இளையர் அறிவியல் களஞ்சியம்/காலரா

விக்கிமூலம் இலிருந்து

காலரா : வாந்தி பேதி என அழைக்கப்படும் காலரா உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் கொடிய நோய்களுள் ஒன்றாகும். 'லிப்ரியோ காலரே' என்ற பாக்டீரியா கிருமிகளால் உண்டாகிறது. இக்கிருமிகள் கண்களுக்குப் புலப்படாத நுண்ணுயிர்களாகும்.

காலராக் கிருமிகள் பெரும்பாலும் நீர் மூலமே பரவுகின்றன. அவை உடலுள் சென்றவுடன் விரைந்து பெருக்கமடைகின்றன. இக்கிருமிகள் உடலில் புகுந்த ஐந்தாவது நாள் நோய் அறிகுறிகள் வெளிப்படத் துவங்கும். வாந்தியும் பேதியும் தொடர்ந்து ஏற்படும். இதனால் உடலில் நீர் குறைந்து போகும். இதனால் கடுமையான தாகமும் நாவறட்சியும் ஏற்படும். உடல் வெப்பம் குறைய உடல் குளிரத்தொடங்கும். கைகால் வலி ஏற்படும். மூச்சு இறைக்கும். நாடித்துடிப்பு குறைந்து கொண்டே வரும். உடலில் நீர் குறைந்துவிட்ட காரணத்தால் சிறுநீர் கழியாது. நேரம் ஆகஆக இதயத் துடிப்பு குறைந்து கொண்டே வந்து இறுதியில் நின்று மரணத்தை ஏற்படுத்தும். எனவே, இந்நோய் கண்டவுடன் அல்லது நோய்க்கான அறிகுறி தென்பட்டவுடனே உரிய மருத்துவம் செய்து கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம்.

முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் இந்நோய் வராமலேயே தவிர்க்க முடியும். எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரையே பருக வேண்டும். நாம் உண்ணும் உணவு சூடாக இருக்க வேண்டும். ஈ மொய்க்கும் தின்பண்டங்களை உண்ணவே கூடாது. நாம் வாழும் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை காலரா நோய்த் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

உலகிலேயே காலரா நோய் இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் அதிகமாக உள்ளது. எனினும் கடுமையான மருத்துவமுறைகளினாலும் வசதிகளாலும் இந்நோய்ப் பரவுதல் குறைந்து கொண்டே வருகிறது.