உள்ளடக்கத்துக்குச் செல்

உணர்ச்சி வெள்ளம்/சமாதானத்துக்கு ஓர் அரங்கு

விக்கிமூலம் இலிருந்து

சமாதானத்துக்கு ஓர் அரங்கு


நைல் நதிக் கரையிலும் இஸ்ரேலையடுத்துள்ள பாலை நிலத்திலும் போர்மூண்டு கொஞ்ச காலத்துக்குள்ளாகவே நாம் ஐ. நா. தினத்தைக் கொண்டாடுவது விந்தையல்ல. ஆனால் அதில் ஆழ்ந்த கருத்து இருக்கிறது. ஐ. நாவுக்குப் பக்கபலமாக இருந்து அதற்கு உறுதியும் ஆதரவும் தேடுவதில் நாம் உறுதியாகயிருப்பதை இதுகாட்டுகிறது. ஏனென்றால் உன்னத லட்சியமுள்ள ஒரு நிறுவனத்தை அதன் தோல்விகளைக் கொண்டு குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அந்த நிறுவனத்தின் அடிப்படை உணர்ச்சியைக் கொண்டும், அதன் மூலம் ஏற்படும் நம்பிக்கையைக் கொண்டும்தான் அதை அளவிட வேண்டும், ஐக்கிய அரபுக் குடியரசுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே மோதல் ஏற்படாமல் ஐ. நா. வால் தடுக்க முடியவில்லை என்பதும், வியட்நாம் போரை மூடிவுக்குக் கொண்டு வர அதனால் இயலவில்லை என்பதும் உண்மையே! ஐ. நா. செயலற்றுவிட்டது என்று நிரூபிப்பதற்குச் சில சம்பவங்களை எடுத்துக்காட்ட முடியும். அத்தகைய சம்பவங்களைச் சிலர் எக்களிப்போடும் வேறு சிலர் வேதனையோடும் சுட்டிக் காட்டவும் செய்கிறார்கள். ஆனால் எங்கேயாவது மோதலோ வலுத்தாக்குதலோ, துவேஷமோ இருந்தால் உலக மக்களெல்லோரும் ஐ. நா. வையே நினைத்துக் கொள்கிறார்கள் என்பது முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விஷயமாகும். இது ஓர் அற்புத உண்மை. ஏனென்றால், பல நாடுகளைச் சேர்ந்த மக்களின் இதயத்தில் நம்பிக்கை ஒளியை ஊட்டும் ஸ்தாபனமாக ஐ. நா. விளங்குவதை இதுகாட்டுகிறது. உலக மக்கள் ஐ. நா. ஸ்தாபனத்தைச் சமாதானத்துக்கும் நல்லுணர்வுக்குமான ஒரே சுருவியாகவும், போரையும் ஆக்கிரமிப்பையும் முடி வுக்குக் கொண்டு வருவதற்கு நம் வசம் உள்ள ஒரே நிறுவனமாகவும் கருதுகிறார்கள். ஐ. நா. வுக்குத் தோல்வி ஏற்படும் போது நம்மில் பலருக்கு உண்டாகும் கோபமும் வேதனையுமே அந்த நிறுவனத்துக்குக் கொடுக்கப்படும் மிகச் சிறந்த பாராட்டாகும். போரைத் தவிர்த்து அமைதியை நிலை நாட்டுவதற்கும், ஆக்கிரமிப்பை ஒழித்து நீதியை நிலை நிறுத்துவதற்கும். கொடுங்கோலனின் முன்னேற்றத்தை முடிவுக்குக் கொண்டு வரவும் உலகத்துக்கும் ஒரு நிறுவனம் தேவை என்பதே இதன் கருத்து. நாம் விரும்பும் பலன் ஐ. நா . மூலம் கிடைக்காமல் போகும்போது நமக்குக் கோபமும் வேதனையும் உண்டாவதற்கு இந்த உயர் நம்பிக்கை தான் காரணம். உலக அமைதியும் நல்லுணர்வும் மிகமிக அவசியம் என்பதில் நமக்குள்ள நம்பிக்கையை வலுப்படுத்திக் கொள்வதன் மூலம் ஐ. நா.வை வலுவாக்க வேண்டும். இதற்காகவே ஐ. நா. தினம் கொண்டாடுகிறோம். கலைஞன் வாசிக்காவிட்டால் கூட, யாழ் யாழ்தான்; அதுபோலவே, பட்டை தீட்டாவிட்டாலும் வைரம் வைரம் தான். உன்னதக் குறிக்கோளுடன் இன்று நம் வசம் உள்ள ஒரே நிறுவனம் ஐ. நா. வாகும். அதன் தோல்விகளும் பலவீனங்களும் அந்த நிறுவனத்தின் அவசியத்தையோ, முக்கியத்தையோ குறைக்கவில்லை; குறைக்கவும் முடியாது. அதே சமயம். சுற்றிலும் விபரீத எண்ணங்களும், அணு ஆயுதங்களும், பேராசைக் கண்களும் ஆக்கிரமிப்பு நோக்கமுங் கொண்ட நாடுகள் வஞ்சகப் பேச்சாலும் மிரட்டலாலும் மற்ற நாடுகளை அடிமைப் படுத்த நினைக்கும் நாடுகள்--நிறைந்திருக்கையில் இந்த நிறுவனம் அமைதிக்காகவே திட்டமிட்டு அமைதிக்காகவே விண்ணப்பம் விடுக்கிறது என்றால் இந்தக் காட்சி எல்லோருக்கும் பெருமதிப்பைக் கொடுப்பதாகும். படைக்கலங்களும் படை அணிவகுப்புகளும், படை தலைவர்களும், ராஜதந்திரிகளும், அணுகுண்டுகளும், ஹைட்ரஜன் குண்டுகளும் நிறைந்த ஓர் உலகத்தில் ஐ. நா. செயலாற்றி வருகிறது. வினோதமான காட்டுமிராண்டி நாடுகளில் ஞானிகள் அவதிப்படுவது போல் ஐ. நா. அவதிக்கும், அவமானத்திற்கும். அவதூருக்கும், தூஷணைக்கும் இலக்காகிறது. ஆயினும், காட்டு மிராண்டியை நாகரிகப்படுத்துவதற்கும் கோபக்காரர்களைச் சாந்தப்படுத்துவதற்கும், பேராசைக்காரர்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், இவர்களுக்கெல்லாம் அமைதியும் நீதியும் நிறைந்த வழியைக் காட்டுவதற்கும் ஐ. நா. விடாமல் முயன்று வருவது குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும். தனது முயற்சிகள் அனைத்திலும் ஐ. நா. வெற்றி அடைந்து விடவில்லை.

