உமார் கயாம்/21. புதிய மதம் பரப்பப் புறப்பட்ட ஒரு கூட்டம்

விக்கிமூலம் இலிருந்து

21. புதிய மதம் பரப்பப் புறப்பட்ட ஒரு கூட்டம்

நிசாம் அல்முல்க் அவர்கள் வெகு தூரத்தில் இருந்து கொண்டே தன்னைக் கண்காணித்து வருவதை உமார் புரிந்து கொண்டான். மறுபடியும், நாடோடிகளான ஆட்டக்காரர்கள் தன் பாதையில் குறுக்கிடவில்லை; குறுக்கிடும்படி விடப்படவில்லை என்பதையும் உணர்ந்து கொண்டான். எப்பொழுதும் புன்சிரிப்புடன் கூடிய இந்து மதத்தினனான ஒரு கடிதம் எழுதுபவன், உமார் தன் கூடாரத்தில் தனியாக இருக்கும்பொழுது வந்து சாமர்கண்டிலும், பால்க் நகரிலும் நடக்கக்கூடிய விஷயங்களைப் பற்றியும் வதந்திகளைப் பற்றியும் சுல்தான் மாலிக்ஷா அவர்களின் நடவடிக்கைகளைப் பற்றியும் அடிக்கடி சொல்லுவான்.

வாரந்தோறும், நிசாம் அவர்களிடமிருந்து வரும் கடிதங்கள் அவனுக்கு மிகமிகப் பயன்பட்டன. பெரும்பாலும், இந்தக் கடிதங்களில் நிசாம் அவர்களின் வேலைத் திட்டங்களைப் பற்றிய செய்திகளைத் தெரிவித்தன. வரக்கூடிய ஆபத்துக்களை தவிர்த்து, பிறகு கொள்ளப்பட வேண்டிய கொள்கைகளைப் பற்றி அவை கூறின. இவ்வாறாக, மாலிக்ஷாவின் படைகள் புனித ஸ்தலமான ஜெருசலத்தைக் கைப்பற்ற வேண்டியது எவ்வளவு இன்றியமையாதது என்பதை உமார் உணர்ந்து கொண்டான்.

கோடிக்கணக்கான மத நம்பிக்கையுள்ளவர்களால், இஸ்லாத்தின் தலைவராகவும், பாக்தாது தேசத்தின் காலிப்பாகவும் கருதப்படும் அளவுக்கு மாலிக்ஷா மதிப்புடையவராகி விட்டார். ஏற்கெனவே மெக்கா மெதினா என்ற இரு புண்ணிய ஸ்தலங்களையும் துருக்கியர்கள் கைப் பற்றியாகி விட்டது. முறை கெட்ட அரசு செய்யும் கெய்ரோவின் காலிப் கையிலிருந்து மூன்றாவது புண்ணிய ஸ்தலமான ஜெருசலத்தையும் கைப்பற்றி மாலிக்ஷா அவர்களின் பெரிய சாம்ராஜ்யத்தில் சேர்க்கப்பட வேண்டியது மிக முக்கியமானது.

இதன் காரணமாகவே, மாலிக்ஷா அவர்கள் வடக்கேயுள்ள மதவிரோத்திகளான பைசாந்தியர்களை எதிர்த்தும் தம் படைகளைச் செலுத்த வேண்டியிருந்தது. புனிதமான இந்தப் போராட்டத்திலே இஸ்லாத்தின் மாபெரும் தலைவரான சுல்தான் அவர்கள் ஈடுபடும் வரையில், அவருடைய கொடியின் கீழ் படை திரண்டு கொண்டேயிருக்குமே தவிரக் குறையாது. சமவெளிப் பிரதேசங்களிலிருந்து, புதிது புதிதாகத் துருக்கிப் போர் வீரர்கள் வந்து கொண்டேயிருந்தனர். படையில் சேருவதற்காக மேற்கு நோக்கி மீண்டும் மீண்டும் நிசாம் வீரர்களை அனுப்பிக் கொண்டேயிருந்தார்.

உருவமில்லாத கம்பளி மயிர்களின் குவியல்களைச் சேர்த்து நூலாக்கித் தறியின் முன்னேயிருந்து கொண்டு துணிகளை நய்யும் நெசவாளியைப் போல், நிசாம் அவர்கள், இருந்த இடத்தில் இருந்து கொண்டே, இந்த சாம்ராஜ்யத்தை உருவாக்கும் பெரும் பணியில் ஈடுபட்டிருப்பதை உமார் மிக மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டான்.

“ஜெருசலத்தில் படையெடுக்கலாமா? நல்ல காலம்தானா?” என்று மாலிக்ஷா அவர்கள் கேட்டபொழுது, ‘ஆகா! இந்த மாதம் மிகப் பொருத்தமாக இருக்கிறது. தங்கள் கிரகத்தின் அருகிலேயே செவ்வாயும் வந்து நெருங்கியிருப்பதால், உடனே படையெடுக்க வேண்டியதுதான்” என்று சோதிடம் சொன்னான் உமார்.

அவன் கூறிய சோதிடம் உண்மை என்பதை மாலிக்ஷா நன்றாக அறிவார். இருப்பினும் உமார் படையெடுப்பை மறுத்திருந்தால் தன்னுடைய வான நூற் கலைஞரின் மேல் மிகமிக மதிப்பு வைத்திருந்த சுல்தான், நிச்சயமாகத் தன்னுடைய போர்த் திட்டத்தை மாற்றிக் கொண்டிருப்பார். அவ்வளவு தூரம் அவருக்கு உமார் மீது நம்பிக்கை யிருந்தது.

