உமார் கயாம்/20. நள்ளிருளில் ஒருவன் நட்பு வேண்டுமென்றான்!

விக்கிமூலம் இலிருந்து

20. நள்ளிருளில் ஒருவன் நட்பு வேண்டுமென்றான்!

அன்று இரவு உமார் வெகுநேரம் வரை தன் புத்தகங்களிலேயே ஆழ்ந்திருந்தான். தன்னுடன், பணப்பெட்டி தூக்கிக்கொண்டு கூட வந்த அந்தக் கரிய அடிமை வழக்கம்போலத் தூங்கவில்லை என்பதைக் கவனித்தான். அவன் முணுமுணுத்துக்கொண்டே முடங்கிக் கிடந்தான். இரண்டாவது நிழலுருவம் ஒன்று அந்த அடிமையின் அருகிலே வந்ததும், இரண்டு பேரும் மெல்லிய குரலிலே பேசிக்கொண்டிருந்தார்கள். உமாருக்கு அதன் பிறகு வேலை ஒடவில்லை. தன் இருக்கையிலிருந்து எழுந்தான். அதைக் கண்ட அந்த அடிமை.

“யா! சூலாஜா அவர்களே! இன்றைய இரவு, பெரிய மாயத்தன்மையுடையதாக இருக்கிறது. தங்கள் அடிமை நாய் அச்சங் கொள்கிறது” என்றான்.

மற்றொருவன், “தயவுசெய்து, தங்கள் காலடியின் அருகிலேயே எங்களையமர்ந்திருக்க அனுமதியுங்கள். இரவு எங்களைப் பயமுறுத்துகிறது.” என்றான். எரிந்துகொண்டிருந்த விளக்கின் அருகிலே நகர்ந்து வந்து, அந்தப் புதிய வேலைக்காரன் சொல்லத் தொடங்கினான். கடைத் தொழுகைக்குப் பிறகு அவன் பாழடைந்து கிடந்த இடங்களின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தானாம். ஒரு மேட்டின் மீது பெரும் வெளிச்சமாயிருந்ததாம். அது நிலவின் வெளிச்சம் அல்ல. ஏனெனில் நிலவு அன்று கிடையாது அமாவாசை அந்த வெளிச்ச வட்டத்தின் மத்தியிலே ஒரு மனித உருவம் தோன்றியது அருகில் நெருங்கிப் பார்த்தபொழுது வேறு இரு உருவங்கள் தெரிந்தன.

அரை நிர்வாணமாக இருந்த ஒரு மனித உடல், நெளியும் பாம்பைப் போல் தரையில் நகர்ந்து கொண்டிருந்தது. பழுப்பு நிறமுடைய பெரிய கழுகு ஒன்று அந்த ஒளி வட்டத்தைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டே, வந்ததாம். இவ்வாறு அவன் சொல்லி வரும்பொழுதே, அதைக் கண்ணால் பாராத அந்த அடிமை தொடர்ந்து சொல்லத் தொடங்கினான். நேரே அவன் பார்க்காவிட்டாலும், அந்தப் புதிய வேலைக்காரன் ஏற்கெனவே கூறியதை அவன் திருப்பிச் சொன்னான்.

“அந்தப் பெரிய மேட்டிலே இருந்த அந்த வெள்ளைப் பிசாசு, கழுகுடன் பேசியது. அது பேசிக்கொண்டிருந்த போதே கீழே கிடந்த அரை நிர்வாணஉருவம் ஒரு பாம்பாக மாறிவிட்டது. அங்கே ஒரு கத்தியும் இருந்தது. இது ஓர் அதிசய மாய வித்தையல்லவா? நினைக்கும்போதே பயமாயிருக்கிறது” என்றான் நீக்ரோ அடிமை,

வேலைக்காரன் தொடர்ந்தான்; “நகர்ந்து வந்து கொண்டிருந்ததே உருவம், அதுதான் வயிறு நிறைய மண்ணுண்ட ஆட்டக்காரன். அறிவின் ஆசானே! தங்கள் பெயர் அங்கு பேசப்படுவதையும் கேட்டோம். எத்தனை பெரிய மாயவித்தை அவர்களுடையது? என்றான்.

“எங்கே?

“அதோ அங்கே, அத்தப் பெரிய மணல் மேட்டிலே!”

“ஒரு விளக்கெடுத்துவா. எனக்கு வழிகாட்டு. அங்கே போகவேண்டும்” என்றான் உமார். யாரோ, அந்த மணல் மேடுகளின் ஊடே அந்த ஆட்டக் காரனைப் புதைத்துக் கொண்டு இருந்திருக்க வேண்டும். அதைப் பார்த்துவிட்டு ஏதோ உளறுகிறான் வேலைக்காரன் என்று உமார் எண்ணினான். ஆனால் பயப்பட்டுக் கொண்டிருக்கும் இரண்டு அடிமைகளையும் தன்னோடு ஓர் இரவு முழுவதும் வைத்துக் கொண்டிருக்க உமார் விரும்பவில்லை. அவர்களுக்கு வேலைக்கொடுக்க தீர்மானித்தான். அந்த வேலைக்காரன், உமார் கூறியபடி ஒரு கைவிளக்கை எடுத்துக் கொண்டு வந்தான். உமார் அவனைப் பின்தொடர்ந்தான். மற்றொரு அடிமை பயத்தால் உடம்பு கிடுகிடுக்க, உமாரையொட்டிய படியே தொடர்ந்து சென்றான். சிறிது தூரம் சென்ற பிறகு, ஓரிடத்தில் வளைந்து, குட்டிச் சுவர்களின் ஊடாகச் சென்று ஏற்கெனவே ஒரு பெரிய தெருவாக இருந்திருக்க வேண்டிய ஒரு பாதையில் வந்து நின்றார்கள். அங்கே நின்றதும், வேலைக்காரன் தன் கைவிளக்கை ஆட்டினான். அப்படி ஆட்டினால் அது இன்னும் நன்றாக எரியும் என்பதற்காக ஆட்டுபவன் போல் ஆட்டினான்.

