இளையர் அறிவியல் களஞ்சியம்/அச்சடித்தல்

விக்கிமூலம் இலிருந்து

அச்சடித்தல் : இன்று அழகாக அச்சடிக்கப்பட்ட நூல்களை எளிதாகப் பெற்று படித்து மகிழ்கிறோம். அவற்றில் அச்சிடப்பட்டுள்ள வண்ணப்படங்கள் கண்ணையும் கருத்தையும் கவருகின்றன. ஆனால், முன்னுாறு ஆண்டுகட்கு முன்பிருந்த நிலையை எண்ணிப் பாருங்கள். அன்றைக்கு ஓலையும் எழுத்தாணியும் மட்டுமே எழுதுபொருள்கள். எவ்வளவு சிறந்த நூல்களாயினும் அவற்றை ஒருசில படிகளே எடுக்க முடிந்தன. அவை அனைத்தும் கையாலேயே எழுத நேர்ந்ததால் அதிக சக்தியும் நேரமும் செலவிட வேண்டியதாகியது. இதனால் அறிவு வளர்ச்சியும் கூட மெதுவாகவே நடைபெற வேண்டியதாயிற்று.

தாளும் அச்சும் கண்டறியப்பட்ட பின்னரே விரைவான அறிவு வளர்ச்சி ஏற்பட ஏதுவாயிற்று பதினாறாம் நூற்றாண்டிற்குப் பின்னர் தான் அச்சுத் தொழில் நம் நாட்டில் கால் பதித்தது. அதன்பின் அறிவு வளர்ச்சியும் அறிவுத் துறைகளில் வளர்ச்சியும் துரிதமடையலாயிற்று.

தொடக்கக் காலத்தில் மை தடவிய அச்செழுத்துக்களின் மீது தாளைப் பதித்து எடுத்து அச்சிடும் முறையே இருந்து வந்தது. அதன்பின் அதற்கெனக் கண்டுபிடிக்கப்பட்ட அச்சு எந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன.

இன்று அச்சுத்தொழில் மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது. பல்வேறு வகையான எந்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் அச்சுத் தொழில் மிகச் சிறப்பாக நடை பெற்று வருகிறது. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்:

தட்டு அல்லது மிதி அச்சு எந்திரம் : 'பிளேட்டன்’ என்றழைக்கப்படும் இவ்வகை அச்சு எந்திரங்கள் தையல் எந்திரத்தை இயக்குவதுபோல் காலால் மிதித்து இயக்கலாம். மின்சார மோட்டாரைப் பொருத்தி தானாக இயங்கும் வகையிலும் இயக்கலாம்.

இதில் இரு இரும்புத் தட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். ஒன்று செங்குத்தாக எந்திரத்தில் பொருத்தப்பட்டிருக்கும். இதில் கோக்கப்பட்ட அச்செழுத்துக்கள் நன்கு இறுக்கமாக முடுக்கப்பட்ட இரும்புச் சட்டத்தில் பொருத்தப்பட்டிருக்கும். அச்சு எந்திரச் சக்கரங்கள் சுழலும்போது இது முன்னும் பின்னுமாகச் சென்று விடும். அப்போது மை உருளைகள் இதன்மீது மேலும் கீழும் ஓடி, எழுத்துக்கள் மீது மை தடவும். கிடையாக அமைக்கப்பட்டிருக்கும் மற்றொரு தட்டில் அச்சிடவேண்டிய

தட்டச்சுப் பொறி (பிளேட்டன்)


தாள் வைக்கப்பட்டிக்கும். எந்திரம் இயங்கும் போது அச்செழுத்துப் பொருத்தப்பட்டிருக்கும் தட்டு தாள் மீது பதிந்து மீளும். அப்போது தாளில் அச்சு பதியும்.

அச்செழுத்துப் பலகை தாளிலிருந்து மீண்ட பின் அச்சுப்பதிந்த தாளை உடனடியாக அங்கிருந்து அகற்றி விட்டு வேறு தாளை அங்கு அச்சிட வைக்க வேண்டும். இவ்வாறு மணிக்கு ஆயிரம் படிகள் அச்சிடலாம்.