சுல்தானின் படைகள் அப்பொழுது அலெப்போ நகரின் செம்மண் வெளிப் பிரதேசத்தில் முகாமிட்டிருந்தன. ஜெருசெலத்தைக் கைப்பற்றுவதற்காகச் செல்லவிருந்த தளபதி அமீர் அஜீஸின் படைகளோடு தானும் செல்வதெனத் தீர்மானித்தான் உமார். அவன் மேற்குக் கடலைப் பார்க்க வேண்டுமென்று விரும்புவதாகவும் அதற்கு முன் எந்தக் கடற்கரையையும் அவன் பார்த்ததேயில்லையென்றும், மேலும் ஜெரூசலத்தில் உள்ள மசூதிக்கு யாத்திரிகனாகப் போகவேண்டுமென்றும் விரும்புவதாகவும் சுல்தான் மாலிக்ஷாவிடம் அவன் தெரிவித்தான். உண்மையில் அவன் நோக்கம் அவையல்ல. வழியில் கடந்து வந்த நகரங்கள் முழுவதும், அப்பொழுது தங்கியிருந்த அலெப்போ நகர் முழுவதும், சந்தை கூடுமிடம் எங்கும் அவன் விசாரித்துப் பார்த்தும் யாஸ்மியைப் பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்க வில்லை. மீஷித் நகரிலிருந்து ஓர் இளம் மனைவியுடன் வந்த துணி வியாபாரியைப் பார்த்ததாக அடையாளம் சொல்லக் கூடியவர் யாரையும் அவன் காணவில்லை. ஆகவே மேலும், ஜெருசலம் வரை சென்று அவளைத் தேட வேண்டுமென்பதே அவனுடைய நோக்கம்.

அலெப்போவிலிருந்து, தென்முகமாகச் செல்லும் பாதையிலே சென்றால், டமாஸ்கஸ் பட்டணத்திற்கும், பாலைவனத்தைக் கடந்தால் எகிப்துக்கும் போகலாம். இந்தத் தென் திசைப் பாதையில் சென்றால், யாஸ்மியைப் பற்றிச் செய்தி எதுவும் அறியலாம். இதுவே அவனுடைய திட்டம், டுன்டுஷைப் போல் செய்திகளைச் சேகரிக்கும் ஆற்றல் தனக்கில்லையே என்று வருந்தினான்.

“உன்னுடைய புனித யாத்திரை தொடங்கட்டும்! நீ அங்கு செல்லும் பொழுது, துரத்தில் இருக்கும் அந்த மசூதியின் தொழுகை மண்டபத்தில், என் சார்பாக ஒன்பது முறை தொழுகை நடத்தி ஆண்டவன் அருளைப் பெற்றுவா !” என்று அனுமதித்தார் மாலிக்ஷா.

கூடார மடிப்பவனின் மகனாகப் பிறந்த உமார், கடவுளின் அருளால் அரும்பெரும் ஞானம் பெற்றவனாக விளங்கும் உமார், தன் படையெடுப்பு நடைபெறும் பொழுதே இப்படிப்பட்டதொரு புனித யாத்திரையை முடிப்பது மிகப் பொருத்தமானதேயென்று அந்த இளந் துருக்கியரான சுல்தான் மாலிக்ஷா எண்ணினார். ஆனால், உமார் தன்னைவிட்டுப் பிரிந்திருக்கக்கூடிய அந்த இடைக்காலத்திலேயுள்ள ஒவ்வொரு நாளிலும், அதிர்ஷ்டந்தரக் கூடிய நல்ல நாட்களையும், வேண்டாத நாட்களையும், பற்றிய பட்டியல் ஒன்றைக் குறித்து வாங்கிக் கொள்ள அவர் தவறவில்லை. சுல்தானின் ஜாதகத்தில் செவ்வாய் சனி, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சேர்த்துக் காணப்படுவதால், திடீர் சம்பவங்கள் ஏற்படக் கூடுமென்பது ஜாதகப் பலனாகக் காணப்பட்டதால் சுல்தான் இதிலே மிகக் கவனமாக இருந்தார். சுல்தான் தம் வானநூல் கலைஞருக்கு ராஜாங்கக் கொடி பிடிக்கும் ஒரு குழுத்தலைவனையும், காத்தாயானி வகுப்பைச் சேர்ந்த கரிய நிறம்படைத்த குதிரை வீரர்கள் பன்னிருவரையும், பிரயாணத்தின் பாதுகாப்பாளராக நியமித்து அனுப்பினார். உமார் விழித்திருந்தாலும், தூங்கினாலும் அவன் மேல் கண் வைத்தபடி எப்பொழுதும் இரண்டு வீரர்கள் இருந்தபடி இருக்கவேண்டும் என்று அந்தக் குழுத் தலைவனுக்கு ஆணையிட்டார். அதன்படியே, உமார் எங்கு சென்றாலும், வாய்பேசாது இருவீரர்கள் எப்பொழுதும், தொடர்ந்து கண்காணித்து வந்தார்கள். உமாரைக் கண்காணிக்காமல் தன்பார்வையிலிருந்து தப்பிச் செல்லும்படி எவன் விடுகிறானோ அவன் தலை தரையில் உருள்வது உறுதி என்று அவ்வீரர்களுக்குக் குழுத் தலைவன் எச்சரிக்கை கொடுத்திருந்தான்.

உமார் அவர்களை, எதிர்பாராத எந்தெந்தப் பாதைகளிலோ இழுத்துக் கொண்டு சுற்றினான். டமாஸ்கஸ் பட்டணத்துச் சந்தை கூடுமிடங்களிலும், பைன் மரக்காடுகள் நிறைந்த லெபனானிலும், பனிமலைச் சிகரத்தை யுடைய ஹெர்மான் மலைப் பிரதேசத்திலும் கடற்கரை வெளிகளிலும் அவர்களை அலைக்கழித்துக் கொண்டு திரிந்தான். சிப்பித் தூண்கள் நிறைந்த கடற்கரை ஓரத்தில், மணல் வெளியில் வீசும் காற்றின் ஊடே அலைந்து கொண்டிருந்தான்.

கிரேக்கர்களும், ரோமானியர்களும் தங்கள் மரக்கலங்களிலே வந்திறங்கித் துறை முகங்களும் பளிங்குக் கட்டிடங்களும் அமைந்த பெருங்கடலின் கரையிதுதான். இப்பொழுது அந்தக் கட்டிடங்களெல்லாம் பாழடைந்து கிடந்தன. ஆழ்கடலின் நெடுந்துரம் வரையிலே சிறந்து விளங்கிய டைர் நகரமும், கடலின் அடித்தளத்திலே, தன் அஸ்திவாரமும் அமிழ்ந்து போய் விளங்கும் சீடான் நகரமும் இருந்த இடம் சிறந்து விளங்கிய பிரதேசம் இதுதான். அபூர்வமான கிருஸ்தவ ஞானிகள் வாழ்ந்து மறைந்த இடமான கார்மல் குன்றின்மேலேயும் உமார் ஏறித்திரிந்தான். பிறகு உள்நாட்டு பிரதேசமான ஆழ்ந்து கிடந்த காலிலீ ஏரிப் பிரதேசத்துச் சரிவிலே இறங்கினான்.