ஐ. நா. வைக் கேவலமாக நடத்தும் தென்னாப்பிரிக்கா, ரொடீஷியா, போர்ச்சுக்கல் போன்ற நாடுகள் சிலவும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் ஐ. நா. பின் வாங்க மறுக்கிறது; மனித மனத்தில் இயல்பாக உள்ள கண்ணியத்தைத் தூண்டுவதற்கு அது நம்பிக்கையோடு முயன்று வருகிறது. அரியதொரு சேவை ஆர்வத்துடன் இந்த நிறுவனம் சென்ற 22 ஆண்டுகளாக உலக சமாதானக் கொடியைத் தூக்கிப் பிடித்து வந்திருக்கிறது.

ஐ. நா. முதன் முதலில் நிறுவப்பட்டபோது நெடிய நோக்கில்லா மக்கள் உலக சமாதானத்துக்கு ஒரு நிறுவனம் ஏற்படுவது என்ற கருத்தையே ஏளனம் செய்திருக்கக்கூடும். பழைய சர்வதேசச் சங்கம் தோன்றி மறைந்த வேதனைமிக்க கதையின் நினைவுகள் அப்போது நிழலாடிக் கொண்டிருந்தன. சர்வதேசச் சங்கம் தோல்வியடைந்திருந்துங்கூட நிதானமும், ஆத்மீக உணர்வும் கொண்டு பெரியோர்கள் இரண்டாவது உலகப் போரால் சீர்குலைந்திருந்த ஓர் உலகத்தில் ஐ. நா. ஸ்தாபனத்தை நிறுவுவதற்குக் கூடினார்கள் என்றால் அது வியப்புத்தரும் விஷயம்தான். உண்மையில் ஐ. நா. பல நாடுகளின் தலைநகரங்களுடைய சிதைவுகளின் மேல் நிறுவப்பட்டதாகக் கூடச் சொல்லலாம். பிணங்களும், நடைப் பிணங்களும், ஊனமுற்றோரும், அங்கஹீனமுற்றோரும், பார்வை இழந்தவர்களும், அனாதைகளும் இத்தகையதொரு சூழ்நிலை யிலேயே இது உருப்பெற்றது. நீதியின் இறுதி வெற்றியிலிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையைத்தவிர வேறு எதுவும் அவர்களுக்கு இந்தத் திட்டத்தைத் துவக்குவதற்காகத் தைரியத்தையும், விவேகத்தையும் கொடுத்திருக்க முடியாது. புயலால் கொந்தளிக்கும் கடலிலே அபாயம் நிறைந்த ஒரு பிரயாணத்தை மேற்கொள்வது போலிருந்தது அது. கப்பல் சிதைவதைத் தவிர வேறு வழியேதும் இல்லாத நிலை. ஆம், பொங்கும் அலைகளையும் கடல் நீரின் பலமான போக்கையும், தைரியத்துடன் எதிர்த்து நின்று, உதவி தேவைப்படுவோருக்கு நம்பிக்கையும் ஆறுதலையும் கொடுத்து இந்தக் கப்பல் இருபத்திரண்டு ஆண்டுகளாகக் கடலிலே பிரயாணம் செய்து வருகிறது. இந்த ஸ்தாபனத்திற்குப் பாதகமான அம்சங்களையும், அதைச் சூழ்ந்து இருக்கும் அக்கறையின்மையையும் கருத்தில் கொண்டுதான் இதை மதிப்பிட வேண்டும். இப்படி செய்தால்தான் சரியாக மதிப்பிட முடியும்.

தாக்குவதற்கோ, தாக்குதல்களை எதிர்ப்பதற்கோ எப்போதுமே நாடுகள் ஆயத்தமாக இருக்கக் கூடிய நிலையிலே தூதுவர்களுடன் உளவாளிகளையும் அனுப்பத் தயாராக இருக்கும் நிலையிலே எல்லைகளைத் தகர்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், தலைநகரங்களில் ஆடம்பரமான வரவேற்புக்களுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் நிலையிலும், உலகம் இன்று இருக்கிறது. இந்த நிலையிலும் அந்த