான் வாங்கித் தாறேன்.

‘வேண்டாம், வேண்டவே வேண்டாம்! அவள் உள்ளத்தின் உறுதி, குரலிலேயே தொனித்தது.

உரிய நேரம் வந்ததும் பல் புறப்பட்டது. இப்பொழுதும் அதிகமாக ஆட்கள் ஏறவில்லை.

‘உன்னை ஊரிலே உங்க அம்மா தேடமாட்டாங்களா. நீ பாட்டுக்கு இப்படி வந்துட்டியே! என்றான் கண்டக்டர், டிக்கட்டைக் கிழித்துக் கொடுத்தபோது.

‘ஒருத்தரும் தேடமாட்டாங்க. ஆமா என்ருள் வள்ளி. –

வந்த வழியே மீண்ட பஸ் பிடித்துத் தந்த காட்சிகள் அவளுக்கு அலுப்புத் தரவில்லை. மகிழ்ச்சியைப் புதுப்பிக்கவே உதவின அவை...

அந்தப் பிரயாணம் மிகுந்த உற்சாகம் பெற்றே விளங்கியது. ஆயினும், ஆனந்தம் பூர்த்தியாகித் திகழ்வதைத் தடுக்க யாரோ சதி செய்தனர் போலும்! போகும்போது அவர்களுக்கு அதிகமான சந்தோஷத் துக்கு வழி செய்த பசுமாடு நடுரோட்டில் செத்துக் கிடந்தது. அவ்வழியே போன வேறுெரு பஸ்ஸில் அடி பட்டு இறந்து கிடந்தது அது.

அழகான ஜீவன், தனது துள்ளலையும் துடிப்பையும் இழந்து, கட்டையாய்–கோரமாய்–கிகாரமாய் கிடந்தது. கால்களைப் பரப்பிக் கொண்டு. கண்கள் பயங்கரமாக விழிக்க, ரத்தம் திட்டு திட்டாகச் சிதறிக் கிடக்க அது விழுந்திருந்தது. அதற்கு எமனாக வாய்த்த பஸ்ஸும் பக்கத்தில் நின்றது. சிறு கும்பல் கூடியிருந்தது... 

இந்த பஸ் வேகத்தைக் குறைத்தது. ட்ரைவரும், கண்டக்டரும். மற்றவர்களும் விவரம் அறியத் துடித்த னர். அறிந்தனர். தம் வழியைத் தொடர முனைந்தனர். பஸ் புறப்பட்டு வேகத்தில் ஓடியது.

வள்ளி அம்மையும் அந்தக் காட்சியைப் பார்த்தாள். ‘அப்பதே துள்ளி ஓடிச்சுதே, அந்தப் பசு தானே?... ஆமா அதே பசுதான்’ என்று கண்டக்டரிடம் சொன்னாள்.

ஒவ்வொருவரும் அவரவர் கருத்தை ஒலிபரப்புவதில் ஆர்வம் உடையவராயினர். வள்ளி பிறகு வாய் திறக்கவேயில்லை......

‘பாவம், பசுமாடு செத்துப் போச்சு! அது என்ன ஜோரா ஒடுச்சு! இப்ப இப்படி ஆயிட்டுதே.’ என்று அவள் மனம் புலம்பியது. பிறகு அவள் அதிகமாக வேடிக்கை பார்க்கவுமில்லை. ஸீட்டோடு ஸீட்டாக உட்கார்ந்து விட்டாள்...

பஸ் 3–40க்கு ஊர் வந்து சேர்ந்தது.

வள்ளியம்மை எழுந்து நின்று சோம்பல் முறித்தாள். போயிட்டு வாறேன், லார்’ என்றாள்.

‘போய் வாங்க, மேடம். இனி எப்பவாவது பஸ் சவாரி போகும் ஆசை ஏற்பட்டால், எங்க பஸ்ஸிலயே வாங்க. காசு கொண்டு வருவதுக்கு மறந்து போயிடாதீங்க என்று சொன்னான் கண்டக்டர்.

அவள் சிரித்தபடி கீழே இறங்கினாள். குதித்துக் கொண்டு ஒடினாள். ப வின் நினைப்பு வந்ததோ என் னவோ. நின்று திரும்பிப் பார்த்தாள்; பிறகு மெது வாக நடக்கலானாள்...

வள்ளி அம்மை வீட்டுக்குள் அடி எடுத்து வைத்த போது, அவள் அம்மா விழித்திருந்தாள். யாரோ பேச வந்திருந்தார்கள்.––யார் என்று பார்த்தால், தெற்குத் தெரு அத்தை. அவள் ஒருத்தி! பேச ஆரம்பித்தால் வாய் லேசிலே ஒயாது. சளசளவென்று..... ‘ஏட்டி, இவ்வளவு நேரமா எங்கட்டீ போயிருந்தே? என்றாள் ஆத்தை. சும்மா ஒப்புக்கு விசாரித்த பேச்சு. பதில் எதிர்பார்க்கப் படவுமில்லை. அவள் சொல்லித்தான் தீரனும் என்கிற அவசியமும் இல்லை. ஆகவே, வள்ளி சும்மா சிரித்து வைத்தாள்.

பெரியவர்கள் பேச்சு சுவாரஸ்யமாகத் தொடர ஆரம்பித்தது.

‘நீ சொல்றதும் சரிதான். ஊரிலே, உலகத்திலே என்னென்னவோ நடக்குது. நமக்குத் தெரியாமே எவ் வளவோ நடக்குது, எல்லாமா நமக்குத் தெரிஞ்சிருது? இல்லே, தெரிகிறதாத் தோணுற எல்லாம் நமக்குப் புரிஞ்சிருதா? என்றாள் அம்மா.

‘ஆமா’ என்று வள்ளி அம்மை ஒற்றைச் சொல் உதிர்த்தாள்.

‘என்னடி அது?’ என்று அவள் பக்கம் பார்த்தாள் தாய்.

‘தெரியாமலே எவ்வளவோ நடக்குதுன்னியே, அதுக்கு ஆமான்னேன்’ என்றாள் வள்ளி.

“முளைச்சு மூணு இலை குத்தலே. அதுக்குள்ளே இவ பெரிய மனுஷி மாதிரித்தான்–எல்லார் பேச்சிலேயும் தலையிட்டுக்கிட்டு... என்று அத்தை குறைகூறினள்.

வள்ளி அம்மை தானகவே சிரித்துக்கொண்டாள். அதன் பொருள் பெரியவர்களுக்கு விளங்க வேண்டும் என்ற ஆசை, அன்றையப் பொழுதுக்கு, அவளுக்கு இல்லை. அப்புறம் எப்படியோ!

*

"https://ta.wikisource.org/w/index.php?title=ஆண்_சிங்கம்/பெரிய_மனுஷி&oldid=1071105" இலிருந்து மீள்விக்கப்பட்டது