பூமாதேவியின் அடிவயிறுபோல் விளங்கிய இந்தப் பள்ளத்தாக்குப் பிரதேசத்திலும், அதன் கந்தகக்குழம்பு ஊற்றுக்களிலும், மறக்கப்பட்டு மறைந்துபோன அரண்மனைகளின் விசித்திர வேலைப்பாடுகள் நிறைந்த கற்பதிப்புக்கல்களிலும் அங்கு வாழ்ந்த பரிதாபத்திற்குரிய, தாடி வளர்ந்த பெரிய மனிதர்களான யூதர்களின் வாழ்க்கை நிலையிலும் தங்கள் கவனத்தைச் செலுத்திய உமாரின் கூடவந்த காத்தாயனிய வீரர்களுக்கு இந்தப் பிரதேசங்களில் பேய்கள் குடிகொண்டது போலத் தோன்றியது. அந்தப் பகுதியிலே அப்படிப்பட்ட சுடு காட்டுத் தன்மை நிலவியது.

ஆனால், ஜெருசலத்தை நோக்கித் தங்கள் வழியைத் திருப்பிக் கொண்ட பிறகு, அவர்கள் தங்களுக்குப் பழக்கமான ஒரு சூழ்நிலையைக் கண்டார்கள். சுல்தானுடைய படைகள் ஜெருசலத்தைக் கைப்பற்றிய பிறகு நாட்டுப் புறத்திலே இருந்த மத விரோதிகளான எதிரிகளின் சொத்துக்களையெல்லாம் கொள்ளையடித்தனர். தானியங்கள் நிறைந்த வயல்களின் வழியாக குதிரைகளைச் செலுத்தி அவ்வயல்களின் விளைவுகளை அழித்துக்கொண்டும், பாதிரி மடங்களைச் சோதனையிட்டுப் பொருள்களை அள்ளிக்கொண்டும் சென்றார்கள். தலைப்பாகையணியாத மனிதர்களும், இடுப்பில் குழந்தைகளுடன், முக்காடு கூடப் போடாத பெண்களும், குவிந்து கிடக்கும் பிணக் குவியல்களுக்குச் சவக்குழிதோண்டும் வேலையில் ஈடுபட்டிருப்பதையும் கண்டார்கள்.

பெருஞ்சாலை வழியாக உமாரும் பாதுகாப்புப் படை வீரர்களான காத்தாயனியர்களும் போகும்போது, எதிரிலே அடிமைகள் வரிசை வரிசையாகச் செல்வதைக் கவனித்தார்கள். துருக்கிய வீரர்களிடமிருந்து, அடிமை வியாபாரிகளால் விலைக்கு வாங்கப்பட்ட, இந்த ஜெருசலத்து அடிமைகள் டமாஸ்கஸ் பட்டணத்தில் லாபத்துடன் விற்கப்படுவதற்காக நடத்திச் செல்லப்பட்டார்கள். இந்த அடிமைகளைக் கண்டபோது, உமாருக்குக் கொரசான் போர்க்களமும் அங்கே தான் சந்திக்க நேர்ந்த அடிமைகளான யார்மார்க்கும், ஸோயி என்ற பெண்ணும் நினைவுக்கு வந்தார்கள்.

ஜெருசலத்தை நோக்கிச் சென்ற அவன், இரவு நெருங்கி வரவே, நகருக்கு வெளியில், மாலிக்ஷாவின் தளபதியான அமீர் அஜீஸின் கூடாரத்தில் தங்கினான். ஏனெனில் கூட வந்த பாதுகாப்புக் குழுத் தலைவன் இரவில் நகருக்குள் இருப்பது பாதுகாப்பானதல்ல என்று கூறிவிட்டான். மறுநாள் காலையில், ஜெருசலம் நகருக்குள் சென்று, இஸ்லாமியப் புனிதப் பள்ளிக்குச் சென்றான். அங்கு எந்தவிதமான போரும் நடக்கவில்லை. பட்டாளத்துடன் கூடவே வந்த முல்லாக்கள், பளிங்கினால் கட்டப்பட்ட இந்தப் பள்ளி வாசலுக்குள்ளே கூடியிருந்தார்கள். அகிஸா மசூதியையும் அவர்கள் உரிமைப் படுத்திக் கொண்டார்கள்.

வேதமோதும் மேடையிலிருந்தபடி பிரார்த்தனையை நடத்தி வைத்த இமாம் அவர்கள், பாக்தாது காலிப்பின் பெயராலும், சுல்தான் மாலிக்ஷாவின் பெயராலும் தொழுகையைத் தொடங்கி வைத்தார். இதற்கு முன் பிரார்த்தனையை நடத்தி வைத்த எகிப்தியர்கள் ஊரை விட்டே ஓடிவிட்டார்கள். கூட்டத்தின் நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்காக, உமார், பாறையினாலான வட்டக் கோபுரத்தின் உள்ளே நுழைந்து கொண்டான். அரை யிருட்டாக இருந்த அதன் உட்பகுதியில் அமைதி நிலவியது. அங்கே அவன் மண்டியிட்டு, அங்கிருந்த புனிதமான சாம்பல் நிறப்பாறையைத் தொட்டுக் கொண்டே தொழுகை நடத்தினான். மெக்காவில் உள்ள பள்ளியின் கருங்கல்லின் அளவு புனிதம் வாய்ந்ததல்ல இந்தச் சாம்பல் நிறப் பாறை. அதற்கு அடுத்தபடியாகத்தான் கொள்ள வேண்டும். எந்த மதத்திலும் சேராத இரண்டும் கெட்டான்களான அந்த காத்தயானிய வீரர்களும் அவன் கூடவே மண்டியிட்டார்கள். தொழுவதற்குப் பதிலாக அழகிய பளிங்குத் தூண்களையும், தங்கத் தோரணங்களையும் கண்டு வியப்படைந்தார்கள்.

தொழுது முடிந்து உமார் எழுந்திருந்தபோது, மரியாதை பொருந்திய மெல்லிய குரல் ஒன்று அவனுக்கு வாழ்த்துக் கூறியது.

“மோட்சத்தைத் தேடுபவரே; சாந்தியுண்டாகட்டும்! என்று அந்தக் குரல் வாழ்த்தியது.

