இளையர் அறிவியல் களஞ்சியம்/வைரஸ்

விக்கிமூலம் இலிருந்து

வைரஸ் : உடலில் நோயை உருவாக்கும் கிருமிகளுள் வைரஸ் என்பவை ஒரு வகை நச்சுக் கிருமிகளாகும். இவை மிகவும் நுண்மையானவை. இவற்றை எலெக்ட்ரான் மைக் ரோஸ்கோப் எனும் ஆற்றல்மிகு மின்னணு உருப்பெருக்காடி மூலம் மட்டுமே காண முடியும். வைரஸ் நச்சுக் கிருமிகளைப் பற்றிய முழுத் தகவல்களும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவை உயிருள்ளனவா அன்றி உயிரற்றவைகளா என்பதே இன்னும் அறியப்படவில்லை. ஆயினும் உடலிலுள்ள உயிரணுக்களையே தங்களின் வாழிடங்களாகக் கொண்டுள்ளன என்பதை உயிரியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். இவை எவ்வாறு உணவு கொள்கின்றன. எங்ஙனம் செரிமானம் ஆகின்றது என்பவையெல்லாம் இன்னும் தெளிவாகாத புதிர்களாகவே உள்ளன. ஆனால், அவைகளால் சுவாசிக்க முடிகிறது என்பதை மட்டும் கண்டுபிடித்துள்ளார்கள்.

இவற்றிற்குச் சில இயல்புத் தன்மைகள் உண்டு, அவை வழிவழியாக இவற்றிற்கு இருந்து வருகின்றன. இவை பாக்டீரியா கிருமிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவையாகும். படிகத்தைப்போல் தோற்றமளிக்கும் வைரஸ் கிருமிக்கு ஒரு உட்கரு உண்டு. அது நியூக்ளியஸ் என்று அழைக்கப்படும். நியூக்ளியஸ் அமிலத்தினாலானது. இதை புரதப்படலம் ஒன்று மூடிக் கொண்டிருப்பதாகக் கண்டறிந்துள்ளார்கள்.

மனிதர்களிடம் நோயை உண்டாக்குவது போன்றே தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் நோயுண்டாக்கும் நச்சுக் கிருமிகளான வைரஸ்கள் உண்டு.

தக்காளி வைரஸ்

இவை வெவ்வேறு வடிவினவாகும். சில உருள் வடிவிலும் சில தட்டை வடிவிலும் உள்ளன, சில குச்சி வடிவிலும் உள்ளன. இவை விலங்கு நோய்களையும் தாவரநோய்களையும் அவ்வப்போது உண்டாக்குகின்றன.

இவற்றின் உருவம்தான் மிக மிக நுண்ணியவையே தவிர இவற்றால் உண்டாகும் இன்னல் மிகப் பெரியதாகும்.

இளம்பிள்ளை வாத வைரஸ்

இவை ஒருவரிடமிருந்து மற்றவர்க்கு வாய், மூக்கு வழியாக மிக விரைவாகப் பரவி விடுகின்றன. உடலுள் புகுந்தவுடனேயே உயிரணுப் போர்வையைத் துளைத்துக் கொண்டு உட் சென்று உயிரணுவுடன் தங்குகின்றன. உயிரணுவுக்கு வந்து சேரும் உணவுகளையெல்லாம் இவை உறிஞ்சி உண்டு கொழுத்துப் பல்குகின்றன. விரைவிலேயே உயிரணு அழிய நேர்கின்றது. தங்களுக்கு உணவளித்த உயிரணுக்கள் அழிந்தவுடன் உயிரணுச் சுவற்றின் படலத்தைக் கிழித்துக் கொண்டு இவை வெளியேறுகின்றன. முன்பு போலவே வேறு உயிரணுக்களைச் சென்றடைந்து மீண்டும் பழையபடியே உயிரணு உணவைப் பறித்துப் புசித்துப் பலவாகப் பெருகுகின்றன. இவற்றின் பெருக்கம் அதிகமாக நோயின் அறிகுறிகளும் அதிகமாகின்றன. முடிவில் நோய்க்கு நம்மை முழுக்க ஆளாக்கி விடுகின்றன.

சளி, களிக்காய்ச்சல் போன்ற சாதாரண நோய்களிலிருந்து இளம்பிள்ளை வாதம், அம்மை, மஞ்சள் காய்ச்சல் போன்ற கொடிய நோய்கள்வரை வைரஸ்களால் உண்டாகின்றன. அதேபோல் பன்றிக் காலரா, நாய்க்கு வெறி பிடித்தல், மாடுகளுக்குக் கோமாரி எனும் நோய் போன்றவை விலங்குகளுக்கு உண்டாகின்றன. தாவரங்களுக்கு இலைச் சுருட்டை போன்ற நோய்களை உண்டாக்குகின்றன. உடலில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கும் வல்லமையும் வைரஸ்களுக்கு உண்டு.

உடலுள் உள்ள வைரஸ்களை முழுமையாக அழிக்கும் முயற்சி இதுவரை வெற்றி பெறவில்லை. எனினும் அவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் சில முக்கிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் அம்மை, மஞ்சள் காய்ச்சல் போன்ற கொடிய நோய்கள் உண்டாகாமலும் பரவாமலும் தடுக்க சில மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை உடலுள் செலுத்துவதன்மூலம் நல்ல பலன் கிடைக்கின்றன.