பிரம்மாண்டமான கட்டிடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தேசியக் கொடிகள் பறந்துகொண்டிருக்கின்றன. சம கௌரவத்தோடு பறக்கின்றன. பல்வேறு நாடுகளாக இருப்பினும் ஒரே உலகத்தைச் சேர்ந்தவை, தனித்தனியாக வாழ்கின்ற போதிலும் பொதுவான குறிக்கோளைக் கொண்டவை, பொதுநலனுக்காகத் திரட்டுவதற்கென வளமும் வலிமையும் கொண்டவை. மனிதனை மேலும் மகிழ்ச்சியுள்ள நிறைவாழ்வு வாழச் செய்யும் அச்சத்திலிருந்தும், பஞ்சத்திலிருந்தும், நோயிலிருந்தும், அறியாமையிலிருந்தும், வன்முறையிலிருந்தும், காட்டுமிராண்டித்தனத்திலிருந்தும் விடு படச் செய்யவும் சுருங்கச் சொன்னால் மனிதனுக்கு உரியது எதுவோ அதைக் கொடுக்க ஒரு மனிதன் என்ற கௌரவத்தைக் கொடுக்கும் பொதுவான--சிறப்பான பணிக்காகப் பல்வேறு நாடுகளின் தனிப்பட்ட ஆற்றலை ஒன்று சேர்க்கும் பொருட்டுப் போரை ஒழித்து அமைதியை நிலைநாட்டி, நட்பையும் தோழமையையும் உருவாக்கி வளர்த்து ஒருவருக்கொருவர் உணர்ந்து மதித்து, நடக்கக்கூடிய வகையில் உலகையே மேலும் சிறப்புறச் செய்யும் புனிதமான பணியில் பங்கு வகிப்பவை என்று உலகுக்குப் பறைசாற்றுகின்றன. மனிதனை மிருகமாக்குவதும், சோலை வளங்களைப் பாலைவனங்களாக்குவதும், நகரங்களைச் சிதைவுகளாக்குவதும், சுபிட்சத்தை வறுமையாக்குவதும் ஆக்கிரமிப்பாளரைத் தவிர வேறு யாராகத்தான் இருக்க முடியும்? இத்தகையதொரு ஆக்கிரமிப்பாளரைக் கண்டுபிடிப்பதுதான் ஐ. நா. வின் நோக்கம். ஏனென்றால், அவன் தனது உருவத்தையும், சொல்லையும் மாற்றக் கூடிய கபடமானவன்; அவனைக் கண்டுபிடித்து, வெளிக் கொணர்ந்து மற்றவர்களின் நல்லெண்ணத்தால் கிடைக்கும் ஆற்றலைச் சேர்ந்து அவனை இந்த முயற்சியிலிருந்து தடுக்கும் பொருட்டு ஐ. நா. விழிப்புடன் இருக்க வேண்டும். இது எளிதான காரியமல்ல. அபாயங்கள் பல நிறைந்த ஒரு வேலை. ஆற்றலும் தியாகமும் தேவைப்படும் ஒரு வேலை இது. தோல்விகளும். கண்டனமும், குற்றச்சாட்டுகளும் இருந்தும்கூட இந்தப் போராட்டத்தை ஏற்று நடத்த வேண்டிய படைவீரர்கள் இருக்கிறார்கள் என்பதை இதன் 22 ஆண்டுக்கால வாழ்க்கை தெளிவாக்குகிறது. நல்லுள்ளங்களுக்கு இது நம்பிக்கை அளித்திருக்கிறது. காலஞ்சென்ற போப் ஜான், உள்ளத்தில் உவகையுடன் கூறியிருக்கிறார். ஐ. நா. ஸ்தாபனத்தின் பணிகளில் பிரம்மாண்டமான அளவுக்கும் அவற்றின் புனிதத் தன்மைக்கும் ஏற்ப இந்த ஸ்தாபனத்தின் அமைப்பும் அது பின்பற்றும் வழிமுறைகளும் வளர வேண்டும் என்பது தான் நமது மனப்பூர்வமான விருப்பம். ஒவ்வொரு மனிதனும் மனிதன் என்ற முறையில் தனக்குள்ள கௌரவத்தி லிருந்து உருவாகும் உரிமைகளைப் பயனுள்ள விதத்தில் பாதுகாக்கும் தன்மையை இந்த ஸ்தபனத்தில் காணக் கூடிய நாள் வரக்கூடும்."