“சாந்தி, உமக்கும் உண்டாகட்டும் என்று பதிலுக்கு வாழ்த்தினான் உமார். திரும்பிப் பார்த்தால், அவன் அருகிலேயே ஹாஸான் இபின் சாபா என்ற அந்தக் குட்டை மனிதன் நின்றான். அவனுடன் மற்றொருவனும் கூட வந்திருந்தான். ஹாஸான், ஓர் யாத்திரிகனுடைய உடையில் இருந்தான். அரபு மொழியிலே பேசினான். முன் சந்தித்த போது பாரசீக மொழியிலே எவ்வளவு இயற்கையாகப் பேசினானோ அவ்வளவு இயற்கையாகத் தன் சொந்தமொழிபோலவே, இப்பொழுது அரபு மொழியிலே பேசினான்.

அவன் புன்சிரிப்புடன், “அல்லாவின் அருள் நிலைபெறுவதாக! நான் என் நண்பனை மீண்டும் சந்திக்கும்படி கூட்டி வைத்த அல்லாவின் புகழ் நிலைபெறுவதாக!” என்று கூறிவிட்டு, “இந்தப் பாறைக் கோபுரத்தின் உள்ளே என்ன இருக்கிறது தெரியுமா? பாறையைத் தவிர வேறு என்ன இருக்கிறது தெரியுமா? என்று கேட்டான். உமார் ஆச்சரியத்தோடு திரும்பிப் பார்த்தான். கூட இருந்தவர்களும் அயர்ந்து போனார்கள்!

சுற்றிலும் இருந்தவர்கள், திரும்பி ஹாசன் பேச்சைக் கவனிக்கத் தொடங்கினார்கள். எவரையும், தன் பேச்சினால் கவர்ச்சி செய்யும் சக்தி ஹாஸனுக்கு இருந்தது. சுற்றிலும் இருந்தவர்கள் நெருங்கி வந்ததும் அவன் சொல்லத் தொடங்கினான். ‘இதோ இந்தச் சாம்பல் நிறக்கல்லிலே ஓர் அடையாளம் காணப்படுகிறதே; இது என்ன தெரியுமா? தீர்க்கதரிசியான முகமது நபியவர்கள் இந்த இடத்திலே நின்றபடிதான் சுவர்க்கத்துக்கு எழும்பிப் போனார். அவருடைய காலடி பதிந்த இடந்தான் இந்த குறி. அப்படி அவர் எழும்பிப் போனபோது, அவர் கூடவே இந்த பாறையும் போய்விடாமல் தடுப்பதற்காக கபீரியல் தேவதை இந்தப் பாறையை அழுத்திப் பிடித்துக் கொண்டது. அதன் கைவிரல்கள் பதிந்த இடங்கள்தாம் இந்தப் பாறையின் விளிம்பிலே உள்ள துவாரங்கள்!” இந்த மாதிரியான அதிசயத் தெய்வீகச் சம்பவங்களை ஹாசன் எடுத்துக் கூறத் தொடங்கியதும், ஆச்சரியத்துடன், நெருங்கி வந்தார்கள் அந்தக் காத்தயானியர்கள்.

“இதன் அடியிலே ஒரு குகையிருக்கிறது. காத்திருக்கும் உயிர் ஆவிகளெல்லாம் தீர்ப்புநாள் அன்று அந்தக் குகையிலேதான் ஒன்று கூடும். என்னைத் தொடர்ந்து வாருங்கள்” என்று கூறி முன் நடந்தான். அந்த இடம் முழுவதும் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தவன் போல் அவன் ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தி அங்கிருந்த முல்லா ஒருவரை ஏவிப் பாறையின் அடிப்புறத்தில் உள்ள குகை வழியாக அனைவரையும் அழைத்து வரச் செய்தான். வழியில் சில சில குறியீடுகளைக் காட்டி அவற்றின் தெய்வீகத் தன்மையைப் பற்றி விவரித்தான். அந்த விவரங்களைக் கேட்க, செப்புத் தலைக் கலசமும், தோல் உடைக்கவசமும் அணிந்த வீர்களான காத்தயானியர்கள் பயந்து போனார்கள். ஹாஸானுடன் கூட வந்த அந்தத் தடிமனிதன் உமாரின் காதில், “உலகத்தின் ஆவிகளெல்லாம் தீர்ப்பு நாளன்று ஒன்று கூடும் இடமாக இந்தச் சிறு குகை இருக்குமானால், அத்தனை ஆவிகளும், அணுவினும் சிறியதாக மாறினாலன்றி முடியாது” என்று தன் தெய்வீக அவநம்பிக்கையை எடுத்துரைத்தான்.

புனிதம் நிறைந்த இடமான வட்ட அரங்கத்தின் மேல் ஏறி நின்று கொண்டு தன் கையில் இருந்த மெழுகுவர்த்தியை ஓர் உத்தரத்தின் அருகிலே தூக்கிப் பிடித்தான். “திருத்தூதர் முகமது நபியவர்கள், விண்ணுலகம் ஏறிய பிறகு, நீண்ட நாட்களுக்கு முன் இருந்த இஸ்லாமிய காலிப் ஒருவர் இதில் உள்ள வாக்கியங்களைப் பொன்னால் எழுதி வைக்கும்படி உத்தரவிட்டார். இதோ பாருங்கள்” என்று ஹாஸான் காண்பித்தான். உமாரால் அந்த எழுத்துக்களைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் ஹாஸான் அவற்றை எளிதாக வாசித்தான்.

“ஆண்டவனைத் தவிர வேறு கடவுள் எதுவும் கிடையாது. அவருக்குப் பங்காளியும் கிடையாது. மேரியின் திருமகனான இயேசுநாதர், கடவுளின் செய்திகளை நமக்குத் தெரிவிக்கும் தூதுவரேயாவார். கடவுளையும் அவருடைய தூதுவர்களையும் நம்புங்கள். மூன்று கடவுள் இருப்பதாக மொழியாதீர்கள். அதுவே உங்களுக்கு நல்லதாகும்”

ஹஸான் உமாரின் கையைப் பிடித்துக் கொண்டு, “இந்தத் திருவாக்கியங்கள் எழுதப்பெற்ற பின்னர் இதைக் கண்டவர்கள் சிலரே! இதைப் படித்தவர்கள் மிகமிகச்சிலரே! ஆனால் புரிந்து கொண்டவர் யார் இருக்கிறார்கள்? ஆனால், நீ நிச்சயமாகப் புரிந்து கொள்வாய் என்றே எண்ணுகிறேன்” என்றான்.

