இளையர் அறிவியல் களஞ்சியம்/வெயில்

விக்கிமூலம் இலிருந்து

வெயில் : வெப்பம் மிகுந்த சூரியனின் ஒளிக் கதிர்கள் பூமியை வந்தடைகின்றன. இவ்வொளிக் கதிர் வீச்சே வெயில் என அழைக்கப்படுகிறது. சூரியனின் வெப்பக் கதிர் வீச்சை நம் பூமி மட்டுமல்லாது சூரிய மண்டலத்தைச் சேர்ந்த சந்திரன், வெள்ளி, புதன், வியாழன் போன்ற பிற கிரகங்களும் பெறுகின்றன. அவற்றை அவை மீண்டும் பிரதிபலிக்கின்றன. ஏனெனில் சூரிய மண்டலத்தில் கதிரவனைத் தவிர்த்து பிற கிரகங்களுக்குத் தானாக ஒளிரும் தன்மை இல்லை. எனவே, பூமியும் பூமியைச் சூழ்ந்த வாயு மண்டலமும் கதிரவனிடமிருந்தே ஒளியையும் வெப்பத்தையும் பெறுகின்றன.

மனித உயிர் வாழ்க்கைக்கு மட்டுமல்ல, பிராணிகள், செடி கொடிகள் ஆகிய அனைத்து உயிர் வர்க்கங்களுக்கும் வெயில் இன்றியமையாத் தேவையாக உள்ளது. சூரிய ஒளியைக் கொண்டு ஒளிச்சேர்க்கை மூலம் தங்களுக்கு வேண்டிய உணவுப் பொருட்களைத் தயாரித்து சேமித்து வைத்துக் கொள்கின்றன. இத்தாவரங்களை உண்பதன் மூலம் பிற உயிரினங்கள் தங்களுக்கு வேண்டிய சக்தியைப் பெறுகின்றன. ஒரு காலத்தில் இவ்வாறு தாவரங்களால் சேகரித்து வைக்கப்பட்ட சத்துப் பொருட்களின் வேதியியல் சேர்க்கைப் பொருட்களே நிலக்கரி, பெட்ரோல், இயற்கை வாயு போன்றவையாகும். இவையே இன்று சிறந்த எரிபொருட்களாகப் போற்றப்படுகினறன. வெயிலின் வெப்பத்தால் கடல், ஏரி, குளம், ஆறு போன்றவற்றில் உள்ள நீர் ஆவியாக மாறி மேகமாகிறது. இவை ஆகாயத்தில் மிதந்து மழையாகப் பொழிகிறது. மழை நீரை அணைகளில் தேக்கி அவற்றை விரைந்து பாயச் செய்து, பெரும் மின்னாக்கிகளை சுழலச்செய்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. வெப்பக் கதிர்கள் காற்றுக்கு ஆற்றல் அளிக்கின்றன.

சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிர்களில் அகச்சிவப்புக் கதிர்களும் புற ஊதாக் கதிர்களும் அடங்கியுள்ளன. அகச் சிவப்புக் கதிர்கள் படும்போது பொருள்கள் சூடாகின்றன. புற ஊதாக் கதிர்கள் உயிர்கட்கும் பொருட்களுக்கும் மிகுந்த தீங்கு விளைவிக்கும் தன்மையுடையதாகும். எனினும், இக்கதிர்களில் பெரும் பகுதியை வாயு மண்டலமும் ஓஸோன் படலமும் உறிஞ்சிக் கொள்வதால் எஞ்சிய சிறிதளவு கதிர்களால் பெரும் தீங்கு விளைவதில்லை. வெயிலில் கடுமையாக உழைக்கும் போது சூரிய ஒளிக்கதிர்கள் முழுமையாக நம் உடம்பில் படுவதால் உடல் கருநிறமாக ஆகிவிடுகிறது.

நம் உடம்பில் வெயில் பட்டால் 'டி' ('D') வைட்டமின் உண்டாகிறது. இஃது எலும்பு வளர்ச்சிக்கு மிக அவசியமானதாகும். அவ்வாறே தாவரங்கள் மீது வெயில்படும்போது அவற்றில் 'ஏ' ('A') வைட்டமின் உருவாகிறது. இதை மனிதர்கள் உண்ணும்போது இவ்வுயிர்ச் சத்து நமக்குக் கிடைக்கிறது. நோய்த் தொற்றாமல் தடுக்கவல்ல நோயெதிர்ப்புச் சக்தியையும் கண்பார்வை நன்றாக இருக்கவும் ஏ' வைட்டமின் அவசியமாகும்.

இன்று சூரிய ஒளிக்கதிரின் வெப்பத்தைக் கொண்டு சூரிய அடுப்புகள் தயாரிக்கப்பட்டு உணவு சமைக்கப்படுகின்றன. சூரியக் கதிர்களால் மின்சார சக்தி உண்டாக்கப்படுகிறது. சூரிய சக்தியைக்கொண்டு. நீரிறைக்கவும், விளக்கெரிக்கவும், -எந்திரங்களை இயக்கவும் இயலுகின்றன. எனவே, வெயில் சூரியக் கொடையாகப் போற்றப்படுகின்றது.