மனிதன் நன்னெறிகளை மறுக்கிறது. போர், அறிஞர்களும் ராஜதந்திரிகளும், கலிஞர்களும், மதக்குருக்களும், எல்லாவற்றிற்கும் மேலாக வெற்றி நடை போட்டு வரும் படைத் தளபதிகளும் போரைக் கண்டிக்கிறார்கள். போர் கொடியது என்றும், மனித கௌரவத்தை மறுக்கிறது என்றும் அவர்கள் கண்டனம் செய்கிறார்கள். இருப்பினும் போருக்குப் பின் போர் ஏற்பட்டது. ஏனென்றால், போர்க்களத்தைவிடச் சிறந்ததொரு அரங்கு இருக்கவில்லை. தகராறைத் தீர்ப்பதற்கு வேட்டுச் சத்தத்தைவிடச் சிறந்ததொரு வாக்குவாதம் இருக்கவில்லை. தகராறைத் தீர்த்து உரிமையை நிலைநாட்ட வேறு வழிபிறக்கவில்லை.

ஐ.நா ஸ்தாபனம் இன்றைய அரங்காக விளங்குகிறது. இது முற்றிலும் போதுமானது என்று சொல்ல முடியாது. ஆனால் பேச்சுக்களினாலும் அதன்படி நடந்து செயல் புரிவதனாலும் போரைத் தவிர்த்துத் தகராறைத் தீர்ப்பதற்கான ஒரே அரங்காக இருக்கிறது. உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் தங்களைப் பிரிக்கும் பிரச்சினைகளை ஆராய்கிறார்கள். உலக மக்கள் முன் தங்கள் நிலையை எடுத்துக் கூறுகிறார்கள். மனிதர்களைக் கொலை செய்வதற்குப் பதிலாகத் தங்கள் நிலைக்காக வாதாடுகிறார்கள்.

உறுப்பு நாடுகள் தங்களுக்கிடையே உண்டான உறவு முறைகளில் பின்பற்ற வேண்டிய நெறியை ஐ.நா வகுக்கிறது.