சுற்றிலும் கூடியிருந்த கூட்டத்தின் நெருக்கடியைப் பொறுக்க முடியாதவனைப்போல, உமாரை அழைத்துக் கொண்டு வெளியே வந்த ஹாஸான், அந்த நகரின் சந்து பொந்தெல்லாம் அவனை அழைத்துக் கொண்டு சென்று, மற்றவர்கள் கவனிக்கத் தவறிய பல விஷயங்களைக் காண்பித்தான். கூடவந்த அந்த மனிதன் இவற்றையெல்லாம் ஊன்றிக் கவனிக்கவில்லை. ஏதோ சொந்த யோசனைகளிலே மூழ்கியவனாக ஒன்றும் பேசாமல் இவர்களைத் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தான்.

“அதோ அந்த இடத்தைப் பார். அங்கேயிருக்கிறதே வளைவு அருகிலே ஜன்னல், அங்கேயிருந்து கொண்டுதான் பொண்டியால் பைலேட் என்ற ரோமானிய அரசப் பிரதிநிதி யூதமதக் குருக்களுடன் பேசிக் கொண்டிருந்தான். அதே கிறிஸ்துவரான அரசப் பிரதிநிதி சிலுவையில் வைத்துக் கொல்லப்படுவதற்காகப் பட்டாளத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டான். இப்பொழுது அந்தச் சிலுவையைத் தாங்கியிருக்கும் பாறை கிறிஸ்துவர்களால் மறக்கப்பட்ட இடமாகி விட்டது”

தெருக்களிலே இடிந்து கிடந்த குவியல்களின் மேல் உட்கார்ந்து, வம்பளந்து சிரித்துக் கொண்டிருந்த துருக்கியப் போர் வீரர்களைக் கடந்து உமாரைத் தள்ளிக் கொண்டு போன ஹாஸான் மேலும் பேசினான்.

“ஜெருசலத்தின் கதை இப்படியே நடந்து கொண்டிருக்கிறது. சுவர்கள் இடிக்கப்படுவதும், அரசர்களாலும், படைவீரர்களாலும் மக்கள் கொல்லப்படுவதும், வழக்கமாகிவிட்டது. திருத்துதுவர் முகமது நபியின் கடைசிக் காலத்திலே சோஸ்ரேஸ் என்ற பாரசீக நாட்டான் யூதர்களால் துரத்தப்பட்டான். நகர் பாழாகியது. பிறகு ஹெராகளிட்டஸ் என்ற ரோமானியச் சக்ரவர்த்தியின் வாள்வலி யூதர்களிடமிருந்து இந்த நகரைப் பிடித்துக் கொண்டது. யூதர்கள் கிறிஸ்தவர்களால் வெட்டித் தள்ளப்பட்டார்கள். நம்முடைய காலிப் அவர்கள் ஓர் ஒப்பந்தத்தின் மூலமாக இந்த நகரைக் கைப்பற்றினார். இரத்தம் சிந்தப்படவில்லை. அங்கே உள்ள புனிதப் பாறையில் படிந்திருந்த பாவக் கறைகளையும், அழுக்குகளையும் நீக்கித் தூய்மைப்படுத்தினார். சோலோமன் டேவிட் ஆகியவர்களின் புனிதமான பாறையைப் புனிதமாகவே வைத்திருந்தார். ஆனால், இப்பொழுது இந்தத் துருக்கியர்கள் அறியாமையால் இரத்தம் சிந்தும்படி செய்துவிட்டார்கள். அவர்கள் நீண்ட நாட்கள் இங்கு வாழ முடியாது. விரைவில் இந்த நகரம் புதிய எதிரிகளால் கைப்பற்றிக் கொள்ளப்படும்” என்றான் ஹாஸான்.

“யார் அந்தப் புதிய எதிரிகள்?’ என்று உமார் கேட்டான்.

“அது யாருக்குத் தெரியும்? கண்ணுக்குத் தெரியாத அந்த தெய்வீகத் திரைக்கு அப்பால் இருக்கும் விஷயத்தை நான் எப்படிச் சொல்லிக் காட்ட முடியும்? முஸ்லீம்கள் ஜெருசலத்தை இழப்பார்கள் என்பது மட்டுமே நான் சொல்லுகிறேன். புதிய பயங்கரமான எதிரிகள் யாரோ கைப்பற்றிக் கொள்வார்கள்.”

“கடவுளையும் அவருடைய துதர்களையும் நம்புங்கள். மூன்று கடவுள் இருப்பதாக மொழியாதீர்கள். அதுவே உங்களுக்கு நல்லதாகும் என்ற இந்தத் திருமொழியின் உண்மையை அறியாதவர்கள் எப்படி இங்கு அமைதியாக வாழ முடியும்” என்று ஹாசான் கேட்டான்.

உமாரின் சிந்தனை வேலை செய்தது. சாம்ராஜ்யமென்னும் ஒரு பெரிய ஆடையை நெய்து கொண்டிருக்கும் நிசாமையும், மாலிக்ஷாவையும் பற்றி நினைத்தான். அவர்கள் இருவரும் எங்கெங்கோ இருக்கிறார்கள். தீக்கிறையாகிக் கருகிய திருமடங்களையும், இறந்துபோன சுற்றத்தாரை எடுத்துப் புதைத்துக் கொண்டு இருக்கும் ஏழை மக்களை காணும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லை. ஹாஸானின் உணர்ச்சிகரமான பேச்சு உமாரின் உள்ளத்தைக் கலக்கியது.

“மக்களின் மனத்திலே மூன்று கடவுள்கள் பதிந்திருக்கின்றன என்பதைத்தான் நாம் அறிவோமே! யூதர்களின் யஹோலா ஒரு கடவுள்; கிறிஸ்தவர்களின் ஆண்டவர் ஒரு கடவுள்; குர் ஆன் கூறும் அல்லா ஒரு கடவுள்; என்றான் ஹாசானின் கூட வந்த அந்த மனிதன்.

