இளையர் அறிவியல் களஞ்சியம்/ஆரஞ்சு

விக்கிமூலம் இலிருந்து

ஆரஞ்சு : ஆப்பிள் பழத்தைப் போல சுவை தரும் கனியாக அமைந்திருப்பது ஆரஞ்சு பழமாகும். இதுவும் மரக்கனி வகையே யாகும். இது வெப்ப, மிதவெப்பப் பகுதிகளில் அதிகமாக விளைகிறது, ஆரஞ்சு மரம் குட்டையாக புதர்போன்று அடர்த்தியாக இருக்கும். மென்மையான இலைகளையும் சிறிய வெண்மை நிறப் பூக்களையும் உடையது. இப்பூக்கள் ஒருவகை மணமுள்ளவை, ஆரஞ்சு என்பது ஒரு நிறத்தைக் குறிக்கும் பெயராக அமைந்திருப்பினும் ஆரஞ்சுப் பழங்கள் சிறு சிறு நிற வேறுபாடுகளுடன் காணப்படுகின்றன. இதன் மேல் தோல் உள்ளே இருக்கும் பழச்சுளைகளுடன் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும். இதனால் பழத்தை எளிதாக உரிக்க இயலும். சுளையாகவும் சாப்பிடலாம். சாறாகப் பிழித்தும் அருந்தலாம்.

ஆரஞ்சுப் பழம் ஆண்டு முழுமையும் விளையக்கூடியது. ஒரு மரம் ஆண்டுக்குச் சராசரியாக ஆயிரம் பழங்கள் தரும். அறிவியல் ஆய்வின் விளைவாக ஒட்டு முறையில் புதிய கலப்பின வகைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மிக அதிகமான விளைச்சலும் நிறைய சாறும் பெறமுடிகின்றது; சுவையும் கூடுதலாக உள்ளது. இக்கலப்பினங்கள் அளவிலும் வடிவிலும் நிறத்திலும் மணத்திலும்கூட வேறுபடுகின்றன.

ஆரஞ்சுப் பழத்தின் அனைத்துப் பகுதிகளுமே பயன்படுகின்றன, இதன் மணமுள்ள பூக்களிலிருந்து வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன. பழத்தோலிலிருந்து எண்ணெயும் பழத்திலிருந்து ஒருவகை மதுவும் தயாரிக்கிறார்கள்.

எலுமிச்சை (லெமன்), நாரத்தை (கடாரங் காய்), சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு, பப்ளி மாஸ் ஆகிய பழங்கள் ஆரஞ்சு இன வகையைச் சேர்ந்தவைகளாகும். இவற்றில் சில புளிக்கும்.