உண்மை விளக்கம்-வெண்பா 41-53

விக்கிமூலம் இலிருந்து

சித்தாந்தச் சாத்திரங்கள் வரிசை[தொகு]

உண்மை விளக்கம்[தொகு]

ஆசிரியர்: திருவதிகை மனவாசகங் கடந்தார்[தொகு]

வெண்பா 41 (சிவனருளாவி )[தொகு]

சிவனரு ளாவி திரோதமல மைந்து () சிவன் அருள் ஆவி திரோதம் மலம் ஐந்தும்

மவனஞ் செழுத்தி னடைவா- மிவனின்று () அவன் அஞ்சு எழுத்தின் அடைவாம்- இவன் இன்று

நம்முதலா வோதிலரு ணாநாடாது நாடுமருள் () நம் முதலா ஓதில் அருள் நாடாது நாடும் அருள்

சிம்முதலா வோதுநீ சென்று. () சிம் முதலா ஓது நீ சென்று.



வெண்பா 42 (அண்ணல் )[தொகு]

அண்ணல் முதலா வழகா ரெழுத்தைந்து () அண்ணல் முதலா அழகு ஆர் எழுத்து ஐந்தும்

மெண்ணி லிராப்பகலற் றின்பத்தே- நண்ணி () எண்ணில் இராப் பகல் அற்று இன்பத்தே- நண்ணி

யருளா னதுசிவத்தே யாக்கு மணுவை () அருளானது சிவத்தே ஆக்கும் அணுவை

யிருளா னுதுதீர வின்று. () இருளானது தீர இன்று.


வெண்பா 43 (ஆதிமலம் )[தொகு]

ஆதி மலமிரண்டு மாதியா யோதினாற் () ஆதி மலம் இரண்டும் ஆதியாய் ஓதினால்

சேதியா மும்மலமுந் தீர்வாகா- போத () சேதியா மும் மலமும் தீர்வு ஆகா- போதம்

மதிப்பரிதா மின்பத்தே வாழலா மாறி () மதிப்பு அரிதாம் இன்பத்தே வாழலாம் மாறி

விதிப்படியோ தஞ்செழுத்து மே. () விதிப்படி ஓது அஞ்சு எழுத்துமே.


வெண்பா 44 (அஞ்செழுத்தே )[தொகு]

அஞ்செழுத்தே யாகமு மண்ண லருமறையு () அஞ்சு எழுத்தே ஆகமும் அண்ணல் அரு மறையும்

மஞ்செழுத்தே யாதிபு ராணமனைத்து - மஞ்செழுத்தே () அஞ்சு எழுத்தே ஆதி புராணம் அனைத்தும் - அஞ்சு எழுத்தே

யானந்தத் தாண்டவமு மாறாறுக் கப்பாலா () ஆனந்தத் தாண்டவமும் ஆறு ஆறுக்கு அப்பாலாம்

மோனந்த மாமுத்தி யும். () மோனந்த மா முத்தியும்.


வெண்பா 45 (முத்திதனை )[தொகு]

முத்தி தனையடைந்தோர் முந்துபழம் போதங்கி () முத்தி தனை அடைந்தோர் முந்து பழம் போது அங்கி

வித்தகமாம் வீணை யிவையிற்றி- னொத்த () வித்தகமாம் வீணை இவை இற்றின் - ஒத்த

விரதமண வெம்மை யெழில்நாதம் போல () இரதம் மணம் வெம்மை எழில் நாதம் போல

விரவுவரென் றோதும் விதி. () விரவுவர் என்று ஓதும் விதி.


வெண்பா 46 (தத்துவங்களெல்லா )[தொகு]

தத்துவங்க ளெல்லாம் சகசமா வான்மாவிற் () தத்துவங்கள் எல்லாம் சகசமா ஆன்மாவில்

பெத்தத்தில் நிற்கின்ற பெற்றிபோல்- முத்திதனிற் () பெத்தத்தில் நிற்கின்ற பெற்றி போல்- முத்திதனில்

சித்தமல மற்றார் செறிந்திடுவ ரென்றுமறை () சித்த மலம் அற்றார் செறிந்திடுவர் என்று மறை

சத்தியமா வோதியிடுந் தான். () சத்தியமா ஓதி இடும் தான்.


வெண்பா 47 (ஆதவன்றன் )[தொகு]

ஆதவன்றன் சந்நிதியி லம்புலியி னார்சோதி () ஆதவன் தன் சந்நிதியில் அம்புலியின் ஆர் சோதி

பேதமற நிற்கின்ற பெற்றிபோல்- நாதாந்தத் () பேதம் அற நிற்கின்ற பெற்றி போல்- நாதாந்தத்து

தண்ணல் திருவடியி லான்மா வணைந்தின்பக் () அண்ணல் திருவடியில் ஆன்மா அணைந்து இன்பக்

கண்ணி லழுந்தியிடுங் காண். () கண்ணில் அழுந்தியிடும் காண்.