“நன்றாகச் சிந்தித்துப் பார். மூன்று முறையும் நீ என்ன கூறினாய்? ஒரு கடவுள் என்ற சொல்லைத்தானே மூன்று முறையும் கூறினாய். இந்தக் கிறிஸ்தவர்களும், யூதர்களும், இஸ்லாமியர்களும் எல்லோரும் உண்மையைக் கொஞ்சம் உள்ளத்தால் ஆராய்ந்து பார்த்தால் என்ன? அல்லா என்று சொல்வதைக் காட்டிலும் “ஒரு கடவுள்” என்ற கொள்கையை ஏன் பெரிதாகக் கொள்ளக் கூடாது?” பேசிக்கொண்டே வந்த ஹாசான், திடீரென்று நிறுத்திக் கொண்டான்.

அவர்கள் இருவரையும் தன்னைத் தொடரும்படி கண் காட்டினான். புனிதமான பள்ளியைநோக்கி கூட்டிச் சென்ற அவன் அதற்குச் செல்லாமல் கிழக்குப் புறத்தில் திறந்திருந்த கோட்டை வாசல் வழியாக அழைத்துச் சென்றான். முஸ்லீம்களின் இடுகாட்டுப் புதை குழிகளின் ஊடாகச் சென்றார்கள். அந்த இடுகாடு நகரக் கோட்டைச் சுவர் வரையிலே பரந்து கிடந்தது.

அவர்கள் சென்ற பாதை வரண்டு கிடந்த ஓர் ஓடைப் படுகை வழியாகச் சென்றது. களிமண்ணும், கூழாங்கற்களும் நிறைந்து கிடந்த அந்தக் குறுகிய பாதை வழியாக, கரிய நிறமுடைய வெள்ளாடுகளையும் செம்மறியாடுகளையும் ஒட்டிக்கொண்டு சில வேடுவர்கள் குதிரை மீது சென்றார்கள். உமாருக்கு அந்த ஆட்டு மந்தையின் இடையே புகுந்து நடப்பதற்கு ஆசையாயிருந்தது. அவன் ஆடுகளின் நடுவே நடக்க முயல்வதைக் கண்ட, காத்தயானிய வீரர்கள் இருவரும், விரைந்து அந்த ஆடுகளை விலக்கி நடுவிலே ஒரு பாதை ஏற்படுத்திக் கொண்டு சென்றார்கள். போர் வீரர்களின் உடையைக் கண்டதும் அந்த வேடர்களும், விரைந்து, ஆடுகளை விலக்கி உதவினார்கள்.

ஹாஸானின் கூட வந்த அந்த மனிதன், மிகவும் பருமனாயிருந்தபடியால் மெதுவாகக் காலடியெடுத்து வைத்து ஆடி அசைந்து நடந்து வந்தான். அவனுடயை கண்கள் அலை பாய்ந்து, களைத்துப்போய் இருந்தாலும், கூரிய தன்மை மாறாமல் இருந்தது. அவன் அதிகமாகப் பேசாவிட்டாலும், பேசும் சில சில சொற்களும் குத்தலாக இருந்தன. அவனுடைய பேச்சைக் கொண்டு, அவனைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ள இயலாமல் இருந்தது. அவன் பெயர் அக்ரோனோஸ் என்றும், எல்லா வியாபாரிகளுக்கும் பாட்டன் போன்றவன் என்றும் அவனைப் பற்றி ஹாஸான் கூறினான்.

அந்த அக்ரோனாஸ், உமாரை நோக்கி, “இந்தப் போர் வீரர்களைப் பார்த்தால் உன்னுடைய வேலைக்காரர்கள் போல் தோன்றுகிறதே!” என்று கேட்டான்.

“சந்தேகம் என்ன? போர் வீரர்கள் சுல்தானின் ஆணைக்குக் கட்டுபட்டவர்கள். சுல்தானின் ஆணையை உருவாக்குபவர் ஆசிரியர் உமார் அவர்கள்தானே! உமார், ஆஸ்தானத்துச் சோதிடர் மட்டுமல்ல. தீர்க்க தரிசியும் கூட! இன்னும் குறிப்பாகச் சொன்னால் இளஞ் சுல்தான் அவர்களின் தீர்க்கதரிசி!” என்று ஹாஸான் விளங்கக் கூறினான்.

அக்ரோனோஸ், தன் உணர்ச்சிகள் எதையும் வெளிக்குக் காட்டாமல், உமாரைத் தன் பார்வையால் அளவிடுவது போல் நோக்கினான். அப்பொழுது அவர்கள் ஆலிவ் மரக்காடுகள் அடர்ந்த ஒரு பகுதியைக் கடந்து ஒரு சரிவின் மேல் ஏறிக் கொண்டிருந்தார்கள். அந்த மரங்களுக்குப் பின்னால் ஒரு சிலுவையில், இரண்டு கைகளையும் விரித்தபடி ஒரு பிணம் தொங்கிக் கொண்டிருந்தது. கரிய மேலங்கியணிந்த அந்த உருவம் ஒரு துறவியினுடையது. வழித்துவிடப்பட்டிருந்த அந்தப் பிணத்தின் தலை, சாம்பல் நிறமுடைய அந்தக் கற்களின் இடையிலே, ஒரு வெள்ளைக் கல் போலத் தெரிந்தது. “இது கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலம். நாம் எறிக் கொண்டிருக்கும் இந்த இடத்தை ஆலிவ் மூடி ... என்று அழைக்கிறார்கள் என்று ஹாஸான் கூறினான்.

இறங்கிக் கொண்டிருக்கும் மாலைக் கதிரவனின் ஒளிக்கதிர்கள் அந்தக் குன்றின் மேல் சாய்ந்து கொண்டிருந்தன. அவர்கள் மூவரும் அங்கே அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். கீழேயுள்ள ஆழமான பள்ளத்தாக்கில் சின்னஞ்சிறிய மனித உருவங்கள் அங்கும் இங்கும் போய்க் கொண்டிருந்தன. தூரத்திலே உள்ள பாறைக் கோபுரத்தில் மாலைக் கதிரவன் தங்க முலாம் பூசிக் கொண்டிருந்தான்.

