இளையர் அறிவியல் களஞ்சியம்/கிரஹாம், தாமஸ்

விக்கிமூலம் இலிருந்து

கிரஹாம், தாமஸ் : இவர், புகழ்பெற்ற வேதியியல்ஆய்வாளராவார்.இவர் இளமைதொட்டே அறிவியல் ஆராய்ச்சிகளில் ஆர்வம் கொண்டார். ஆனால் இவரது தந்தையோ இவரை கிருத்துவ சமயப் போதகராக்கப் பெரிதும் விரும்பினார். இதனால் இவர் உயர் கல்வி பெற இவர் தந்தை உதவ மறுத்துவிட்டார். இவராகவே, மற்றவர்கட்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதன் மூலமும் கட்டுரைகள் எழுதுவதன் மூலமும் ஓரளவு வருமானம் பெற்றுத் தன் வாழ்க்கையை நடத்தினார். ஆயினும், இவர் தன் வேதியியல் ஆய்வு முயற்சிகளைத் தொடர்ந்து செய்தார். அதன் விளைவாகப் பல புதிய ஆய்வுக் கருத்துக்களை வெளிப்படுத்தினார். இதனால் வெகு விரைவிலேயே இவர் ராயல் கழக உறுப்பினராக்கப்பட்டார். 1887இல் லண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியரானார்.

இவரது ஆய்வில் முக்கிய இடம் பெற்றது வாயு பரவல் பற்றிய ஆய்வாகும். வாயுக்கள் திரவங்களால் உட்கொள்ளப்படுவதையும் பரவுதலையும் சவ்வூடு பரவல் தன்மைகளையும் விரிவாக ஆய்ந்து விளக்கினார். இதுவே, பின்னர், 'கிரஹாம் வாயு பரவல் விதி’ என்ற பெயரால் வழங்கப்படலாயிற்று. கரைசல்கள், கூழ்நிலை, படிக நிலைகளில் அமைவதைக் கண்டறிந்து கூறினார். இவரது கண்டுபிடிப்பின் பயனாக ‘கூழ்ம' மாகிய கொலாயிடு ஆராய்ச்சி வளர்ச்சி பெறலாயிற்று. குண்டுக்கு மாறாக பாதரசத் தொட்டியைக் கொண்டு 'ஈடு செய்யும் பெண்டுலம்' (Compensated pendulam) ஊசலை முதன் முறையாக இவரே அமைத்தார்.