தகராறுகளைத் தீர்ப்பதற்காக ஐ.நா. ஸ்தாபனம் சமாதானத் தூதுவர்களை அனுப்புகிறது. உறுப்பு நாடுகள் தகராறுகளைத் தீர்ப்பதற்காக இந்த முறையை ஏற்றுக் கொண்டுள்ளன என்பதே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனென்றால், போரை ஒழிக்க வேண்டும் என்பதைக் கொள்கையளவிலாவது ஏற்றுக் கொள்ள உறுப்பு நாடுகள் ஆய்த்தமாக இருப்பதைத்தான் இது எடுத்துக் காட்டுகிறது.

மனப்பூர்வமான உணர்வு இல்லாமை, வல்லரசு மண்டலங்களின் செல்வாக்கு, உறுதியின்மை, உறுதி கொள்வதில் காலதாமதம் ஆகியவை இந்த முறையைக் குலைத்துப்போர் மூளச் செய்கின்றன. ஆனால், ஐ.நா. வலுப்படுத்தப்படுமேயானால் உலக மக்கள் அனைவரும் அதன் நன்னெறிகளுக்குப் நிற்பார்களேயானால் அமைதிக்காகப் பக்கபலமாக போராடுமாறு தங்கள் நாடுகளை வற்புறுத்துவார்களேயானால், இதனால் ஏற்படக்கூடிய விபரீத விளைவுகளைப் பெருமளவு குறைக்க முடியும்.

ஐ.நா.வை வலுப்படுத்தி அதற்குப் பக்கபலமாக நிற்குமாறு ஒவ்வொருவருக்கும் வேண்டுகோள் விடுப்பதற்காகவே இன்றைய தினத்தைக் கொண்டாடுகிறோம். மதிப்புக்குரிய டாக்டர் ராதாகிருஷ்ணன் சுட்டிக் காட்டியிருப்பதைப் போல "புதிதாய் உருவாகிவரும் உலக சமுதாயத்திற்கு ஆத்மாவை, மனச்சாட்சியைக் கொடுக்க முடியும் என்று" ஐ.நா.நம்புகிறது.

ஆனால், ஐ,நா, ஸ்தாபனம் போரைத் தடுத்து அநீதியை ஒழிக்கும் திறமையுள்ள ஸ்தாபனமாக மாறவேண்டுமென்றால், ஒரு தடவை லுட்ரோ வில்சன் குறிப்பிட்டுள்ளது போல அது இமைப்பொழுதும் உறங்காத கண்ணாக இருக்க வேண்டும்; எங்கும் விழிப்புடனும் கவனத்துடனும் இருக்கும் கண்ணாகத் திகழ வேண்டும்.

ஐ.நா. ஸ்தாபனம் வலிமையற்றது. ஆதலால் அதைப் பராமரிக்க வேண்டாம் என்று வாதாடுவது, அந்தக் கண்ணையும் குருடாக்குவதற்கு ஒப்பாகும். பிறகு இருளில் அலைந்து திரிந்து அழிவைத்தான் வரவேற்க வேண்டியிருக்கும். ஐ. நா. வின் அவசியத்தைச் சுட்டிக் காட்டுவதற்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஸ்ரீ ஐஸன்ஹோவர் கூறியதைவிட வேறு எதைத்தான் ஆதாரமாகக் காட்ட முடியும்? வெற்றிக்கொடி நாட்டிய வீரரான அவர் கூறுகிறார்; படை பலத்தைப் பயன்படுத்தித் தேசத் தகராறுகளைத் தீர்க்கலாம் என்று ஐ. நா. ஸ்தாபனம் எப்போதாவது ஒப்புக் கொண்டு விட்டால் அப்போது அந்த ஸ்தாபனத்தின் அடிப்படையையும், உலக முறைமை ஒன்றை உருவாக்குவதற்கான நமது சிறந்த நம்பிக்கையையும் அழித்திருப்போம்--அது எல்லோருக்குமே அழிவாகத்தான் இருக்கும்."

ஐ. நா. வின் உடன் பிறந்த குறைகளையும், பிறகு சேர்ந்த குறைகளையும் நன்கு உணர்ந்திருந்த பண்டித் ஜவாஹர்லால் நேரு, ஐ. நா. வுக்காக மிகப் பலமாக வாதாடினார். "ஐ. நா. வின் இயல்பை மாற்ற முயன்றால் அமைதிக்காகப் பாடுபடும் மேலும் வலுவான ஒரு அமைப்பை இதனால் உருவாக்க முடியாது. ஏற்கெனவே இருக்கும் சிறந்த ஒரு அமைப்பைக் குலைப்பதாகத்தான் அதற்குப் பொருள். இதற்குப் பதிலாக வேறு எதையும் உருவாக்க முடியாது.