உமாருக்கு அந்தப் பள்ளத்தாக்கின் பெயர் தெரியும். அதன் பெயர் வாடி ஜெகனம் என்பதாகும். அதாவது பாவிகளின் பள்ளத்தாக்கு என்று பொருள்! எல்லா ஆவிகளையும் அழைத்துத் தீர்ப்பு வழங்கும் நாளன்று எடைபோட்டுப் பார்க்கும் பொழுது, பாவம் செய்தவர்கள் என்று தீர்மானிக்கப்படும் ஆட்களின் ஆவிகள், இந்தப் பள்ளத்தாக்கின் வழியாகத்தான் செல்லும் என்று இஸ்லாமிய முல்லாக்கள் கூறியிருக்கிறார்கள். அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்குக் கீழேயுள்ள சரிவில் விசித்திரமான தோற்றமுடைய கல்லறைகள் பல இருந்தன. கதிரவன் நெருப்புப் பந்துபோல் மாறி செக்கச் சிவந்து விளங்கியது. அதன் செவ்வொளி அந்தப் புனித நகரத்தின் கோபுரங்களில் எல்லாம் சாய்ந்து அழகைப் பெருக்கியது. அவர்களின் அருகிலே, வரிசை வரிசையாகக் கிழவர்கள் நடந்து செல்லும் காட்சி ஒன்று தோன்றியது. அந்தக் கிழவர்கள் ஒருவர் முதுகை ஒருவர் பிடித்துக் கொண்டபடி, தட்டுத் தடுமாறி மேலும் கீழும் தலையைத் திருப்பிக் கொண்டு, கீழேயுள்ள பள்ளத்தாக்கை நோக்கி வரிசையாகச் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் குருடர்கள்.

ஹாஸான் திடீரென்று பேசத் தொடங்கினான். “இதோ கவனியுங்கள். நாம் வானத்தை உற்று நோக்குகிறோம். பூமியை ஆராய்கிறோம். நம் குருட்டுக் கண்களால் இவ்வளவு உண்மையை அறிந்து கொள்ளுவதில்லை”.

“ஏன்? போதுமான அளவு, உண்மைகளை நாம் தெரிந்து வைத்திருக்கிறோமே!”என்றான் அக்ரோனோஸ். “இல்லை. நாம் குருடர்களாகத்தான் இருக்கிறோம். புதையுண்ட எலும்புகளையும் பழைய கற்களையும்தான் நாம் புனிதமாகக் கருதுகிறோம். திருக்குரானிலே அல்லாவே பெரிய கடவுள் என்று கூறப்பட்டுள்ளது. அவரைக் காட்டிலும் பெரிய ஒகு கடவுள் இருந்தால் என்ன வந்துவிட்டது? என்று ஹாஸான் கேட்டான். அக்ரோனோஸ், தன் விரல்களால் தாடியைத் தடவிக் கொண்டே, பேசாமல் இருந்தான்.

உமார், நெருப்புப் பிழம்பாக மாறி மறைந்து கொண்டிருக்கும் கதிர்ப்பந்தைக் கவனித்துக் கொண்டிருந்தான். ஹாஸான், புதுமாதிரியான ஒரு பேச்சைத் தொடக்கிக் கொண்டிந்தான்.

இதுவரை மனித அறிவினால் ஆராய்ந்து காணப்படாத ஒரு புதிய கடவுளைப் பெரிதும் நம்பினான். இதுவரை உண்டான மதங்களெல்லாம், முடிவான ஒரு முடிவை எட்டிப் பிடிக்கப் பயன்பட்ட ஏணிப்படிகளே என்று கூறினான். அந்த மதங்களெல்லாம், மனிதனின் அறிவைக் குறிப்பிட்ட அளவுதாம் ஒளி பெறச் செய்தன என்றும், ஆதம், நோவா, இப்ராகிம், மூசா, இயேசு, முகமது என்ற ஆறு தீர்க்க தரிசிகளும் காட்டாத ஒரு பேருண்மையை, முடிவான அசல் உண்மையைக் காட்ட ஏழாவது தீர்க்கதரிசி ஒருவர் நிச்சயமாகப் பிறந்து வருவார் என்றும் கூறினான்.

“அந்த ஏழாவது தீர்க்க தரிசியை நாம் அறிந்து கொள்ளும் வழி எது?” என்று அக்ரோனோஸ் கேட்டான்.

“அந்தத் தீர்க்கதரிசி தாம் தோன்ற வேண்டிய காலம் வருவதற்கு முன்னும் நம் கூடவேயிருந்து வந்திருக்கிறபடியால், நாம் அவரைத் தெரிந்து கொள்வோம். அலி அவர்களின் இனத்தில் ஏழாவது இமாமாகவும் அலி அவர்களின் ஆவியின் வாரிசுதாரராகவும் அவர் விளங்கியிருக்கிறார். சிலருக்கு அவர் ஏழாவது இமாமாகவும் சிலருக்கு மூடிமறைக்கப் பட்டவராகவும் அவர் காணப்படுகிறார். பெயரைப் பற்றி என்ன? அவரே மாதி! அவரே நாம் அறியாமலே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தேவதூதர் மாதி! மாதி என்ற அந்தப் புனிதமான தீர்க்கதரிசி, மூசா நபியவர்களின் வெள்ளிய கை மரக் கிளையிலிருந்து வளியில் நீட்டிக் கொண்டு வந்த காலத்திலும், பிறகு இயேசுநாதர் இந்த உலகத்திலே உயிர் வாழ்ந்த காலத்திலும் கூட இருந்திருக்கிறார். ஆனால், அவர் திரும்பவும் தோன்றுவார்” என்று ஹாஸான் மிகுந்த உணர்ச்சியுடன் பேசினான்.

அந்தப் புனித நகரத்தின் கோபுரத்திற்கும் கோட்டைச் சுவருக்கும் அப்பால் கதிரவன் சென்று மறைந்தான். அவர்களின் பின்னே யாரோ வந்து நிற்பது போல் காலடிச் சத்தம் கேட்டதும், அவ்வளவு நேரமும், இவர்கள் பேச்சைக் கவனியாமலே அரைத் தூக்கத்தில் உட்கார்ந்திருந்த காத்தயானியக் காவல் வீரர்களிலே ஒருவன் வந்து நின்று, “நேரமாகிவிட்டது, கூடாரத்திற்குத் திரும்ப வேண்டும்” என்று உமாரை அழைத்தான்.