வெண்பா 48 (சென்றிவன் )[தொகு]

சென்றிவன்றா னொன்றிற் சிவபூர ணஞ்சிதையு () சென்று இவன் தான் ஒன்றில் சிவ பூரணம் சிதையும்

மன்றவன்றா னொன்றுமெனி லந்நியமா- மின்றிரண்டு () அன்று அவன்தான் ஒன்றும் எனில் அந்நியமாம்- இன்று இரண்டும்

மற்றநிலை யேதென்னி லாதித்த னந்தன்விழிக் () அற்ற நிலை ஏது என்னில் ஆதித்தன் அந்தன் விழிக்

குற்றமற நின்றதுபோற் கொள். () குற்றம் அற நின்றது போல் கொள்.


வெண்பா 49 (வாக்குமன )[தொகு]

வாக்கு மனமிறந்த வான்கருணை யாளனுருத் () வாக்கு மனம் இறந்த வான் கருணையாளன் உருத்

தாக்கறவே நிற்குந் தனிமுதல்வா- நீக்காப் () தாக்கு அறவே நிற்கும் தனி முதல்வா- நீக்காப்

பதியினைப்போ னித்தம் பசுபாச மென்றாய் () பதியினைப் போல் நித்தம் பசுபாசம் என்றாய்

கதியிடத்து மூன்றினையுங் காட்டு. () கதி இடத்து மூன்றினையும் காட்டு.



வெண்பா 50 (முத்திதனின் )[தொகு]

முத்திதனின் மூன்று முதலு மொழியக்கேள் () முத்திதனில் மூன்று முதலும் மொழியக் கேள்

சுத்தவநு போகத்தைத் துய்த்தலணு- மெத்தவே () சுத்த அநுபோகத்தைத் துய்த்தல் அணு- மெத்தவே

யின்பங் கொடுத்தலிறை யித்தைவிளை வித்தல்மல () இன்பம் கொடுத்தல் இறை இத்தை விளைவித்தல் மலம்

மன்புடனே கண்டுகொளப் பா. () அன்புடனே கண்டுகொள் அப்பா.


வெண்பா 51 (அப்பாவிம் )[தொகு]

அப்பாவிம் முத்திக் கழியாத காரணந்தான் () அப்பா இம் முத்திக்கு அழியாத காரணம் தான்

செப்பா யருளாலே செப்பக்கே- ளொப்பில் () செப்பாய் அருளாலே செப்பக் கேள் - ஒப்பில்

குருலிங்க வேடமெனக் கூறிலிவை கொண்டார் () குரு லிங்க வேடம் எனக் கூறில் இவை கொண்டார்

கருவொன்றி நில்லார்கள் காண். () கரு ஒன்றி நில்லார்கள் காண்.


வெண்பா 52 (கற்றாமனம் )[தொகு]

கற்றா மனம்போற் கசிந்துகசிந் தேயுருகி () கற்றா மனம் போல் கசிந்து கசிந்தே உருகி

யுற்றாசான் லிங்க முயர்வேடம் - பற்றாக () உற்று ஆசான் லிங்கம் உயர் வேடம்- பற்றாக

முத்தித் தலைவர் முழுமலத்தை மோசிக்கும் () முத்தித் தலைவர் முழு மலத்தை மோசிக்கும்

பத்திதனில் நின்றிடுவர் பார். () பத்தி தனில் நின்றிடுவர் பார்.


வெண்பா 53 (வாழ்ந்தேனருட் )[தொகு]

வாழ்ந்தே னருட்கடலே வற்றாப் பவக்கடலில் () வாழ்ந்தேன் அருள் கடலே வற்றாப் பவக் கடலில்

வீழ்ந்தே யலையாமல் மேதினியிற் - சூழ்ந்துவிடா () வீழ்ந்தே அலையாமல் மேதினியில்- சூழ்ந்து விடா

வெண்ணெய்ச் சுவேதவன மெய்கண்ட நாதனே () வெண்ணெய்ச் சுவேத வன மெய்கண்ட நாதனே

யுண்மைத் தவப்பய னுற்று. () உண்மைத் தவப் பயன் உற்று.





நூலாசிரியர் சிறப்பு:



வெண்பா (மன்னதிகை )[தொகு]

மன்னதிகை வாழு மனவாசகங் கடந்தான் () மன் அதிகை வாழும் மன வாசகம் கடந்தான்

மின்னனையார் வாழ்விலுறா மெய்கண்டான்- பன்மறைகள் () மின் அனையார் வாழ்வில் உறா மெய்கண்டான்- பல் மறைகள்

வண்மைதரு மாகமநூல் வைத்தபொருள் வழுவா () வண்மை தரும் ஆகம நூல் வைத்த பொருள் வழுவா

நுண்மைவிளக் கஞ்செய்தா னுற்று. () நுண்மை விளக்கம் செய்தான் உற்று.



உண்மை விளக்கம் முற்றும்[தொகு]

பார்க்க:[தொகு]

உண்மைவிளக்கம்


உண்மை விளக்கம்-வெண்பா 01-10காப்பு

உண்மை விளக்கம்-வெண்பா 11-20

உண்மை விளக்கம்-வெண்பா 21-30

உண்மை விளக்கம்-வெண்பா 31-40

சித்தாந்தச் சாத்திரங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=உண்மை_விளக்கம்-வெண்பா_41-53&oldid=21648" இலிருந்து மீள்விக்கப்பட்டது