ஆதலால்தான் இந்த ஸ்தாபனத்தை வலுப்படுத்தி உள்ள விவகாரங்களில் அதிகாரம் படைத்த ஒரு அமைப்பாக மாற்ற வேண்டுமே ஒழியப் போர் வெறியர்களின் வெறியாட்டத்தை அழிக்கக் கூடிய நிலையில் உலகை விட்டு விட வேண்டாம் என்று சிந்தனையாளர்கள் அனைவரும் எல்லோரையும் கேட்டுக் கொள்கிறார்கள். ஐ. நா. தலைமைக் காரியதரிசி ஊதாண்ட் கூறியிருப்பதைப் போல "எவ்வளவு வலிமை இருப்பினும், எவ்வளவு செல்வம் கொழிப்பினும் எந்த ஒரு நாடும் இன்று தன்னிறைவு பெற்றதாக இருக்க முடியாது."

தனித்து வாழ்வதோ, மற்ற நாடுகளின் சிதைவுகளுக்கு மேல் இருப்பதோ சாத்தியமல்ல என்பதைப் பல நாடுகளும் இப்போது உணர்ந்துள்ளன. மற்ற நாடுகளுடன்தான் வாழ முடியும்; மனித சகோதர உணர்வு எனும் நன்னெறியை ஏற்று அதன்படி நடந்தால்தான் இது சாத்தியமாகும்.

ஐ. நா. ஸ்தாபனம் பலவீனமாக இருந்துங்கூடப் பல பகுதிகளில் போரைத் தடுத்திருக்கிறது. தகராறுகளைப் பரவவிடாமல் தடுத்திருக்கிறது. அமைதியைத் துரிதமாக நிலை நாட்டியிருக்கிறது. ஆத்திரமடைந்த நாடுகளுக்கு ஆறுதல் சொல்லி அமைதியூட்டுவதற்காகக் காவல் நிலைகளையும், திட்டங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையேயும்; ஸீரியாவுக்கும் ஜார்டனுக்கும் இடையேயும் ஐ.நா. அனுமதிக் கண்காணிப்பு ஸ்தாபனம் 1949 ஆம் ஆண்டிலிருந்து கண்தாணித்து. வருகிறது. சைப்ரஸ். வாழ் கிரேக்கர்களுக்கும், சைப்ரஸ் வாழ் துருக்கியர்களுக்கும் இடையே 1964 ஆம் ஆண்டிலிருந்தே 4,000 பேர் கொண்ட அனுமதிப் பராமரிப்புப்படை சமாதானத்தை நிலைநாட்டி வருகிறது. காஷ்மீரில் போர் நிறுத்தத்தோடு நெடுகிலும் ராணுவப் பார்வையாளர் குழு இருக்கிறது.

இவ்வாறாக இந்த ஸ்தாபனம் படிப்படியாகத் தனது மதிப்பை நிரூபித்து வருவதையும், விவேகமுள்ள எல்லாருடைய விசுவாசத்தை ஈர்த்து வருவதையும் காணலாம். உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் இயங்கிவரும் ஐ. நா.ஸ்தாபனம் சமாதான லட்சியத்துக்காகத் தனது அளவற்ற திறமைகளையும் ஆதார வசதிகளையும் பயன்படுத்துவதற்கு மனிதன் வகுத்துள்ள மிகச் சிறந்த சர்வ தேச--ஒத்துழைப்பு ஸ்தாபனமாகும் என்பதைக் காலம் எடுத்துக் காட்டியிருக்கிறது.

இந்த ஸ்தாபனத்தின் தடுப்புச் சக்தியானது நமது ஆதரவைப் பெற்றுவிட்டிருக்கிறது. சுகாதாரம், கல்வி, மனித உரிமைகள், சுதந்திரம், ஆகியவற்றுக்கான பல்வேறு பிரிவுகள் மூலம் இந்த ஸ்தாபனத்துக்குள்ள குணப்படுத்தும் சக்தியானது நமது அன்புக்குப் பாத்திரமாகி விட்டிருக்கிறது.