தன் கூடாரத்திலே உணவு உண்டு ஓய்ந்திருந்த அந்த வேளையிலும், உமாரின் நினைவிலே ஆலிவ் முடியில் உடகார்ந்து கொண்டிருக்கையிலே கண்ட அந்த அந்திவானத்தின் அழகு நின்று கொண்டிருந்தது. அந்த அழகுக் காட்சியை மனத்திரையிலே கண்டு கண்டு ஆனந்தங் கொண்டிருக்கும் அந்த வேளையிலே, அக்ரோனோஸ் என்ற அந்த ஆள் வந்தான். அவன் கூட வந்த ஒரு பையன் தான் தூக்கி வந்த ஒரு வெள்ளைப் பட்டுத் துணி முட்டையை உமாரின் காலடியில் வைத்து விட்டுப்போனான்.

“என்ன இது?” என்று கேட்பது போல் உமார் அவனை நோக்கினான்.

“நம்முடைய சந்திப்பின் அடையாளமாக இந்தச் சிறிய பரிசைத் தாங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும். தங்களுக்கு இந்த வியாபாரியின் உதவி தேவைப்படும் போது...காத்திருக்கிறேன்!” என்று குழைந்தான்.

“ஹாஸானைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று உமார் கேட்டான்.

அக்ரோனோஸ், நரைத்த தன் தாடியைத் தடவிக் கொண்டே, “அவன் பைத்தியம் போல் உளறலாம்; ஆனால், நான் சந்தித்த பல மனிதர்களிலே, மற்றவர்கள் யாரையும் காட்டிலும், பல விஷயங்கள் தெரிந்தவனாக இருக்கிறான் ஹாஸான்! அவனுடைய இந்தச் செய்தியை நம்புபவர்களும் பலர் இருக்கிறார்கள். அது இருக்கட்டும். ஒட்டக விடுதிகளிலே எனக்கொரு செய்தி கிடைத்தது. தாங்கள் எதோ ஒரு செய்தியை எதிர்பார்ப்பதாகக் கேள்விப்பட்டேன்” என்றான்.

“ஆம்”

“மீஷித் நகரத்துத் துணி வியாபாரி அப்துல் சையித் என்பவன், நிசாப்பூரிலே, வேறொரு மனைவியைத் தேடிக் கொண்டதாகப் பல மாதங்களுக்கு முன் நான் கேள்விப் படநேர்ந்தது.” என்று கூறிவிட்டு உமாரை நோக்கினான்.

“அப்புறம்?”

“அலெப்போ நகரில் சில நாட்கள் இருந்துவிட்டு வடதிசை நோக்கிச் சென்றுவிட்டான். இது பல மாதங்களுக்கு முன்னால் நடந்தது.”

இதைக் கேட்ட உமார் ஆழ்ந்த பெருமூச்சொன்று விட்டான். அப்படியானால், யாஸ்மி அலெப்போ நகரில் இருக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. அவளைப் பற்றி ஏதாவது தெரிந்து கொள்ளவாவது முடியும்!

“நீ எனக்கு இரண்டு பரிசுகள்_கொண்டு வந்திருக்கிறாய், என்னிடமிருந்து உனக்கு என்ன கிடைக்கவேண்டும். சொல்” என்று ஆவலோடு உமார் கேட்டான்.

ஆனால் பின்னர் அவன் சொன்ன பதில் உமாரைத் திகைப்பூட்டியது.

“எனக்கு ஒன்றும் தேவையில்லை. ஆனால், ஹாஸானைப் பற்றிக் கொஞ்சம் நல்ல எண்ணத்தோடு எண்ணிப் பாருங்கள். அவன் தங்கள் நண்பனாக இருக்கக் கூடியவன். அவன் தங்கள் கருணைக்காகப் பிரார்த்திக்கும் காலம் ஒன்று வரக்கூடும். அப்பொழுது நீங்கள் அவனிடம் அன்பு காட்டவேண்டும்” என்று கூறினான். பிறகு, சலாம் செய்துவிட்டு வெளியேறினான்.

திடீரென்று ஏதோ நினைவு வந்தவன்போல, உமார் தனக்கு நிசாமிடமிருந்து வந்த கடிதங்கள் வைத்திருக்கும் பெட்டியிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்தான். அதை நன்றாக கவனத்துடன் படித்தான். கடவுள் நம்பிக்கையற்ற முலாஹித்துக்கள் என்ற ஒரு புதிய கூட்டத்தாரைப் பற்றி எச்சரித்து நிசாம் எழுதியிருந்தார். மாதி என்ற ஒரு புதிய தேவதூதர் பிறக்கப் போவதாகவும், அவர், இஸ்லாமிய மதக் கோட்பாடுகளையும் அரசுகளையும் அகற்றிவிடுவாரென்றும், அவர்களுடைய அந்தப் புதிய மதம் உலகத்தின் ஏழாவது மதமாகவும், கடைசி மதமாகவும் விளங்குமென்றும் அந்தக் கூட்டத்தில் பிரசாரம் செய்து வருவதைச் சுட்டிக் காட்டியிருந்தார். கொரசானிய பூமியிலே மறைந்து கிடக்கும் அந்தப் புதிய தீர்க்கதரிசி என்று சொல்லப்படும் மாதியைப் பின்பற்றுவோர் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் அந்தக் கூட்டத்தார் மக்களிடையே மறைமுகமாகப் பிரச்சாரம் செய்து வருவதையும், அவர்கள் பிரார்த்தனை நடத்தும்போதும், பொய்யான விஷயங்களைப் பற்றிப் போதிக்கும்போதும், வெள்ளை அங்கி அணிந்திருப்பார்களென்றும், அல்லா இவர்களை மீளாத நரகத்தில் ஆழ்த்த வேண்டுமென்றும் குறிப்பிட்டு நிசாம் அந்தக் கடிதத்தை எழுதி, உமாருக்கு எச்சரிக்கை செய்திருந்தார்.

இதைப் படித்து முடித்த உமார் தன் எதிரில் இருந்த வெண்பட்டு முட்டையை பார்த்தான். சிரிப்பு வந்தது. நிசாம் மட்டும் இதைக் கண்டால், இது யாரிடமிருந்து கிடைத்ததென்று தெரிந்தால், வருகிற கோபத்தில் அப்படியே எரிகிற நெருப்பில் போட்டுக் கொளுத்திச் சாம்பலாக்கியிருப்பார். ஆனால், அந்த வெண்பட்டிலே ஓர் அழகான மேலங்கி தைத்துக் கொள்ள வேண்டுமென்று உமார் நினைத்துக் கொண்டான்.