இளையர் அறிவியல் களஞ்சியம்/குளோரோஃபார்ம்

விக்கிமூலம் இலிருந்து

குளோரோஃபார்ம் : இது ஒரு மயக்க மருந்தாகும். எளிதில் ஆவியாகும் தன்மை கொண்டது. கனமான, நிறமற்ற, இனிய மணமுள்ள உணர்ச்சி அகற்றும் நீர்மமாகும்.

குளோரோஃபார்ம் 1831ஆம் ஆண்டிலேயே லிபிக், சவ்பீரான் எனும் இருவராலும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தபோதிலும், இதை ஒரு மயக்க மருந்தாகப் பயன்படுத்த முடியும் என்பதை சிம்ப்சன் என்பார் 1848இல் கண்டுபிடித்தார். வெளுக்கும் தூளையோ, சோடியம் ஹைப்போகுளோரைடுக் கரைசலையோ ஆல்கஹால் அல்லது அசிட்டோனுடன் கலந்து குளோரோஃபார்ம் தயாரிக்கலாம். குளோரோ ஃபார்மை மேலும் மேலும் தூய்மையாக்கியே மயக்க மருந்தாகப் பயன்படுத்த முடியும்.

குளோரோஃபார்ம் எளிதில் நீரில் கரையாது. ஆனால், ஆல்கஹால், ஈதர் போன்ற கரிமக்கரைப்பான்களில் எளிதாகக் கரையும். இதை இறுக்கமாக மூடப்பட்ட வண்ணக் கண்ணாடி பாட்டில்களில் வைத்திருப்பார்கள். ஏனெனில் வெளிச்சத்தில் வைத்திருந்தால் இது தானாகவே ஆக்சிகரணித்து ஹைட்ரஜன் குளோரைடாகவும் நச்சுத்தன்மைமிக்க பாஸ்ஜீன் வாயுவாகவும் மாறிவிடும். எனவே தான் இத்தகைய பாதுகாப்புடன் வைக்கப்படுகிறது.

மருத்துவத்தில் மயக்க மருந்தாகப் பயன்படுவதோடு சிலவகை தைலங்கள் இரத்தத்தில் ஒரு பகுதியான சீரத்தைப் பாதுகாக்கவும் குளோரோஃபார்ம் பயன்படுகிறது. மெழுகு, கொழுப்பு, எண்ணெய்கள், ரெசின்கள், ஆல்கலாய்டுகள் ஆகியவற்றிற்கு இது சிறந்த கரைப்பானாகும். நச்சுத்தன்மையும் மயக்க முண்டாக்கும் தன்மையுமுள்ளதால் இதனை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும்.

ஒளி, காற்று முன்னிலையில் குளோரோஃபார்ம் தன்னிச்சையாக நச்சுத் தன்மையான பாஸ்ஜீன் (Phosgene) என்னும் வேதிப் பொருளாக மாறுகிறது. எனவேதான் குளோரோஃபார்ம் ஒளி ஊடுருவா பழுப்பு வண்ண பாட்டில்களில் முழுமையாக நிரப்பப்பட்டு வைக்கப்படுகிறது.