“இன்னுங் கொஞ்ச தூரம்தான். சிறிது தூரம் சென்று வலது புறமாகத் திரும்பிப் போக வேண்டியதுதான். நான் இங்கேயே.... நிற்கிறேனே!” என்றான் விளக்கு வைத்திருந்த அந்தப் புதிய வேலைக்காரன். அவன் கையில் இருந்த விளக்கை வாங்கிக் கொண்டு உமார் நடந்தான். அதே சமயத்தில் பின்னால், அந்த இரண்டு வேலைக்காரர்களும் விழுந்தடித்துக் கொண்டு ஓடும் ஓசை கேட்டது. பக்கத்துக்குப் பக்கம் திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டே அவன் தன்னந்தனியாகச் சென்றான். அவ்வாறு செல்லும்போது தனக்கு நேரே உயரத்தில் மங்கலாக வெளிச்சம் ஒன்று தெரிந்ததைக் கண்டான்.

அந்த வெளிச்சம்! ஏற்கெனவே இருந்த ஒரு கோயிலின் இடிந்த குவியலின் மேல் தெரிந்தது. பகல் முழுவதும் சுற்றிக் கொண்டிருந்த உமார் இந்தப் பகுதியில் சுற்றியிருந்தபடியால் அதன் உயரப் போவதற்குரிய வழியைத் தேடுவது எளிதாக இருந்தது. அந்தக் குவியலின் உச்சியை அவன் அடைந்தபொழுது ஒரு சுவரின் வெடிப்பின் ஊடாக அந்த வெளிச்சம் வருவதைக் கண்டான். சாதாரண எண்ணெய் விளக்கின் ஒளியைக் காட்டிலும் அந்த வெளிச்சம் மிகுந்த ஒளிப்படைத்ததாயிருந்தது. அந்த ஒளிவட்டத்தின் இடையே உட்கார்ந்திருந்த அந்த மனிதன், உமாரின் வருகைக்காகக் காத்திருந்தவன் போல் எழுந்து நின்றான்.

“ஒருவன் போகிறான்! மற்றொருவன் வருகிறான்!” என்று அந்த மனிதன் கூறினான். உமாரைக் காட்டிலும் குட்டையாகவும், அடர்ந்த புருவமும், சுருண்ட மழித்த தாடியும் உடையவனாகவும் ளங்கிய அந்த மனிதன் அரபிக் காரர்களைப்போல் அவனுடைய அகன்ற தோள்களிலே ஒரு சால்வை போர்த்தியிருந்தான். ஆனால் அவனைப் பார்த்தால் ஓர் அராபியனைப் போல் தோன்றவில்லை.

தரையை நோக்கிக் குனிந்த அவன் கீழே கிடந்த அந்த ஆட்டக்காரனின் பிணத்தின் மேல் உமாரின் பார்வை படும்படி செய்தான். மார்பின் நடுவே பாய்ந்திருந்த ஒரு கத்தியின் பிடி மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. “அவனுடைய வேதனையைப் பொறுக்க முடியாமல் நான்தான் குத்தித் தீர்த்தேன்” என்றான் அந்த மனிதன்.

மேலே ஒரு கழுகு வட்டமிட்டுக் கொண்டிருந்தது. உமார் அதைக் கவனித்தான். “அது என்னுடைய கூட்டாளி உயர்ந்த இடங்களிலே அது என்னோடு வந்து சேர்ந்து கொள்ளும்” என்றான் அந்தக் குட்டை மனிதன்.

“நீ யார்?’ என்று கேட்டான் உமார்.

“மலைப்பிரதேசத்தைச் சேர்ந்தவன். ரே நகரவாசி” என்று பதில் கூறினான். அப்படிக் கூறும்பொழுது அவனுடைய ஒளி மிகுந்த கண்களிலே புது மின்னல் தோன்றியதுபோல் இருந்தது.

ரே என்பது பாரசீகத்தின் பனிமலைச் சிகரங்களின் ஊடே உள்ள மலைப்பிரதேசத்திலே யிருந்த ஒரு நகரம். இந்த மனிதன் ஒரு பாரசீகத்தவனாக இருக்கலாம். எனினும் அவனுடைய மொழி உச்சரிப்பு எகிப்தியர்களுடையதைப் போல் தோன்றியது. பல மொழிகளையும் இயல்பாகப் பேசக்கூடிய பயிற்சியுடையவனென்பதும் அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்து கொள்ள முடிந்தது.

“கூடார மடிப்பவனாயிருந்து, அரசரின் வானநூற்கலைஞனாகி இருப்பவன் நீ, அல்லவா? இப்பொழுது, இஸ்டாரின் கோயிலிலே நின்றுகொண்டு பலரும் பைத்தியம்