இளையர் அறிவியல் களஞ்சியம்/விஞ்ஞானம்

விக்கிமூலம் இலிருந்து

விஞ்ஞானம் : 'சயின்ஸ்’ என்ற ஆங்கிலச் சொல்லைக் குறிக்கும் 'அறிவியல்’ என்பதன் சமஸ்கிருத சொல்லே 'விஞ்ஞானம்’ என்பது. இதனைத் தமிழில் 'இயலாய்வு’ எனவும் கூறலாம்.

அறிவு நுட்பத்துடன் புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் கண்டுபிடிப்புகள் விஞ்ஞானம் எனப்படுகிறது. இன்று உண்மைபோன்று தோற்றமளிக்கும் புதிய கண்டுபிடிப்புகள் அல்லது அனுமான முடிவுகள் நாளை தவறாகப் போவதும் உண்டு. முன்பு அணுவை பிளக்க முடியாது என டால்டன் எனும் அணு விஞ்ஞானி கூறியிருந்தார். ஆனால், இன்று அணுவைப் பிளக்கமுடியும். அதிலிருந்து வெளிப்படும், அதிக வெப்பசக்தியை மின்சாரமாக ஆக்கவழிக்கும், அணுகுண்டாக அழிவு வழிக்கும் பயன்படுத்தலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

விஞ்ஞானத் துறைகள் பலப்பலவாகப் பகுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வானவியல், மருத்துவ இயல் போன்றவை மிக முக்கியப் பிரிவுகளாகும்.

விஞ்ஞானத் துறைகள் அனைத்தையும் இரு பெரும் பிரிவாகப் பிரிப்பதுண்டு. அறிவியல் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் விதிமுறை களை வகுப்பர். இஃது 'தூய விஞ்ஞானம்' (Pure Science) எனப்படும். கணிதவியல், இயற்பியல், உயிரியல் போன்ற அறிவியல் துறைகள் தூய விஞ்ஞானத்துக்குச் சான்றுகளாகும். இவ்விஞ்ஞான விதிமுறைகளை அன்றாடப் பயன்பாட்டிற்கேற்ப நடைமுறைப்படுத்துவது 'பயன்முறை விஞ்ஞானம்’ (Applied S=ience) எனப்படும். பொறியியல், வேளாண்மை, மருத்துவம் போன்றவை இதற்குச் சான்றுகளாகும்.

இன்றைய வாழ்வில் விஞ்ஞானத்தின் துணையின்றி வாழ்வையே நகர்த்த முடியாத அளவுக்கு அறிவியலோடு இணைப்பும்பிணைப்பும் ஏற்பட்டுள்ளது. குண்டுசியிலிருந்து மாபெரும் கப்பல்வரை, விசிறியிலிருந்து விண்வெளி ஆய்வுக் கலம்வரை, மருத்துவம், வேளாண்மை முதல் போக்குவரத்து. செய்தித் தொடர்புவரை அனைத்தும் விஞ்ஞான வளர்ச்சியால் விளைந்த நற்பயன்களாகும். மண்ணை ஆய்ந்த விஞ்ஞானிகள் இன்று விண்ணையும் ஆய்ந்து தங்கள் கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்குகின்றனர்.