போதிய ஆதார வசதிகள் படைத்திராத நாடுகளுக்கு உதவி புரிந்து வழிகாட்டுவதற்காகவும் அவற்றை வளப்படுத்துவதற்காகவும் அண்டை நாடுகளும் சரி; எங்கே இருக்கும் நாடுகளும் சரி, எல்லா வாழ்க்கைத் துறைகளையும் சேர்ந்த நியுணர் குழுக்களை அனுப்பி வைக்கின்றன. எங்கெங்கே தேவை இருக்கிறதோ அங்கெல்லாம் மனிதனின் துன்பத்தை, அது உடலை வாட்டும் துன்பமாக இருந்தாலும் சரி, மனத்தில் ஏற்படும் இன்னலாக இருந்தாலும் சரி, அதை அகற்றுவதற்கும் குறைப்பதற்கும் ஒழிப்பதற்கும் கைகொடுத்து உதவத் தயாராயிருக்கும். ஏழை மக்களுக்கு இயற்கை அன்னை அதன் செல்வங்களைக் கொடுக்கும்படிச் செய்வதற்கும் கிரகித்துக் கொள்ளக் கூடியவர்களுக்கு வீரத்தைப் புகட்டுவதற்கும், நலிந்த மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்கும் எல்லாருக்கும் மனிதாபிமானத்தையும் காண்பிப்பதற்குத் தயாராயிருக்கும் ஐக்கிய நாடுகள் குழுவைக் காணலாம்.

ஐ.நா. ஸ்தாபனத்தின் சமாதானங்காணும் முயற்சிகளில் ஆர்வமில்லாதவர்கள் கூட, மேம்பாடு குன்றிய, மேம்பாடடைந்து வரும் நாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அது புரிந்து வருகிற பணியைப் பாராட்டத்தான் செய்கிறார்கள்.

சில சமயங்களில் ஐ. நா. வின் சாதனைகள் விஷயத்தில் தமக்குப் பூரண திருப்தி ஏற்படாவிட்டால்கூட ஐ. நா. வுக்கு அதன் எல்லா முயற்சிகளிலும் நாம் தொடர்ந்து ஆதரவளித்து வந்திருக்கிறோம். ஏனென்றால் ஜவஹர்லால் நேரு கூறியிருப்பதுபோல, ஐ. நா. ஸ்தாபனம் பலவீனமடைந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் நாம் பலவீனமாயிருப்பதுதான், நாடுகள் பலவீனமாயிருப்பதுதான், அவை கொள்கை பலமற்றவையாய் இருப்பதுதான், அவை நேர்மையற்றவையாய் இருப்பதுதான் என்பதை நாம் உணருகிறோம். நமது மன உறுதியும் பலமும் மட்டுமே மனித குலத்தின் இந்த நம்பிக்கைக்கு, உலக நீதியின் அரணுக்கு உயிர் நாடியாக இருக்க முடியும். இந்நாட்டிலுள்ள நாம் ஐ. நா. வைப் பலப்படுத்த உத்தேசித்திருக்கிறோம். எனவேதான் இந்தக் கொண்டாட்டம். எனவே தான் இந்த வேண்டுகோள். ஐ. நா. வை நன்கு உணர்ந்து கொள்ளும்படி மக்களுக்கு உதவுங்கள். இந்த ஸ்தாபனத்தின் பின்னணி வரலாறு, அமைப்பு ஆகிய விவரங்கள், அனைத்தையும் மக்கள் அறிந்துகொள்ளும்படிச் செய்து விட்டால் சமாதானத்தையும், நீதியையும், இணக்கத்தையும், மகிழ்ச்சியையும், மறக்க முடியாத, ஒருவகை லட்சியத்தையும் பிரச்சாரம் செய்யும் துணிவுடைய, ஆனால் தோல்வியடையாத இந்த ஸ்தாபனத்தையும் அதில் பொதிந்துள்ள கொள்கையையும் எல்லாரும் பின்பற்றி, அதை மனிதகுலத்துக்குக்கான மாபெரும் அன்பளிப்பாக வாழ்த்தி வரவேற்பார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. தமிழர்களாகிய நமக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே "யாதும் ஊரே! யாவரும் கேளீர்" என்பது நமது கவிஞர் பாடி இதைத்தான் கற்பித்தார். ஆகையால், நாம் இந்த ஸ்தாபனத்துக்கு உறுதுணையாக நின்று வழிவழியாய் வந்த லட்சியத்தை எய்துவதில் உதவி புரிவோம்.