இளையர் அறிவியல் களஞ்சியம்/நோய்க் கிருமிகள்

விக்கிமூலம் இலிருந்து

நோய்க் கிருமிகள் : நம் உடலில் நோயைத் தோற்றுவிக்கும் கிருமிகளை உயிரியல் அறிஞர்கள் நான்கு வகையாகப் பகுத்துள்ளனர். அவை 1. பாக்டீரியாக்கள் என்னும் நுண்ணுயிர்கள், 2.புரோட்டோசோவா என்னும் நுண்ணுயிர்கள்,

பலவகை பாக்டீரியாக்கள்

8. வைரஸ் என்னும் நச்சு நுண்மங்கள் மற்றும் 4. காளான் கிருமிகள் ஆகியவையாகும். இவற்றை மைக்ராஸ்கோப் என்னும் நுண் உருப்பெருக்கு ஆடி மூலமே காண இயலும்.

இவற்றுள், 'பாக்டீரியா’ எனும் நோய்க் கிருமி ஒரே உயிரணுவைக் கொண்டு அமைந்த உயிரினாகும். பாக்டீரியா தான் உருவான இருபது நிமிட நேரத்திற்குள் இரண்டாகப் பிளந்து இரு உயிரிகளாகும். இவ்வாறு இவை இரண்டிரண்டாகப் பிளந்து தனித்தனி உயிர்களாகப் பெருக்கமடையும். இவ்வாறு ஒரே நாளில் கோடிக்கணக்கில் பல்கிப் பெருகி நோயைப் பரப்புகின்றன. பாக்டீரியா நோய்க் கிருமிகளால் உருவாகும் நோய்களுள் காச நோய், நிமோனியா, டைபாய்டு எனும் நச்சுக்காய்ச்சல், வாந்திபேதியாகிய காலரா போன்றவை முக்கிய நோய்களாகும்.

மற்றொரு நோய்க்கிருமியாகிய புரோட்டோ சோவாவும் ஒரணுவாலானதேயாகும். இவை பாக்டீரியா நோய்க் கிருமிகளைவிட அளவில் சற்றுப் பெரியதாயினும் வெறுங்கண்ணால் காணமுடியாது. இவற்றையும் நுண்பெருக்காடியாகிய மைக்ராஸ்கோப் மூலமே பார்க்க இயலும். இக்கிருமிகள் மலேரியா போன்ற நோய்களை உண்டாக்குகின்றன.

மூன்றாவது வகையான வைரஸ் எனும் நச்சுக் கிருமிகள் மேற்கூறிய இருவகைக் கிருமிகளையும்விட மிகமிகச் சிறியதாகும். இவற்றை நுண் பெருக்காடி மூலம்கூட காணமுடியாது. எலெக்ட்ரான் மைக்கராஸ்கோப் எனும் மின்னணு நுண் பெருக்காடியின் துணைகொண்டு உருவாக்கப்படும் உருப்பெருக்கு ஒளிப்படம் மூலமே அறிய முடியும். வைரஸ் நச்சுக் கிருமிகள் உயிர்த்தன்மை பற்றியும் இயங்கும் தன்மையற்றியும் இன்னும் தெளிவாகக் கண்டறியப்படவில்லை. அவற்றை அறியும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இக்கிருமிகள் இளம்பிள்ளைவாதம், மஞ்சள் காய்ச்சல், அம்மை நோய், சளிக்காய்ச்சல் போன்ற நோய்கள் தோன்ற அடிப்படைக் காரணமாய் அமைகின்றன.

காளான் கிருமிகள் (Fungus) தோல் நோய்களையும் நுரையீரல் நோயையும் உண்டாக்க வல்லவை.

நோய்க்கிருமிகளான இவை நம் உயிரினுள் புகுந்து தாக்க முனையும்போது, அவற்றை எதிர்த்து நிற்பவை நம் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களாகும். இயற்கை எதிர்ப்பு சக்தியான இவ்வெள்ளை அணுக்கள் வலுக்குன்றும்போதே நோய்க் கிருமிகள் உடலில் ஆதிக்கம் பெற்று நோய்களைத் தோற்றுவிக்கின்றன. பின், செயற்கை நோய் எதிர்ப்புச் சக்தியை உடலில் ஏற்படுத்தி நோயைப் போக்க உரிய மருந்துகளை உட்கொள்கிறோம். இவை நோய்க்கிருமிகளைக் கொன்று நோயைப் போக்கி நம்மை காக்கின்றன.